LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 26, 2020

நோஞ்சான் உண்மையிடம் இல்லாத ஒளிவட்டம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நோஞ்சான் உண்மையிடம் 

இல்லாத 
ஒளிவட்டம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

நலிவடைந்து நோஞ்சானாய் நிற்கும் 

நிஜத்தைப் பார்க்கவோ பேசவோ

யாருக்கும் நேரமிருப்பதில்லை.


உலகம் உருண்டையானது என்று

கூறியவருக்கு என்ன நேர்ந்தது 

நினைவிருக்கிறதா?


நினைத்த நேரத்தில் நினைத்த வடிவத்தில்

உண்மையை வனைய முடியாது என்பதால்

யாருக்கு வேண்டும் இந்த உண்மை?


பொய்யின் பலவண்ணங்களோடு ஒப்பிட

உண்மையின் நிறமின்மையைை எப்படி

சிலாகிக்கமுடியும்?


தவிர, அதை அரசியல்வாதிகளுடைய வேட்டி

சட்டையோடு

ஒப்பிட்டுக் கறைப்படுத்திவிடுவதும்

எளிதுதானே.

பேருக்கு உண்மைவிளம்பிகளாக 

இருந்துகொண்டே

நூறுவிதமாகப் பொய்யை

உயர்த்திப்பிடிப்பதில்தான் உயர்விருக்கிறது

என்பதை அறிந்தபின்

கூறத்தகுமோ உண்மையை உண்மையாக?


’பாதி உண்மை’ என்று சொல்ல

பொய்க்கும் ஒரு ’பவுசு’ கிடைத்துவிடும்.


அயராமல் பொய்யுரைத்துக்கொண்டே அந்தப்

பொய்களையெல்லாம்
உண்மையின் பன்முகங்களாகப் 

புரியவைப்பதில்
ஆளுக்கொன்றோ சிலவோ
ஒளிவட்டங்களும் கிடைக்க வழியுண்டு.

பின், வேறென்ன வேண்டும்?

உள்ளது உள்ளபடி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

உள்ளது உள்ளபடி
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு கை பிடித்திருக்கும் கூர்கல்லையே அவருடைய புகைப்படக்கருவி
திரும்பத்திரும்ப ZOOM செய்துகொண்டேயிருக்கிறது.
பின்னணியில் பேரோலம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
அவருடைய புகைப்படக்கருவியின் அண்மையிலேயே இருவருடைய கைகால்கள் முறிக்கப்பட்டு மண்டையோடு பிளந்து கிடக்கின்ற சடலங்களை அவர் ஏன் படம் பிடிக்கவில்லை என்று புரியாமல் குழம்பிய புகைப்படக்கருவிக்கு அந்தக்காட்சிகளையும் பதிவுசெய்ய விருப்பம்.
ஆனால் _
’ஒரு வட்டத்தின் இரண்டு அரைவட்டங்களைச் சேர்த்து முழுவட்டத்தையும் காட்டிவிட்டால், முடிந்தது எல்லாம்.
அரைவட்டத்தைக் காட்டி இன்னொரு அரைவட்டம் களவுபோய்விட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொண்டிருப்பதைப்போல் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும்.
முடிந்தால் இன்னொரு அரைவட்டத்தை இரண்டு கால்வட்டங்களாக்கிக் கிழித்தெறிந்துவிட்டால் நலம்.
வட்டத்தின் ஒரு துணுக்கைக் காட்டி பல விபரீதங்களை விளைவிக்கமுடியும்.
மறந்தும் முழுவட்டத்தை ஒரு ஃப்ரேமுக்குள் கொண்டுவந்துவிடலாகாது.
முழு நிலவைப் படம்பிடித்துக்காட்டலாம்; முழு நிகழ்வைக் காட்டலாகாது.
முயலுக்கு மூன்றே கால்கள் என்று எத்தனைக்கெத்தனை உரக்கச்சொல்கிறார்களோ அத்தனைக்கத்தனை அவர்களே அறிவுசாலிகள் அறிவோம்.'
மனிதநேயத்தோடு அத்தனை அழகாகப் பாடமெடுத்தும் புரிந்துகொள்ளாமல் தன்னுடைய அறம் சார்ந்த நம்பிக்கையுடன் தன் கண்ணில் பட்ட அந்த நொறுங்கிய வாழ்வுகளையும் பதிவுசெய்ய முற்பட்டது புகைப்படக்கருவி.
உயிரற்ற அடிமைக்கு சுயம் ஒரு கேடா என வெகுண்டெழுந்த உடைமையாளர்
அதன் மீதும் ஒரு பெருங்கல்லை எடுத்துப் போட்டு அப்பால் செல்கிறார்.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் 


கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும்விதமாக படங்களையும் தகவல்களை யும் ஒரு சார்பாகவே தந்துகொண்டிருப்பதுதான்,
’இவர் செய்தால் சரி, அவர் செய்தால் தவறு’ என்ற ஒரே தவறான நேர்ப்பார்வையுடன் எந்தவொரு விஷயத்தையும் அணுகிப் பேசுவது தான், குறைந்தபட்ச கண்ணியம் கூட இல்லாமல் கொச்சையாகப் பேசுவதும் பழிப்பதுதான், ஒரு எழுத்தாளருக்கு அழகு அதுவே அவருடைய மனிதாபிமானம், முற்போக்குத்தனம் என முடிவு கட்டிக்கொண்டவர்களாய் மற்றவர்களையும் மூளைச் சலவை செய்யக் கங்கணம் கட்டிக் கொண்டு தங்கள் முகநூல் டைம்-லைனில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும் சக படைப்பாளிகள் சிலரின் நியாயவாதி பாவமும் பாசாங்கும்தான் நம்மைப் பீடித்துள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தோன்றுகிறது.

எனக்குப் பசிக்கிறது - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

எனக்குப் பசிக்கிறது
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நான் தினமும் காலையில் என்ன சாப்பிடுகிறேன் என்று
உங்களுக்குத் தெரியுமா?
ஏதாவது சாப்பிடுகிறேனா என்றாவது தெரியுமா?
என்றாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?
நான் வாக்குவங்கி இல்லை என்பதாலேயே
என் பள்ளிக்கு வந்து
எனக்கிருக்கும் வசதிக்குறைவைப் பார்க்க
நீங்கள் நேரம் ஒதுக்குவதேயில்லை
என்று நிறையவே எனக்கு வருத்தமுண்டு.
எனக்குப் பசிக்கிறது.
எனக்கு உங்களிடம் எந்த பேதமுமில்லை.
அன்போடு யார் தந்தாலும் என் வயிறு நிறையும்.
வயிறு நிறைந்தால்தான் படிக்க முடியும்.
கைகால்கள் வலுவோடிருந்தால்தானே
நான் விளையாட முடியும்?
உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்
அரைகுறையாகவாவது என் வயிறு நிறைவதை அனுமதியுங்கள்.
என்னை வளரவிடுங்கள்.
உங்கள் வெறுப்புக்கு என் வயிறை
இரையாக்கிவிடாதீர்கள்.

ஆதலினால்... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஆதலினால்...

‘ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)

இக் கொள்ளைநோய்க் காலத்தில்
உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று
சொல்லாமல் சொல்வதாய் விரியும்
கவிதையைப் பார்க்க _
பேரிடர் காலத்தே மட்டும் நினைக்கப்படுவதா
பெருங்காதல் என்று
யாரிடம் கேட்க…..

இருந்தவிடத்திலிருந்தே ஒரு ஓட்டப்பந்தயம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


இருந்தவிடத்திலிருந்தே 
ஒரு ஓட்டப்பந்தயம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல் காலாவதியாகிவிட்ட காலம் இது.
இன்று குட்டையைக் குழப்பவேண்டும்;
அதில் மனிதர்களைப் பிடிக்கவேண்டும்.
இந்தப் போட்டியில் முந்துவோருக்கு
அரங்கின் இருமருங்கிலிருந்தும்
கைத்தட்டலும் சீழ்க்கையொலியும் கிடைத்தபடியேயிருக்கும்.
கேட்கக்கேட்க கால்களில் தாமாகவே வேகம் கூடும்.
முதல் இடத்தைப் பெறுபவருக்கு மேதகு அறிவுசாலிப் பட்டமும்,
மாண்புமிகு மனிதநேயவாதி யென்ற பாராட்டும் நற்சான்றிதழும் வழங்கப்படும்.
பொற்கிழி நேரடியாகத் தரப்படாவிட்டாலும்
ப்ளேனில் நான்கைந்து நாடுகளுக்குச் சென்று வர ஏற்பாடு செய்யப்படும்.
இன்னுமென்ன?
இதோ இடையறாத இந்தப் போட்டியில்
இன்றே பங்கெடுத்துக்கொள்வீர்;
பரிசுகளை வெல்வீர்.
இப்போதே வாங்கிடுவீர் வெண்-மார்க் பனியன் லுங்கிகள்.
இன்றைய நிகழ்ச்சிகளனைத்தையும் வழங்குவோர்
ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் பீரங்கிகள்.


சிறகு மட்டுமல்லவே பறவை! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


சிறகு மட்டுமல்லவே பறவை!
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


அறுந்த சிறகின் இன்மையை ஏற்க மறுத்து
சில காலம் மேலெழும்பப் பார்த்து
பொத்தென்று விழுந்து
மலங்க மலங்க விழிக்கும்….
நாள் செல்லச் செல்ல
சுவரோரமாய்த் தத்தித் தத்திச் சென்றபடி
சிறகிருந்த கால நனவோடையில்
நீந்திக்கொண்டிருக்கும்.
அடிக்கடி சொப்பனங்களில்
மீண்டும் பொருந்திய சிறகுகளோடு
ஆனந்தமாய்ப் பறக்கும்.
எத்தனை சிறகுகளிலிருந்தாலும்
தொடும் வான் ஆக வழியில்லாத
தொடுவானைக் கண்டு
தொலைந்த சிறகின் வலியிலிருந்து
தன்னைத் தாற்காலைகமாகவேனும் மீட்டெடுத்துக்கொள்ளும்
தருணங்களும் உண்டு.

நாவினால் சுட்ட வடு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நாவினால் சுட்ட வடு
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை
பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி
திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம்
உயிர் துளைத்து உட்புகுந்து வரவாக்கும் ரணம்
வழக்கமாகிவிட்ட பின்னரும் _
வெடித்துமுடித்து வீதியோரம் வீசியெறியப்பட்டிருக்கும்
குருவி வெடிகளைக் காணும்நேரம்
குலைநடுங்கி யதிர்வதுபோல்
அஞ்சி நடுங்கும் மனம் _
இன்னொரு முறை யந்தச் சொல்லைக்
கேட்க நேரும் தருணத்தின் அவலமெண்ணி
அல்லும் பகலும்
அலைக்கழிந்துகொண்டிருக்கும்.


ஷோபாசக்தி சிறுகதைகள் குறித்து....

ஷோபாசக்தி சிறுகதைகள் குறித்து....



M.rishan Shareefபுத்தகங்களை வாசிப்பவர்கள் - Book Readers இல் இடம்பெற்றுள்ளது
தேசத்துரோகி
முதல் பதிப்பு மே 2003
(அடையாளம் பதிப்பகம்)
180 பக்கங்கள்
14 சிறுகதைகள்
(விலை: இந்தியாவில் ரூ.60. )

(சில எண்ணப்பகிர்வுகள் – லதா ராமகிருஷ்ணன்)
2003க்குப் பிறகு இந்த நூல் இன்னும் சில பதிப்புகளைக் கண்டிருக்கும் என்றே தோன்றுகிறது. கருப்புப்பிரதிகள் மூலமும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். அடுத்தடுத்த பதிப்புகளில் நூலின் விலை அதிகமாகியிருக்கக்கூடும்.
என்னிடமுள்ளது 2003இல் அடையாளம் வெளியீடாக வந்தது. இப்போது மீண்டும் படித்தேன்.
இந்தப் பனிரெண்டு கதைகளிலும் இலங்கையில் தமிழ் ஈழத்திற்காய் நடந்த போரும் அதன் நியாயமும், நடைமுறைகளும், ஆறாத்துயரும், பாதிப்புகளும், புலம்பெயர்வுகளும், அந்நிய மண்ணில் அகதியாக வாழ்வதில் அடைந்த ரணங்களும் ஆறா வடுக்களும் எந்தவிதமான மிகையுணர்ச்சியும் இல்லாத அதேசமயம் உயிர்ப்புமிக்க எழுத்தில் தரப்பட்டுள்ளன.
கதைகள் எல்லாவற்றிலும் புலம்பெயர்ந்தவர்கள், புலப்பெயர்வுக்காக படாதபாடுபடுகிறவர்கள் வருகிறார்கள்.

நாட்டில் சிங்களர்களிடம் அனுபவித்த அவமானங்கள் அடக்குமுறைகள் ஒருவிதம். அவை இந்தக் கதைகளில் விவரிப்பாய் தரப்பட்டாலும் அதைவிட அதிகமாய், சொந்தநாட்டிலும் சரி, அந்நிய மண்ணிலும் சரி அவர்களை அவர்களுடைய சக தமிழ் மக்களே அவர்களுடைய நெருக்கடியைப் பயன்படுத்திப் பலவகையில் சுரண்டிய அவலமே இந்தக் கதைகளில் ஆறா ரணமும் வடுவுமாய் காட்டப்படுகிறது.
வீட்டுப்பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களை ராணுவத்தினரிடமிருந்தும், இயக்கத்தினரிடமிருந்தும் காப்பாற்ற தரும் விலை ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமாய். ஒரு நாள் தன் பிள்ளையைப் பாதுகாப்பாய் வைத்திருக்க ஒரு பெரிய மனிதரிடம் இறைஞ்சும் தாய் இறுதியில் அதற்கு விலையாய் தன் இளவயது மகளின் உடல் எடுத்துக்கொள்ளப்படுவதை ஒரு ஏதும் செய்யவியலாமல் பார்த்துக்கொண்டிருக் கிறாள்.
ஒரு பண்டமாற்றுப் பொருளாக பெண்ணின் உடல் எப்படியெப்படியெல்லாம் போரின் மத்தியில் புலம் பெயர்வுக்கும், புலம் பெயர்ந்த பின்னாலும் பேரம் பேசப்படுகிறது, பெற்றுக்கொள்ளப்படுகிறது என்று இந்தக் கதைகள் காட்டுகின்றன.
எங்கேயுமே கதாசிரியர் தன்னை முன்னிறுத்த மெனக்கெடுவதில்லை. இன்றும் தொடரும் ஒரு புலம்பெயர்வாழ்வுக் காலகட்டத்தின் Big Pictureஐ இந்தக் கதைகள் காட்டுகின்றன. வேற்றுமண்ணில் ஒரு மனிதன் உணரும் அந்நியமாதலை எடுத்துக் காட்டுகின்றன.
இயக்கங்களைச் சேர்ந்த மனிதர் களை, தன் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர்களை, புலம்பெயர்வு வாழ்வில் தனக்குப் பரிச்சயமானவர்களை என கதைமாந்தர் களாக வரும் பலதரப்பட்டவர்களை கதாசிரியர் கேலி செய்கிறார். கோபிக்கிறார், பழிக்கிறார் – ஆனால், எல்லாவற்றிலும் அடிநாதமாய் ஒரு வாத்சல்யம் இழைந்தோடு கிறது. இவர்கள் இப்படி ஆகிவிட்டார் களே என்ற ஆறா வருத்தம் வெளிப்படுகிறது.
நூலின் முதல் சிறுகதையான தேவதை சொன்ன கதையின் நாயகன் விலைமாதாக இருக்கும் ஒரு இளம்பெண்ணிடம் இருக்கும்போது அவளை எண்ணி வருந்தி தன் நாட்டின் நிலவரம் பெண்களை எப்படி மாற்றிவிட்டது என்று எண்ணிப்பார்க்கிறான்:
// ‘அங்கே ஒவ்வொரு குண்டுகளும் இவ்விரண்டு விலங்குகளாய் உடைத்துக்கொண்டிருக்கின்றன. நுகத்திலே கொழுவியிருந்த கலைவாணிகள் ஆயிரம் கைகளும் சூலமும் வேலுமாய் தேர்களில் ஏறிவிட்டார் கள். தேர்களின் சக்கரங்கள் ஐயாக்களின் தலைகளை சுக்குநூறாய் உடைக்கின்றன. ஆனால் இங்கே ஒரு பெண் தேவதையாக்கப்பட்டு, அரை நிர்வாணியாய் விறைத்துப்போய் இருக்கிறாள். ஆண்குறிகலும் மாத்திரைகளும் தின்னும் இவளின் இருட்டு நிமிடங்களில் ஒரு சின்ன ‘கிரானைட்’ வெடித்துப் பற்றாதா? தேவதையும் ஆயிரம் கைகளும் சூலமும் வேலுமாய் தேர்களில் ஏறாளோ?’//
கதை இப்படி முடிகிறது:
(நாயகன் அந்தப் பெண்ணோடு உரையாடுகிறான்)
“உனது கிராமம் எது?”
”ட்ராங்பாங் கிராமம். அது தென்வியட்நாமில் உள்ளது.”
இவனுக்கு தனது தேர்க்கணக்கு எங்கேயோ சறுக்கு வதாகப் பட்டது.

“உனது அம்மா ஒரு கேடு கெட்டவள். இரண்டு பசுமாடுகளுக்காகவா உன்னை விற்றாள்?”
“சேர், அம்மாவை ஏசாதீர்கள். அவள் பாவம். எங்கள் கிராமத்தில் எல்லா அம்மாக்களும் என் அம்மா போலவே ஆக்கப்பட்டிருக்கிறார்கள். எதுவும் எதிர்த்துப் பேச முடியாது. தவிர, அவளுக்கு முழங்கைகளுக்குக் கீழே இரண்டு கைகளும் கிடையாது.”
“நான் மிகவும் வருந்துகிறேன். அது எப்படி நடந்தது?”
“யுத்த காலத்தில் ட்ராங்பாங் கிராம எல்லையில் ஒரு அமெரிக்க இரணுவ வண்டித்தொடர் எங்கள் கொரில்லாக்களால் தாக்கி அழிக்கப் பட்டதாம். முதலில் வந்த வண்டிக்குள் இரண்டு வெடிகுண்டுகளோடு அம்மாதான் பாய்ந்தாளாம்.”
வாழ்வின் நிகழ்வுகள் வரையறைக்குள் அடங்காதவை என்பதே கதைகளின் அடிக்குறிப்பாய் புலப்படுகிறது. ஆனால், கதைகள் தீர்ப்பளிக்க முற்படுவதே யில்லை. சமகால வாழ்க்கையை பல கோணங்களில் விரித்துப்போடுவதோடு சரி. அதனாலேயே இந்தக் கதைகள் ஒரு வலிகூடிய நிறைவான வாசிப்பனு பவத்தைத் தருகின்றன.
V9674D2687430743V D584 83675 E என்ற தலைப்பிட்ட கதை, பகுத்தறிவு பெற்ற நாள், தேசத்துரோகி, எலிவேட்டை, கடவுளும் காஞ்சனாவும் என பெரும்பா லான கதைகள் உலகத்தரமானவை. இவை ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றனவா, தெரிய வில்லை. மொழிபெயர்க்கப்பட வேண்டியவை. ஆனால், இந்தக் கதைகளில் வெகு இயல்பாக விரவியிருக்கும் இலங்கைத் தமிழுக்கே உரிய அழகும் நுட்பமும் வாய்ந்த சொற்களை, சொல்லாடல்களை எப்படி மொழிபெயர்க்க முடியும்
 —

கவிஞர் முகமது பாட்சாவின் 'ஆரிகாமி வனம்' கவிதைத் தொகுப்பு குறித்து

கவிஞர் முகமது பாட்சாவின் 'ஆரிகாமி வனம்' கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பகிர்வு கள்
_ லதா ராமகிருஷ்ணன்
M.rishan Shareefபுத்தகங்களை வாசிப்பவர்கள் - Book Readers இல் இடம்பெற்றுள்ள அறிமுகக் கட்டுரை)


ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவும் கவிஞர் முகமது பாட்சாவும்



கவிஞர் முகமது பாட்சாவின்
கவிதைத் தொகுப்பு
49 மூலக் கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும்
ஆங்கில மொழியாக்கம் : திரு.ஸ்ரீவத்ஸா
மொத்தம் 116 பக்கங்கள்
விலை: ரூ. 100
முதற்பதிப்பு : 2019
வெளியீடு: படைப்புக் குழுமம்
# 8, மதுரை வீரன் நகர்
கூத்தப்பாக்கம்
கடலூர் – தமிழ்நாடு (607 002)
அலைபேசி: 94893 75575

ORIGAMI: காகிதங்களை பலவகையாக மடித்து பல்வேறு வடிவங்களை உருவாக்கும் கலை ஆரிகாமி என்று அறியப்படுகிறது. ஆரிகாமி வனம் என்றால் காங்க்ரீட் வனம் என்பது போல் காகித வனம் என்று கொள்ளலாமா?
கவிஞர் முகமது பாட்சாவின் முதல் தொகுப்பு இது. என்றாலும், பல்வேறு இலக்கிய இதழ்களில் இவரு டைய கவிதைகள் வெளியாகியிருக்கின்றன; வெளியாகிவருகின்றன. ஃபேஸ்புக் சமூக ஊடக வெளியிலும் இவருடைய கவிதைகள் பதிவேற்றப் பட்டிருக்கின்றன. காத்திரமான கவிதைகள் எழுது பவர். வார்த்தைகளை மேம்போக்காகப் பயன்படுத்தா தவர். நேரிடையான கவிதைகள், பூடகமான கவிதை கள் என இருவகைகளையும் நேர்த்தியாகக் கையாள் பவர். எடுத்துக்காட்டாக ஒரு கவிதை:
எழுதப்பட்ட விதி
சாத்தான்
சாக்கடையில் விழுந்துவிட்டதாகச் சொன்னார்கள்
தேவதூதர்கள் அவனைக் காப்பாற்றி
உட்காரவைத்தார்கள்.
வழிப்போக்கன் காரணம் கேட்டான்.
சாத்தான் இறந்துவிட்டால்
தேவதூதர்களுக்கு வேலையில்லையென்ற
விதியிருக்கிறதாம்.

இந்தக் கவிதைக்கான திரு.ஸ்ரீவத்ஸாவிின் ஆங்கில மொழியாக்கம் பின்வருமாறு:
WRITTEN DESTINY
The Devil
had fallen
into the sewers
they said.
Angels
rescued
and sat him up
on the sides.
The passersby
wondered why!
There appears to be a rule
that angels will be jobless
if the Devils were dead.
இது சுலபமாகப் புரியும் கவிதைதான் என்றாலும், இந்தக் கவிதை ஒற்றை அர்த்தக் கவிதையல்ல. இது புரியாமல் நவீன கவிதைத்தொகுப்புகளுக்கு விமர் சனம் எழுதும் சிலர் ஒரு கவிதை தனக்குத் தரும் அர்த்தத்தையே அதன் இறுதியான ஒற்றை அர்த்த மாகத் தந்துவிடுகிறார்கள்.
’மண் எழுதும் கவிதை’ என்ற தலைப்பிலான கவிதை கூடுதல் கவித்துவம் வாய்ந்ததாக என் வாசக மனதுக்குத் தோன்றுகிறது.
மண் எழுதும் கவிதை
கடல் என்பதை
கட்டுமரத்தால் எழுதும் மீனவன்
மீன்களை
அலையென்று பிடித்துவருகிறான்
’ஆகாசம் என்பதை
பறவைகள்தான் எழுதிவைக்கின்றன
வனம் என்பதை
யானையின் சாணியும் உணர்த்தும்
எழுதுகோல் தேவையில்லை
இயற்கை
தன் கவிதைகளை எழுதிவைக்க….
மழையென்பது
வானத்திற்கு பூமி கொடுத்த வரம்
சிற்றுயிர்களின் சப்தமின்றிப் போனால்
சகலமும் செத்துவிடும்….
சங்கீதம் யாரும்
அவற்றிற்குக் கற்றுக் கொடுத்ததில்லை…
சாகாவரத்தின் மண்
நம்மைப் பற்றி கவிதை எழுதுகிறது….
படிக்காமல்
நாம் அதனை கசக்கி எறிகிறோம்…
படித்தவர்களென்று
நம்மை நாமே சொல்லிக்கொண்டு.
English Translation by Mr..Srivatsa:
THE POEM OF THE SOIL
The fisherman
who writes the sea
with a catamaran,
brings a catch of fish
as a wave.
Only the birds write
what is space.
Even the elephant’s droppings
would indicate a forest.
A pen is not necessary
for nature to write its poetry.
Pain is the boon granted by
the earth to the sky.
If the sounds of the little creatures
are silenced, everything will be dead.
Nobody taught music to them.
The soil of immortality
writes a poem
about us.
Without reading it,
we crush and throw away,
calling ourselves educated.
இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கும் கவிஞர் இந்திரன், மற்றும் பதிப்புரை, கவிஞரின் என்னுரை ஆகியவை அர்த்தச்செறிவு மிக்கவையாய் இருக்கின்றன. வரலாற்றில் எழுத்துக்கு இருக்கும் வலிமையை பதிப்புரை எடுத்துரைக்கிறது. மகாகவி களுக்குக் கூட கவிதை வீட்டுவாடகை கொடுத்ததாக வரலாறு இல்லை என்று சுட்டிக்காட்டும் கவிஞர் இந்திரன் ஆனாலும் நாம் கவிதையை நேசிப்பதற் கான காரணங்களை எடுத்துரைக்கிறார். கவிஞர் முகமது பாட்சா தனது ‘என்னுரையில்’ கவிதை குறித்த தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.
இந்த நூல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக் கிறது. மூல கவிதையும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் எதிரெதிரே தரப்பட்டிருக்கிறது. இரண்டு மொழிகளில் ஒரு மொழி தெரியாதவர்கள் இன் னொரு மொழியில் கவிதைகளைப் படித்துக்கொள்ள முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதில் உள்ள போக்குகளை அறிந்துகொள்ளவும் இத்தகைய இரு மொழித் தொகுப்புகள் வழிவகுக்கும்.
அதேசமயம், மூல மொழி தெரிந்தவர்கள் மொழி பெயர்ப்பைப் பொருட்படுத்திப் படிப்பார்களென்று சொல்ல முடியாது.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கும் திரு. ஸ்ரீவத்ஸா கடந்த சில வருடங்களாக ஃபேஸ்புக்கில் தனது பக்கத்தில் தொடர்ந்து நவீன கவிதைகளை நேர்த்தியாக மொழிபெயர்த்து வெளியிடுபவர். தான் மொழி பெயர்க்கும் ஒவ்வொரு கவிதையின் சாரத்தையும் சுட்டுவதாய் அவர் தரும் சிறு குறிப்புகள் அருமை
யானவை. இவருடைய கவிதை மொழிபெயர்ப்புகள் தொகுப்பாக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. ஆனால், அவசியம் செய்யப்பட வேண்டும். இந்தத் தொகுப்பில் முகப்பு அட்டையில் மொழிபெயர்ப்பாள ரின் பெயர் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புலப் படும்படி தரப்பட்டிருக்கலாம். அதேபோல், மொழி பெயர்ப்பாளர் குறித்த சிறு அறிமுகமாவது தரப்பட்டி ருக்கவேண்டும்.
மேலே தரப்பட்டுள்ள இரண்டு கவிதைகளுக்கான திரு.ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை யும் மேலே தந்துள்ளேன். அவை அவரது கவனமான, நேர்த்தியான மொழிபெயர்ப்புக்கு சான்று பகரும். கவிதைகளை மொழிபெயர்ப்பதில் ஒரேயடியாக சுதந்திரம் எடுத்துக்கொள்ளவில்லை மொழிபெயர்ப் பாளர். கவிதை வரிகளை ‘பொழிப்புரை’ தருவதாக மொழிபெயர்க்கவில்லை.
நவீன கவிதையை ஒரு வாசகனாக அர்த்தப்படுத்திக் கொண்டு, கவிஞரிடம் அர்த்தத்தைக் கேட்டறியாமல் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களும் உண்டு. அவர்கள் ஒரே கவிதையை இருவிதமான பொருள்களில் மொழிபெயர்க்க வழியுண்டு. ஒரே மொழிபெயர்ப்பாளர் ஒரே கவிதையை இருவேறு சமயங்களில் மொழிபெயர்க்க நேரும்போது அவை யிரண்டும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. வார்த்தைத் தேர்வு வேறாக அமையும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல், மூலமொழி வேறாக இருந்து அதிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப படும் படைப்புகள் உண்டு. அதே படைப்புக்கு ஆங்கி லத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியாக்கப் பிரதி கள் இருக்க வழியுண்டு. தமிழ் மொழிபெயர்ப்பு எந்த ஆங்கில மொழியாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது என்பதும் கணக்கிலெடுத் துக்கொள்ளப்படவேண்டியது.
இத்தகைய நுட்பங்களைக் கணக்கில் கொள்ளாமல் ஒரு மொழிபெயர்ப்பு நூலை மேம்போக்காகக் குறை சொல்லி, மூல கவிதையில் ஒரு வார்த்தைக்குத் தனக்குத் தெரிந்த இலக்குமொழி வார்த்தையை மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தவில்லை என்ப தையே குறையாகச் சுட்டிக்காட்டி, அப்படி ஒன்றி ரண்டு வார்த்தைகளைக் கொண்டு அந்த மொழி பெயர்ப்பு முயற்சி முழுவதையும் மட்டந்தட்டி அதன் மூலம் மிக எளிதாகத் தம்மைப் பீடத்தி லேற்றிக் கொண்டுவிடும் விமர்சனப் போக்கே அதிகமாக நிலவுகிறது. (இவை குறித்து எனது 'ஒரு மொழி பெயர்ப்பாள ரின் வாக்குமூலம்’ என்ற சிறுநூலில் ஓரளவு பேசியிருக்கிறேன்).
மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விமர்சனங்களில் குறை காண்பதில் காட்டும் ஆர்வம் பெரும்பாலும் மொழிபெயர்ப்பில் உள்ள நிறைகளைப் பேசுவதில் காட்டப்படுவதில்லை என்பது வருத்தமான நடப்புண்மை.

இறுதித்தீர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இறுதித்தீர்ப்பு
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



அந்த சமுத்திரங்களின் அலைகள் 
இல்லாது போயினும்
இந்த பூமி சுற்றுவதை 
நிறுத்திவிட்டாலும்
வந்த கொரோனா இத்தரையிலிருந்து
மொத்தமாய் விடைபெற்றுப் 
போய்விட்டாலும்
அப்படியேதானிருக்கும்
அத்தனை பேரையும் 
அடிமுட்டாள்களாக பாவித்து
உன் முகம் நிரந்தரமாய் 
தரித்துக்கொண்டுவிட்ட
அந்த அகங்காரச் சிரிப்பு.

எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

எளிய பொய்சொல்லலும்
எளிதாகப் பொய்சொல்லலும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே
சொன்னாள் சிறுமி:
“உண்மையாகவே என் குருவி பொம்மை
பறக்கும் தெரியுமா!”
இருபது வருடங்களாக ‘எழுதி’க் கொண்டிருக்கிறார்
என்று நண்பரை அவையோருக்கு அறிமுகப்படுத்தியவர்
இத்தனை காலமும் ‘இ’யைத்தான்
சரியாக எழுதப் பழகிக்கொண்டிருக்கிறார் என்பதை
பத்திரமாக மறைத்துவிட்டார்.
அவருடைய அந்த நண்பரின் பேரன்
அடிக்கடி கண்ணை விரித்துக் கையை விரித்துக்
கதை சொல்வான்.
கூடைகூடையாய் நட்சத்திரங்களைத்
தனக்கு நிலவு கொட்டியதாக.
அப்போது அந்தக் குழந்தை முகம்
தூய்மையே உருவாய் என்னமாய் மின்னும்!
இருபது வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார்
என்று அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை பொங்க
மேடையேறி ‘மூத்த எழுத்தாளர்’ பதக்கம் பெற்றுக்கொண்ட
அவன் தாத்தா
இத்தனை வருடங்களில் உருவாகாத
தன் படைப்புகளை
மொத்தமாய் அள்ளிக்கொண்டார்
வெட்கங்கெட்ட கற்பனையில்.
தெரிந்தே ஒரு பொய்யை சுலபமாக
மெய்யாக்கிவிட்ட
தமது சாமர்த்தியத்தை மெச்சியபடி
இன்னமும் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள்
சில இலக்கியக் காவலர்கள்.

நோய்மை ‘ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)


நோய்மை
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 அகன்று விரிந்த சாலையில் ஓரமாகக் கிடக்கும்
வறிய வாழ்வுகளைக்கண்டுங்காணாமல் விரைந்துகொண்டிருந்தவர்கள்தான் நாம்.
அடுத்தவரைக் குறைபேசியே
நம்மாலாகும் கடுகளவு சகமனிதக்
கடமையைக்கூடச் செய்யாமல்
காலெட்டிவைத்து அப்பால் போய்க்கொண்டிருக்கப்
பழகிவிட்டவர்கள்….
பாதிக்கப்பட்டவர்கள் பாவம் தாங்குவதில்
நடிப்புக்கு நோபெல் விருது இருந்தால்
அது கண்டிப்பாக நமக்குத்தான்.
ஆள்பவர்களையெல்லாம் ஆக்ரோஷமாகப்
பழிப்பதும் சபிப்பதுமே
நம் மனிதநேயத்தின்அக்மார்க்முத்திரையாக _
அதைத் ஸெல்ஃபி எடுத்துப்போடுவதைக் காட்டிலும்
ஆகப்பெரிய சமூகப்பணி இருக்கமுடியுமா என்ன?
ஒரு பேரவலத்தின் பிடியில் அகப்பட்டு
சிறிய அறையில் முடங்கிக்கிடக்கும் நேரம்
திரும்பத்திரும்ப துயருரும் வறியவர்கள்
சிறிய இன்னும் சிறிய சதுர,நீள்சதுரக் கண்ணாடிப்பெட்டிகளிலிருந்து
அத்தனை நெருக்கத்தில் கண்ணீர்பெருக்கும்போது
தன்னையுமறியாமல் மேலெழும்பும் மனசாட்சி
நம்மைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறது.
அவசர அவசரமாக அதன் வாயை மூடி
பாதிக்கப்பட்டவராக நம்மை முன்னிறுத்தும் முயற்சியில்
உரக்கக் கூவுகிறோம்; கதறுகிறோம்
தாவி குதித்துத் தரையில் புரண்டு துடிக்கிறோம்;
தெரிந்தே பொய் பேசுகிறோம்.
பறந்துகொண்டிருக்கும் பணக்காரர்களால் வந்தது
இந்தப் பேரிடர்
என்று அடித்துச்சொல்கிறார் நம்மில் ஒருவர்
அடிக்கடி அவர் பல நாடுகளுக்குப் பறந்தவர்; பறந்துகொண்டிருப்பவர்;
பறக்கப்போகிறவர்
.