LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, February 14, 2026

பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு

 பாயுமொளி நீயெனக்கு

பார்க்கும் விழி நானுனக்கு

* 39 வயதில் முடிந்துவிட்டபாரதியின் வாழ்க்கை.

அதற்குள் எத்தனை உணர்ச்சிமயமான கவிதைகள்! அவர் கவிதைகளுக்கான அர்த்தம் தருவோர் முடிந்த முடிவாக அவர் இதைத்தான் சொன்னார் என்று எப்படி சொல்கிறார் களோ, தெரியவில்லை. அவர் அப்படி’இதை நினைத்துத் தான் இந்தக் கவிதை எழுதினேன்’ என்று எந்த ஒப்புதல் வாக்குமூலமும் தந்துசென்றதாகத் தெரியவில்லை.

இங்கே தரப்பட்டுள்ள கவிதை காதல் கவிதை என்று புரிகிறது. ஆனால், அவருடைய எல்லாக் கவிதைகளும் அப்படியென்று சொல்லவியலாது. உதாரணத்திற்கு, ‘ திக்குத் தெரியாத காட்டில்’ என்று தொடங்கும் கவிதை. அவருடைய பல கவிதைகள் ‘திறந்தமுனை’க் கவிதைகளாக ஒன்றுக்கு மேற்பட்ட வாசகப்பிரதிகளை உள்ளடக்கியவை.
எனவே, அவருடைய கவிதைகளுக்கு உரை எழுத முற் படாமல் அவற்றை வாசிப்பதே அவருக்கு வாசகராக நாம் செய்யும் குறைந்தபட்ச மரியாதை என்று தோன்றுகிறது.
.........................................................................................................................................

பாரதியார் கவிதை
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!
வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!
தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!

க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் - மனிதர்

 க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் - மனிதர்

லதா ராமகிருஷ்ணன்
(*10.2.2019 தேதியிட்ட சமீபத்திய திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)
( “இலக்கிய விமரிசனத்தால் ஏதோ அளவுகோல்களை நிச்சயம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால், எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதிதான் அடிப்படையான விதி. இலக்கிய விமரிசனத்தின் முதல் நோக்கு இந்த விதியை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வதுதான் - - க.நா.சு)
க.நா.சு – [கந்தாடை சுப்ரமணியம்]
[ ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988]
[இந்தச் சிறு கட்டுரையை நான் இப்போது எழுதுவதற்குக் காரணம் க.நா.சுவின் பிறந்தநாள் ஜனவரி 31(1912) என்பதா? இல்லை. இலக்கிய விமர்சகராகத் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்கள், விமர்சனம் என்ற பெயரில் சக-படைப்பாளிகளைக் கேவலப்படுத்துபவர்கள் க.நா.சு பெயரையும் அடிக்கடி மேற்கோள் காட்டுவதால் க.நா.சுவின் விமர்சன அணுகுமுறையே இந்தவித மாகத்தான் அமைந்திருந்தது என்று யாரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் எண்ணிவிடலாகாது என்பதற்காகவே இதை எழுதத் தோன்றியது].
எழுத்தாளர் க.நா.சுவின் நூற்றாண்டுவிழா என்று நினைக்கிறேன். சென்னை, மயிலையில் ஸ்ரீராம் அறக்கட்டளை –விருட்சம் சார்பாக ஒரு கூட்டம் நடந்தது. நானும் பேசினேன்.
க.நா.சுவின் வாழ்நாளில் கடைசி ஒன்றரை இரண்டு வருடங்கள் – அவர் சென்னைக்கு வந்துசேர்ந்த பின் தான் எழுதுவதைப் பிரதியெடுக்க உதவிக்கு ஆட்கள் தேவை என்பதாக அவர் கூறியிருந்ததைப் படித்து ‘சாகித்ய அகாதெமி விருது வாங்கியவர் நீங்கள். உங்களுக்கு உதவ எத்தனையோ பேர் இருப்பார்கள். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமானால் அதை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுவேன்’ என்றெல்லாம் நான் எழுதியனுப்பிய தபால் அட்டைக்கு ‘அப்படியெல்லாம் யாரும் உதவிக்கு இல்லை. நீங்கள் வரலாம். ஆனால், சன்மானம் எதுவும் தர இயலாது’ என்பதாக சுருக்கமாக பதில் வந்தது. அப்போது நான் மந்தைவெளியில் இருந்தேன். அவர் மயிலாப்பூர் கோயில் பக்கம். அதன்பின் அவருடைய இறப்புவரை தினமும் காலையில் இரவுப்பணி முடிந்து வீடு செல்லும் வழியில் அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கமாகியது. அவர் சொல்லச் சொல்ல எழுதுவதும், அல்லது அவருடைய எழுத்தாக்கங்களைப் பிரதியெடுத்துக் கொடுப்பதும் வழக்கமாகியது. அவருடைய கையெழுத்து சிற்றெறும்புகள் ஊர்ந்துசெல்வதைப்போல் சின்னச்சின்னதாக அடித்தல் திருத்தல் இல்லாமல் இருக்கும். அப்போது தினமணிக் கதிரில் பணிபுரிந்துகொண்டிருந்த தேவகி குருநாத் நான், இன்னும் ஒருசிலரால் மட்டுமே அவற்றைத் தெளிவாக வாசிக்க முடியும்.
இந்த விஷயங்களையும், க.நா.சுவுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகப் பணி கிடைத்தபோது அவர் கேட்ட ஊதியமே 2000 ரூபாய் தான். அதற்கடுத்து அந்தப் பதவியில் அமர்ந்தவர் 10000போல் வாங்கினார்! க.நா.சுவின் தேவைகள் மிகவும் குறைவு. மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அவர். தன்னுடைய தந்தையாரின் திதியன்று லஸ் கார்னரில் இருக்கும் சுகி நிவாசுக்கு அவருடைய மனைவியையும், கூடவே என்னையும் அழைத்துச்சென்று நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். சாப்பிட்டபிறகு வெகு சாதாரணமாக அன்று அவருடைய தந்தையாரின் திதி என்ற விவரத்தைத் தெரிவித்தார். அவரிருந்த தெருவழியாக சாமி ஊர்வலம் வரும்போது, ‘நான் போய் பார்க்கவில்லையே என்று சாமி என்னைப் பார்க்க வருகிறார்’ என்று வேடிக்கையாகச் சொல்வார்.’ என்பதையெல்லாம் நான் என் உரையில் குறிப்பிட்டேன்.
கூட்டம் முடிந்து திரும்பும்போது எழுத்தாளர் பிரபஞ்சன் இதையெல்லாம் நீங்கள் கட்டுரையாக எழுதலாமே லதா” என்றார். இதுநாள் வரை நான் எழுதவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, நினைவுகளை நாம் எழுதும் போது அதில் ஒன்றிரண்டு இடைச்செருகல்கள் சேர்ந்துவிடக் கூடும். இரண்டு, ‘இந்தப் பெரிய எழுத்தாளரை எனக்குத் தெரியும்’ ‘அந்தப் பெரிய பிரபலத்தை எனக்குத் தெரியும் என்றெல்லாம் ‘ஃபிலிம்’ காட்டுவது எனக்கு ஒத்துவராத விஷயம்.
ஆனால் இன்று க.நா.சு என்ற மனிதரைப் பற்றி, படைப்பிலக்கியவாதி - விமர்சகரைப் பற்றி எழுதவேண்டிய தேவையை உணர்கிறேன். எனவேதான் இந்தச் சிறிய கட்டுரை – எழுதுவதற்கு இன்னும் நிறையவே உள்ளது).
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் பழகுவதற்கு எளிய மனிதர் க.நா.சு. எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். வன்மமான பேச்சு அவரிடமிருந்து வெளிப்பட்ட தில்லை. குரு-சிஷ்ய பாவத்தில் அவர் யாரிடமும் அளவளாவியதில்லை. அவ்வமயம் வந்துகொண் டிருந்த ஞானரதம் இலக்கிய இதழுக்குத் தான் எழுதியவற்றை என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்லியதுண்டு.
அதிகாரத்திற்கும் அலட்டலுக்கும் அவர் என்றுமே அடிபணிந்த தில்லை. தன்னை ஒரு இலக்கிய-விமர்சன அதிகாரபீடமாகவும் அவர் நிறுவ முயன்றதேயில்லை. சக எழுத்தாளர்களுடைய படைப்புகள் குறித்த அவருடைய விமர்சனத்தில் தனிமனிதத் தாக்குதலோ, மதிப்பழிப்போ இருக்காது. முகமறியாத எத்தனையோ இளம் எழுத்தாளர்களைப் பாராட்டி எழுதியிருக் கிறார்.
அவர் கவிஞர், புதின எழுத்தாளர், சிறுகதையாசிரியர் – கூடவே விமர்சகரும். அவரிடத்திலிருந்த படைப்பிலக்கியவாதி விமர்சகரின் எல்லை குறித்த கறாரான பார்வையைக் கொண்டிருந்தார். விமர்சனத்தின் தேவையை வலியுறுத்தியதைப் போலவே விமர்சகர்கள் எவ்வாறு இயங்கவேண்டும் என்ற தெளிவான பார்வையையும் கொண்டிருந்தார். இரு விமர்சகர்கள் என்ற தலைப்பிட்ட அவருடைய கவிதை இது: [மயன் என்ற பெயரில்தான் அவருடைய பெரும்பாலான கவிதைகளை எழுதியிருக்கிறார்].
இது க.நா.சுவின் கவிதை:
இரு விமர்சகர்கள்
இவர்கள் இரண்டுபேருமே விமர்சகர்கள்தான்
ஒருவன் ஏதோ புஸ்தகத்தைக் குறிப்பிட்டு இது
மிகவும் நன்றாக இருக்கிறது – ஒவ்வொருவனும்
படித்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்லி
என் பொறுப்புச்சுமையை அதிகரித்துவிடுகிறான்
மற்றவன் அதே புஸ்தகத்தை அலசி அலசித்
தன் கெட்டிக்காரத்தனம் புலப்படப் பலவும்
எழுதி நேரம் போய்விட்டது; அவன் விமர்சனத்தைப்
படித்ததே போதும்; புஸ்தகத்தைப் படிக்க வேண்டிய
அவசியமில்லை என்று என் பொறுப்பைக் குறைத்து
விடுகிறான். இருவரும் விமர்சகர்கள் தான்!
(க.நா.சு கவிதைகள் சந்தியா பதிப்பக வெளியீடு, 2002, பக்கம் 46]
விமர்சனத்தின் தேவையைப் பற்றி தெளிவான பார்வை கொண்டிருந்தது போலவே விமர்சகர்களின் தகுதி, அணுகுமுறைகள் குறித்தும் தீர்மானமான கருத்துகளைக் கொண்டிருந் தார். அவருடைய விமர்சனக்கலை நூலில் இவ்வாறு கூறுகிறார்:
“குறிப்பிட்ட ஒரு இலக்கியத்தின் தரம் பூராவையும் இலக்கிய விமர்சனம் மூலம் எடுத்துச்சொல்லிவிட முடியுமா என்று கேட்டால், முடியாது என்றுதான் பதில் தரவேண்டும். அதனால்தான் ஷேக்ஸ்பியரை யும், டாண்டேயையும் பற்றி இத்தனை நூல்கள் தோன்றியும் (பள்ளி நூல்களைப் பற்றி இப்போது விவாதிக்கவேண்டாம்) இன்னும் பல நூல்கள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சிறுகதையையோ, கவிதையையோ, நாவலையோ அலசிப் பார்த்து இதிலுள்ள இலக்கிய நயம், அம்சம், தரம் எல்லாம் இவ்வளவுதான் என்று எடைபோட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனால், இன்னின்ன நயங்கள், தரங்கள், அம்சங்கள் இப்படியிப்படியாக ஏற்பட்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்ட முடியும். இலக்கிய உருவத்தையும், அந்த உருவத்தை நமக்கு நிர்மாணித்துத் தருகிற வார்த்தைகளையும், ஆசிரியரின் கருத்துகளையும், சூழ்நிலையையும், அதனால் எழுந்த கோயிலையும், குச்சையும், இலக்கிய விமரிசனம் நல்ல வாசகனுக்குச் சுட்டிக்காட்ட முயலுகிறது. இந்த நூலின் நோக்கம் இது என்று சொல்லும்போதே , வார்த்தைகளால் எழுந்த இதன் நோக்கம் பலதரப்பட்டது, இதிலே பல கோணங்களும் திருப்பங்களும் தொனிக்கின்றன என்பதையும் காட்ட இலக்கிய விமரிசனம் பயன்படுகிறது. இதோ கதவு, திறந்துகொண்டு உள்ளே போகலாம் என்றோ; இதோ மலர். நுகரலாம் என்றோ; இதோ பாதை, நடக்கலாம் என்றோ நல்ல வாசகனுக்குச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இலக்கிய விமர்சகன் செய்யவேண்டிய காரியம் என்று நான் என்ணுகிறேன். கதாகாலட்சேபக் காரர்கள், ஒரு வரிக் கவிதைக்கு எட்டுப் பக்கப் பிரசங்கம் செய்பவர்கள் செய்யவேண்டிய காரியம் அல்ல இலக்கிய விமரிசகன் செய்யவேண்டிய காரியம். நல்ல கவிதையை(சிறுகதையையோ நாவலையோ) சுயம் கவிதையாக அப்படியே தரவேண்டுமே தவிர அதிலே பட்டணத்துப் பால்காரனாகத் தண்ணீர் ஊற்றிப் பெருக்கித் தரக்கூடாது இலக்கிய விமர்சனம் என்பது வெளிப்படை.
”கம்பனுடைய காவியத்தைப் பற்றி விமரிசனம் செய்ய முன்வருபவன், கம்பனுடைய கவிதையை முக்கியமாகக் கருதி விமரிசனம் செய்யவேண்டுமே தவிர ‘என் கெட்டிக்காரத்தனத்தைப் பார், என் அறிவைப் பார் என்றெல்லாம் கம்பன் கவிதைக்குப் புறம்பானதை, இல்லாததைச் சொல்லி கதாகாலட்சேபம் செய்வதை இலக்கிய விமரிசனம் என்று சொல்லமுடியாது.
“ஆனால் அதற்காக இலக்கிய விமரிசகன் அறிவற்ற ஒரு சூனியத்தில் நிற்கிறான் என்பதல்ல. அவன் அறிவெல்லாம், அவன் திறனெல்லாம் அவன் படித்த படிப்பெல்லாம் அவன் விமர்சனம் செய்யும் நூலுக்குள் அடங்கி நிற்கின்றன. அதை மீறிய எதையும் அவன் கவனிப்பதேயில்லை. தாட்சண்யம், பரிவு, அநுதாபம், பெரியவர், சின்னவர், காலத்தால் முந்தியவர், பிந்தியவர் என்பதெல்லாம் இலக்கியத்துக்கும் விமர்சனத்துக்கும் புறம்பான அப்பாற்பட்ட விஷயங்கள்”
என்கிறார். [விமரிசனக் கலை – க.நா.சு]
ஆக, விமர்சகர் என்பவருக்கும் அடிப்படைத் தரநிர்ணயங்கள் இருக்கின்றன. ’காலதேவனுடைய நிர்தாட்சண்யத்துடன் பரிவு என்பதே காட்டாமல்தான் இலக்கிய விமரிசனம் செய்தாகவேண்டும்’ என்று கறாராகக் கூறும் க.நா.சு, “எதையும் அநுதாபத்தோடு பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள், இலக்கியத்தில் அநுதாபம் தேவையில்லை. எந்த இலக்கியாசிரியனுக்கும் யாருடைய அநுதாபமும், ஊக்குவித்தலும் தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்றும் கூறத் தவறவில்லை! விமர்சனம் செய்வது என் பிறப்புரிமை என்று கூறுபவர் ‘ ஒரு சிட்டுக்குருவியின் விழுகையில்கூடக் கடவுளின் கையைக் காண முடியும் என்று ஹாம்லட் சொல்லுவதாக ஷேக்ஸ்பியர் எழுதுகிறார். எல்லாக் கவிதைகளின் வரிகளிலும் கடவுளின் கையைக் காண முடியும்’ என்றும் கூறத் தவறவில்லை. (கலை நுட்பங்கள் வேள் பதிப்பகம் வெளியீடு, டிசம்பர் 1988, பக்128)
கலைநுட்பங்கள் என்ற அவருடைய கட்டுரைத் தொகுப்பில், “கடைசியாக, இலக்கியத்துக்கு எதிராகக் கடைசி ஆய்தமாக உபயோகப்படுத்தக்கூடியது ஒன்றுண்டு. இந்த ஜனநாயக யுகத்தில் யாரோ ஆயிரம் இரண்டாயிரம் பேர்வழிகள் ஆஹா, ஊஹூ என்று சொல்லிக்கொண்டிருக்கிற நூல்களை இலக்கியம் என்று எல்லோர் தலையிலும் இலக்கியவாதிகள் கட்டுகிறார்கள். எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகாது என்கிறார்கள். ஏதோ குறிப்பிட்ட சில நூல்கள் தான் இலக்கியம் என்கிறார்கள். விமர்சனம், காலம் இரண்டுமாகச் சேர்ந்துகொண்டு இன்று எழுதப்படுவதில் பெரும்பகுதியையும் அழித்துவிடுகின்றன எனவும் (பக் – 44).இப்படிப்பட்ட காரியங்களால் இலக்கியப்படிப்பு தேவையா என்கிற கேள்விக்கு தேவையில்லை என்று பதில் சொல்லவே எங்களுக்குத் தோன்றுகிறது என்று சொல்பவர்கள் நம்மிடையே இருக்கலாம்’ என்று சுட்டிக்காட்டுகிறார். ‘இலக்கியம் என்பதை எல்லோரும் படிப்பதில்லை. சிலர்தான் படிக்கிறார்கள், அதிலும் மிகச்சிலரே தங்களிடமிருக்கும் ஒரு தன்மையால் பிறரிடம் காணப்படாத ஒரு குணாதிசயத்தினால் சிருஷ்டிக் கிறார்கள். இலக்கியம், கலை என்பதெல்லாமே ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் பயிலப்படுகிற மாதிரி தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைகள் இலக்கியங்க ளைத்தான் நாம் சிரமப்பட்டு மூவாயிரம் ஆண்டு களாக வளர்த்துவந்திருக்கிறோம்” என்று அவர் கூறுவதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், ‘எழுதுவதெல்லாம் இலக்கியம் ஆகாது’ என்ற கூற்றின் உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாலும் இன்னொருவகையில் அப்படிச் சொல்பவர்களின் விமர்சனத் தகுதியையும், விமர்சன நேர்மையையும், பாரபட்சத்தன்மை யையும் நாம் அவதானித்துப் பார்க்கவேண்டிய தேவையும் உள்ளது. இத்தகைய இலக்கியவாதிகள் யார் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியம்.
அகராதி என்ற தலைப்பிட்ட அவருடைய கவிதை இது:
நான் சொல்லக்கூடிய
வார்த்தைகள் எல்லாம்
இதோ இந்த அகராதியில்
அடங்கியுள்ளன.
இந்த அகராதியை எடுத்து
உங்கள் மேல் வீசி எறிந்தால்
என்னை ஒரு கவி என்று
ஏற்றுக்கொள்வீர்களா?
நான் செய்யக்கூடிய காரியங்கள்
எல்லாமே இந்தப் பத்து
விரல்களில் அடக்கம்.
என் விரல்களைக் கண்டு
நான் காரியவாதி என்று
கண்டுகொள்வீர்களா?
அவருடைய கட்டுரைகளையெல்லாம் படிக்கிறபோது வெளியிலிருந்து பெறும் விமர்சனம் என்பதைவிட ஒரு வாசகர் தன் ஆழ்ந்த வாசிப்பின் மூலம் தானேயொரு தரமான விமர்சகராக மாறுவதே சிறந்தது என்ற கருத்துடையவராக க.நா.சு இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மூன்றாவது நதிகளுக்கு *********************************** ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மூன்றாவது நதிகளுக்கு

***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(அலைமுகம் என்ற தலைப்பிலான என் முதல் தொகுப்பில் இடம்பெறுவது)
..........................................................................................................................
கல்லூரி நாட்களில் ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரம் ஹாம்லெட் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நடிகர்களில் மம்முட்டி. அவர் அனந்தேட்டன் என்ற பெயரில் ஒரு சரித்திரக் கதாபாத்திரமேற்று நடித்த படத்தைப் பார்த்த தாக்கத்தில் எழுதப்பட்ட கவிதை இது. படம் பெயர் நினைவில்லை. (எனது முதல் கவிதைத் தொகுப்பில் - அலைமுகம்- இடம்பெறுகிறது)
கால வரையறைக்குட்படாத, நெடுந்தொலைவுப் பிரியம், வாழ்வியல் பலன் எதிர்பாரா அன்பு உண்டுதானே!
......................................................................................................................................
மூன்றாவது நதிகளுக்கு
***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
**********************************
ஒவ்வொரு அசைவிற்கும்
உள்ளலை கொள்ளும் வைரப்பளீரிடலாய்,
காற்றை வாரியணைக்கக் கரங்களில் பெருகும்
காட்டாற்றுத்தினவாய்,
உடைந்து விடாதபடி குமிழ்களை
அடைகாத்துக் கொள்ளக்
கடுந்தவமியற்றும் மனதின் காலாதீதமாய்
அசந்த நேரத்தில் வசப்படுத்தி விட்ட இந்த
உயிர்ப்பின் ரஸவாதத்தை
ஊமையாய் சுமந்து கொண்டிருக்க முடியவில்லை
உரக்கப் பாட வேண்டும்
கண்டம் கானாமிர்தமாய்
காடுமலை மேடெல்லாம் கரைந்துருகப்
பாடிப் பரவ வேண்டும்
அண்டசராசரமும் காண
ஆனந்தக் கூத்தாட வேண்டும்
வரவேற்பிற்கும் பிரிவுபச்சாரத்திற்கும்
இடைநிரம்பியது வாழ்க்கை
வழியில் - ஆறாவதிலோ, அடுத்த மரத்திலோ
எனக்கான அம்பு
அழியு முன்
என் உயிர்க்கோலப் புள்ளிகள்
கோடுகளையெல்லாம்
கொண்டாடி விட வேண்டும்
உன்னையும்
அனந்தேட்டா!
அறிய மாட்டா யென்னை
அதனாலென்ன?
ஹாம்லெட்டுக்கும் தெரியாது!
(*மம்முட்டிக்கு)

கவி பிரம்மராஜனின் கவிதை

 கவி பிரம்மராஜனின் கவிதை

காதல் வழியே கவித்துவம் குறையாமல் வாழ்வின், உறவின் நிலையாமையை, புதிர்த் தன்மையை, அவற்றில் மனித மனம் உணரும் அலைக்கழிப்புகளை, அவற்றை மீறி மனம் அன்பில் கொள்ளும் நம்பிக்கையை என பலப்பலவற்றை அன்பின் நெகிழ்ச்சியும் எதிர்பார்ப்புமாய் பேசும் வரிகள்.

எத்தனை நுட்பமான படிமங்கள், குறியீடுகள், காட்சிகள்!

இவையும் நல்ல கவிதையின் அடிப்படை அம்சங்களா கத் தோன்றுகிறது.

துளிஞானம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 துளிஞானம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குறையென்றால் குறைக்கவும்
கூட்டென்றால் கூட்டவும்
கைவசப்படவில்லை
காலமும்
கவிதையும்.

இல்லாதிருக்கும்….. - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இல்லாதிருக்கும்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பாழுங்கிணறின் ஆழம்
புலிவாய்ப் பெரும்பிளவு
ஆயிரங்குளவிக்கொட்டு
பலிபீடம்
உருள்தலை
பசித்தவயிறு
பிரார்த்தனையின்
எட்டாத் தொலைவு
சுட்ட சட்டியை விட்டுவிடாக் கை
மைபோட்ட வெற்றிலை காட்டும்
முகம்
கொடூரப் பேயாட்டம்
கூர்தீட்டிய வாள்
முனைக் குரல்வளை
காணாமல் போன குழந்தையின்
விசும்பல்தடம்
உள்ளிழுக்கும் நச்சுப்புதர்க்காடு
ஓடுடைந்த வீட்டிலிறங்கும் கருநாகம்
காகத்தின் எச்சம் மண்டையை எரிக்கும்
கண்கிழித்துருவாகுமொரு கனவு
எனக்கென வந்த நிலவு
தேய்வழிச்செலவு
உண்ண உணவு அருந்த நீர்
சுவாசிக்கக் காற்று சிறகடிக்க வானம்
செரிமானமாகா அவமானம்
இருந்தும்
அதிரூபம்
அருமருந்து
அன்றாடம்
ஆயினும்
அதிசயம்
ரகசியம்
சொல்லும் கிளிப்பிள்ளை
சொக்கத்தங்கம்
சூக்குமக்கவிதை
சிதம்பரம்.

DR. AMBEDKAR ON DEMOCRACY

 DR. AMBEDKAR ON DEMOCRACY

INDIAN COSTITUTION



படைப்பும் படைப்பாளியும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 படைப்பும் படைப்பாளியும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நான் - நான் - நான் - நான் -நான்
என் றான பெருங்குரலில்
கண்ணில் பட்ட கூரை மேலெல்லாம்
கண்றாவியாய்த் தாவி யேறி நின்று
கூவிக்கொண்டேயிருந்தார் அவர்.
மானே தேனே என்று எழுதினால் மட்டுமே
இலக்கிய விமர்சனமாகக் கொண்டவர்.
'போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே
என்று துதித்தாலோ
அதி பரவசத்தில் அதையே உலகத்தரமான திறனாய்வு
என்று உணர்வுபொங்கப் பதிவிடுவார்.
அப்படி எழுதப்பட்ட ஓரிரண்டை
தன் அடையாள அட்டைகளாக
அச்சிட்டுக்கொண்டார்.
அவரவர் வேலையிலாழ்ந்து
அவசர அவசரமாகச்
சென்றுகொண்டிருந்தவர்களை
நிறுத்தி
’என்னைப் படிக்காத வாசகர்கள்
என்ன வாசகர்கள்
எச்சக்கலைகள்’ என்றார்.
’என் எழுத்தின் எடையே எல்லோரைக்
காட்டிலும் அதிகம்
என்று
எடுத்துச்சொல்லாத விமர்சனமும்
அடித்துச்சொல்லாத திறனாய்வும்
என்ன எழவுக்கு எழுதப்படுகின்றன
அப்படி எழுதுகிறவர்களைக் கழுவேற்றுவேன்’
என்று
நடுத்தெருவில் நின்று
நாராசக் கூப்பாடு போட்டார்.
என்னமோ சொல்லிவிட்டுப்போகட்டும்
பாவம் - அவர் வருத்தம் அவருக்கு
என்று
அனுதாபத்துடன் சிலரும்
அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியாதவர்களாய்
சிலரும்
அவர் என்னமும் சொல்லிவிட்டுப்போகிறார்
நம் வேலையை நாம் பார்ப்போம் என்று
சிலரும்
ஏன் தானோ இவர் இப்படித்தானோ
வென
திரும்பித்திரும்பிப் வேடிக்கை பார்த்தவாறே
சிலரும்
கடந்துபோய்க்கொண்டிருக்க ¬_
காலமும்
காவியமும்
அவ்வண்ணமே
கடந்துபோய்க்கொண்டிருக்க_
இன்னமும் காட்டுக்கத்தலாய்
கூவிக்கொண்டிருப்பவருக்கு
முன்னும் பின்னும்
ஏற்றமிகு எழுத்தாக்கங்களும்
படைப்பாளிகளும்
இன்றும் என்றும்
வந்துபோனவாறே.....

விதைப்பும் அறுப்பும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விதைப்பும் அறுப்பும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒவ்வொரு நகர்விலும்
ஒருவகை ‘method in madness’ இரண்டறக் கலந்திருக்க
தனக்கு மிகவும் பிடித்த வெட்டாட்டத்தை
இடையறாது விளையாடிக்கொண்டிருக்கிறார் விமர்சகர்.
சுழற்றப்படுவது கிழிந்த காகிதவாள் என்று
புரிந்துகொள்ளாமல்
எளியோர் சரிந்துவிட
இறந்துபட
வி்ழுந்து விழுந்து சிரிக்கிறார்.
பெருங்குரலெடுத்து.
இல்லாத அரியணையில் பொருந்தியமர்ந்தபடி
கையிலிருக்கும் பட்டியலில் அவ்வப்போது
சில பெயர்களை சேர்த்தும் நீக்கியும்
பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும்
அவருக்குப் பிடிபடுமோ
தயாராகிக்கொண்டிருக்கும் இன்னொரு பட்டியலின்
வடிவமும்……
அதில் அவருடைய இடமும்?