LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, July 11, 2025

’மரம் சொன்னது’ என்ற தலைப்பிலான பிரம்மராஜனின் கவிதையை முன்வைத்து....

’மரம் சொன்னது’ என்ற தலைப்பிலான பிரம்மராஜனின் கவிதையை முன்வைத்து....

- லதா ராமகிருஷ்ணன்

மரம் சொன்னது

- பிரம்மராஜன்


வலியின் துவக்க முகமும்
ஒரு சாதாரணம்தான்
என ஒரு முட்சொல் கிழிக்கிறது.
இல்லாத ஓவியத்தைச் சட்டகத்தினுள்
பொருத்திப் பார்ப்பதுபோல்தான்
அதன் அளவு என்பார்
வலியறியா வறியோர்.
எனினும் வலியின் வயது
தொன்மையின் முன்மை’
பரசுராமனின் உடல் உறக்கத்திற்கு
முன் தன் விழிப்புடல் துடையை
வண்டுத் துளைப்புக்குத் தந்த
கர்ணத் தன்மை.
மரப்பட்டையை மகிழ்ச்சிப்படுத்தவே
முடியாது
பாம்பின் சட்டையை மாற்றுதல் போல்
மாறுதலுக்கு மாற்றுதல் முடியாது
என்றவனுக்கு
காதல் முட்டாள்கள் செதுக்கிச்சென்ற
தேதிகள் பெயர்களுடன் வளர்மரம்
கனத்துச் சொல்கிறது
வெட்டிக் கிழித்தலின் வலியைவிட
வடுவின் வளர்வேகம்
பொருக்குச் சேதம்
பொறுத்தல்
கொலையின் முடிவற்ற நீள்கோடாகும்.

RENDERED IN ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT)

TREE'S VERSION
...........................................
The onset of pain too
is but a common one
So a thorny word tears
They who claim that its
volume is but
like fixing inside the Frame
the painting that is not
are poor being unaware of pain.
Yet the age of pain
is that which is the
Before of
Time immemorial;
Karnan’s disposition in
offering his own wakeful body’s check
before Parasuraman’s bodily sleep
to bee’s and giant worm’s sharp pierce.
For he who said that
never can one make merry
the bark of a tree
Never can change it to Change
as like changing snake’s skin
The tree that grows with
the dates and names carved on it
by love-gullibles
declares weighing heavy that
more than the pain of felling
and tearing apart
bearing with the rapidity of the scar’s growth
flakial damage
is murder’s unending long line.
......................................................................................
_ // மரம் சொன்னது என்ற தலைப்பிலான பிரம்ம ராஜனின் இக் கவிதை ‘மரம் இறுகியது, உறுதியானது, முரடானது என்பதாக நான் கொண்டிருந்த, என் மனதில் படிந்திருந்த பிம்பங்களை அடியோடு மாற்றியது. மரத்தின் நெகிழ்வும் ரணம் பொருக்குத் தட்டிநிற்கும் அதன் வலியும், நிராதரவு நிலையும் பிடிபட்டது. //

_ இவ்வாறு ‘சொல்லும் சொல் பிரம்மராஜனின்’ என்ற தலைப்பில் ஜூன்2016இல் அநாமிகா ஆல்ஃபெபெட்ஸ் மூலம் வெளியான நூலில் நான் குறிப்பிட்டிருப்பேன். இது எனக்குக் கிடைத்த வாசிப்பனுபவம்.
இந்தக் கவிதை மரத்தை மட்டும் பேசுவதில்லை என்பது வெளிப்படை. இன்னும் சொல்லப்போனால், இதில் மரம் மனித மனதின், வலி ஏமாற்றங்கள் ரணங்களையெல்லாம் சுமந்திருக்கும் அதன் தன்மையையும், வெளியே தெரியாத மனிதமன நெகிழ்வுகள், நிலைகுலைவுகளையும் இன்னும் எத்தனை யெத்தனையோ விஷயங்களுக்கு, மனித இயல்புகளுக்குக் குறியீடாகி நிற்கிறது.
எதற்கெடுத்தாலும் அழுபவர்களைக் கண்டால் அதிராத நம் மனம் ஒருபோதும் அழாதவர்களின் கண்ணில் நீர்த்துளியைக் கண்டால் ஒரேயடி யாக அதிர்ந்துபோய்விடும். அப்படித்தான் மரம் பிளக்கப்படுவது, கொல்லப்படும் யானையின் சிறுகண்களில் தெரியும் நிராதரவு எல்லாம் மனிதமன சமன்நிலையைப் பெரிதும் குலைத்து விடுகிறது.
இத்தகைய கவிதைகளை மொழிபெயர்க்கும்போது மரத்தின் உறுதியான மனம் என்பதாய் கவிதையில் இடம்பெற்றிருக்கக் கூடிய வரியை மொழிபெயர்க்கையில் மனம் என்பதை மரத்தின் ‘மார்புப்பகுதி’ என்பதாக மொழிபெயர்க்க வேண்டுமா அல்லது மனிதமனம் என்ற பொருளைத்தரும் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா?
மார்பு, இருதயம் இரண்டுக்கும்கூட நுட்பமான வேறு பாடு உண்டு. மார்பு உடலின் வெளிப்புறப் பகுதியையும், இருதயம் உடலின் உள்ளே இருக்கும் பகுதியையும் குறிப்பதாகச் சொல்லலாம். ஆனால், இவை ‘overlap’ _’ ஒன்று மற்றொன்றாகப் பொருள்படும் அளவில் பயன் படுத்தப்படுவதும் உண்டு.
மனம் என்று பொருள்படும் இதயம் என்ற சொல்லுக்கும் இருதயம் என்ற சொல்லுக்கும் இடைவெளி இன்னும் அதிகம் என்று தோன்றுகிறது. இருதயம் என்பது மனித உடலினுள்ளே இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பைப் பிரதானப் படுத்தும் சொல். ஆனால், இருதய அறுவை சிகிச்சை என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் Heart Surgery என்றுதான் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Heart என்ற சொல் இருதயம் என்ற உறுப்புக்கும், மனம் இதயம் என்ற ‘உறுப்பாலான அதேசமயம் உறுப்புக்கப் பாலான ஒன்றைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழில் இருதயம் என்ற சொல்லின் பொருளும் பயன் பாடும் வேறாகவும், மனம், இதயம் ஆகிய சொற்களின் பொருளும் பயன்பாடும் வேறாகவுமே இருக்கிறது.
மனம் என்பதை Heart, Mind ஆகிய இரு சொற்களால் குறிப்பதுண்டு. சமயங்களில் Heart, வேறாகவும் Mind வேறாகவும் அர்த்தம் தருவதுமுண்டு. Brain என்ற சொல் மனம் கலக்காத மூளை என்ற உறுப்பைக் குறிப்பதாகவே அமையுமென்றாலும் Brain என்பதுதான் மனித உயிருக்கே மூலாதாரம் என்ற அளவில் இந்த வார்த்தை மனதுக்கும் பயன்படுத்தப்படுவதும் உண்டு.
Bosom, breast chest முதலிய வார்த்தைகள் இருதயம், மார்புப்பகுதி என்ற உறுப்புரீதியான பொருளையே அதிகம் தருகின்றன. என்றாலும் ஆருயிர்த்தோழன் என்பதை bosom friend என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். மற்ற இரண்டு வார்த்தைகளும் மனம் என்ற பொருளைத் தருவதாகப் பயன்படுத்தப்படுவது அரிது என்றே தோன்றுகிறது.
பொதுவாக heart, mind ஆகிய இரு சொற்களும் மனித உடலுக்குள் இருக்கும் உறுப்புகளிலான உறுப்புகளுக் கப்பாலானதுமான சிலவற்றைக் குறிக்கப் பயன்படும் வார்த்தைகள் எனலாம்.
மரம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படும் கவிதை முழுக்க முழுக்க மரத்தின் உறைநிலையை, கிளைகளை, கனிகளை காய்களை, உதிரும் இலைகளை அது அடை யும் சிதிலத்தை அது வெட்டப்படுதலையெல்லாம் பேசிக் கொண்டே போனாலும் அந்தக் கவிதையை மொழி பெயர்க்கும்போது மரத்தின் மார்புப் பகுதியைக் குறிக்கும், இருதயம் என்ற உறுப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தவேண்டுமா, அல்லது உறுப்பும் உறுப் பைத்தாண்டிய ஒன்றும் சேர்ந்ததைக் குறிக்கும் மனம் என்ற பொருளைத் தரும் சொல்லைப் பயன்படுத்த வேண்டுமா என்பதில் மொழிபெயர்ப்பாளர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய அவசியமிருக்கிறது.

ஷேக்ஸ்பியரின் மகத்துவம்



          ஷேக்ஸ்பியரின் மகத்துவம்

மகத்துவம் பலவிதம்!
//மகத்துவத்தைக் கண்டு அஞ்சவேண்டாம்
மகிமையோடே பிறப்பவர்கள் உண்டு.
மகத்துவமானவர்களாக மலர்பவர்கள் உண்டு.
மகத்துவம் வலிந்தேற்றப்பட்டவர்கள் உண்டு//
_ ஷேக்ஸ்பியர்
(பி.கு: பிறரை மட்டந்தட்டுவதன் மூலமே தங்களை மகத்துவம் வாய்ந்தவர்களாகக் காட்டிக்
கொள்பவர்களும் உண்டு!)













MANDELA'S FREEDOM

 


அணுகுமுறை - ராமன் என்பது சீதை மட்டுமல்ல சீதை என்பது ராமன் மட்டுமல்ல - லதா ராமகிருஷ்ணன்


ஒரு காவிய நாயகன் நாயகி, காவியக் கதை எல்லா வற்றிலுமே சாரமும் உண்டு; சக்கையும் உண்டு.
எல்லாவற்றிலும் சாரத்தை எடுத்து சக்கையை விடுத்துச் செல்வதே வாசகர்களாகிய நாம் செய்ய வேண்டியது.
ராமன் என்ற காப்பிய நாயகனை நாம் ஏன் எப்போ துமே சீதையை சந்தேகித்தவனாக மட்டுமே அணுக வேண்டும்?
அறுபதினாயிரம் மனைவியரை ஒரு மன்னர் வைத்தி ருந்த காலத்தில் ஒரு சொல் ஒரு இல் ஒரு வில் என வாழ்ந்தவனும் அவன் தானே. எல்லாப் பெண்களுக்கு மான ஆத்மார்த்தமான எதிர்பார்ப்பு அவன் வழி சீதைக்கு லபித்ததல்லவா!
சீதையை சந்தேகித்ததில், அவள் பிரிந்ததில் அவன் மகிழ்ச்சியடைந்தானா? மனநிம்மதியடைந்தானா?
’தீர்ப்பளிக்காதே நாமெல்லோருமே பாவிகள்தான்’ என்று ஒரு பரத்தைமீது கல்லெறி பவர்களை நோக்கி ஏசு கூறு வது பரத்தையர்களைக் குறை சொல்வதாக தொனிக் கிறது. அவர்கள் பரத்தையரானதற்கு இந்தச் சமூகம் தானே காரணம் என்று எழுத்தாளர் தேவகாந்தன் தனது கதை யொன்றில் குறிப்பிட்டிருப்பார். இதுவோர் ஆழமான சமூகநேயம் மிக்க பார்வை என்பதில் சந்தேக மில்லை. ஆனால், ஏசுவின் வாசகத்தில் தொனிப்பது, அடர்ந்திருப்பது பரத்தையை குறை சொல்லும் போக்கா, அல்லது அவளை ஏசுபவர்க ளுக்கு புத்திபுகட்டும் நோக்கமா?
எழுத்தாளர் தேவ காந்தனை எனக்குத் தெரியும். பல வருடங்களுக்கு முன் அவர் சென்னையில் இருந்தகாலத் தில் நாங்கள் இதுகுறித்து விவாதித்ததுண்டு.
‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று முடியும் சுமைதாங்கி திரைப் படப் பாடலைப் பற்றி (கண்ணதாசன் எழுதியது) ஒருவர் நமக்குக் கீழே உள்ளவர் கோடி என்னும் போது அதை நினைத்துப்பார்த்து நிம்மதியாக இருக்கமுடியுமா, அப்படிச் சொல்வது அக்கிரம மல்லவா என்று கோபத் தோடு எழுதியிருந்தார். அவருடைய சமூகப் பிரக்ஞை யைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும் அந்தப் பாட்டில் இடம்பெறும் அந்த வரிகள் அலைப்புறும் நாய கனை அமைதிப் படுத்தப் பாடப்படுவதே தவிர ’அவருக் குக் கீழே உள்ள மனிதர்களைப் பொருட்படுத்தாம லிருக்கும்படி போதிப்பதல்ல.
இருபதாண்டுகளுக்கு முன்பு என் தோழியொருவர் ஆசிரி யராக இருந்து வெளிவந்துகொண்டிருந்த சூர்யோதயா என்ற இதழொன்றில் ‘படி தாண்டிய பாஞ்சாலி’ என்ற சிறுகதையை எழுதியிருந்தேன். மகாபாரதப் போரில் தங்கள் கணவர்கள், குழந்தைகள், தகப்பன், தமையன் என்று எல்லோரையும் இழந்துபோன பெண்கள் பாஞ்சாலியை சந்தித்து உங்கள் வீட்டு விவகாரத்திற்காக எங்கள் மக்களையெல்லாம் போரில் பலியாக்கிவிட்டீர் களே இது என்ன நியாயம் என்று கோபத்தோடு கேட்க, அந்தக் கேள்வியின் உண்மையுணர்ந்த பாஞ்சாலி தன் கணவர்களிடம் தன்னுடைய சீதனத்தை கேட்டு வாங்கி அவர்களை விட்டு நீங்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணியாற்றச் செல்வதாய் அந்தக் கதை விரியும்.
மகாபாரதத்தை ஒரு புதிய சமூகக் கண்ணோட்டத்தில் அணுகிவிட்டதாய் எனக்கு உள்ளூற ஒரு பெருமை இருந்திருக்கக் கூடும். அதற்குப் பின் சில காலம் கழித்து ஆங்கில நாளிதழொன்றில் (THE HINDU என்று நினைக் கிறேன். சரியாக நினைவில்லை) வாசிக்க நேர்ந்த KURUKSHETHRA AND ITS AFTERMATH என்ற கட்டுரை என் கதை முன்வைத்த பார்வையும் அதைத் தாண்டிய பல பார்வைகளும், போரின் கொடுமை, மக்கள் சீற்றம், போரின் வெற்றி யாருக்குமே மகிழ்ச்சியளிக்காது என்ற உண்மை என பலப்பல குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு’ என்பதாய் அந்தக் காப்பியத்திலேயே விரிவாகப் பேசப்பட்டிருப்பதை விரித்துக்கூறியிருந்தது!
வால்மீகி ராமாயணம் என்ற கடலில் தனது காப்பிய முயற்சி ஒரு துளி என்று கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டிருப்பார். கம்பராமாயணத்தில் இந்திர னோடு கலந்திருந்ததன் விளைவாகக் கிடைத்த சாபத்தால் கல்லாகச் சமைந்திருக்கும் அகலிகை ராமனின் கால் பட்டு மீண்டும் உயிர்பெற்றதும் ராமனின் காலில் விழுந்து வணங்குவதாக வரும். ஆனால் மூல காவிய மான வால்மீகி இராமாயணத்தில் இந்திரனின் அழகில் மயங்கி, தெரிந்தே அவனோடு கலக்கும் அகலிகை சாபத்தால் அருவமாக உலவிக்கொண்டிருக்க ராமன் அந்த இடத்தின் எல்லையை மிதித்ததும் உருவம் பெறுவாள். ஆனால், ராமன் தான் அவள் காலில் விழுந்து வணங்குவான்.
தெய்வாதீனமாக நேர்ந்து விட்ட ஒன்று என்றுதான் அவளுடைய இந்திரக் கலப்பை அவள் மகனே குறிப்பிடு வான். அதற்காக யாரும் அந்தப் பெண்மணியை மதிப்பழித்து நடத்தமாட்டார்கள். வால்மீகி இப்படி எழுதியதால் சோரம் போகிறவள் பெண், பெண் சோரம் போவதே சரி என்று சொல்வதாய் எடுத்துக்கொள்வது சரியா? கம்பர் இதை மாற்றியெழுதியதால் அவர் ஆணாதிக்கவாதியாக முத்திரைகுத்தத் தக்கவரா?
நான் இந்தக் காப்பியங்களையெல்லாம் முழுமையாகப் படித்ததாகச் சொல்லிக் கொள்ள முடியாது. ஆனால், இந்தக் காப்பியங்களிலும் சரி, வேறு பல ஆழமான படைப்புகளிலும் சரி – அடிநாதமாக ஒரு தொனி, ஓர் உட்குறிப்பு வேர்ப்பிடித்து ரீங்கரித்துக் கொண்டிருக்கும். அதை நாம் மாற்றிப்போடலாகாது. ஒரு பிரதியில் மறைவான உட்பிரதி, உப பிரதி இருந்தால் அதைக் கண்டுகொள்ளலாம், வெளிக்கொணரலாம். ஆனால், நாமே மறைவான பிரதிகளை உருவாக்கலாகாது.
இராமாயணம் முன்வைப்பது ராமன் கொடுமைக்காரக் கணவன், அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து கொண்டு போகிறவனே பேராண்மையாளன் என்பதா?
இல்லையென்றே நான் நினைக்கிறேன். அப்படியிருக்கு மானால் இராமாயணம் இத்தனை காலம் மக்களிடையே நிலைத்திருக்க வழியில்லை.
காப்பியங்களாக இருந்தாலும் சரி, சமகாலப் படைப்பு களாக இருந்தாலும் சரி, வாழ்வின் BIG PICTURE அல்லது அதன் பிரதிபலிப்புகளை முன்வைக்கும் படைப்புகளை நாம் ஒற்றைப்பரிமாண வாசிப்பாக, பொருள்பெயர்ப்பாகக்
குறுக்கிவிடுவதால் என்ன பயன்?
தவிர, ராமன் என்பவன் சீதையின் கணவன் மட்டும் தானா? ஒரு தனி மனிதன், ஒரு சமூக மனிதன், ஒரு தனயன், ஒரு அரசன், ஒரு மகன், ஒரு நண்பன் - ஒரு கருத்தாக்கம், ஒரு சிந்தனைப்போக்கு, ஒரு வாழ்முறை, ஒரு கற்றல் – இன்னும் எத்தனையோ.
நாம் உள்வாங்கிக்கொள்வதில்தான் இருக்கிறது எல்லாம்.
நான் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கம்பராமாயணச் செய்யுள்கள் சில பாடமாக உண்டு. அதில் ஒன்று – முதல் நாள் பட்டாபிஷேகம் என்ற போதும் மறுநாள் காட்டுக்குப் போ என்றபோதும் ‘சித்திரத் தில் வரைந்த செந்தாமரையைப் போல் அப்படியே இருந் தது அவன் முகம் என்பதாய் விவரிக்கும். அந்தப் பக்குவப் பட்ட மனம் வாய்க்க வேண்டும் என்பதே, அதற்கான வழிகாட்டியே என்னைப் பொறுத்த வரை எனக்கான இராமார்த்தம்.

இங்கிருந்து வெளியே…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இங்கிருந்து வெளியே….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இத்தனை அலைச்சலுக்குப் பிறகும் இரண்டாம் சதுரம் வசப்படவில்லை யிதுவரை.
மூன்றாவது தொடுவானத்திற்கப்பால்.
அந்தரத்தில் அவ்வப்போது தொங்கிக்கொண்டிருக்கும் நூலேணியில்
எத்தனை முறை ஏறியும்
நிலவுக்குள் நுழையவே முடியவில்லை.
விண்கலத்தில் ஏறிச்செல்ல நானொன்றும் விஞ்ஞானியல்லவே.
அருகிலிருந்து பார்க்க அது அவ்வளவாக அழகாகவும் இல்லையாக…..
ஒரு குழந்தைபோல் காற்றின் முதுகேறி எத்தனை நேரம்தான் பறந்துகொண்டிருப்பது?
ஆற்றங்கரையோரத்தில் கட்டிவைத்திருக்கும் அரிய தோணி அப்படியேயிருந்தாலும்
ஆற்றைக் காணவில்லை.
நேற்றின் ஒரு முனையும் இன்றின் மறுமுனையும்
இறுகித்திருகி முறுக்கிக்கொண்டிருக்கும் நாளைக்குள்
நிற்கத் தோதான நான்காம் சதுரமிருக்கும் என்று நம்ப வழியில்லை.
சுக்கானற்ற நாவாயாய்
பாதாளத்தில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் என் ரயில் வேறு
உலக உருண்டையின் பொன்சாய் வடிவமாய்
குறுகிய வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருப்பதும்
புரிந்துவிட்ட பிறகு _
திரும்பிடத்தான்வேண்டும் முதல் சதுரத்திற்கு...
என்னவொன்று _
சதுரம் சற்றே பின்வாங்கியிருக்கக்கூடும்
வடிவம் கொஞ்சம் சிதைந்திருக்கலாம்.
விட்டுவந்த மரகதப்புற்களும் மண்ணுளிப் புழுக்களும்
இன்னுமிருக்குமோ இருக்காதோ…..
ஆனாலும், ஆழ வேர்ப்பிடித்து அகலவிரிந்திருந்திருக்கும்
அந்த மரத்தின் அடியில்
நிற்க நிழலிருக்கும் எப்போதும். அதுபோதும்.

ஏழை ராணி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஏழை ராணி
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ
அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்……
இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி
உருவாகிவரும் சொற்திரள்கள்
அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில்
சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும்.
உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை
பீறிட்டெழும் நாள் வரின்
இந்தத் தெருவும் தெரு சார்ந்த பகுதியும்
அதை எப்படி எதிர்கொள்ளும்.......
சிலர் பழைய ஐம்பது காசு நாணயத்தைக் கொடுப்பார்கள்.
சிலர் ஐந்து ரூபாய்.
அபூர்வமாக, யாரேனும் ஐம்பது ரூபாய்.
இன்று ‘கையேந்திபவனிலாவது ஒரு தட்டு சோறு
ஐம்பது ரூபாய்க்குள் கிடைக்க வழியிருக்கிறதா,
தெரியவில்லை.
உரிமையோடு அதட்டுவதாய் அருகழைத்து
புரிபடா உச்சரிப்பில் எதையோ சொல்லி
ஒரு குழந்தைபோல் அந்த மனிதர் கையேந்தும்போது
அந்த நாளின் முடிவில் வீடுதிரும்பும் ஏழை ராணி
அவருக்கென ஒரு ஐந்து ரூபாயாவது
தன் நடுத்தரவர்க்கக் கைப்பையில் எங்கேனும்
மீதமிருக்கவேண்டுமே என்ற பிரார்த்தனையோடு
வெறும் தொப்பிக்குள் கைநுழைத்து
வெளியே முயல்குட்டியை எடுத்து
அதைப் புறாவாக்கிப் பறக்கவிடும் மந்திரவாதியாய்
மாறிவிடுவாள்!
அப்படி ஒருமுறை அவளுடைய கை உண்மையாகவே
ஒரு மாயாஜாலக்காரியின் கையாக மாறி
அவளே அறியாமல் அவளது கைப்பைக்குள் என்றோ புதையுண்டிருந்த
நூறு ரூபாய்த் தாளொன்றை
அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்பாய்க் கையிலெடுத்தபோது
அரைக்கணமும் யோசிக்காமல் அதை
அந்த மனிதர் கையில் கொடுத்துவிட்டு
அன்றிரவு முழுவதும் அந்த நூறு ரூபாய் நோட்டு அவரைச் சிலரிடம் திருடனாகக் காட்டி
பேசமுடியாத அவரை நிறையபேர் நையப்புடைப்பதாக
விழித்தநிலையிலேயே கொடுங்கனவு வந்து
நெடுநேரம் கலவரத்திலாழ்ந்திருந்தாள்
பூஜ்யத்திற்குள்ளே ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருக் கும்
ஏழை ராணி.
இன்று
பிளிறலா, வீறிடலா, உறுமலா பொருமலா
விசும்பலா விசன முணுமுணுப்பா
என்று பிரித்துச்சொல்லவியலாதபடிக்கு
எல்லாம் கலந்தொலிக்கும் தனதேயான பாதிக் குரலும்
தன் சைகைகளின் வழியாக ஒலிக்கும் மீதிக்குரலுமாய்
தான் அங்கிருந்துபோய்விடப்போவதை அந்த மனிதர்
பிரியாவிடையாய்த் தெரிவித்தபோது
வருத்தத்தை மீறி மனதில் பரவிய நிம்மதிக்காக
தன்னைத்தானே கசையாலடித்துக்கொண்டு
வீடுதிரும்பும்
நியாயந்தவறா ஏழை ராணியின் கண்களில் திரளும் நீர்த்துளிகளை
எங்காவது சில கோடிகளுக்கு விற்க இயலுமானால்
அவள் விரும்பும் சாம்ராஜ்யத்தைக் கட்ட முடியலாம்….

இயங்கியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இயங்கியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இரு நாற்பதுகளுக்கு மேல் இருக்கும் வயது.
இருந்தும், இன்றெழுதிவரும் கவிஞர்களில் இடம்பெறுபவர்.
”இவரா கவிஞர்? ஐயையையே” என்று மலம் மிதித்ததாய்
மறைவாய் முகஞ்சுளித்தபடியே
அவருக்கு முகமன் கூறி விதந்தோதி மலரச் சிரிக்கும்
சக கவிகள் சிலர் உண்டென்றாலும்
அவசியம் படிக்கவேண்டிய கவி யிவர் என்பதே
அப்பட்டமான உண்மை.
அப்படியிருந்தும்
இன்றுவரை இலக்கிய பீடாதிபதிகளால் அதிகவனமாக
கண்டுங்காணாததாய் கடந்துசெல்லப்படுபவர்.
(ஆஹா! இஃதெல்லாம் இலக்கியவுலகில் அதி சகஜமப்பா! )
என்றாலும்
அவர்க்கான புகழாஞ்சலிகள்
அனைவரிடமும் ஆயத்தமாக உள்ளன!
ஒருக்கால் அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டால்
குறைந்தபட்சம் அவருடைய நான்கு நூல்களையாவது
அவசர அவசரமாக,
ஆயிரமில்லாவிட்டாலும் அறுநூறு அச்சுப்பிழைகளுடனாவது
வெளியிட்டுவிட _
அல்லது அன்னாரின் படைப்புகளைப் பற்றி
அரைகுறையாகவும் அறிந்திராத
அவருடைய குடும்பத்தாருக்கு
குத்துமதிப்பாக ஒரு சிறுதொகையைக் கொடுத்து
அவருடைய நூல்களில் பிரபலமானவற்றை
வன்பதிப்பு செய்ய _
சில வளர்ந்த பதிப்பகங்கள் என்றுமே
தயார்நிலையில்!