1.என் அம்மா
ஒருபோதும்
சுனாமியாகப் பொங்காத சாகரம்;
சூறாவளியாகாத காற்று;
சுட்டுப்பொசுக்காத நெருப்பு;
சுக்குநூறாகாத திடம்;
சடசடவென்று முறிந்துவிடாத மரம்;
கையில் தம்பிடிக் காசில்லாத நேரம்
என் அருகில்
கதவை விரியத்திறந்திருக்கும் சிறுசேமிப்பு வங்கி;
எரியுங் குளிரில் போர்த்தக் கிடைத்த
அரிய மேலங்கி;
இரவில் காலந்தாழ்த்தி படுக்கையில் தலைசாய்த்து
’பச்சை புட்டி அமிர்தாஞ்சனை நான்
நெற்றியில் தேய்த்துக் கொள்வதை
எனக்குத் தெரியாமல் கண் திறந்து
கவலையோடு பார்க்கும்
எதிர்பார்ப்பற்ற பரிவு;
என்னவென்று சொல்லவியலா அன்பு;
சுருங்கிவரும் உடலுக்குள் சதாசர்வகாலமும்
சுழன்றுபெருகியோடிக்கொண்டிருக்கும்
ஜீவநதி;
கருகாத பூ;
ஒண்டுக்குடித்தன வீடோ
இன்றுள்ள இரண்டறைகள் கொண்ட
வாடகைக் குடியிருப்போ _
அரண்மனை, அரியணை, அரசவை,
மணிமகுடப் பிரக்ஞையற்று
பிரபஞ்சவெளியில் மிதக்கும் ஒரு
பறவைச் சிறகிழை ;
தனதேயான வானவில் நிறங்களையெல்லாம்
வாரி வழங்கும் பட்டாம்பூச்சி்;
தொட்டுவிடலாகும் தொடுவானம்;
என்றும் என் கவிதையில்
எட்டாச் சொல்……
//2021 MAY 11 – மீள்பதிவு//
2.சிறகசைக்கும் சுமைதாங்கிக் கல்லும் சிறுமியும்
…………………………………………………………………………………………………………
(சமர்ப்பணம்: அம்மாவுக்கு)
.......................................................................................................................................
மூன்றாவது தொகுப்பு ‘மற்றும் சில திறவாக் கதவுகள் (2005) இலிருந்து
…………………………………………………………………………………………………………
உணரும் காற்றின் அரூபமாய்
உள்ளோங்கி
உலகளந்திருக்கும் ஒன்றை
என்னவென்று இனங்காட்டுவது…
இன்று நாளையாகுமந்த
நுந்தருணக் குமிழைக்
கையிலேந்த முடிந்தாலும் ஏலாது
முன்சொன்னது.
பின்னும் அடையாளங்காட்டத்
தவிக்கும் மனதின்
ஆழத்தில்
சுமைதாங்கிக் கல் லொன்று
அமைதியாய் சிறகசைத்தபடி…
உயரப் பறந்துவிடாதபடி
வானத்தை சுருட்டிவைத்துவிட வேண்டும்.
நரையைக் கருமையாக்கி,
வயதின் சுருக்கங்களை நீவிக் கொடுத்து
விழுந்துவிட்ட பல்லைத் திரும்பப் பொருத்தி
பத்திரமாய் தரையிறக்கிவிடும்படி
இப்பொழுதே நிலவிடம் சொல்லிவைத்துவிடவேண்டும்.
மறுபடி யொரு சிறுமியாய்
முழுவிழிப்புடன் நானும் உன்னுடன்
கடந்தகாலக் கதவுதிறந்து
முதலிலிருந்து வாழ்ந்திடவேண்டும்
முள்ளும் கல்லும் அற…
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
அலங்கார விளக்குகள் தொங்கும்
அதி யகன்ற அரங்குகளில்.
அதனால் என்ன?
அம்மாவும் சரி அன்பும் சரி
முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான
அதலபாதாளத்தை
வென்றுவிட்டது தெரிந்தது தானே!
கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை
எந்தக் கவிதையும் மட்டமல்ல.
_ தனக்குள் சொல்லிக்கொண்டவள்
வெளியே தெரியாத தன் எளிய தாய்க்கு
அவளறியாதவாறு பரிசளிக்க
சிறிய பொட்டலமாய்
ஒரு புத்தம்புதுக் கவிதைக்குள்
பத்திரமாகப் பொதிந்துகொள்கிறாள்
தானாகிய கொத்துமலர்களை!
•
[’இப்போது’ கவிதைத்தொகுப்பிலிருந்து
//2019, மே 12 - மீள்பதிவு//
கவிதை எண். 17.துளிவெள்ளக்குமிழ்கள்(5)]

No comments:
Post a Comment