LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, June 11, 2010

காற்றாடித் திருவிழாக்கள்,2) இம்மை

ரிஷி கவிதைகள்



1) காற்றாடித் திருவிழாக்கள்


காலங்காலமாய் நடந்தேறிவருகின்றன காற்றாடித் திருவிழாக்கள்.
கில்லாடிகள் தான் போட்டியாளர்களும், புரவலர்களும், ஏன்,
பார்வையாளர்களாகிய நாமும்கூட.

கையிலுள்ள நூலின் அளவும், வலுவும்
தெரியாமலிருக்க வழியில்லை.

இக்கரையில் கணுக்காலளவு நீரில் நின்றுகொண்டு
’காப்பாற்றுவோம்’ என்று
மின்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பட்டங்கள்
மும்முரமாய் பறக்கவிடப்பட்டவண்ணம்...

அதைப் பார்த்துப் பெருங்குரலெடுத்துச் சிரித்தவாறே,
கோரதாண்டவமாடிக்கொண்டிருந்த நரமாமிசபட்சியொன்று
எரிசிறகு விரித்துயரே பறந்துபோய்
நூல்களையெல்லாம்
ரத்தம் வழியும் தனது கூர்நகங்களாலும், பற்களாலும்
அறுத்துப்போட்டது.
நூறாயிரக்கணக்கான சிரசுகளையும்.

சிதறித் தெறித்துப் பெருகியோடிய கதறல்களை சிலர்
எடைநிறுத்துப்பார்க்க சிலர்
கடைவிரித்துப் பொருள்சேர்க்க சிலர்
தாம் மட்டுமே பொருள்பெயர்க்கத் தகும்
என உரிமைகொண்டாட சிலர்
பதிவுநாடாக்களில் சேகரித்துக்கொண்டு காலத்திற்குமான
கலைப்பொருளாக்க சிலர்
வேகவேகமாகக் குழியாழம்பறித்து அவற்றைப்
புதைத்துவிட்டு எதுவும் கேட்கவில்லையே
என்று கதைத்திருக்க......

தொடரும் காற்றாடித் திருவிழாக்கள்.


*

2) இம்மை

ஆரம்பமும் முடிவுமற்ற ஒரு பயணத்தில் நான்; பொடிநடையாக.
சில சமயங்களில் காலணிகளோடு; பல நேரங்களில் வெறுங்காலோடு.
திடுமென முளைக்கும் சிறகுகள் வரமாய்; சாபமாயும்கூட.

வழிச்செலவில் காற்றின் தீண்டல் வருவாயாகவும், பெருலாபமாகவும்
உயிர்நிறைக்க, ஒரு நெகிழ்வில் கண் தளும்ப அண்ணாந்து
”ஐ லவ் யூ “ என்கிறேன்.
அதி ஆனந்தத்தில் ஆங்கிலமும் தமிழாகிவிடும் தானே!

நடக்கும் நேரம் என்னை மீறி பாதங்களடியில் நசுங்கலாகும்
நுண்ணுயிர்களின் நினைப்பு குற்றவாளியாக உணரச்செய்யும்.
நல்லவேளையாக, எல்லா நேரங்களிலும் இல்லை.

எனக்கான நச்சுமுட்களும், கூர்கற்களும் சுட்டெரிக்கும் கதிரோனும்,
அமிலத்துளிகளும், வலியும் ரணமும், வேதனையும், வாழ்வீர்ப்புமாய்,
காலடித்தடயங்களை கவனமாகத் துடைத்து சுவடழித்து
என்னை வரலாற்றில் இடம்பெறச் செய்யும் போட்டியிலிருந்து
முற்றுமாக விலக்கிக்கொண்டு வெறுங்கையோடு
போய்க்கொண்டிருக்கிறேன்.

வாட்களோடு எதிரே வ்ரும் சிலர் உலகில் இதுகாறும் நடந்த, நடக்கின்ற, நடக்கவுள்ள படுகொலைகளையெல்லாம் நான் செய்த்தாகச் சொல்லி
கண்களையும் கைகளையும் திருகி முறிக்கத் தயாராய் சூழ்ந்துகொள்கிறார்கள்.

வாதப்பிரதிவாதங்கள் ஏதுமின்றி நாலாயிரம் ஆண்டுகள் கடுஞ்சிறைவாசமும், கழுவேற்றங்களும் என்று தீர்ப்பெழுதப்படுகிறது.

பழிபாவம் புரியவில்லை, பணங்காசு கையிலில்லை. பின் ஏன் என்னை..?.”

”கேள்வி கேட்டால் கூடுதல் தண்டனை கிடைக்கும். பேசாமல் வா”

உறக்கம்போக என் மொத்த வாழ்க்கையுமே நாற்பதாண்டுகள் கூட நீளாதே
இனியான என் வாழ்க்கை இருபது வருடங்களுக்கும் குறைவாக இருக்கையில்
எனக்கு இடப்பட்டுள்ள தண்டனையை எப்படி நிறைவேற்ற இயலும்?” _

”அதற்குத் தானே இருக்கின்றன உன்னுடைய அடுத்தபிறவிகள்”.


*

Tuesday, June 8, 2010

குகை என்பது ஓர் உணர்வுநிலை - ரிஷியின் கவிதை

குகை என்பது ஓர் உணர்வுநிலை

ரிஷி





1)


காற்றாடிகளாக முடியாத காகிதத் துண்டு
துணுக்குகள் என்றாலும்
சொடுக்கியிழுக்கும் கைகளின் பிடியில்
சிக்காத பூரணத்துவம் கொண்டவை.
தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று
தரையிறங்கிக் கொண்டிருந்தன.
விழுந்த இடம் பொசுங்க
எழுந்த பிணவாடை
உனக்கு துர்நாற்றமென்றால்
எனக்கு சுகந்தம்.
அகராதியிலடங்காது இந்த மாற்றம்;
இரண்டறக் கலந்திருக்கும் இருட்குகையில்.


2)


குகைவாயிலில் தினமும் மாலை
பீறிட்டுயரும் ஊற்றைப் பார்ப்பதில்
வரவாகும்
நீர்த்துப் போகாத பரவசம்.
அன்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது
செங்குத்தாய் உயர்ந்து விரிந்து
பரவியது
செந்நிறத் தண்ணீர்.
வண்ண விளக்கைத் தேடிய கண்களுக்குத்
தட்டுப்பட்டது
வெட்டுண்ட மனமொன்று.
கிளம்பியது குருதியென்று விளங்கியதில்
கலங்கி
வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குள்
ஒடுங்கிக் கொண்டது காட்டுவிலங்கு
.

3)

தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது
தன்னைத் தானே.
கண்ணில் ததும்பிக் கண்ட வலியைக் கண்டு
வேடிக்கையாக இருந்தது.
காக்கைக் கொண்டாட்டமல்ல.
'உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை'.
வலியும், இழப்பும், அவமானமும்
கையறுநிலையும் கூட
கடவுள் தான்.
குகையிருளில் பலவீனமாய் படுத்துக் கிடக்கும்
பெண்புலியின்
புண்பட்ட மென்மார்பை ரணப்படுத்துவதாய்
வீசியெறியப்படும்
எலும்புத் துண்டத்தால் எப்படி வயிறு நிறையும்?
தன்னையுந்திக் கொண்டு எழுந்து புறப்பட்டால்
தானே கிடைக்கும் பொழுதும் இரையும்.

4)


கண்களை இடுக்கிக் கொண்டு காத்து நின்றாள்
பார்த்த விழி பூத்து.
பூப்பெய்திய நாள் நினைவுக்கு வரவில்லை.
பசிக்கிறது என்றால் அதைக் கொச்சையாகப்
பொருள்பெயர்த்து
பெருங்குரலெடுத்துச் சிரிக்கத் தயாராய்
நாலாயிரம் பேர்.
ஊர் மறந்துவிட்டது.
நசநசவென்று பெய்யத் தொடங்கிவிட்டது
மழைமனம்.
வசவுச் சொற்களின் நிண ருசியை
வாய்க்குள் உணர்ந்தவளாய் மீண்டும் குகைக்குள் நுழைந்தவாறே
முனகிக் கொண்டாள் மூதாட்டி:
காசு தராமலே கிடைப்பாள் என்றாலும்
கிழப்பரத்தையைப் புறக்கணித்தல் தானே
குடும்பத்தலைவர்களுக்கு அழகு...



5)


வெளியுலகின் இடையூறின்றி வேண்டுமட்டும் கூடிக்களிக்க
இந்தக் குகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண்புலி.
பூனையாகி புதைந்து கொண்டது
அடுத்துப் படுத்துக் கிடந்த இணையின் அடிவயிற்றில். கண்துஞ்சிய நேரம் போக மீதி காலமெல்லாம்
நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது நேசமிகுதியில்.
ஆடாமல் அசையாமல் படுத்தவாறே
பங்கெடுத்துக் கொண்டிருந்த இணையின் மனதில்
நிலைகொண்டிருக்கக் கூடும்
அடுத்த வேளைக்கான இரையின் நினைவு.
சிந்தாநதியொன்று குகையின் அடியில் சீராக
ஓடிக் கொண்டிருந்தது.
பார்த்ததில்லை என்றாலும் அதன் ஒலிகேட்டுத்
தண்ணெனக் கனியும் பெண்மனம்.
குகைப்பாறையின் திண்மையைக் கொண்டாடுவதாய்
மறுபடி மறுபடி முகர்ந்து பார்க்கும்.
வினைமுடித்ததாய் வெளியேறி மறையும் இணையின்
தளதளவென்று பொலியும் வாலைப் பார்த்து
களிப்பு பெருகும்.
'பாவம், எவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமோ' என்று
தனக்குள் கேட்டுக் கொள்ளும்,
விசனமும், கரிசனமுமாய்.
திரும்பி வரும்போதெல்லாம் விருந்துண்ட கிறக்கமாய்
நாவைச் சுழற்றி மிச்ச ருசியை அசைபோட்டவாறிருக்கும்
இணையின் தரிசனத்தில்,
ஒரு துண்டு இறைச்சியும் தனக்குத் தரப்படவில்லை என்ற
நிதர்சனம் ஓரங்கட்டப்படும்.
திரும்பாமலே போகும் நாட்களில்
திரும்பாமலே போயிற்று ஒருநாள்.
இரண்டு மூன்று நான்காய் உருண்டோடிய பொழுதுகளில்
சுருண்டு கிடந்தது பெண்புலி, குகையின் ஒரு மூலையில்.
இதுநாள்வரை இருளிலேயே ஆனந்தமாய்க் கண்மூடி
மல்லாந்து கிடந்ததில்
கடந்துபோய்விட்ட காலத்தின் நீள்பரப்பு
சுருக்கென்று தைக்கிறது பிரக்ஞையில்.
சற்றே திரும்பிப் படுத்தபோது
பக்கவாட்டில் புதரொன்று முட்களோடு வளர்ந்திருப்பது
புரிந்தது.
அதிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சீறலொலி
பிரமையாக இருக்கலாம், அல்லது,
பாம்பினுடையதாக இருக்கலாம்.
பலவீனம் மனம் உடலாக
மெதுவே எழுந்து நின்றது.
தலை படீரென்று இடித்தபோது தான்
குகையின் மேற்புறம் சரிந்திருப்பது தெரிந்தது.
மூச்சடைத்தது.
முன்னோக்கி எடுத்து வைத்த கால் பதிந்த இடம்
ஒரு பெரும்பள்ளத்தில் புதைய
பின்னுக்கிழுத்த வேகத்தில்
முதுகு சாய்ந்த இடத்திலிருந்த பாறை பெயர்ந்து
மோதித் தள்ளியது.
முன்மண்டையும், மூக்கும் நசுங்கி
குருதி பெருகத் தொடங்க
எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற
விருப்பு ஒரு வன்மமாக
மீண்டும் புலியாகி
ஒரே பாய்ச்சலில் வெளியேறிக் கொண்டிருக்கும்
பெண்புலியின் உடலெங்கும் படரும்
தண்காற்று
இன்னொரு வாழ்வாய்.