LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 3, 2014

கவிதைக்கோலோச்சிக்கு....

ரிஷியின் கவிதைகள்


கவிதைக்கோலோச்சிக்கு….


(1)

கால்காசு கிடைக்க வழியில்லாதபோதிலும்
கவிதைமேல் காதலாகிக் கசிந்துருகி
காயங்களுக்கு வடிகாலும்,
மாயவுலகத் திறவுகோலுமாய்
காலங்காலமாய் எழுதப்பட்டவைகளிலெல்லாம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்
கால தேச வர்த்தமானங்கள்;
தேடப் பொருதியின்றி திட்டித் தீர்க்கிறீர்கள்.
பொருட்படுத்திப் படிக்கும் பெருந்தன்மையின்றி
உங்களுக்கு முன்னே எழுதிய கவிஞர்களை பிரச்னையற்றவர்களாக்கி
பெருந்தனக்காரர்களாக்கி
கவிதையைப் பொழுதுபோக்காக பாவிக்கும் பித்தலாட்டக்காரர்களாக்கி
பேட்டை தாதாக்களாக்கி
சோதாக்களும் பீடைகளும் பீத்தைகளுமாக்கி
சேறு பூசி, செம்புள்ளி கரும்புள்ளி குத்தி,
சிலுவையிலறைந்து முடித்து
குண்டாந்தடியை செங்கோலெனச் சுழற்றியபடி
பரிவாரங்களோடு பவனி வந்து
உங்களுக்கு நீங்களே விசுவரூப சிலைவடித்துக்கொள்கிறீர்கள்
உலக அரங்குகளில்.
உண்மையான கலகம் இதுவல்ல என்று
உணர்வீர்களோ என்றேனும்?

[2]

மொத்தமாய் வெறுப்பைக் குத்தகைக்கு எடுத்திருப்பதுபோல்
நித்தம் வன்மத்தைக் கொட்டித்தீர்க்கின்றன உங்கள் வரிகள்.
இலக்கியம் ,சமூகப் பிரக்ஞை, மனிதநேயம், பரிவதிர்வு –
இன்னும் என்னென்னவோ பெயரிட்டு
அயராது வரிவரியாய் காறித்துப்பியவாறிருக்கிறீர்கள்,
நல்லது.
நிஜமான அக்கறையோடு தான் இதைச் சொல்கிறேன்.
வாயும் குடலும் வெந்துபோய்விடாமல் கவனமாயிருங்கள்.

[3]

செத்த பாம்போ, ரப்பர் பாம்போ, காற்றால் திரிக்கப்பட்ட கயிற்றரவோ
தேர்ந்த விற்பனையாளர்களின் கைகளுக்கு உண்டு
எல்லாவற்றையும் காசாக்கிவிடும் செய்நேர்த்தி.
உங்கள் வணிக வளாகத்தில் விற்பனை அமோகமாக நடக்கிறது.
உள்ளூரிலும் நாட்டிலும் கடல் தாண்டியும் உங்கள் வர்த்தக சாம்ராஜ்யத்தை
விரிவுபடுத்திய வண்ணமே
அங்கங்கே சில பெட்டிக்கடைகளில் வெறும் அன்பால் கவிதைகளை
அடுக்கிவைத்து அழகுபார்த்து இலவசமாய் வினியோகித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து
அத்தனை இளப்பமாகச் சிரிக்கிறீர்கள்.
வாயைக் கழுவ மறந்துவிட்டீர்களா என்ன?
உள்ளிருக்கும் சொத்தைப் பற்களின் அழுகிய வாடையில்
குமட்டிக்கொண்டு வரவில்லை?

[4]

“நெருப்பு, நெருப்பு” என்று பொய்யாய்க் கூவிக் களித்த மெடில்டா சிறுமி.
நீங்களோ விவரம் தெரிந்த பெரியவர்.
நவீன காலத்திற்குத் தோதாய்
கற்பனைக் கைகள் உங்கள் கால்களைக் கட்டிப்போடுவதாய்
கூவிக்கூவியே
உலக வர்த்தகச் சந்தையில் உங்கள் விலையை ஆகாயத்திற்கு உயர்த்தியவாறு.
தம்போக்கில் கவிதையெழுதிக்கொண்டிருந்த அப்பிராணிகளின் சிறகுகளை
அறுத்தெரிந்தபடி
கத்துங்கடல் தாண்டி அதி ஒயிலாய் பறந்துசென்று
அரங்கேற்றிவருகிறீர்கள் உங்களை நீங்களே.
கீறல் விழுந்த ரிகார்டாய் இன்னும் எத்தனை காலம்தான்
கவிதையை பிழைக்கச்செய்துவிட்டதாக உங்களுக்கு நீங்களே
கிரீடம் சூட்டிக் கொண்டாடிக்கொண்டிருக்கப்போகிறீர்கள்?


[5]

வெற்றிகரமாக முடிசூட்டிக்கொண்டு தர்பாரில் வீற்றிருக்கிறீர்கள்.
அரியணையின் இருபுறமிருந்தும் வீசப்படும் வெண்சாமரங்கள்
மென்பட்டாடைகள்
மாடமாளிகைகள்
கூடகோபுரங்கள்
சிவிகைகள்,
சிகையலங்காரம்,
ஒப்பனை
சேடிப்பெண்கள் என
அத்தனை அரச லட்சணங்களோடும்
அதிகாரமும் அகங்காரமுமாய்
வசையம்பை வெறுப்புக்கணையை வீசி சிரசுகளைக் கொய்தபடி
சேகரித்த தலைகளை
கலாபூர்வமாக உங்கள் வரவேற்பறையில் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.
சந்தேகமில்லை, உங்கள் கையிலிருப்பது செங்கோல் தான்.
சக படைப்பாளிகளின் ரத்தக்கறை படிந்தது.


[6]

கழுவேற்ற மேடையெல்லாம்
உங்களால் வாய்போன போக்கில் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின்
உதிரக் கொழகொழப்பு.
வழுவழுத் தரை விரிந்த அரண்மனையில் அறுசுவை உணவைச் சுவைத்து
குச்சுவீட்டில் கொலைப்பட்டினியில் உழல்வதான பாவனைபுரிந்தபடி.
நியாயத்தின் பெயரால், மனிதநேயத்தின் பெயரால்
உங்களுக்கு முன்பு எழுதிய பலரை
சிறையிலடைத்து அடையாளம் அழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
அட, பரிவதிர்வைக் கூடவா உரிமைகொண்டாட முடியும்?
மகாராஜாக்களும் ராணிகளும் ஆணையிட்டால் மும்மாரி பொழிந்துவிடுமா என்ன?
காற்றின் பிள்ளைகள் நாங்கள்.
உங்கள் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்படியாமல்
கவிதையெழுதிக்கொண்டிருக்கிறோம்; இருப்போம்.


 (* ஏப்ரல் மாத பதிவுகள் இணைய இதழில் வெளியானது)







0

ரிஷியின் கவிதைகள்

நாடெனும்போது.....



1.

நந்தியாவட்டை,  மந்தமாருதம்
வந்தியத்தேவன்,  சொந்தக்காரன்
சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா

_ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்

”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது”
என்று
நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ
வில்லங்கம்தான்.

தடையற்ற தாக்குதலுக்காளாக நேரிடும்.
எச்சரிக்கையா யிருக்க வேண்டும்.

2.

”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
யிருந்ததும் இந்நாடே, அவர் முந்தையர் ஆயிரம் _”

“_ மேலே பாடாதே. என்னவொரு தன்னலம்
உன் பெற்றோர் மட்டும் நலமாயிருந்தால்
எல்லாம் வளமாகிவிடும். அப்படித்தானே?”

_தவறாமல் வந்துவிழும் தப்படி யிப்படி.

3.

இந்தியா சகதி என்றார்.
வெறெங்கு சென்றாலும் நாம் இரண்டாந்தரக் குடிகள்  அல்லது
அகதிகள் தானே என்றேன்.
என்ன தகுதி உனக்கு மனிதநேயம் பேச என
மிகுதியாய் வசைபாடிச் சென்றுவிட்டார் வந்தவர்.


4.

”நம்பத்தகுதியற்றதாய் தன்னை மீண்டுமொருமுறை நிரூபித்துக்கொண்டுவிட்டது இந்தியா”
என்று வெம்பி வெடித்ததொரு மின்னஞ்சல்.

முப்பதாவது முறையா?
முந்நூற்றியைம்பதாவதா?

”தப்பாது எப்போதும் ஏமாற்றியே வரும் நாட்டை
இப்போதும் எதிர்ப்பார்ப்பதும் ஏன்?” எனக் கேட்டாலோ
மாட்டிக்கொள்வீர்கள் முடியா வசைப்பாட்டில்.


5.

”ஆயிரம் காதங்களுக்கப்பால் இறந்தவர்களுக்காக அழுகிறாயே நியாயமா?”
என்று வாரந்தோறும்
ஒளியூடகத்தில் முழங்கிக்கொண்டிருக்கிறார் ஒருவர்
அபிமானமும் வருமானமும் கொண்டு.
எல்லைப்புறத்தில்
மூன்றாம்பேருக்குத் தெரியாமல்
மடிந்துகொண்டிருப்போரில்
தென்கோடி குக்கிராம தனபாலும் உண்டு.


6.

போராளிகள் புரட்சியாளர்களின் நாட்டுப்பற்று போற்றத்தக்கது.
நீயும் நானும் கொண்டிருந்தால் அது நகைப்பிற்குரியது.

”_ எனவே, தேர்தலைப் புறக்கணியுங்கள்”
என்று திரும்பத் திரும்ப அறிவுறுத்திவருகின்றன
சில குறுஞ்செய்திகள்.
மாற்றென்ன என்று கேட்டால்
தூற்றலுக்காளாக வேண்டும்.

”மீள்நிர்மாணம் குறித்து மலைப்பெதற்கு
முதலில் கலைத்துப்போட்டுவிட வேண்டும்”.


7.

’இந்தியா என்றால் எந்தை உந்தையல்ல;
விந்தியமலையுமல்ல _
மத்தியில் குந்தியிருக்கும் அரசு’ என்பார்
வந்துபோகும் நாளிலெல்லாம் உதிர்த்துக்கொண்டிருக்கும்
வெறுப்பு மந்திரத்தில்
அந்தப் பிரிகோடு அழியும் நிலையை
என்னென்பாரோ…..?



(* ஏப்ரல் மாத திண்ணை இணைய இதழில் வெளிவந்தது)


0











ஒலிக்குமா நீதிமணி? - கவிதை


ரிஷியின் கவிதைகள்

1.  ஒலிக்குமா நீதிமணி? அல்லது சுரண்டலின் பரிமாணங்கள் அல்லது பகற்கொள்ளைகள் பலவிதம் அல்லது ஒரு பிழைப்புவாதியின் கையில் மொழிபெயர்ப்பு அல்லது……







’மூத்திரம் குடித்து மலம் உண்டது பூதம்’ என்று முடித்து
கிச்சுகிச்சு மூட்டி குழந்தையை சிரிக்கவைக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தது கதை.
பெரியவர்களின் பகற்கனவுகள் அல்லது மனவக்கிரங்களே
பிள்ளைகளுக்கான கதைகளாகிவிடுகின்றன பெரும்பாலும்.
சுத்தம் சுகாதாரம் சிதைத்து சிரிக்கவைக்கப்பார்ப்பது சரியல்ல என்றேன்.
மனம்போல் மாற்றிக்கொள்ளுங்கள் மொழிபெயர்ப்பாளரே என்றார்.
மகா கம்பீரமாய்.
குழந்தைக் கதைகளாயிற்றே என்று அரைக்கட்டணத்திற்கு மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டேன் ஆங்கிலத்தில்.
மின்னஞ்சலில் அனுப்பித் தந்து மூன்றுவருடங்களாயிற்று.
மிச்சக்காசு இன்னும் வந்துசேரவில்லை.
கேட்கும்போதெல்லாம் உடல்நிலை சரியென்றும் நிதிநிலை சரியில்லையென்றும்.
நாகூசாமல் [பொய்] சொல்லிவந்தவர்
நாளடைவில் கைபேசியில் சிக்காமல் நழுவிப் போனார்.
ஒருவழியாய் வலைவீசிப் பிடித்தபோது
வேறு கதை எழுதியிருக்கிறீர்களே என்று எகத்தாளம் பேசினார்.
உங்கள் மொழிபெயர்ப்பு பழுது என்றார்.
இன்னமும் மிச்சத்தொகைக்காய் நான் இலவுகாத்த கிளியாய்
நீதிமணியை ஒலிக்கச்செய்துகொண்டிருக்கிறேன்.
நின்றுகொல்லவாவது வேண்டும் தெய்வங்கள்..



(*ஏப்ரல் மாத திண்ணை இணைய இதழில் வெளிவந்தது)

1. மின்னஞ்சலில் முக்கிய(?)ச் செய்திகள் அனுப்பித்தந்து கொண்டிருப்பவருக்கு…

ரிஷியின் கவிதைகள்

1.  மின்னஞ்சலில் முக்கிய(?)ச் செய்திகள் அனுப்பித்தந்து கொண்டிருப்பவருக்கு…

மன்னிக்கவும்.
’மிக்க நன்றி’ என்று சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன்.
இன்றுவரை அரைக்காணி நிலமும் சொந்தமில்லை தான்
என்றாலும்
செய்தித்தாள் வாங்காதிருந்ததில்லை யொருநாளும்.
நடுநிலைச் செய்திக்காய் நாலு வாங்கும் நாட்களும் நிறையவே உண்டு.
கணினி இயக்கத்தில் மேதையில்லை எனினும்
‘கூகுள் சர்ச்’ தெரியாத அளவு பேதையுமில்லை.
கூடவே, யாரனுப்பும் செய்தியின் உள்நோக்கத்தையும் பொருள்பெயர்ப்பதும்
காலத்தே கைவந்த கலையாகிவிட்டது.
கண்டந்தோறும் நடந்துகொண்டிருப்பவற்றையெல்லாம் கணத்தில் கொண்டுவந்துசேர்க்கும் தொழில்நுட்பங்கள்
நம்மைச் சுற்றி நிறைய நிறைய.
தெரியும்தானே உங்களுக்கும்.
அலைபேசியில் கூட வளவளவென்று பேசப்பிடிப்பதில்லை.
சுருக்கமாகவே சொல்லிவிடுகிறேன்.
நீங்கள் சொல்வதற்கெல்லாம் ’ஓ!’ போடச் செய்து
என் அறிவை விருத்திசெய்யும் பிரயத்தனத்தில்
தலையும் வாலும் அற்ற ‘முண்ட’ச் செய்திகளைத்
திரும்பத் திரும்ப மின்னஞ்சல் செய்து
என் ‘செல்ல’ ஸ்பாம் பெட்டியை வீங்கிப் புடைத்து
வெடிக்கும்படி செய்துவிடாதீர்கள்.



’ரிஷி’யின் கவிதைகள்


நுண்ணரசியல் கூறுகள்
(ஏப்ரல் மாத *திண்ணை இணைய இதழில் வெளிவந்தது)


அ]

உங்கள் எழுத்தை வெளியிட வேண்டுமா?
கண்டிப்பாக கழுத்தின் நீளத்தைக் குறைத்துக்கொண்டுவிடுங்கள்.
உங்கள் படைப்பு மொழிபெயர்க்கப்பட வேண்டுமா?
தரை மீது தலைவைத்து நடக்கப் பழகுங்கள்….
நீளும் நிபந்தனைகள்.
நுண்ணரசியலாளர்களின் கைகள் கட்டமைக்கும்
நவ கொத்தடிமை வடிவங்கள்.

ஆ]

கழுத்தை நெரித்தால் தான் கொலை; வன்முறை.
நாங்கள் படைப்பை நெரித்துக் குழிதோண்டிப் புதைப்போம்
கருத்துச் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்தவாறே!
உட்கட்சி ஜனநாயகம் வேண்டிப் பதைப்பதெல்லாம்
உன்மத்தமல்லாமல் வேறென்ன?
ஆழிசூழ் உலகு தான்.
எனில் அதுவும் நாங்கள் சொல்லித்தான்
வழிமொழியப்பட வேண்டும்.