LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, February 9, 2026

அவரவர் – அடுத்தவர் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் – அடுத்தவர்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

* சமர்ப்பணம்:
கவிதைப் பிதாமகர்களுக்கும்
‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்
....................................


‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
'தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமா'வென
அடுத்த கவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
"வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ"ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
"முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ" என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!
(*தனிமொழியின் உரையாடல் – கவிதைத் தொகுப்பிலிருந்து)

அடியாழம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடியாழம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உண்மை சுடும் என்றார்கள்
உண்மை மட்டுமா என்று உள் கேட்டது
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றார்கள்
எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.
ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்
யாரோடுமா – அது எப்படி என்று உள் கேட்டது.
காரும் தேரும் வேறு வேறு என்றார்கள்
நான் சொன்னேனா ஒன்றேயென்று
என்று உள் கேட்டது.
மௌனம் சம்மதம் என்றார்கள்
உனக்கா எனக்கா என்று உள் கேட்டது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றார்கள்.
முற்பகல் செய்தா பிற்பகல் விளைகிறது என்று உள் கேட்டது.
தர்க்கம் குதர்க்கம் என சொற்கள் சரமாரியாக சீறிப்பாய
அர்த்தம் அனர்த்தத்தை அசைபோட்டபடி
உறக்கத்தில் ஆழத் தொடங்கியது உள்.
All reactions:
2

இதன் மூலம்…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இதன் மூலம்….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மூல கவிதையில் ’குரல்வளையில் சிக்கிக்கொண்ட கனன்றெரியும் கங்கு’ என்றிருந்தது
மொழிபெயர்ப்பில்
’கனன்றெரியும் கங்கின் குரல்வளையில் சிக்கிக் கொண்டு’ என்றானதில்
ஏதும் தவறில்லை யென்பாரும்
எல்லாமே தவறாகிவிட்டதென்பாரும்
இதுவே மொழிபெயர்ப்பின் creativity என்பாரும்
இல்லையில்லை atrocity என்பாரும்
இஃதன்றோ மொழிபெயர்ப்பின் தனித்துவம் என்பாரும்
இதுவொரு கேடுகெட்ட தடித்தனம் என்பாரும்
கிசுகிசுப்பாய்த் தர்க்கித்தவாறிருக்க
நமுட்டுச்சிரிப்போடும்
நிஜமான வருத்தத்தோடும் சிலர்
மெல்ல நகர்ந்துவிட
இவையேதுமறியாது அருள்பாலிக்கும் அறியாமையில்
மொழிபெயர்ப்பாளர் ‘லைக்’குகளைக்
கணக்கிட்டுக் கொண்டிருக்க
அணைய வழியின்றி அந்தக் கங்கு
குரல்வளையில் இன்னமும் கனன்றெரிந்து
கொண்டிருக்கக் காண்போம் –
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்....

அன்புப்போலிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அன்புப்போலிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எல்லோருக்கும் நல்லவராக இருப்பதாகக் காட்டிக்கொள்பவர்களிடம்
அன்பு ததும்பிக்கொண்டிருப்பதற்கு பதிலாக
தன் பெருந்தன்மை குறித்த கர்வமே அதிகம்.
கூடவே அதில் பாசாங்கும் பயமும்
பிழைப்பிற்கான யத்தனமும்.
எதிரியற்ற போரில் வெல்லும் பிரயத்தனமும்.
குதிரையை கழுதையென்றாலும் மறுத்துப்பேசத்
தடுத்துவிடும் தோழமை யென்ற
கணக்கும்.
எனத் தெரிந்து பல காலமாகிறது
எனக்கும் உனக்கும்.
முன்பும் பின்பும் அன்புப்பழமாக
அனைவருக்குமானவராக
நெஞ்சு நிமிர்த்தி புன்னகைத்துக்
கொண்டேயிருப்பவரிடம்
கேட்கவேண்டும்
பதில் கிடைத்துவிட்ட அந்த ஒரே கேள்வி:
நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

சதுர நிலவின் மும்முனைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சதுர நிலவின் மும்முனைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தன் சதுர நிலவை
உள்ளங்கைக்குள் பொதிந்துவைத்திருந்தது குழந்தை.
வட்டமாயில்லாதது எப்படிச் சந்திரனாகும் என்று
கெக்கலித்துக் குற்றஞ்சாட்டி
கத்தித்தீர்த்த திறனாய்வாளரைப் பார்த்து
கன்னங்குழியச் சிரித்து
தன் ஒரு நிலவைப் பல வடிவங்களில்
பிய்த்துப்போட்டதில்
பெருகிய ஒளிவெள்ளத்தைக்
கைகுவித்து மொண்டு குடித்து மகிழ்ந்த குழந்தை
நாவறள நின்றிருந்தவரை அன்பொழுகப் பார்த்து
அவர் கையிலிருந்த தரவரிசைப்பட்டியல் தாளைத்
தன் சின்னக்கைகளால் விளையாட்டாய்ப் பறித்து
அதில் சிறிது ஒளிநீரை அள்ளி ஊற்றி
அவரிடம் குடிக்கச் சொல்லித் தந்த பின்
தன்போக்கில் துள்ளி முன்னேறிச் சென்றது.

வல்லமை தாராயோ…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வல்லமை தாராயோ….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’கல்லடி பட்டாலும் சொல்லடி பட்டாலும்
நல்லபிள்ளைக்கழகு சிரித்துக்கொண்டேயிருப்பது’
என்று திரும்பத்திரும்பப் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறார்கள்
நல்லவர்கள் சிலர்; நாலும் தெரிந்தவர்கள்…
ஏலாதய்யா எம்குலச் சாமிகளே……
என்ன செய்ய…
வாலைக் குழைக்கத் தெரியாத ஏழைக் கவிக்கு
வாய்த்த முதுகெலும்பு வளையாதது.
சூடு இருக்கிறது
சுரணையிருக்கிறது.
அரணையைப் பாம்பென்றால் ஆமாம்சாமி போட
’கீ’ கொடுத்தால் கைதட்டும் பொம்மையில்லையே கவி.
கருணைக்கொலை யென்ற பெயரில் காலங்காலமாய் பல கவிகளைக்
கைபோன போக்கில் கழுவிலேற்றிவருபவரின்
அருங்காட்சியகச் சுவர்கள் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
அறம்பாடலால்.
பாதகஞ் செய்பவரைக் கண்டா லவர் முகத்திலுமிழ்ந்துவிடச் சொன்ன
பாரதி காற்றுபோல்;
யாரொருவரும் கக்கத்திலிடுக்கிக்கொண்டுவிட முடியாது.
அம்மையப்பனாய் அறிவார்ந்த நண்பனாய்
அன்பே உருவான வாழ்க்கைத்துணையாய்
மொழி யிருக்கிறது.
இம்மை மறுமைக்கு இதுபோதும் –
வேறெந்த ஆசானும் தேவையில்லை.
பொந்தில் வைத்த அக்கினிக்குஞ்சுகளும்
வெந்து தணியும் காடுகளும்
வளர்கதையாக _
விரியும் பாதை. செல்வழி தொலைவு
சொற்பநேரமே இருப்பு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமி கவிதை.
சரணம் கவிதை.
வணக்கம் சொல்லி விடைபெறுகிறோம்
ஒரு சிறு பிரார்த்தனையோடு:
உம்மைப் பெண்டாளனென்றும் புல்லுருவியென்றும்
அம்பலத்தில் நாக்குமேல பல்லுபோட்டுப் பேசும்
நீசத்தனம்
யார்க்கும் வாய்க்காதிருக்கட்டும்.