LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, October 22, 2021

துளி பிரளயம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 துளி பிரளயம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

திடீர் திடீரெனத் தளும்பும் மனம்...
சில சமயம் லோட்டா நீராய்
சில சமயம் வாளி நீராய்
சில சமயம் தண்ணீர் லாரியாய்
சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய்
சில சமயம் சமுத்திரமாய்….
ஐஸ்கட்டிக்கடலாய் உறைந்திருக்கும்
நேரமெல்லாம்
அடியாழத்தில் தளும்பக் காத்திருக்கும்
லாவா....

துளி ஞானம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 துளி ஞானம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர் போடாத வேசமில்லை யென்றார் இவர்
இவர் போடாத வேசமில்லை யென்றார் அவர்
அவ ரிவரா யிவ ரவராய்
எவ ரெவ ரெவ ரெவ ரென
எனக்குமுனக்கும வர்க்கு மிவர்க்கும்
எல்லாம் தெரியும்தானே யானாலுமேதும்
தெரியாதுதானே
காதுங்காதும் வைத்ததாயும்
ஏதுஞ்சொல்லாதிருத்தலே நன்றாமே
யாதும் ஊரேயாயின் யாவரு மெதிரியாக
தீதும் நன்று மென்றும் பிறர் தர வாராததாக
சூதும் வாதுமறிந்தும் அறியாதியங்குமொரு
மனமெனும் அருவரமே
வாழ்வின் ஆகப்பெருஞ்சாதனையா மென்
றறிவேனே பராபரமே.

திறனாய்வைக் கட்டுடைத்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 திறனாய்வைக் கட்டுடைத்தல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

பிரதிகளில் பாரபட்சம் பார்க்கப்படவேண்டும் என்பதே
திறனாய்வுக் கட்டுடைத்தலின் பாலபாடம்.
வேண்டப்பட்டவர் எழுதும் அபத்தங்களைச்
செல்லக் குழந்தையின் கிறுக்கலாக
சின்னதாக ஓரிரு குட்டோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்.
மோதிரக்கையராக மாறிவிடவும் முடியும்.
ஆகாதவர் ஓகோவென்றெழுதினாலும்
போகாத ஊருக்கு வழிசொல்லும் போக்கத்த எழுத்து
என்று அந்தப் படைப்பையே உடைத்தெறிவதாய்
மடைமீறிய ஆவேசத்தோடு பழிக்கவேண்டும்.
இடையிடையே சில பெயர்கள் வருடங்கள் தேதிகள்
எழுதப்பட்ட படாத வரலாறுகள்
தனக்குத் தெரிந்த அரசியல்
சினிமா தர்க்கவியல் தத்துவம்
பழமொழிகள்
Quotable quote கள் என சரியான விகிதத்தில்
கலந்துவைக்கத் தெரியவேண்டும்.
தன்னை முன்னிலைப்படுத்தத் தெரியாத,
தனிநபர்த் தாக்குதலில் ஈடுபடாத
திறனாய்வெல்லாம் திறனாய்வாயென்ன?
அதிசிறந்த படைப்பானாலும்
அதைப்பற்றி யொரு வரியும் எழுதாமல்
கடந்துபோகத் தெரிந்தவரே
ஆகச்சிறந்த திறனாய்வாளர்.