LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, January 18, 2025

தமிழிலக்கிய வீச்சும் விரிவும் பிறவும்.... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தமிழிலக்கிய வீச்சும் விரிவும் பிறவும்....

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



ஒட்டுமொத்த தமிழிலக்கியத்தின்
சட்டாம்பிள்ளையாக
சர்வரட்சகராக
சட்டவல்லுனராக
சினேகிதராக
சோதரராக
செல்லப்பிள்ளையாக
கிள்ளைமொழிக் காதலியாக
சொல்லவல்லாததொரு சுத்தப்பிழம்பாக
உள்ள சொல்லுக்கெல்லாமப்பாற்பட்ட
சொப்பனார்த்த தேவகணமாக
மொழியை சரியான வழியில் செலுத்தி
தமிழிலக்கியத்தை அடையாளப்படுத்துபவராக
அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்செல்பவராக
அதுவாக இதுவாக எதுவாகவும்
எல்லாமுமாக
இவரவரே
மன்னுலகில் அங்கிங்கெனாதபடி
ஊர்வலம் நகர்வலம் நாடுவலம்
வந்தவண்ணமிருக்க
இன்னுமின்னுமான இக பர மொழிகளில்
இன்றிலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கு
விறுவிறுவென மொழிபெயர்க்கப்பட்ட
வாறிருக்க _
இருவார பிரம்மாண்ட கண்காட்சியின்
ராட்ஷஸ ராட்டினங்கள் நிரம்பிய
அரங்கிற்கு வெளியே
சிறு தெருக்களில்
வழக்கம்போல்
அருமையாய்ச் சுழன்று
கண் நிறைக்கும்
கொள்ளைக் குதூகலமளிக்கும்
குட்டிக் குடைராட்டினங்கள்!

இயல்பு -ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இயல்பு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

முகபாவங்களை முகமூடிகளாக அணிந்திருப்பவர்கள்
மொழியும் வார்த்தைகளுக்குள்ளிருந்து முழுப்பூசணிக்காய்கள்
மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கின்றன
மிகப் பெரிதான ஒரு சிரிப்பால்
அவற்றின் மீது ஒரு திரையைப் போர்த்த
அவர்கள் மும்முரமாக முனைந்துகொண்டிருக்கையிலேயே
அவர்தம் பொய்மையிலிருந்து புதிதாய் முளைக்கும்
சில பூசணிகள் போகப்போக
அவர்களாகவே உருமாறிவிடுகின்றன.






தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக கைலுக்கித்
தோளில் கையிட்டு அரவணைத்து புகைப்படத்திற்காக என்பதைத் தாண்டிய அளவில்
மனம்விட்டுச் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பதைப் பார்த்து
அவனுக்குள்ளிருந்த தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர்
அலமலங்க விழிக்கிறான்.

அவர்கள் தான் இவனையும் இவனொத்தவர்களையும்
இப்பிறவியில் இனியிருக்குமோ இருக்காதோவென இழுபறியிலிருக்கும்
ஏழேழ் பிறவிக்கும் ஜென்மப்பகை கொண்ட
இருதரப்பினர்களாக்கி
சொற்கூர்வாட்களை அவர்கள் மனங்களில் சேகரிக்கச் செய்து
அகிம்சை பேசியவாறே அந்த ஆயுதங்களைக் கண்டமேனிக்கு
எதிரித்தரப்பு மீது எறிந்துகொண்டேயிருக்கச் செய்தவர்கள்.

அவர்களிருவரும் இன்று அப்படிச் சிரித்தபடி யொருவருக்கொருவர்
நெருங்கிநின்றிருப்பதை
அன்பின் அடையாளமாய்
சகோதரத்துவத்தின் சிறப்புணர்த்துவதாய்
மனித மாண்பைப் பற்றி மடக் மடக்கென்று நீரருந்தும்
வேகத்தின் பன்மடங்கில்
நிகழ்ச்சித்தயாரிப்பாளர் போற்றிப்புகழ
நீளும் வழிகளெல்லாம் அடைபட்டுப் போய்
நிராயுதபாணியாக நிற்கும்
நிஜத் தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர்
நாளையேனும் பெறுவாரோ ஞானம்….

குடித்தனம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குடித்தனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
புதுவீடு செல்கிறேன்.

வாடகைக்குத்தான் என்றாலும்
விரியுலகே நம்முடையதாக இருக்கும்போது
வசிப்பிடம் மட்டும் எப்படி வேறாகிவிடும்!

வாடகையை மட்டும் மாதாமாதம்
ஐந்தாம் தேதிக்குள் கட்டிவிட முடியவேண்டும்!

ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும்
வீடு மாறிச்செல்பவர்களும் ஏதோவொரு விதத்தில் மாறுகிறார்கள் போலும்.

அட்டைப்பெட்டிகளுக்குள் பொதியப்பட்ட இகவாழ்வை
ஒரு வீட்டிலிருந்து வழியனுப்பி
இன்னொரு வீட்டிற்குள் அதை மீண்டும்
வெளியே எடுத்து விரிக்கும்போது
காணாமல் போய்விடும் சில
சீப்புகளும் புத்தகங்களும்தான் என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியவில்லை.

இடம்பெயரும் முன் சில நாட்களும்
இடம்பெயர்ந்த பின் சில நாட்களும்
ஒருவித அந்தரத்தில் அலைக்கழியும்
வாழ்க்கை.

பிறகும் பூமியில் கால்பதிக்கும் என்ற உறுதியில்லை
யென்பதும் உண்மைதான்.

நானின் தூல மூட்டுகளிலும்
சூக்கும மூட்டுகளிலும்
தீரா வலியெடுக்கும்.
தூங்கினால் சரியாகக்கூடும்….

புதுவீட்டின் அக்கம்பக்கத்து மனிதர்களிடம்
நம்மை நிரூபித்துக்கொள்ளவேண்டும்…
என்னவென்று என்பதுதான்
தொடரும் புதிராய்.

Friday, January 17, 2025

கவிதையாதல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையாதல்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நாடுமல்ல காடுமல்ல நான் கவிதை
யென்றது;
நரி காகம் கதையல்ல நான் கவிதை
யென்றது;
நான்குவரித் துணுக்கல்ல நான் கவிதை
யென்றது;
நீள நீள மறுமொழியல்ல நான் கவிதை
யென்றது;
நிறையக் கேட்டுவிட்ட தத்துவமல்ல நான் கவிதை
யென்றது;
நான்குமறைத் தீர்ப்பல்ல நான் கவிதை
யென்றது;
நான்கு பழமொழிகளின் திரட்டல்ல நான் கவிதை
யென்றது;
நச்சென்ற எதிர்வினையல்ல நான் கவிதை
யென்றது;
நாக்கால் மூக்கைத் தொடுவதல்ல நான் கவிதை
யென்றது;
நாய்வால் நிமிர்த்தலல்ல நான் கவிதை
யென்றது;
நன்றியுணர்வோ நபும்சகமோ அல்ல நான் கவிதை
யென்றது;
நகையின் இருபொருளுணர்த்தலல்ல நான் கவிதை
யென்றது
நல்முத்துமணியணிக்கோலமல்ல நான் கவிதை
யென்றது
நவரத்தின மயிற்பீலியல்ல நான் கவிதை
யென்றது
நட்சத்திரங்களின் எண்ணிக்கையல்ல நான் கவிதை
யென்றது
நிலவின் துண்டங்களல்ல நான் கவிதை
யென்றது
நல்லது நல்லது சொல் சொல் இன்னும் சொல்
என்றதற்கு
’ந’விலேயே வரிகளெல்லாம் தொடங்குவதல்ல கவிதை
யென்றது சொல்லிச் சென்றது.
நாணித் தலைகுனிந்தென் கவிதை (நற்)கதியிழந்து நின்றது.

Tuesday, January 14, 2025

கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல் குறித்து சொல்லத்தோன்றும் சில…. 3 _ லதா ராமகிருஷ்ணன்

 கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல் குறித்து

சொல்லத்தோன்றும் சில…. 3
_ லதா ராமகிருஷ்ணன்

கவிஞர் பொன் இளவேனில் எழுதிய கவிதையொன்று இது. அதற்கான என் ஆங்கில மொழிபெயர்ப்பும் இங்கே தரப்பட்டுள்ளது.

சிரிப்பை உதிர்த்தல்
சிரிப்பை உதிர்க்கிற மாதிரி
பூவை உதிர்கிகிறது செடி
உன் விரல்களால் நீளும் பாம்பின்
ஊர்தலை
குளிர்ச்சியாக கொத்திச் செல்லும்
கழுகின் மூக்கு இங்கு
பாறையில் சுகம் தீட்டுகிறது
இன்றைக்கு நீ முட்டாளாகும்
கிழமையை நிறைவு செய்கிறாய்
கனமற்ற வெளியில்
அசைந்து மிதக்கும் பொங்கின்
அலாதி எனதின் காட்சி
தலையை சொரிந்து கொண்டு
நாற்காலிக்கு நுழைவு சீட்டு
பெறும் வரிசையில்
கிழிந்த படி இருக்கும்
சட்டையை பற்றிக் கொண்டு
நகரத்துக்குள் நுழையும் கவனம்
வுன் முக இறுக்கம் காட்டுகிறது
கட
_ பொன் இளவேனில்
............................................................................................
SHEDDING SMILE
Just as giving out a smile
the plant sheds a flower
the beak of eagle that
coolly grabs the slither of snake
born of your fingers stretched
herein on the rock
sketches bliss
Today you complete the Day
that turn you a fool
In the weightless space
the splendour of the strand of feather
swaying and floating
is my vision
Scratching the head
the absorption on
entering into the city
holding close the shirt being torn
in the row for getting ticket to the
seat
reveals your tense
countenance
Cross Go Across
in every sense.
தோழர் பொன் இளவேனில் நேரிடையான கவிதைகளும் எழுதுபவர்தான். சில சமயம் சில விஷயங்களை நேரிடையாகவோ, பூடகமாகவோ பேசவேண்டிய தேவையை கவிஞர் உணரக்கூடும்.
ஒரு உத்தியை முயன்றுபார்ப்பதாகவும் நாம் ஒருவகைக் கவிதை யாக்கத்தை முயன்றுபார்ப்பதும் இயல்பு. சில சமயம் அந்த உத்தி துருத்திக்கொண்டு தெரியும்; தனியாக நிற்கும். சில சமயம் அது கவிதை யின் கருப்பொருளோ டும் மனநிலையோடும் கச்சிதமாய்ப் பொருந்திவிடும்.
இதில் வாசகப் பங்கேற்பும் முக்கியமானது. கவிஞர் பயன்படுத்தும் இலக்கிய உத்தி பிடிக்கவில்லையானால், பிடிபடாதுபோனால் அது துருத்திக்கொண்டு நிற்பதாகவே அந்த வாசகருக்குத் தோன்றும் என்பதும் உண்மையே.
தனித்துவமான கவிதைநடையைக் கைக்கொள்ளும் ஆர்வமும் அதற்கான பயிற்சியும் அநாவசியமானதல்ல. சமகாலத் தமிழ்க்கவிதைப் போக்குகளை, பிறமொழிக்கவிதைப்போக்குகளைத் தொடர்ச்சியாக அவதானித்துவருவதன் மூலமும், ஒரு கவிஞராய் நாமே நவீன கவிதையாக்க முயற்சிகளை அடிக்கடி முயன்று பார்ப்பதன் மூலமும் நமக்கு புதிய நடை கைகூடலாம்; நாளடைவில் அதுவே நம் இயல்பான கவிதைநடையாகி விடலாம். அப்படித்தான் வாசிப்போருக்கும் இருக்கும் கவிதைநடையைவிட இந்தப் புதிய நடை அதிகம் பிடித்துப்போய்விடலாம். சொல்லவந்த விஷயத்தை இந்தப் புதிய நடையில் இன்னும் அழுத்தமாக, காத்திரமாகச் சொல்லமுடிவதாக கவி நினைக்கலாம்; வாசிப்போரும் நினைக்கலாம். சமயங்களில் இதில் கவிக்கும் வாசிப்பாளருக்கும் கருத்தொருமிக்கலாம்; அப்படியில்லாமல் போகலாம்.
முதலில் ஒரு வாசகராக இந்தக் கவிதையை அனுப வித்துப் படித்தேன். முழுக்கப் புரிந்தது என்று சொல்ல வியலாது. ஆனாலும் இதில் ஒலிக்கும் குரல் நமக்குள் ளும் அடிக்கடி கேட்பதுதான் என்று தோன்றியது. இந்தக் கவிதை எனக்களிக்கும் (அரைகுறை) வாசகப்பிரதி என்ன? அதற்கொரு தொடர்ச்சியும் முழுமையும் இருக்கிறதா? கவிதையின் தலைப்பு அதற்குள்ளிருப் பதை அடைவதற்கான ஒரு திறவுகோல் என்பார்கள். ’சிரிப்பை உதிர்த்தல்’ என்ற தலைப்பே ஒருவிதத்தில் இரட்டைத் தாழ்ப் பாளாய்.
சிரித்தல் என்பதற்கும் வாய்விட்டுச் சிரித்தல் என்பதற் கும் வித்தியாசம் இருப்பதுபோலவே சிரிப்புக்கும் சிரிப்பை உதிர்த்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ‘போகிறபோக்கில் அவன் அதைச் சொல்லி ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுப்போனான் என்று பேச்சுவழக்கில் நாம் ’உதிர்த்தல்’ என்ற சொல்லுக்குத் தனி அர்த்தம் ஏதும் தராமல் சொல்வதுண்டு. ஆனால், கவிதையென்பது BEST WORDS IN THE BEST ORDER அல்லவா!
SMILE என்றால் புன்சிரிப்பு என்று பொருள். ஒரு பூ உதிர்தல் புன்சிரிப்புபோல் மென்மையாக இருக்கும் என்ற எண்ணமோ என்னவோ சிரிப்பு என்ற சொல்லுக்கு LAUGHTERஐ விட்டு SMILEஐத் தேர்ந்தெடுத்துக்கொண் டேன்!
இந்தக் கவிதை ’கட’ என்ற ஒற்றைச்சொல்லோடு முடி கிறது. இந்தச் சொல் கவிதைசொல்லி தனக்குத்தானே சொல்லிக்கொள்வதாகவும் இருக்கலாம், நம் எல்லோ ருக்கும் அறிவுறுத்துவதாகவும் இருக்கலாம். இந்த ‘கட’ என்ற சொல்லுக்கு எத்தனையெத்தனையோ அர்த்தங் கள்! அத்தனை அர்த்தங்களையும் ஒருங்கே தரவேண்டும் என்ற பேராசைத்தனமான அவாவிலோ என்னவோ இந்த ஒற்றைச்சொல்லை Cross Go Across in every sense என்று இருவரிகளாக்கியிருக்கிறேன். இது மொழிபெயர்ப்பாள ரின் அத்துமீறலாக, மொழிபெயர்ப்பாளர் மூல கவிதைக் குப் பொழிப்புரை எழுதுவதாகவும் சிலருக்குத் தோன்ற லாம். ஆனால், இலக்குமொழியில் அதற்கிணையான ஒற்றைச்சொல்லோடு முடித்துவிடுவது மூல கவிதை முன்வைக்கும் உறுதியை அழுத்தத்தைப் பிரதிபலிக்கப் போதாது என்று தோன்றும்போது மொழிபெயர்ப்பாளர் இப்படிச் செய்யவும் நேர்கிறது. அதாவது, தன்னை இணை மூலாசிரியராக எந்தத் தருணத்திலும் கருதாத அளவில்!
அதற்கு முந்தைய இரு வரிகள் ’நகரத்துள் நுழையும் கவனம் வுன் முக இறுக்கம் காட்டுகிறது’ ஆக இங்கே சிரிப்பை உதிர்த்தல் என்பது சிரிப்பது அல்ல; சிரிப்பை இழப்பது’ என்று தோன்றுகிறது. கவிதையின் முதலி ரண்டு வரிகள் – ‘சிரிப்பை உதிர்க்கிற மாதிரி பூவை உதிர்க்கிறது செடி’ – பூ உதிர்தல் செடியின் இழப்பு’ என்பது உட்குறிப்பாகத் தோன்றுகிறது. அதனால் GIVING OUT A SMILE என்று தலைப்பிடாமல் SHEDDING SMILE என்று சிரிப்பதையும் சிரிப்பை இழப்பதையும் குறிப்புணர்த்து வதாய் நான் நம்பும் விதத்தில் தலைப்பிட்டேன். (இது தவறாகவும் இருக்கலாம்).
அடுத்துவரும் வரிகளும் எனக்கு முழுக்கப் புரிந்துவிட் டதாகச் சொல்ல முடியாது. முழுவதும் புரியாமலிருக் கும் ஒரு கவிதையை மொழிபெயர்ப் பதில் நிறைய வழுக்குப்பாறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது உண்மையே.
(கல்லூரியில் படிக்கும் காலத்தில் சென்னைக்கு அருகி லுள்ள நகரி மலைப்பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந் தோம். மலைமேல் ஏறிவிட்டோம். இறங்கும்போது பொடிக்கற்கள் கால்களை இடற ஒருவித மரணபயத்தில் கீழிறங்கியது நினைவுக்கு வருகிறது).
//உன் விரல்களால் நீளும் பாம்பின்
ஊர்தலை
குளிர்ச்சியாக கொத்திச் செல்லும்
கழுகின் மூக்கு இங்கு
பாறையில் சுகம் தீட்டுகிறது//
மேற்கண்ட வரிகளில் பாம்பும் கழுகும் எவற்றுக்கு, எந்த மனித உணர்வுக்கு, மனிதச் செயல்பாடுகளுக்குக் குறியீடுகளாகின்றன என்பதை நாம் பொருள்படுத்திக் கொள்ளும் அளவாகவே கவிதையை நம்மால் உள் வாங்க முடியும். (கழுகின் மூக்கு கொத்திச் செல்லும் போது ரணமாய் எரியும். இங்கே குளிர்ச்சியாக கொத்திச் செல்கிறது ).
என்றாலும் கவிதையின் ஒரு வாசிப்பி லேயே அதன் ‘தொனி’ பொதுவாகப் பிடிபட்டு விடும். அதற்கேற்ப வாசக மனம் கவிதையிலுள்ள வார்த்தைக ளுக்கு, வார்த்தைச் சேர்க்கைக்களுக்கு பொருள் ஈட்டிக்கொண்டே (இதுவும் பொருளீட்டல்தானே!) போகும். இந்தவிதமான அணுகல் சமயங்களில் காலைவாரிவிடுவதுமுண்டு!
ஆனால், ஒரு கவிதையை அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை வரிகளை தனித்தனி அளவில் புரிந்து கொண்டு சற்றே கவனமாக மொழிபெயர்த்தால் இந்த வழுக்குப்பாறைகளை ஓரளவு நல்லவிதமாகக் கடந்து விடலாம் என்றொரு நம்பிக்கை.
நம்பிக்கைதானே வாழ்க்கை!
கவிதையின் மற்ற வரிகள், வார்த்தைகளெல்லாம் முற்ற முழுக்க புரிந்துவிட்டதுபோல் கவிஞர் பொன் இளவேனி லிடம் ‘பொங்கு’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்த உதவியாயிருக்கும் என்று கேட்டிருக்கிறேன்! ஒருவேளை அந்த வார்த்தை யிலும் கவிதைக்கான திறவுகோல் ஒளிந்திருக்கலாம்!
[கவிஞரிடமிருந்து பதில் கிடைத்திருக்கிறது.
//பொங்கு என்பது கொங்கு வட்டார சொல் "இறகு"//]
இந்த வட்டாரச் சொல் எனக்கு இதுவரை தெரியாதது. இந்த வார்த்தை எந்த அகராதியிலாவது இந்த அர்த்தத் தில் இடம்பெற்றிருக்கலாம்.
வட்டாரச்சொல்லை ஒரு கவிஞர் தன் கவிதையில் இடம்பெறச்செய்வது இயல்பாகவுமிருக்கலாம். பிரக்ஞா பூர்வமாகவும் இருக்கலாம். மொழி பெயர்ப்பில் வட்டாரச் சொற்களும், பழமொழிகளும்கூட நிறைய வழுக்குப் பாறைகளை மொழிபெயர்ப்பாளரின் வழியில் உருட்டி விட்டுக்கொண்டே யிருப்பவை!
//உன் விரல்களால் நீளும் பாம்பின்
ஊர்தலை
குளிர்ச்சியாக கொத்திச் செல்லும்
கழுகின் மூக்கு இங்கு
பாறையில் சுகம் தீட்டுகிறது//
இந்த வரிகளில் ஒருவித ’இறுக்கம் தளர்தலும் நிறைவு ணர்தலும் புரிபடுகின்றன.
//இன்றைக்கு நீ முட்டாளாகும்
கிழமையை நிறைவு செய்கிறாய்//
முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1. முட்டாளாகும் கிழமை? அன்றாடப் பிழைப்புக்கான மூளைச்சுமையைக் கழற்றி வைத்துவிட்டு ignorance is bliss என்று ‘வெள்ளந்தி’யாக அன்பை, ஓய்வை அனுபவிக்கும் விடுமுறை தினம் பேசப்படுகிறதோ?
அசைந்து மிதக்கும் பொங்கின்
அலாதி எனதின் காட்சி
என்ற வரிகளோடு அடுத்துவரும் வரிகளையும் வாசிக்க, என் பொருள் பெயர்ப்பு ஓரளவு சரிதான் என்று தோன்று கிறது.
[தலையை சொரிந்து கொண்டு
//நாற்காலிக்கு நுழைவு சீட்டு
பெறும் வரிசையில்
கிழிந்த படி இருக்கும்
சட்டையை பற்றிக் கொண்டு
நகரத்துக்குள் நுழையும் கவனம்]//
ஆனால் எதையும் உறுதியாகச் சொல்லமுடியாது. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் முந்தைய வாசிப்பிலிருந்து வேறுபட்ட அர்த்தங்கள் நமக்கு வரவாக வழியுண்டு. மொழியின் அலகுகள் எழுதுவோரிடமும் வாசிப்போரிடமும் இடையறாத பரிவர்த்தனைகளை நடத்தியபடியே.....
வாழ்க்கை குறித்து உறுதியாக எந்தவொரு அறிவு ரையோ, அறவுரையோ, மதிப்பீடோ மாற்றோ தரவிய லாமல் தன் சுமையை நம் தலையிலும் நம் சுமையைத் தன் தலையிலும் சுமந்தபடி CONFUSION-CONFOUNDED STATEஇல் அலைக்கழிந்துகொண்டிருப்பவர்தானே கவிஞர்!
அப்படியெனில், கவிதை என்பது விடுகதையா? கவிதை வாசிப்பு என்பது துப்புத்துலக்கலா?
அப்படியில்லை. அப்படி துப்புத்துலக்குவதன் மூலம் வாழ்க்கை குறித்த தெளிவுகளை எழுதுபவரும் வாசிப்பவருமாய் கண்டறிய உதவுகின்றவையே கவிதைகள் என்றும் சொல்லலாம்.
ஒரு கவிதை, வாசகராக என்னை இத்தனை அலைக் கழிக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளராக இன்னும் எப்படியெல்லாம் என்னை அலைக்கழிக்கும்! பயத்தை மீறிய பேரார்வத்தில் சில கவிதைகளை மொழிபெயர்த் துக் கொண்டிருக்கிறேன். கவிஞர்களிடமான தோழமை யும் மரியாதையும் மொழிபெயர்க்கும்போது அதிகரிக் கிறது.
நான் மொழிபெயர்ப்பு மேதையில்லை. மொழிபெயர்ப்பு ஆர்வலர். அதே சமயம் மொழிபெயர்ப்பாளர் என்ற அளவில் என் பொறுப்பேற்பையும் உணர்ந்திருக்கிறேன். என் மொழிபெயர்ப்பில் என் அதிகவனத்தையும் மீறி சில தவறுகள் நேரலாம். ஆனால், நான் ஒருபோதும் அலட்சி யமாக மொழி பெயர்ப்புப்பணியை மேற்கொள்வதில்லை.
நேற்று கவிஞர் கவிதைக்காரன் இளங்கோவின் கவி தையை மொழி பெயர்த்துப் பதிவேற்றியதில் பின்னூட்ட மிட்டிருக்கும் ஒருவர் மொழிபெயர்ப்பு குறித்து எனக்கு அரிச்சுவடிப்பாடம் எடுத்திருக்கிறார். கருத்துரைப்பது அவர் உரிமை. அதற்கு நான் மறுமொழியளிக்கவில்லை. அளித்தால் அவர் இன்னொன்று சொல்வார். இப்படியே தங்களை மொழிபெயர்ப்பாளரைவிட மேலானவராக (‘ஒரு மணற்துகளை’க்கூட நகர்த்திவைக்காமல்) மிக எளி தாக ‘பீடமேற்றி’க் கொள்ள முயல்பவர்களைை அடையா ளங்கண்டுவிடுவது அப்படியொன்றும் கடினமான காரிய மில்லையே!
இத்தனை வருடங்களில் இப்படி எத்தனையோ பேரைப் பார்த்தாயிற்று. படைப்பாளிகளும் மொழிபெயர்ப்பாளர்க ளும் நுண்ணுணர்வு மிக்கவர்களாக இருப்பது எத்தனைக் கெத்தனை முக்கியமோ அத்தனைக்கத்தனை முக்கியம் அவர்கள் எருமைத்தோலர்களாகவும், முதலைத்தோலர் களாகவும் இருப்பது!
அப்படியெனில், மொழிபெயர்ப்புக்கு விமர்சனம் அவசியமில் லையா? . அவசியமே. எனில் விமர்சகர்களுக்கும் விமர்சனம் செய்வதற்கான குறைந்தபட்சதகுதியும் பொறுப்பேற்பும் அவசியம் தேவை.
(இன்னுமுண்டு)