LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 1, 2026

அப்பால்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அப்பால்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர்.
’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர்.
கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர்.
’கணக்கற்றோரின் கனவுகளையும் கவலைகளையும்
சுமந்து சுமந்து களைத்துப்போயிருப்பார்
கொஞ்சம் களைப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று
கதவடைத்திருக்கும் கோயிலின் முன் நின்று
கன்னத்தில் போட்டுக்கொண்டே வாஞ்சையோடுசொல்லிக்கொள்வார் சிலர்.
’Collective Spirit இன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள கிடைத்த அரிய பெரிய வாய்ப்பு’
என்பார் சிலர்.
’விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான
விடுமுறை’ யென்பார் சிலர்.
’மனிதனின் தான் என்ற அகங்காரம் குறையவும்
திமிர் அடங்கவும்
தீ நுண்மி உதவினால் போதும்’ என்பார் சிலர்.
’உதவுமா’ என்பார் சிலர்;
’போதுமா’ என்பார் சிலர்.
’வீதிகளெல்லாம் எத்தனை சுத்தமாயிருக்கின்றன’
என்பார் சிலர்.
’மீதி நாட்களிலும் இப்படி வைத்திருந்தால் என்ன’
என்று காட்டமாய் விமர்சிப்பார் சிலர்.
முகத்திற்கான 'மாஸ்க்' தெருவின் அந்த முனைக் கடையில் பதினைந்து ரூபாயும்
இந்த முனையில் முப்பது ரூபாயும் விற்பதைப் பார்த்து
'அது அத்தியாவசியப் பொருளா இல்லையாவென
யாரிடம் கேட்க' என்று அலுத்துக்கொள்வார் சிலர்.
’இப்பொழுது உணவுக்கு வழியேயில்லையே’
என்று அழுதிருப்பார் சிலர்.
'இப்போது கிடைக்கும் உணவு எப்போதும் கிடைத்தால் எத்தனை நன்றாயிருக்கும்'
என்று நினைத்துக்கொள்வார் சிலர்.
இன்னும் ஒரு வாரத்தில் கடையைத் திறந்துவிட லாம் என்று நிம்மதிப் பெருமூச்செறிவார் சிலர்.
திறந்தபின் எதிர்கொள்ளவேண்டியவைகளை எண்ணி வருந்தியிருப்பார் சிலர்.
’இந்த கோர நாட்களில் கவிதையெழுதுதல்
சரியா தவறா’ என்று கேள்வியெழுப்புவார் சிலர்;
குற்றவுணர்வுகொள்வார் சிலர்..
’கட்டாயமாக எழுதவேண்டும்’ என்று
உறுதியெடுத்துக்கொள்வார் சிலர்…..
மனிதவோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் தீநுண்மி.....
அவர் மனவோட்டப் புதிர்வட்டப்பாதைகள் என்றேனும் தட்டுப்படுமோ அதற்கு?.

//*கொரோனா காலகட்டக் கவிதை
2020 APRIL 19 - மீள்பதிவு//

நன்றிக்குரியவர்கள்…… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நன்றிக்குரியவர்கள்……

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆளரவமற்று நீண்டுகொண்டிருந்த தெருக்களும் சாலைகளும்
பாலைவனமாய்க் காய்ந்திருக்க
ஆங்காங்கே நிரம்பிவழிந்துகொண்டிருந்த குப்பைத்தொட்டிகளைத்
துழாவிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்களின் கைகளில்
மரகத மாணிக்க வைர வைடூரியங்கள் கிடைக்கச் செய்ய
வக்கில்லாத என் கவிதைகள்
வெளியே வர வெட்கப்பட்டு
மனதின் குரல்வளைக்குள் மூச்சுத்திணறிக் கிடந்தன.
தெருவோரத் திருப்பத்தில் சோர்ந்து அமர்ந்திருந்த பெரியவரிடம் _
பெரிதாக எதையும் தரமுடியாத என்னை மனதாரச் சபித்தவாறே _
தண்ணீர்புட்டியையும் மாரி பிஸ்கெட் பாக்கெட்டையும்
பத்து ரூபாயையும் நீட்டினேன்.
நன்றி கூறி வாங்கிக்கொண்டதோடு
’பத்தாவது வரை படித்திருக்கேம்மா – படிக்க ஏதாவது புத்தகம் தரமுடியுமா?’
என்று கேட்ட மாத்திரத்தில்
என்னை குபேரனாக்கிவிட்ட வள்ளன்மைக்கு
என்னவென்று நன்றி சொல்வது!
//*கொரோனா காலகட்டக் கவிதை
2020, ஏப்ரல் 16 - மீள்பதிவு//

அவரவர் அந்தரங்கம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அந்தரங்கம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
காதல் எப்படி நிகழும்
காதலில் என்ன நிகழுமென்று
காதலிப்பவர்களுக்கும் தெரியும்
காதலைக் காதலிப்பவர்களுக்கும் தெரியும்
இருந்தும்
குறுகுறுவென்று பார்த்தாரா
குறும்புப்பேச்சுகள் பேசினாரா
கட்டியணைத்தாரா
கன்னத்தில் முத்தமிட்டாரா
கட்டுக்கட்டான கடிதங்களில் கலவிசெய்தாரா
என்று கேட்டுக்கொண்டே போன தோழியை
குறுக்கிட்டுத் தடுத்தவள்
”அந்தரங்கம் புனிதமானது” என்றாள்.
காலங்கடந் தொரு நாள்
தன் காதலன்
குறுகுறுவென்று பார்த்ததை
குறும்புப்பேச்சுகள் பேசியதை
கட்டியணைத்தை
கன்னத்தில் முத்தமிட்டதை
கட்டுக்கட்டான கடிதங்களில்
கலவிசெய்ததை
கட்டுரைகளாக
நினைவுக்குறிப்புகளாக
Autofictionகளாக
கிடைத்தவெளிகளிலெல்லாம்
அம்பலமேற்றத் தொடங்கியவளைப் பார்த்து
அப்படியானால் இப்போது என் புனிதம் கெட்டுப்போய்விட்டதாவென
அப்பிராணியாய்க் கேட்கிறது
அந்தரங்கம்.
//2022, APRIL 22 - மீள்பதிவு//

மாறுவேடப்போட்டிகளும் மகோன்னத ஞானவொளிகளும் -‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மாறுவேடப்போட்டிகளும்

மகோன்னத ஞானவொளிகளும்
‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
தூதனுப்பவும் மடலனுப்பவும்
புறாக்களைத் தேடவேண்டிய தேவையில்லை.
மன்னர் மட்டும்தான் இரவில் மாறுவேடமணிந்து
நகர்வலம் வரவேண்டுமா என்ன?
சிசிடிவி இருப்பது தெரிந்தும் ஏடிஎம்களில்
கொள்ளைகள் நடந்தவாறே -
இல்லையா?
கிழக்கே போகும் ரயில்கள் திசைமாறக்கூடும் எனவும்
பாஸஞ்ஜர் ரயில்கள் துரித வண்டிகளாகிவிடக்கூடும் எனவும்
ஞானத்தைப் பெற
போதிமரங்களைத் தேடி அலையவேண்டியதில்லை.
பட்டறிவே போதுமானது.
பாதரசமொரு மகோன்னதக் குறியீடு
என்றாலும்
பூனை கண்ணை மூட இருண்டுவிடும் உலகம்போல்
சுலக்ஷணா சுவர்ணலட்சுமியாவதும்
சுத்தமாய் தன் பாலடையாளம் மாற்றிக்கொள்வதும்
பிறந்த தேதி அதுவேயாகவும்
பிறந்த மாதம் வேறாகவும்
தனக்குத்தானே புதிய பிறப்புச்சான்றிதழ் அளித்துக்கொள்வதும் –
அறிவாளிகளும் முட்டாளாகவும்
அறிவாளிகளை முட்டாளாக்கப் பார்க்கவும்
விரிவெளி அமைத்துத் தருவதற்கு
இருக்கவே இருக்கிறது ஃபேஸ்புக்.
//2022, APRIL 25 - மீள்பதிவு//

இடமுணர்த்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இடமுணர்த்தல்


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ஒவ்வொன்றின் இடமும் அளவும்
ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது
உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம்
அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர்
என்பதை உணர்த்துகிறது.
அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள்
எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க
பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த
மேசைப்பக்கமிருந்த கைப்பிடிகொண்ட நாற்காலி
வீட்டிலிருந்த பாட்டிக்கானது.
சுவற்றில் அலைபேசியை வைக்கக்கூடிய
அகலத்திலிருந்த கைப்பிடிக்கு அருகே
வைக்கப்பட்டிருந்த நாற்காலி
சதா கைப்பேசி வைத்திருக்கவேண்டிய ஸாஃப்ட்வேர் நிறுவன
உயர் அதிகாரிப் பிள்ளைக்கானது.
பளபளவென்றிருந்த இருக்கை அதிகம் சம்பாதிக்கும்
மகளுக்கானது
முதுகு சாயுமிடத்தில் நிறம் மங்கியிருந்த நாற்காலி
மூச்சு வாங்க நடந்துவரும் பெருத்த உடலுக்கானது
பெரிய நாற்காலியும் அடுத்திருக்கும் சிறிய நாற்காலியும்
விவாகரத்தான முப்பத்தியிரண்டு வயதுத் தந்தைக்கும்
அவருடைய ஆறு வயதுப் பிள்ளைக்குமானது.
அத்தனையையும் கவனித்தவாறே அங்கு வந்தவள்
உணவுமேசையைச் சுற்றியிருந்த இருக்கைகளில்
இரண்டு மட்டும்
ஒன்றையொன்று தொட்டபடிநெருக்கமாக இருந்ததைக்
கவனித்தும் கவனிக்காத பாவனையில்
விழுங்கத் தயாராய் எடுத்துவந்திருந்த
வைட்டமின் E மாத்திரை Evion 400இன் நெகிழ்வை
உள்ளங்கையில் உணர்ந்தபடி
தனக்கான இருக்கையை நோக்கிச் சென்றாள்.
//2022, APRIL 25 - மீள்பதிவு//

எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எளிய பொய்சொல்லலும்

எளிதாகப் பொய்சொல்லலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே
சொன்னாள் சிறுமி:
“உண்மையாகவே என் குருவி பொம்மை
பறக்கும் தெரியுமா!”
இருபது வருடங்களாக ‘எழுதி’க் கொண்டிருக்கிறார்
என்று நண்பரை அவையோருக்கு அறிமுகப்படுத்தியவர்
இத்தனை காலமும் ‘இ’யைத்தான்
சரியாக எழுதப் பழகிக்கொண்டிருக்கிறார் என்பதை
பத்திரமாக மறைத்துவிட்டார்.
அவருடைய அந்த நண்பரின் பேரன்
அடிக்கடி கண்ணை விரித்துக் கையை விரித்துக்
கதை சொல்வான்.
கூடைகூடையாய் நட்சத்திரங்களைத்
தனக்கு நிலவு கொட்டியதாக.
அப்போது அந்தக் குழந்தை முகம்
தூய்மையே உருவாய் என்னமாய் மின்னும்!
இருபது வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார்
என்று அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை பொங்க
மேடையேறி ‘மூத்த எழுத்தாளர்’ பதக்கம் பெற்றுக்கொண்ட
அவன் தாத்தா
இத்தனை வருடங்களில் உருவாகாத
தன் படைப்புகளை
மொத்தமாய் அள்ளிக்கொண்டார்
வெட்கங்கெட்ட கற்பனையில்.
தெரிந்தே ஒரு பொய்யை சுலபமாக
மெய்யாக்கிவிட்ட
தமது சாமர்த்தியத்தை மெச்சியபடி
இன்னமும் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள்
சில இலக்கியக் காவலர்கள்.
(*25, APRIL 2025 - மீள்பதிவு)

சாபம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சாபம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சமத்துவக் கனல் பறக்கும் அவருடைய வரிகளைப் படிக்கும்போதெல்லாம்
அவரை யொரு மெய்யான சமூகவுணர்வாளரென்றே எண்ணியிருந்தேன்.
அன்றொரு நாள் அவருடைய கப்பலனைய வீட்டைப்பார்க்க நேர்ந்தது.
அதுபோலவர் மாநிலத்துக்கொரு மாளிகை வைத்திருப்பதாகத் தெரியவந்தது.
காலை நடைப்பயிற்சிக்காகக் காலாற நடந்துசென்றால் சுற்றிவர ஒரு மணிநேரம் பிடிக்கும் அவரது பண்ணைவீட்டை கூகுள் மேப் காண்பித்தது.
அடித்தட்டு மக்களைப் பார்க்கப்போகும்போதெல்லாம் எளிய ஆடையணிந்துவருபவரை யொரு நாள் அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழிக்கும் பெரிய தொழிலதிபரின் வீட்டுத்திருமணத்தில் பட்டும் வைரமுமாய் பளபளத்தொளிர்வதை தொலைக்காட்சி சேனல்களனைத்தும் விதவிதமான கோணங்களில் காட்டி மகிழ்ந்தன.
அதிகாரமும் செல்வ வளமும் அவருக்கு அளித்திருந்த தனிச்சிறப்பான சாதி அந்தஸ்தில்
அடுத்தவரையெல்லாம் கால்கடுக்க நிற்கவைத்தவாறே பேசிக்கொண்டிருப்பவர்
ஒருமையில் அழைத்து ஏசிக்கொண்டிருப்பவர்,
எல்லோரும் இந்நாட்டு மன்னரென்றபோது
சுற்றியிருந்தவர்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களை அங்கேயே இருக்கச்செய்து
அவ்வப்போது சில எலும்புத்துண்டுகளை வீசுவதே
திருத்தமான வேட்டைக்கொரு திட்டவட்டமான
உத்தி யென்பதை
மக்கள் அறியமாட்டார்கள் என்ற மேலான நம்பிக்கையில்
மேடைதோறும் உரத்த குரலில், தொண்டை கரகரக்க
அதி தூய்மையான மினரல் வாட்டரைக் குடித்தபடி
முழங்கிக்கொண்டேயிருப்பவர்களின்
கால்களின் கீழ்
எக்காலமும் நிலநடுக்கம்போலெதுவும்
நேராதோவெனக் கலங்கிநிற்குமென்
பாழ்மனம்
கைநிறைய மண்ணள்ளி யிறைத்தவாறு….
//2024, APRIL 18 - மீள்பதிவு//

பைத்தியம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பைத்தியம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சிலருக்கு காதுகூசும் வசைச்சொல்.
சிலருக்கு அதுவொரு கூர் ஆயுதம்
சிலருக்கு அது எதிராளியை விழச்செய்ய
எறியும் வாழைப்பழத்தோல்.
சிலருக்கு அது தம்மை சரியென்பதாகவும் பிறரை தவறென்பதாகவும் ஸ்தாபிக்கக் கிடைத்த strategy
சிலருக்கு தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள
பிறருக்கு எளிதாகத் தரக்கிடைத்த ஆயத்த அடைமொழி.
சிலருக்கு எதிராளியின் மூளைக்குள் காட்டுத்தீயைப் பற்றவைத்துப்
பெரும் நாசம் விளைவிக்கக் கிடைத்த அப்பிராணி வார்த்தை.
ஒருவருக்கொருவர் இந்த வார்த்தையை எறிந்துவிளையாடி
உறவுகொண்டாடிக்கொண்டிருப்பவர் பெருந்திரளாய்.
வைத்தியம் என்ற சொல்லுக்காகவே
பைத்தியத்தைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களும் நிறையவே.
அவசரத்திற்கு ’த் தி ய ம் இடம்பெறும் மூன்றாவது வார்த்தை ஏதும் கிடைக்கவில்லை.
மூளையைக் கசக்கி யோசித்துப் பார்க்கையில்
நினைவுக்கு வருகிறது.
கோபிகிருஷ்ணனின் ஒரு கதாபாத்திரம்
அவ்வப்போது தன் பேச்சுக்கிடையில்
அனர்த்தமாய் உதிர்த்தவாறிருக்கும்
‘RELAXATION’
(மே 2, 2021 - மீள்பதிவு)

வீழ்ச்சி 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வீழ்ச்சி
'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வானுயரக் குவியலாய் மனக்கிடங்கில்
சொற்களையும் அவற்றின் பல்பொருள்களையும்
சேமித்துவைத்திருக்கும்
கானடர் கவி
நேற்று முளைத்த அரசியல் காளானின்
தோளோடு தோள் சேர்த்து நின்று
தன்னையொரு எழுத்தாளராய்
அடையாளங்காட்டி நிற்கும் படம்
காற்றுவாக்கில் என் கண்ணில் பட்ட கணம்
கிட்டத்தட்ட மரணம்.
//2 May 2021 - மீள்பதிவு//

புத்தகங்கள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புத்தகங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



ஒரு புத்தகத்திடம் நம் பிரியத்தை எப்படிச் சொல்வது?
மயிலிறகைப் போல் மிருதுவாய்த் தடவிக்கொடுக்கலாம்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறு முத்தம் தரலாம்.
படுக்கையில் அருகில் வைத்துக்கொண்டு தூங்கலாம்.
போகுமிடமெல்லாம் அதையொரு குழந்தைபோல் கையிலேந்திக்கொண்டிருக்கலாம்.....
புரியவைக்கமுடியுமோ புத்தகத்திடம் நம் அன்பை?
புத்தகம் உயிருள்ளதா அற்றதா?
தனக்குள் காலத்தையும் காலாதீதத்தையும் ஒருங்கே உள்ளடக்கியிருக்கும்
புத்தகத்தின் உயிர் ஒன்றல்ல, பலப்பல
என்றொரு அசரீரி ஒலிப்பது என்னுள்ளிருந்தா புத்தகத்திலிருந்தா?
வினாக்களுக்கு பதில்களையும் பதில்வினாக்களையும்
வரிவரியாய்ப் பொதிந்துதந்தவாறு _
”விலைகொடுத்துவாங்கி யென்னைப் படி
வாங்கமுடியாதவர்களுக்குப் படிக்கக்கொடு
வெறும் தாள்களிலிருந்து என்னை படைப்புநிலைக்கு உயர்த்திய
கர்த்தாவைக் கொண்டாடு.
என்னைப் படித்து சிறிதேனும் உன் மனது
திறந்துகொண்டால் போதும்
வசமாகிவிடும் உன் பிரியமெல்லாம் எனக்கு”,
என்றபடி சிரிக்கும் புத்தகத்தின்
இல்லாத கன்னத்தில் விழும் குழியை
என்றும்போல் இன்றும் அதிசயமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் வாசக மனம்
தீராக்காதலில் வேர்விட்டபடி….
//2021 - APRIL 22 - மீள்பதிவு//