LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, November 2, 2025

பாவமும் பாவமன்னிப்பும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பாவமும் பாவமன்னிப்பும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(* ’தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)


.................................................................................................................................
குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது?
நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால்
கண்களைத் துடைத்துவிடக்கூடும்….
கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள்
சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும்.
மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து
வாய்நிறைய சிரிக்கக்கூடும்….
நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில் விழுந்தால்
தவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி
தாங்கிப் பிடிக்கத் தாவிவரக்கூடும்…..
அதுவும் _
அடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _
அவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது?

உயிர்வலி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

உயிர்வலி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



அபயம் கேட்பதாய் தலைக்குமேலே உயர்ந்திருக்கின்றன
அந்தக் குட்டிக்கைகள்;
பூமிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே
வாழ்வின் அடியாழ அந்தகார இருளைப்
பார்க்க நேர்ந்துவிட்ட
அந்தப் பிஞ்சுமனதை என்ன சொல்லித் தேற்றுவது?
எப்படி மன்னிப்புக் கேட்பது?
அந்தப் பூவடம்பில் இன்னமும் தொக்கிநிற்கும்(?)
வாழ்வுச்சூட்டை எப்படிக் காப்பாற்றுவது?
ஒரு குழந்தையில் தெரியும் பல குழந்தைகளின்
ஒடுங்கிய உடலங்களை
தினந்தினம் எதிர்கொண்டு பதறும்
மனம்
நொறுங்கிச் சிதறும்.


பிறவி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிறவி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக்
காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம்.
There is many a slip between the cup and the lip என்று
சற்றே பெரிய வகுப்பின் பாடப்புத்தகம் போன்ற ஒன்றிலிருந்து
எழுத்துக்கூட்டி உரக்க வாசிக்கும் சிறுமி
ஓடிச்சென்று ஒரு கோப்பை நீரை எடுத்துவருகிறாள்.
பின், தன் பையிலிருந்த திறப்புகளுக்குள் கையை நுழைத்து பலப்பலவாறாய்த் துழாவித் தேடியெடுக்கிறாள் ஸ்கேலை.
ஒரு கையில் கோப்பையைப் பிடித்தபடி மறுகையால் மேற்சொன்ன தொலைவை அளக்கத்தொடங்குகிறாள்.
நீர்க்கோப்பையின் கனத்தில் கை நலுங்குகிறது.
மறுகையிலுள்ள ஸ்கேல் மிக நெருங்கிவரும் போதெல்லாம்
அரண்டுபோய் தம்மையுமறியாமல் மூடிக்கொள்கின்றன விழிகள்.
அதன் அச்சத்தை அதிகரிப்பதாய்,
ஒருமுறை ஸ்கேலின் மேற்பகுதி உதடுக்கு மேல் ஏறி
விழிமீதூர்ந்து புருவத்திலேறிவிடுகிறது.
ரணமாகிச் சிவந்த கண்களின் வலிநீக்க முன்வருவார் வரிசை யென்று என்றாவதிருந்திருக்கிறதா?
ஆனாலும் திரும்பத்திரும்ப முயன்றவண்ணமிருக்கிறாள் சிறுமி.
ஒவ்வொரு முறையும்
அவளுடைய இன்னொரு கையிலிருக்கும் கோப்பையிலிருந்து
தரையில் சிந்திக்கொண்டிருக்கிறது நீர்.

அன்பின் விலை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அன்பின் விலை

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
யாருமே சொல்லாதவொரு காரோப்ளேன் கதை சொன்னான் –
பேரானந்தமாயிருந்தது குழந்தைக்கு.
சீராட்ட அதன் கையில் சில
புலிப்பஞ்சவர்ணக்கிளி யளித்தான்.
கலகலவென்று கைகொட்டிச் சிரித்தது பிள்ளை.
விண்ணோக்கிப் பாயுமொரு ஆறு பாரு
என்று காட்டினான்.
கண்விரியக் கண்டுகளித்தாள் குட்டிமனுஷி.
குழந்தைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது.
யார் தனக்கு சாக்லேட்டுகள் தந்தாலும்
அதில் அதிகம் அவனுக்கென எடுத்துவைத்து
குறைவாய் தன் வாயில் போட்டுக்கொண்டது.
அவனுடைய தொண்டைக்குள் இறங்கும் இனிப்புச் சுவை
குழந்தை வாயில் அமுதமாய் ருசித்தது.
அவன் ஒரு புகைப்படக்காரன்.
புதுப்புது கதை சொல்லி பிள்ளைக்கு சிநேகக்காரனானான்.
படிப்படியே பிள்ளையின் உலகமே அவனாகிப் போனதை
அவன் அறிவானோ, அறியானோ…..
’உயிர்ப்பின் சாரம்’ என்ற தலைப்பில்
அகில உலக புகைப்படப் போட்டிக்கு அனுப்ப வாகாய்
குழந்தையைப் பலகோணங்களில் படம்பிடித்துக்கொண்டான்.
வந்த வேலை முடிந்தபின் விடைபெறவேண்டியதுதானே.
குழந்தையை ஒருமுறை தூக்கிக் கொஞ்சி
’போய்வருகிறேன், சாக்லேட் வாங்கிவருவேன்.’ என்றான்.
’சாக்லேட் வேண்டாம் -நீ சீக்கிரம்வந்தால் போதும்’ என்று
உதடு பிதுங்கச் சொல்லிக் கையசைத்தது குழந்தை.
முதற்பரிசு கிடைத்தபின் ஒருமுறை திரும்பிவந்தான்
வேறு பல குழந்தைகளோடு சேர்ந்து நின்று
ஸெல்ஃபி எடுக்கும்போது
இந்தக் குழந்தையையும் அழைத்தான்.
பத்தோடு பதினொன்றாகப் பிடிக்காமல்
அழுதபடி மறுத்துவிட்ட குழந்தை
தன்னோடு மட்டுமே பேசும் கரடி பொம்மைக்குக் கதைசொல்ல
மரநிழல் தேடிச் சென்றது.
அடுத்த புகைப்படப்போட்டிக்குத் தயாராகச் சென்றுகொண்டிருக்கும்
அவன் தோள்பையில் கனத்துக்கொண்டிருக்கின்றன
காட்பரீஸ் சாக்லெட்டுகள்.

காற்றின் கேள்வி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 காற்றின் கேள்வி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
முக்காலங்களின் நுண்துணுக்குகளைக் கைவசப்படுத்தி
முடியா சமன்களின் கலைடாஸ்கோப்கோலங்களாய் கவிதையில்
நேற்று முன் தினம் கூடத் தந்துகொண்டிருந்தவரை -
நாளைக்கு அன்பளிக்கத் தருவதற்காக இன்றிரவும் எழுதிக்கொண்டிருப்பவரை -
காணாமல்போய்விட்ட கவியென்றதோடு நில்லாமல்
காலாவதியாகிவிட்ட கவியென்று
சக - கவியொருவர்
கையடித்துச் சத்தியம் செய்து
துண்டுபோட்டுத் தாண்ட
தன்பாட்டுக்கு
உய்யென்று சுழன்றடித்து வீசிக்கொண்டிருக்கும்
நித்தியக் காற்று
மிக அன்பாய் கேட்டது:
யாரைச் சொல்கிறாய் – என்னையா உன்னையா?

கடை எடை கவிதை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கடை எடை கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு புகைப்படத்தில் புத்தகங்களைப்
பறவைகளாகப்
பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்.
இன்னொரு புகைப்படத்தில் புத்தகங்களைப்
புதையலாகத்
தோண்டியெடுத்து அள்ளிவருகிறார்.
ஒரு காணொளியில் நூல்களுக்கு நடுவில்
கால்மேல் காலிட்டு அமர்ந்தபடி அவற்றிலொன்றை வருடித்தந்தவண்ணமிருக்கிறார்.
வேறொன்றில் ஒரு புத்தகத்தில்
காதலனுக்குரியதும் குழந்தைக்குரியதுமான
குத்துமதிப்பான மொத்த முத்தத்தை
பதித்துக்கொண்டிருக்கிறார்.
சற்றே மங்கலாய்த் தெரியும் காணொளியில்
அருள்பாலிக்கும் புன்னகை யொன்றால்
தன் வதனத்தைப் பொலியச்செய்தவாறு
குற்றேவல் புரியக் காத்திருப்பதா யொரு புத்தகத்தை
அத்தனை பிரியத்துடன் அணைத்துக்கொண்டிருக்கிறார்.
இன்னொரு காணொளியில் நூல்களைப்
பால்புட்டியிலிட்டு
உறிஞ்சியவாறிருக்கிறார்.
எல்லாப் புகைப்படங்களிலும் எல்லாக்
காணொளிகளிலும்
எல்லோரும் புடைசூழத் தன்னைத்தான் கடைவிரித்தபடியிருக்கு மவரை
கலவரத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது
கவிதை

பத்தரைமாற்று முத்திரைக்கவி - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பத்தரைமாற்று முத்திரைக்கவி

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அடிக்கடி காணக்கிடைக்கின்றன அவருடைய புகைப்படங்கள்
அங்கிங்கெனாதபடி.
அனைத்திலும் யாரோவொரு பிரமுகருடன் தனக்கிருக்கும்
பரிச்சயத்தை நெருக்கத்தைப் பறைசாற்றுவதாய்
புன்னகைத்தவாறு.
நேற்றைய இன்றைய நாளைய அரசியல்வாதிகள்,
நடிகர்கள்;
நியூஜிலாந்து அயர்லாந்து மெக்ஸிகோ மாலத்தீவு என
ஒன்று பாக்கியில்லாமல்
அயல்நாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகள்….
வழுவழு பக்கங்களாலேயே உயர்தரமானதாக்கப்பட்ட
அறுவை இலக்கிய ஆங்கில இதழ்;
முடிவற்று வெறுப்புமிழ்வதே புரட்சியென
உருவேற்றிக்கொண்டிருக்கும்
மாதமொருமுறை இதழ் _
எல்லாவற்றிலும் அவர்
சிலவற்றில் கோபமாய்
சிலவற்றில் சோகமாய்
சிலவற்றில் சாந்தமாய்
சிலவற்றில் ஆவேசமாய்
சிலவற்றில்
தலையை சிலுப்பிக்கொண்டு
சிலவற்றில்
(அட்டை)மலையை உலுக்கிக்கொண்டு
பத்தரைமாற்று முத்திரைக்கவியின் படங்கள்
எத்தனையெத்தனையோ……
எதிலுமேயில்லை
சத்தமில்லாமல் மொத்தமாய்
அவரைப் பிரிந்துவிட்ட கவிதை.

கைவீசம்மா கைவீசு….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கைவீசம்மா கைவீசு…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அளவைகள் ஒன்றுதாமென்றாலும்
அவற்றிலுள்ள பண்டங்கள் வேறு வேறு;
வாங்குபவர்களும் விற்பவர்களும் வேறு வேறு....
வாங்கிச்செல்பவர்கள் நுகர்வோர் என்றாலும்
அவர்களே பயனாளிகள் என்று உறுதியாகச் சொல்லவியலாது.
பணம்கொடுத்து வாங்குபவர்களா
பயன்படுத்துபவர்களா _
யார் நுகர்வோர்?
பணம்கொடுத்து வாங்கினால் தானா?
பண்டமாற்றுசெய்தால்…?
எது எதன் மாற்று?
எதன் மாற்று காற்று?
மனதின் விலைநிர்ணயம் பணத்தின் கையிலா?
பணத்தின் விலைமதிப்பு மனதின் கையிலா?
கையுண்டோ மனதிற்கு?
கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு….
வீசும் கை வீசித் தளர
வீதியோரங்களில் மூடத்தொடங்கும் கடைகள்.

துளி பிரளயம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 துளி பிரளயம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

திடீர் திடீரெனத் தளும்பும் மனம்...
சில சமயம் லோட்டா நீராய்
சில சமயம் வாளி நீராய்
சில சமயம் தண்ணீர் லாரியாய்
சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய்
சில சமயம் சமுத்திரமாய்….
ஐஸ்கட்டிக்கடலாய் உறைந்திருக்கும்
நேரமெல்லாம்
அடியாழத்தில் தளும்பக் காத்திருக்கும்
லாவா....

நடுவில் பல பக்கங்கள் கத்தரிக்கப்பட்டு… ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நடுவில் பல பக்கங்கள் கத்தரிக்கப்பட்டு…

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

பாரிய பெருநிலத்தை
வாரிசுரிமையாய் வம்சச் சொத்தாய்
அரியணை யேறி யரசாண்டு துவம்சம் செய்த
கொடுங்கோலாட்சியாளர்களின் அநியாய
அக்கிரம
அநீதிகள் ஆக்கிரமிப்புகளையெல்லாம்
விரும்பி மறந்துவிடுபவர்கள் _
திரும்பத் திரும்ப மன்னித்துவிடுபவர்கள் _
வெகுசுலபமாய் கடந்துசெல்பவர்கள் _
வேகவேகமாய் தரைவிரிப்பின் கீழ்
மறைத்துவிடுபவர்கள் _
ஒரு புள்ளியிலிருந்து பார்க்கத்
தொடங்குகிறார்கள்
சகமனிதர்கள் அனுபவிக்கும்
சித்திரவதைகளை.
அதற்குமுன் அனுபவித்த
சாட்டையடிகளின்
ரத்தக்கசிவுகள் ரணகாயங்களின்
தழும்புகளைப் பார்க்க மறுக்கும் இவர்கள்
அவற்றைக் கணக்கிலெடுத்துக்
கொள்வதில்லை.
சென்ற பல வருடங்களில் சமத்துவம் பேசித்
தம் சொத்துமதிப்பைப்
பன்மடங்காகப் பெருக்கிக்கொண்டவர்களை சகமனிதநேயவாதிகளாகக்கூடப்
பார்க்கச் சித்தமாயிருக்கு
மிந்தச் சிந்தனையாளர்கள்
குறிப்பிட்ட ஒரு பகலிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்
தம் பிரக்ஞையை.
அதுவே முதல் சூரியோதயமென
முழங்குகிறார்கள்.
இத்தனை காலம் சமத்துவம் போதித்த
வர்களதைச்சத்தியமாய்ப் பேசியிருந்தால்
இன்று அத்தனை மக்களுக்கும்
கிடைத்திருக்கும்
அடிப்படை வாழ்வுரிமைகள்.
இது புரியாதவர்களல்ல இவர்கள்;
பார்க்கமறுக்கும் அறிவுசாலிகளின்
விழிகளுக்கு அப்பால்
விரிந்துகிடக்கிறது பேருண்மை
வானம்போல்.
மொத்தமா யொரு தலையில் பழியைப் போட்டுவிடுவதே
பத்தரைமாற்று அறிவுசாலியாக உடனடி வழியென்
றான பின்
சத்தமாய் இன்னும் சத்தமாய்
இன்னுமின்னும் சத்தமாய்ப்
போட்டுத் தாக்கி
குழிபறித்துப் புதைப்பதற்கென்றே
கிழிபடும் வரலாறு.All reactions: