LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 30, 2021

வாசகப்பிரதியின் வால் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாசகப்பிரதியின் வால்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தன்னை நேர்த்தியாக எழுதியமைக்காக மகிழ்ந்த கவிதை
தன் அன்பைக் கவிஞரிடம் தெரிவிக்க விரும்பியது.
கவிதையில் இடம்பெற்றிருந்த வால் என்ற சொல்லுக்கு உயிர்கொடுத்து
அதை ஒருநாள் மட்டும் பயன்படுத்தலாம் என்று சொல்லி கவிஞர்க்கு அளித்தது.
கவிதையை இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாமே என்றுதான் எப்பொழுதும்போலத் தோன்றியது கவிஞருக்கு.
என்றாலும் நன்றாயிருக்கிறது என்று கவிதையே பரிசளித்ததில் நிறைவுணர்ந்தது மனம்.
அதேசமயம் இழப்பையும்.
தன்னிலிருந்து உருவான கவிதை
இனி தனக்கு உரிமையில்லாததாய்…..
திறந்தமுனைக் கவிதையெழுதும்போதுகூட
இத்தனை குழம்பியதில்லை –
கையில் தரப்பட்ட வாலை அதன் வழக்கமான இடத்தில்தான் பொருத்திக்கொள்ளவேண்டுமா
அல்லது வேறு எங்கு வேண்டுமானாலுமா
என்று திணறியது மனம்.
கண்ணுக்குத் தெரியாத கடவுள்போல்
அதைத் தன் பின்பக்கம் பதித்துக்கொள்ளப் பிடிக்கவில்லை.
நீளம் மிகக் குறைவாயிருந்த வால் நாய்க்குட்டியினுடையதா
யானையினுடையதா
அல்லது வேறு ஏதாவதா
என்பதே தெளிவாகவில்லை.
அணிலுடையதல்ல என்றே தோன்றியது.
ஆடிமுன் நின்று அந்த வாலை கை கால் இடுப்பு என்று பொருத்திப் பார்த்துத் திருப்தியுறாமல்
ஒருவேளை கவிதையில் ஏதேனும் துப்பு கிடைக்குமோ என்று தன் கவிதையைத் தானே யொரு வாசகராய்ப் படித்தபோது
’இறுக மூடியிருந்த கரிய பெரிய விழிகளுக்குள் ளாகக்கண்ட கொடுங் கனாவால்’
என்று ஆரம்பித்த 16 வரிக்கவிதையின் இறுதிவரியில்
‘பேனாவால் எழுதப்பட்டவையெல்லாம் பேரிலக்கியமாகிடாது’ என்பது
பே நா வால் என்று அச்சாகியிருப்பது புலப்பட்டது.


No comments:

Post a Comment