LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 31, 2021

குடிபெயர்தல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குடிபெயர்தல்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

வீடு ஆகுபெயரெனில் யாருக்கு?

எனக்கா உனக்கா அவருக்கா இவருக்கா

கற்களாலானவை வீடுகள் என்றே கணக்கில் கொண்டால்

உயிரற்றவைகளிடம் அன்புவைக்கும் அவஸ்தை மிச்சம்

உயிரின் உயிர் எங்கு நிலைகொண்டிருக்கிறது

மனதிலா?

ஒரு வீட்டிலும் என் மனதை விட்டுவைத்து வந்ததில்லை.

என் வீடு நான் தான்

என்றால் நானும் தானும் ஒன்றேயா ஒன்று போலா வெவ்வேறா

பாராளப்பிறந்தவர்க்கெல்லாம் இருப்பது

ஒரேயொரு பார் தானா

இன்றெனக்குக் கேட்பது

நேற்றுவரை இல்லாத இருமலா

இருந்தும் எனக்குக் கேட்காததா?

வரளும் நெஞ்சங்களெல்லாம் இருமிக்கொண்டிருக்கின்றனவா?

சரியாகியிருக்கும் சில

சவப்பெட்டிகளுக்குள்ளும்

எரிந்த சாம்பலிலும்

திருவாயற்றமொழியாகியிருக்கும் சில

எல்லோருக்கும் சமயங்களில் நன்றி சொல்லத் தோன்றுவது போலவே

இந்த வீட்டுக்கும் சொல்லத் தோன்றுகிறது

கண்ணீரேதும் திரளாதபோதும்.

கொரோனா காலகட்டத்தை இதுவரை நான்

பாதுகாப்பாகக் கடந்ததற்கு

இந்த வீடும் ஏதோ ஒருவகையில் உதவியிருக்கிறது.

ஏதொரு வீதியை தெருவை சந்துபொந்தைக் கடக்கும்போதும்

பாதிப்பேதும் அடைந்ததில்லை

எதிலிருந்தும் விலகியே நிற்கும் மனம்

ஒரு காலத்தில் பிரம்மப்ப்ரயத்தனமாகக்

கற்றது கசடற

இன்று இரண்டாம்தோலாகிவிட்டதொரு

வரம்போலும் சாபம்போலும்.

புதிதாய் குடிபுகும் வீட்டில்

காத்துக்கொண்டிருக்கின்றன கேள்விகள்.

வழக்கம்போல் குரல்வளையிலிருந்து தெறித்துவிழும் சில;

கண்களில் மின்னித் தெரியும் சில.

பெரும்பாலானவர்களிடமோ ஒருசிலரிடமோ

பாஸ் மார்க் வாங்கக்கூட நிறைய பாவனைகளைக் கைக்கொள்ளவேண்டியிருக்கும்.

ICU வார்டில் கணவனின் இருதயப்பகுதியெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் நுண்குழாய்கள் படர்ந்திருக்க

கீழே காத்திருப்பு அறையில் தூக்கம் தொலைத்து அமர்ந்திருப்பவளின்

சொந்த வீடு இந்நேரம் அவள் சொந்தவீடுதானா?

நாளை நல்லதாக விடியட்டும் எல்லோருக்கும் என்றொரு பிரார்த்தனையில் மனம் தன்னிச்சையாகக் கைகூப்பிக் கண்மூடி ஒன்றுகிறது.

நகுலனிடம் சொல்லவேண்டும்போலிருக்கிறது _

திரும்பிப்பார்க்கையில் இடம் காட்சியளிக்கிறது

காலமாக.

No comments:

Post a Comment