LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள். Show all posts
Showing posts with label ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள். Show all posts

Thursday, June 9, 2022

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எத்தனையெத்தனை அவலங்கள்
அலைச்சல்கள்
அஞ்ஞாதவாசங்கள்
மதிப்பழிப்புகள் மரணங்கள்
மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க
மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல்
கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து
நடந்துவந்த திரௌபதி
ஆங்கே யொரு கருங்கல்லில்
சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த
கோட்டோவியத்தில்
தன் கைகள் அண்ணாந்து
அபயம் தேடி உயர்ந்திருக்க
துகில் மறைக்காத மார்பகங்கள்
தொங்கிக்கொண்டிருக்கக் கண்டாள்
நிலைகுலைந்து குனிந்து பார்த்துக்கொண்டாள்
மார்பை மறைத்திருந்தது துகில்.
சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அது அரசவையில்லை.
கீழே சிதறிக்கிடந்த மனித உடலங்களை
யானை குதிரைச் சடலங்களைப்
பார்த்தாள்.
கண்ணீர் வழியத் தொடங்கியது.
தம் மக்கள் யார் மானத்தைக் காப்பாற்ற
உயிர்த்தியாகம் செய்தனரோ
அந்த மானம் அதோ கப்பலேற்றப்
பட்டிருக்கிறது.
தீட்டப்பட்டிருந்த கோடுகளின் வளைவும்
நெளிவும்
தீர்க்கமான நீட்டலும்
ஓவியனின் கைநேர்த்திக்குக் கட்டியங்கூறின.
ஆனாலுமென்ன
அவற்றில் உள்ளார்ந்து உணரக்கிடைத்த ஆணாதிக்கவெறி்
அவள் ஆன்மாவைப் பிளந்து பெருக்கிய வலி
யோலம் எட்டா வெளியில்
அதேபோல்
இன்னும் சில பாரிய ஓவியங்களுக்காகத்
தயாராகிக்கொண்டிருக்கும்
தூரிகைகள்.

பறவையாதல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பறவையாதல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



பறக்கக் கற்றுத்தரும் தாய்ப்பறவை
அறிவதில்லை
தன் பாப்பா எப்பொழுது
எத்தனை தொலைவாகப்
பறந்துவிடுமென்று.
பாப்பாக்களில் அதற்கு தனிப்பிரியம்
எதன் மீதாவது இருக்குமா
தந்தைப்பறவை சொல்லித்தந்ததே
யில்லையோ – தெரியவில்லை
பறவைகளில் தந்தை-தாயைக்
கண்டுபிடிப்பது
சுலபமா கடினமா
குட்டிப்பறவை தன்னால் பறக்கமுடியும்
என்று அறியுமக் கணம்
ராஜாளியாக உணருமோ
சிட்டுக்குருவியும் ஃபீனிக்ஸ் பறவைதானே
என்றாலதுவுமொரு விதத்தில் சரிதானே
கவிதையெழுதாவிட்டாலும் காயம்பட்டால்
பறவைக்கும் வலிக்குமில்லையா
வல்லூறுக்கு வானம்பாடியின் கானம்
என்னவாகும் யாருக்குத் தெரியும்
பறவை முதுகிலேறிப் பயணம்
செய்ய விழைதல்
பேதமையா பெருங்கனவா
நாமே பறவையென பாவித்தல்
பரவசமா பிறழ்மன அவசமா
உறவொரு பறவை
சிறகுகளடர்ந்து இறந்த புழுக்களைக்
கொத்தித் தின்றவாறிருக்கும்
நினைவொரு பறவை
படைத்த கவிதையுமொரு பறவை
படிக்கக் கிடைத்து
விடையறிய முடிந்த கவிதையுமொரு
பறவையாக……


Tuesday, January 25, 2022

பாடகனின் அநாதிகாலம்! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாடகனின் அநாதிகாலம்!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)

எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே

என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்

மேடையில்.....

காதல் என்று அவன் பாடுவது எனக்குக்

காலம் என்பதாய் குழம்புகிறது.

அவனை மாற்றியிருக்குமோ காதல்?

ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது?

எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில்

மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.

சமயங்களில் சுருதி பிசகுவதாய்த் தோன்றுகிறது.

குரலில் கரகரப்பு கூடுகிறது.

ஆனாலும் அவனுடைய ஆனந்தத் துள்ளலில்

கரடிக்குட்டியும் முயலும் சின்ன பப்பியும்

செல்லப் பாப்பாவும் வரக் காண்பது

சொல்லிலடங்கா சூட்சும தரிசனமாய்…!

இசையின் உன்மத்தநிலையில்

சூரிய சந்திரராய் சுடர்விடும் அந்த விழிகள்

அனந்தகோடிமுறை அருள்பாலிக்கின்றன!

'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே'

என்று அழைக்கும் அந்தக் குரல்

கண்ணனுடையதாக _

கிறங்கிக்கிடக்கும் கோபியர் கூட்டம்

பாலினங் கடந்து!

வியர்வையில் நனைந்த முதுகுப்புறச் சட்டையும்

முன்நெற்றி முடிச்சுருளுமாய்

அந்தப் பாடகனின் குரல்

அநாதி காலத்திலிருந்து கிளம்பி

அரங்கில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.

மேடையிலிருந்த வாத்தியக்காரர்களெல்லாம்

அவனுடைய பிரதிபிம்பங்களாய்….

அல்லது, அந்தப் பாடகன் அவர்களுடைய

விரல்களனைத்தின் ஒற்றைக்குரலாய்....

பாடலை எழுதிய, இசையமைத்த

கைகளும் மனங்களும்

தனி அடையாளம் இழந்து அந்தக் குரலில்

இரண்டறக் கலந்து

ஈரம் நிறைக்கும் இசையில்

அரங்கமெங்கும் க்வாண்ட்டம் அணுக்களாய்

விரவிய ரசிகர்களின்

காலம் இல்லாமலாகியது.

அன்பின் குறுக்குவழி அல்லது சுற்றுப்பாதையின்

அரூப ஓவியங்களைத் தீட்டிமுடித்து

அவன் விடைபெற்றுக்கொள்ளும்போது

அரங்கிலுள்ளோர் எழுந்து நின்று கைதட்டி

அவனை அத்தனை அன்போடு

வழியனுப்பிவைக்கிறார்கள்.

நான்கு சுவர்களுக்குள் ஒரு பிரபஞ்சவெளியை

உருவாக்கித்தந்தவனுக்கு

என்னவென்று நன்றிசொல்வது என்று தெரியாமல்

நீர் தளும்பி வழிகிறது கண்களிலிருந்து.