LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

மெகாத்தொடரெனும் மகாத்துயர். - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மெகாத்தொடரெனும் மகாத்துயர்.

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு
நகைவாங்கி முடித்திருந்தார்கள்.
இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில்
அந்த இருபதுகோடி பெறுமானமுள்ள நகைகள் களவாடப்பட்டு விட்டன.
முதல் தொலைக்காட்சிச் சேனலிலிருந்து ஆறுபேர் ஆளுக் கொரு தீப்பந்தமேந்திக்கொண்டு
தெருத்தெருவாக திருடர்களைத் தேடிக்கொண்டு மாட்டுவண்டியில் சுற்றினார்கள்.
பெயரறியாத் திருடர்களின் பெயர்களை உரக்கப் பாடிக்கொண்டே சென்ற அவர்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தது நிலவு.
ஒரு திருப்பத்தில் திடீரென எதிர்ப்பட்ட திருடர்களில் ஒருவனை அவனுடைய கூட்டாளிகளுக்கே அடையாளம் தெரியவில்லை.
அரைநிமிடத்திற்கு முன்பு ‘இனி இவருக்கு பதில் இவர்
இந்தத் திருடர் பாத்திரத்தில் வருவார்’ என்று சின்னத்திரை யில் சிந்நேரம் ஓடிக்கொண்டிருந்த அறிவிப்பை
அவர் கவனிக்கத்தவறிவிட்டார்.
நடுத்தெருவிலமர்ந்தபடி அவர்கள் கோடிகளைப் பரப்பி பங்குபோட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
மாட்டுவண்டியில் அவர்களைத் தேடியபடியே வந்தவர்கள்
நடுவீதியில் இறைந்துகிடந்த பணத்தைப் பார்க்காமல் அந்தப்புறமாய் ஒதுங்கிச்சென்றார்கள்.
பார்த்துவிட்டால் பின் மெகாத்தொடரை முடித்துவிடநேருமே....
முடிந்தால் இன்னும் நாலு வருடங்களுக்கோ நாற்பது வருடங்களுக்கோ (நான் இருக்கமாட்டேன் என்பதால் நானூறு வருடங்களுக்கோ என்று சொல்வது நியாயமாகாது!)
நீளவேண்டியவையல்லவா மெகாத்தொடர்கள்?
ஆற அமர கோடிகளை எண்ணிமுடித்து நிமிர்ந்தவர்களுக்கு அத்தையம்மா
(அத்தை என்பதுதான் முக்கியமே தவிர யாருடைய என்பதல்ல. அத்தை ஒரு குறியீடு, அடைமொழி, மெகாத்தொடர்களுக்கான தனி அகராதி; வாதி; பிரதிவாதி இன்னுமுள மீதி….)
அன்போடு தங்க லோட்டாக்களில்
தேனீர் கொண்டுவருகிறாள்.
ஆசைதீரக் குடிக்கும் திருடர்கள் அரையுயிராய்
மயங்கிச் சாய்கிறார்கள்.
சாவதற்கு முன் கோடிகளைத் தொலைத்த அந்தக் குடும்பத் தைத் தேடி தங்கள் சேனலிலிருந்து அந்த இன்னொரு சேனலுக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
பணத்தை ஒப்படைத்து
‘நல்லபடியாகத் திருமணத்தை முடியுங்கள். நாங்கள் நல்லவர்களாகிவிட்டோம் – இதோ வெறும் கைகளோடு விடைபெற்றுக்கொள்கிறோம் என்று ஒரே குரலில் நாத்தழுதழுக்கக் கண்கலங்கக் கூறுகிறார்கள்.
அதிலொருவன் மட்டும் அடக்கமாட்டாமல் கேட்டுவிடு கிறான். ”அதுசரி, அடித்தட்டு வர்க்கக் குடும்பமென்று அடிக்கடி அழுதவாறே அடிக்கோடிட்டுக் கூறிக்கொள்ளும் உங்களுக்கு இத்தனை கோடிகள் எப்படிக் கிடைத்தன?”
அதைக் கேட்ட அந்தக் குடும்பம்
அத்தை கொடுத்த விஷம் சரியாக வேலை செய்யவில்லை யென
மருந்துக் கம்பெனி மீது நஷ்ட ஈடு வழக்குபோட்டதில் இன்னும் சில கோடிகள் அவர்களுக்குக் கிடைத்ததாகவும் அதைக்கொண்டு அவர்கள் தங்கள் மெகாத்தொடரின் இரண்டாம் பகுதியை ஒளிபரப்பப்போவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment