LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 3, 2025

ஒரு குரல்வளையின் மனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு குரல்வளையின் மனம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மனதைக் கொலைசெய்துகொண்டேயிருக்கப்
பிடித்தவர்
அதற்கான காரணங்களைக்
கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கிறார்.
கிள்ளலுக்கும் குரல்வளையை நெரித்தலுக்கும்
உள்ள வித்தியாசம்
நம் பார்வையில் தானே தவிர
உண்மையில் இரண்டும் ஒன்றே என்று
அத்தனை ஆணித்தரமாக வாதங்களை
முன்வைக்கிறார்.
அழகைப் போலவே வலியின் அளவும்
அவரவருக்கானது என்று
அவர் சொல்லும்போது
நெரிக்கப்பட்ட குரல்வளையிலிருந்து
எழும் பலவீனமான சிரிப்பு
அழுகையைவிட ஆயிரம் மடங்கு
அவலமாய்.
ஒரு குரல்வளையை அத்தனை சுலபமாக
நெரிக்கவேண்டிய அவசியமென்ன
என்று கேட்டவரிடம்
நான் கேட்டபோதெல்லாம் பாடவில்லை
யென்பதற்காக என்றவர் _
என்னை இப்படி நெரிக்கவைத்து
விட்டாயே என்று
நொடியில் பாதிக்கப்பட்டவராகி
துடித்துக்கொண்டிருந்த குரல்வளையை
அன்போடு கையில் தாங்கி
யழைத்துக்கொண்டு வந்து
குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதைப்
பார்த்து _
தெறித்தங்கே விழுந்திருந்த
குரல்வளையின் மனம்
ஆற்றமாட்டாத துக்கம் பொங்கப்
புன்னகைக்கும்.

No comments:

Post a Comment