LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள். Show all posts
Showing posts with label ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள். Show all posts

Thursday, June 9, 2022

திரும்பத் திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 திரும்பத் திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி - 1


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.
அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த
பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச்
செய்கிறார்கள்.
துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள்
என்று
அங்கங்கே அசரீரி ஒலிக்கிறது.
போயும் போயும் கிருஷ்ணனையா காப்பாற்றச்
சொல்லிக் கேட்கவேண்டும்
என்று முகத்தைச் சுளுக்கிக்கொள்கிறார்கள் சிலர்.
ஆயர்குலப் பெண்களின் ஆடைகளை
ஆற்றங்கரையிலிருந்து
கவர்ந்துசென்றவனல்லவா அவன்
என்று குறிபார்த்து அம்பெய்துவதாய்
திரௌபதியின் காதுகளில் விழும்படி
உரக்கப்பகர்ந்து
பகபகவென்று பரிகாசமாய் சிரிக்கிறார்கள் சிலர்…
பாவம், ஊடலுக்கும் Eve Torturing க்கும்வேறுபாடு
அறியாதவர்கள்.
இரு மனமொப்பிய கூடலுக்கும்
கேடுகெட்ட வன்புணர்வுக்கும்
இடையேயான வித்தியாசத்தை
எண்ணிப்பார்க்கத் தலைப்படாதவர்கள்.
இன்னும் சிலர் ’அரசகுலப்பெண் என்பதால்
ஆளாளுக்கு அங்கலாய்க்கிறார்கள்
இதுவே அடிமைப்பெண் என்றால்?’ என்று
நியாயம் பேசுகிறார்கள்.
இப்பொழுது நான் அரசியா அடிமையா’ என்று
தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறாள்
திரௌபதி.
அலையெனப் புரளும் கார்கூந்தலும்
எரியும் குரல்வளையுமாய்
தலை சுற்றச் சுற்ற
உற்ற மித்ரன் பெயரை உச்சாடனம் செய்துகொண்டேயிருக்கிறாள்.
கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா
அபயம் கிருஷ்ணா……..
திரௌபதி இடையறாது கிருஷ்ணனை கூப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்
அது அவள் மனதின் நம்பிக்கை
அதற்கு முன்னான அவளுடைய நம்பிக்கைகளில் நிறைய பொய்த்துப்போய்விட்டன.
ஆனாலும் நம்பிக்கை பொய்க்காது
என்ற நம்பிக்கையே
வாழ்தலுக்கான நம்பிக்கை யென
நம்பிக்கொண்டிருப்பவள் அவள்.
பொய்க்கும் நம்பிக்கைகள்போல்
பொய்க்காத நம்பிக்கைகளும் உண்டுதானே
மார்பை மறைக்கும் சீலை இழுக்கும் இழுப்பில் விலகலாகாது என்று
இருகைகளையும் குறுக்கே இறுக்கித்
தடுத்திருப்பவள்
கை சோர மெய் சோர
சோரம் போகலாகாதென்ற தீராப்
பரிதவிப்பில் கிருஷ்ணனை யழைத்துக்கொண்டிருக்கிறாள்.
எங்கிருந்தேனும் ஒரு புல்லாங்குழல் பறந்துவந்து
பாதகர்களைத்
தன் துளைகளுக்குள் உறிஞ்சிவிடலாகாதா
எங்கிருந்தேனும் ஒரு மயிற்பீலி மிதந்துவந்து
கயவர்களின் கண்களில் சொருகிவிடலாகாதா…….
'ஐந்து கணவர்கள் பார்த்ததுதானே _
அவையோர் பார்ப்பதில் அப்படியென்ன வெட்கம்'
என்று கெக்கெலித்துக் கேட்கும் குரல்
நிச்சயம் ஒரு பெண்ணுடையதாக இருக்காது
என்பதொரு நம்பிக்கை.
நம்பிக்கையே வாழ்க்கை.
தாயுமானவன் தந்தையுமானவன்
வாயுரூபத்திலேனும் வந்தென்
மானங்காக்க மாட்டானா
என்றெண்ணியெண்ணி யோய்ந்துபோகும்
இதயத்தின் நம்பிக்கை
யிற்றுவிழும்போதில்
இழுக்க இழுக்க வளர்ந்துகொண்டே போகும்
சேலை
யிங்கே என் உன் எல்லோரது நம்பிக்கையாக.

கவிமன வேதியியல் மாற்றங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிமன வேதியியல் மாற்றங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும்
மாறிக்கொண்டேயிருப்பவர்கள்
முன்னவராக இருக்கும்போது
அன்பே சிவம் என்று பண்ணிசைக்கிறார்கள்....
பின்னவராக மாறி காது கூசுவதாய்
தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட
ஆரம்பித்துவிடுகிறார்கள்.
கொன்றழிக்கத்தோதாய்
சொற்களின் கூர்நுனியில் நஞ்சுதோய்த்து
அவர்கள் வைத்திருக்கும் கத்தி கபடா துப்பாக்கி
வெடிகுண்டு வகையறாக்கள்
வேகமாய் துடிக்கவைக்கின்றன
ஏற்கெனவே எதனாலெல்லாமோ
எந்நேரமும் படபடப்பாக உணரும்
பாழ் இதயத்தை.
முன்னவராக எண்ணி நட்புபாராட்டிக்
கொண்டிருந் தவர்கள்
காலடியின் கீழ் தரை நழுவுவதாய் உணர்ந்து
மூர்ச்சையாகிவிழும் தருணம்
மீண்டும் Dr. Jekyll முன்னால் வந்து
காசுவாங்காமல் மருந்துமாத்திரைகளை
அத்தனை அன்போடு
ஒரு கவிதையில் பொதிந்து
கையில் தந்துவிடுகி றார்கள்.
நம்பிக்கையிழப்பின் கொடும் அசதியிலிருந்து
மெல்ல எழ முயலும் மனதில்
பேயறை அறைகிறது நாராசக் கெக்கலிப்
பொலியும்
நாக்கூசா அவதூறுகளும்.
அத்தனை மனிதநேயத்தோடு கவியெழுதும் மனம்
இத்தனை மூர்க்கமாய் வெறுப்பைக்
கக்கவே கக்காது என்ற நம்பிக்கையை
சுக்குநூறாக்குவதாய்
அதே மனதிலிருந்து அந்த அளவே
வெறுப்பைக் கக்கும்
அதே வார்த்தைகள்
அதைவிட மோசமாகவும்
எதிரொலித்தவண்ணம்.
ஒரே செயல் ஒருவரின் அளவில்
வெறுப்பைக் கக்கவைப்பதும்
இன்னொருவரின் அளவில்
விருப்புக்குரியதாகவும் மாறும்
மருத்துவத்திற்கப்பாலான விந்தை புரியாமல்
Dr. Jekyll தன் மருத்துவப்பட்டத்தைத் துறக்க
முடிவுசெய்யும் நாளில்
Mr.Hyde தன்னையோ அவரையோ அல்லது
தங்களிருவரையும் கவிதையில் இனங்கண்டு
கொள்பவரையோ
எதுவும் செய்துவிடாமலிருக்க வேண்டும்
Dr. Jekyll Mr.Hyde ஆக மாற உதவும்
வேதியியல் சாறு தரும் அருவக்கைகளால்
_ அவர்களுடையதோ அடுத்தவரு
டையதோ....
அதைவிட முக்கியம்
Mr.Hyde களை Dr. Jekyll களாக மாற்றும் சாறு
கண்டுபிடிக்கப்படவேண்டியது.

சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் (அ) தீதும் நன்றும் பிறர் தர வாரா

 சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்

(அ)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
தீதும்அவரவருக்குள்ளிருக்கும் நிலக்கிழார்கள்
சக மனிதர்களை அடிமைகளாக பாவித்து
அவர்களது வாய்களை அச்சுறுத்தல்களாலும்
அசிங்க வார்த்தைகளாலும்
அடைமொழிகளாலும் அடைத்துவைத்து
அவர்களுக்காகப் பேசுவதாக செய்யும்
பாவனையில்
அடுத்தவரின் பேச்சுரிமை எழுத்துரிமை கருத்துரிமை
எல்லாவற்றையும் கொத்துபரோட்டாவாக்கிக் கொடுத்தவண்ணம்
தங்களுடைய குடும்பத்தோடு சர்வதேச தரத்திலிருக்கும் ஐம்பது நட்சத்திர ஹோட்டல்களில்
ஐரோப்பிய ஸ்பானிய ஜப்பானிய
அயர்லாந்து நெதர்லாந்து ஆஸ்திரேலிய அமெரிக்க ஜெர்மானிய உணவு தின்பண்ட வகையறாக்களை
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ருசித்துக்கொண்டிருக்க
அவர்களுடைய அக்கறையின் இலக்காக ’சும்மனாங்காட்டிக்கு’ அடையாளங்காட்டப்படுவோர் கலாச்சாரக் காவலர்களாய் கூழையும் களியையும் உண்டவாறே
படகுவீட்டுப் புரவலர்களுக்காய் கையிலும் எழுத்திலுமாய் கொடியுயர்த்திப் பிடித்தபடி
அவர்கள் கைகாட்டும் இடத்தில் காறித்துப்பியபடி….
அறஞ்சார் விசுவாசத்தை யல்லாமல்
அரச விசுவாசத்தைக் காட்டுவதே புலவர்பெருமக்களின்
வேலையாகிவிட்டால்
வாழ்ந்துவிடுமா மொழி
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ தமிழில் எழுதப்பட்ட
தென்றாலும்
அது உலகப் பொது வழி.

தகவல் பரிமாற்றம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தகவல் பரிமாற்றம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன....
இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்...
தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி.....
மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில்
மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை.
சில சமயம் வராத புறாவின் ஆயிரங் கால்களில் கட்டப்பட்டிருக்கும் காகிதத் துண்டுகள்
அதை எப்படியோ தரையிறங்க வைத்துவிடுகின்றன.
சில சமயம் தபால்காரர் வீசியெறிந்துவிட்டுச்செல்லாத
சில நூறு பக்கக் கடிதங்களைப் படிப்பதுதான்
எத்தனை சுவாரசியமாக இருக்கிறது!
காலப்போக்கில் கிழிந்ததும் கிழித்ததும்போக
எஞ்சிய கடிதங்களில் எந்தவொரு சொல்லையும் வரியையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
OK – Okayவுக்கு இடையே வித்தியாசம்
உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை
யாரும் யாருக்கும் எழுதுவதான தொனியில்
ஆரம்பமாகி முற்றுப்பெறாமலேயே முடிந்துவிடுபவை
வாட்ஸ் ஆப் கடிதங்கள்.
காலை ஆறுமணிக்கு எழுந்து மறுகணம்
மணி முற்பகல் பதினொன்றாகிவிடும் ஓட்டத்தில்
நிதானமாகக் கடிதங்கள் எழுதும் நேரம் பிடிபடவில்லை. எதை யென்பதும் யாருக்கு என்பதும்கூட.
எனக்கு நானே எழுதிக்கொள்ளலாமென்றால்
எதற்கு என்று கேட்பது மனமா மூளையா
இரண்டுமா புரியவில்லை.
இப்போதெல்லாம் தபால்காரர் வரும் நேரமென்ன
சரியாகத் தெரியவில்லை.
எங்கள் வீட்டு எண் தாங்கிய சிறு தபால்பெட்டியில்
குடியிருப்பினுடைய காவலாளியின் சார்ஜர் மட்டுமே எப்பொழுதும் குட்டிக் குருவிபோல் ஒரே இடத்தில் துவண்டுகிடக்கிறது.
ஒருவகையில் சார்ஜரும் மடல்தான் என்று தோன்றுகிறது.
அரிதாய்ப் பெய்யும் மழை
நீரில் கரைந்த வரிகள் நிறைந்த மடல்களை
ஒரே நேர்க்கோட்டில் தலைமீது பூவாய்ச் சொரிகிறது.
பெறவேண்டும் வரமாய இன்னும் ஒரே யொரு மடல் _
மறுமொழியளிக்காது விட்டுவிட…..

மெகாத்தொடரெனும் மகாத்துயர். - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மெகாத்தொடரெனும் மகாத்துயர்.

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு
நகைவாங்கி முடித்திருந்தார்கள்.
இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில்
அந்த இருபதுகோடி பெறுமானமுள்ள நகைகள் களவாடப்பட்டு விட்டன.
முதல் தொலைக்காட்சிச் சேனலிலிருந்து ஆறுபேர் ஆளுக் கொரு தீப்பந்தமேந்திக்கொண்டு
தெருத்தெருவாக திருடர்களைத் தேடிக்கொண்டு மாட்டுவண்டியில் சுற்றினார்கள்.
பெயரறியாத் திருடர்களின் பெயர்களை உரக்கப் பாடிக்கொண்டே சென்ற அவர்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தது நிலவு.
ஒரு திருப்பத்தில் திடீரென எதிர்ப்பட்ட திருடர்களில் ஒருவனை அவனுடைய கூட்டாளிகளுக்கே அடையாளம் தெரியவில்லை.
அரைநிமிடத்திற்கு முன்பு ‘இனி இவருக்கு பதில் இவர்
இந்தத் திருடர் பாத்திரத்தில் வருவார்’ என்று சின்னத்திரை யில் சிந்நேரம் ஓடிக்கொண்டிருந்த அறிவிப்பை
அவர் கவனிக்கத்தவறிவிட்டார்.
நடுத்தெருவிலமர்ந்தபடி அவர்கள் கோடிகளைப் பரப்பி பங்குபோட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
மாட்டுவண்டியில் அவர்களைத் தேடியபடியே வந்தவர்கள்
நடுவீதியில் இறைந்துகிடந்த பணத்தைப் பார்க்காமல் அந்தப்புறமாய் ஒதுங்கிச்சென்றார்கள்.
பார்த்துவிட்டால் பின் மெகாத்தொடரை முடித்துவிடநேருமே....
முடிந்தால் இன்னும் நாலு வருடங்களுக்கோ நாற்பது வருடங்களுக்கோ (நான் இருக்கமாட்டேன் என்பதால் நானூறு வருடங்களுக்கோ என்று சொல்வது நியாயமாகாது!)
நீளவேண்டியவையல்லவா மெகாத்தொடர்கள்?
ஆற அமர கோடிகளை எண்ணிமுடித்து நிமிர்ந்தவர்களுக்கு அத்தையம்மா
(அத்தை என்பதுதான் முக்கியமே தவிர யாருடைய என்பதல்ல. அத்தை ஒரு குறியீடு, அடைமொழி, மெகாத்தொடர்களுக்கான தனி அகராதி; வாதி; பிரதிவாதி இன்னுமுள மீதி….)
அன்போடு தங்க லோட்டாக்களில்
தேனீர் கொண்டுவருகிறாள்.
ஆசைதீரக் குடிக்கும் திருடர்கள் அரையுயிராய்
மயங்கிச் சாய்கிறார்கள்.
சாவதற்கு முன் கோடிகளைத் தொலைத்த அந்தக் குடும்பத் தைத் தேடி தங்கள் சேனலிலிருந்து அந்த இன்னொரு சேனலுக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
பணத்தை ஒப்படைத்து
‘நல்லபடியாகத் திருமணத்தை முடியுங்கள். நாங்கள் நல்லவர்களாகிவிட்டோம் – இதோ வெறும் கைகளோடு விடைபெற்றுக்கொள்கிறோம் என்று ஒரே குரலில் நாத்தழுதழுக்கக் கண்கலங்கக் கூறுகிறார்கள்.
அதிலொருவன் மட்டும் அடக்கமாட்டாமல் கேட்டுவிடு கிறான். ”அதுசரி, அடித்தட்டு வர்க்கக் குடும்பமென்று அடிக்கடி அழுதவாறே அடிக்கோடிட்டுக் கூறிக்கொள்ளும் உங்களுக்கு இத்தனை கோடிகள் எப்படிக் கிடைத்தன?”
அதைக் கேட்ட அந்தக் குடும்பம்
அத்தை கொடுத்த விஷம் சரியாக வேலை செய்யவில்லை யென
மருந்துக் கம்பெனி மீது நஷ்ட ஈடு வழக்குபோட்டதில் இன்னும் சில கோடிகள் அவர்களுக்குக் கிடைத்ததாகவும் அதைக்கொண்டு அவர்கள் தங்கள் மெகாத்தொடரின் இரண்டாம் பகுதியை ஒளிபரப்பப்போவதாகவும் கூறப்படுகிறது.

கவிதானுபவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதானுபவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உபதேசிக்கும் கவிதைகளை எழுதிக்கொண்டே போனவருடைய வரிகளெல்லாம்
ஒவ்வொன்றாய் மலையுச்சியிலிருந்து உருண்டோடி
அதலபாதாளத்தில் விழுவதையறியாமல்
இன்னுமின்னுமாய் பிரசங்கம் செய்துகொண்டிருந்தவரை
ஆதுரத்தோடு பார்த்துக்கொண்டிருந்த அவருடைய
எழுதப்படாக் கவிதை
தனக்குள் முணுமுணுத்துக்கொண்டது:
பீடமல்ல கவிதை
பாழ்மனதின் எதிரொலி
உயிர்வலி
உன்மத்தக்களி
சரீரம் கடந்த நிலை
சரணாகதி
ஒருவேளை நோயுற்றிருக்கும் மருத்துவராயிருக்கலாம்
ஆனால் மருத்துவரில்லை கவிதை
பார்க்கும் ஆடி எனில் அதற்குள் தெரியும் முகம்
இன்மைக்கும் பன்மைக்கும் இடையே
உண்மைக்கும் பிரமைக்கும் இடையே
வலியுணர்ந்து வாழ்வுணர்ந்து
வாக்கின் வலுவுணர்ந்து
உணர்ந்ததை உட்குறிப்பாய் உணர்த்துவதே கவிதையென்றுணர்.
அடிக்குறிப்பாய்_
இதுவும்கூடக் கவிதையில்லையென்றுணர
முடிந்தால்
இனி நீயெழுதுவது கவிதையாகும்,
அறிவாய்."


காற்று நிரம்பியிருக்கும் காலிக் கைகள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

காற்று நிரம்பியிருக்கும்
காலிக் கைகள்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

காற்று நிரம்பியிருக்கும்

காலிக்கைகளை

அதிகமாய் விரிக்கலாம்

அதிகமாய் பிரிக்கலாம்

அதிகமாய் அள்ளலாம்

அதிகமாய் திறக்கலாம்

அதிகமாய் மூடலாம்

அதிகமாய் நீட்டலாம்

அதிகமாய் காற்றைத் துழாவலாம்

ஏற்கெனவே கைகளில் நிறைந்துள்ள காற்றை மாற்றி

புதிய காற்றை உள்ளங்கைகளில் நிரப்பிக்கொள்ளலாம்

தள்ளவேண்டியவற்றை இன்னும் வலுவோடு தள்ளலாம்

கும்பிட்டுக்கொள்ளலாம் அன்பின் சன்னிதானத்தில்

அதே நீள அகலங்களே யென்றாலும்

விரல்களுக்குக் கூடுதல் சுருள்விசை கிடைக்கும்

அதிகமாய் நீட்டலாம் மடக்கலாம்

காற்று நிரம்பிய காலிக்கைகளால்

முழங்கைகள் தோள்பட்டைகள் முதுகு இடுப்பு பிடரி என்று எல்லாவிடங்களும் இலேசாகி ஆசுவாசமுணர

எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற ஏகத்துவ நிலை

சித்தித்தல் சொல்பதருணமேயானாலும்

சொர்க்கம் என்று சொல்லும்

காலிக்கைகள்

காலியின் சூட்சுமமுணர்தலே சாலச்சிறந்த வாழ்க்கை

என்று சொல்லாமல் சொல்லும்.

காலம் மறைந்த கணத்தில் நல்ல பணம் கள்ள பணம்

செல்லுபடியாகும் பணம் காலாவதியான பணம்

எல்லாமும் இல்லாதொழிய

வழியொழிய பழியொழிய

இழிவொழிய கழிவொழிய

அலைபுரளா கடல்நடுவில்

நிலைகொள் மனம் அத்தொடலில்

தோள்கண்டு தோளே கண்டு…….

தோளின் வழி முழு உருவமும் அதன் உள்வெளியும்

குறிப்புணர்த்தப்பட

நேசிப்பவர்கள் தொடும் நேசிப்புக்குரியவர்கள் அவர்களை நேசிக்கிறார்கள்தானே? இல்லையா?

காலி தமிழ்ச்சொல்லா, இல்லையா?

காலியென்பதெல்லாம் காலியல்ல என்பதில்

இருவேறு கருத்துக்கு இடமில்லையா?


·         தொடுவுணர்வை முழுமொத்தமாய் கையகப்படுத்திக்கொள்ள? empty suggests a complete absence of contents. Here and Now மட்டுமே? எண்ணங்கள் மறைந்த நிலை? மனம் இலேசான நிலை?

(சமர்ப்பணம்: கவிஞர் ரியாஸ் குரானாவுக்கு)



ளை