LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, August 9, 2026

கைவசமாகும் நட்சத்திரங்கள்! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கைவசமாகும் நட்சத்திரங்கள்!

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

காலடியில் அப்படி ஒளிர்ந்துகொண்டிருந்தது

ஒரு துண்டு ஜிகினாத்தாள்!

பரவசத்தோடு குனிந்து கையிலெடுத்த சிறுமியின் வயது

சில நூறாண்டுகள் இருக்கலாம்!

சிறு வளையலைக்கொண்டு ஒரு வட்டம் வரைந்து

தனக்கான நிலவை உருவாக்கிக்கொண்டவள்

அதைச் சுற்றி அதனினும் சிறிய சில பல அரைவட்டங்களைத்

தீட்டி மேகங்களாக்கி 

அவற்றிலிருந்து கீழ்நோக்கி சில சின்னச் சின்னக்கோடுகளைத் தாளின் அடிப்பகுதிவரை வரைய

 நிறைய நிறைய மழைபொழிந்தது! 

கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்தவள்

கையிலிருந்த துண்டு ஜிகினாத்தாளை துணுக்குகளாய்க் கிழித்து 

நாக்கில் ஒட்டிப் பின் தாளின் மேற்பக்கத்தில் பதித்து

’நட்சத்திரங்கள்’ என்றாள்!

’மழை பெய்யும்போது நட்சத்திரங்கள் வானில் ஒளிருமா’

என்ற கேள்வியைக் கேட்கநினைத்து 

அவளை ஏறிட்டுப்பார்த்தபோது

கண்சிமிட்டியபடி ‘கேட்காதே’ என்று சைகை காட்டின

சிறுமியின் கண்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள்!

தொடுவானின் விரிபரிமாணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

//2019, AUGUST 7 - மீள்பதிவு//

தொடுவானின் விரிபரிமாணங்கள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

EXPANDING DIMENSIONS OF THE HORIZON

(Originally written in Tamil the poem is rendered in English by the poet herself)

By 

Rishi

(Latha Ramakrishnan(


தொடுவானின் விரிபரிமாணங்கள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

“All that you had drawn 

when you were a little girl  -  fine.

But, you are now grown- up .

Still you do the same as before

Isn’t it absurd to the core?

How can there be moon and stars 

on a rainy day?”

 _ So asked the elders irritated and sarcastic.


And the little girl 

Aged a few eons

responded with a smile:

‘ Just because they are not visible to us

Aren’t there the Moon and Stars?

The sky drawn by me is widespread

 over the entire globe.

With rain pouring in one side 

There would be moon radiant 

on the other side

Do know that.?’


That which twinkles In the eyes of the kitten 

which smiles listening to her  _

Are they stars?

Venus? Jupiter? Mars? 

Or  Pluto afar?


‘சிறுமியாய் இருந்தபோது வரைந்ததெல்லாம் சரிதான்

வளர்ந்தபின்பும் இப்படியே செய்தால் எப்படி?

மழைபொழியும் வானில் நிலவும் நட்சத்திரமும் எப்படியிருக்கும்?’

என்று எரிச்சலும் எகத்தாளமுமாய் கேட்ட பெரியவர்களிடம்

சிரித்துக்கொண்டே சொல்வாள்

சில நூறாண்டுகள் வயதான சிறுமி:


‘நமக்குத் தெரிவதில்லை யென்பதால் நிலவும் நட்சத்திரங்களும்

அங்கேயில்லாமல் போய்விடுமாor

அல்லது

”நான் வரைந்துள்ள வானம் உலகெங்கும் விரிந்திருக்கும்.

ஓரிடத்தில் மழைபொழிய வேறிடத்தில் நிலா காயும் தெரியுமா!”

அதைக் கேட்டுப் புன்னகைக்கும் பூனைக்குட்டியின் கண்களில்

மின்னிக்கொண்டிருப்பது விண்மீன்களா?

வீனஸா ஜூபிட்டரா மார்ஸா ப்ளூட்டோவா?



சிறுமியும் சின்ன விண்மீனும்! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சிறுமியும் சின்ன விண்மீனும்!

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

தன்னைப்போல் குட்டியாக இருப்பதால்தான் 

நட்சத்திரங்களை நேசிக்கிறாளோ சிறுமி?

வாமனாவதாரம் விசுவரூபம் இருவருக்குமே உண்டுதானே!

ஒற்றை நிலவை நேசிக்க ஓராயிரம்பேர்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு துணுக்குதான் கைவசமாகும்.

நட்சத்திரமெனில் வேண்டுமட்டும் கைகளால் அள்ளிக்கொள்ளலாம்!

சின்ன விண்மீன் அவளுடைய செல்லப்பிராணி பப்பிக்குட்டியா?

சிஷ்யையா?

சமவயதுச் சினேகிதியா?

சீராட்டவொரு பாப்பாபொம்மையா?

அம்மையப்பனா?

அதியமான் நெல்லிக்கனியா?

அதிசயங்கள் நிகழ்த்தும் மந்திரக்கோலா?

அந்தர வீடு போலா?

ஒண்ணொண்ணாய் தெரிந்த ‘ரைம்’களைச் சொல்லிச்சொல்லி

அழைத்துப்பார்த்தாயிற்று.....

இன்னும் என்ன செய்தால் அவளிடம் வந்துசேரும் நட்சத்திரங்கள்?

தன்னை மறந்து அண்ணாந்திருந்த

சிறுமியின் கண்வெளியில் சுழன்றவாறிருக்கும் சில

அண்டங்கள்……

கண்ணில் தெரிவது வானம் மட்டுமல்ல - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கண்ணில் தெரிவது வானம் மட்டுமல்ல

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

ஆரம்பத்தில் சிறுமியின் பிரார்த்தனை

யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது.

பள்ளிக்குச் செல்லும் வழியில் தெருவோரப் பிள்ளையார் கோயிலின் முன்

கைகூப்பி கண்மூடுவாள் கணநேரம்

வழியில் தேவாலயத்தைக் கடக்கும்போது

சின்ன விரல்களால் சிலுவைக்குறியிட்டுக்கொள்வாள்

இறைமை இன்னமும் முறையற்ற வழிகளில்

அறிமுகமாகியிராத பருவத்தில் 

அந்தச் சிறுமியின் பிரார்த்தனையெல்லாம் 

யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது:

வட்ட சதுர வடிவ நாணயங்களெல்லாம் நட்சத்திர வடிவம் பெறவேண்டும்.

முழுநம்பிக்கையோடு உள்ளங்கையை முகர்ந்து பார்த்தால் ஆப்பிள் மணக்கும் தானே!

அவளுக்கும் அப்படி ஆப்பிள் மணத்ததுண்டு.

ஆனால் சில்லறைநாணயங்கள் ஏனோ நட்சத்திரவடிவமாகவேயில்லை.

சிறுமிக்கு வருத்தமாயிருந்தது

தெருவோரம் எலும்பெல்லாம் தெரிய சுருண்டுகிடக்கும்

முதியவரின் கந்தல் விரிப்பில் ஒன்றிரண்டு நாணயங்கள் மட்டுமே

இருந்ததைக் கண்டபோது

அவள் துக்கம் இன்னும் அதிகமாகியது.

நாணயங்கள் நட்சத்திரங்களாவதைவிட 

அந்தத் தாத்தாவால் வாங்கவியலாத ’ரொட்டி’ ’பன்’ இட்லியானால் எத்தனை நன்றாயிருக்கும்

என்று அனிச்சையாக அவள் மனதில் தோன்றிய நினைப்பில்

தன் பிரார்த்தனையில் சிறிது மாற்றம் செய்துகொண்டாள் சிறுமி. 


 //2019, AUGUST 7 மீள்பதிவு//

மௌனம் ஒரு காவல் தேவதை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனம் ஒரு காவல் தேவதை

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


மௌனம் சம்மதமென்று, 

சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று

யார் சொன்னது?

மௌனம் ஒரு மந்திர உச்சாடனம்.

ஒரு மாயக்கோல்.

ஒரு சங்கேதமொழி.

ஒரு சுரங்கவழி.

சொப்பனசங்கீதம்

அரூபவெளி.

அந்தரவாசம்.

அனாதரட்சகம்.

முக்காலமிணைப்புப் பாலம்.

மீமெய்க்காலம்.

மொழிமீறிய உரையாடல்.

கதையாடல் ஆடல் பாடல்.

மனசாட்சியற்றவரிடம் நம் வார்த்தைகள் 

மண்டியிட்டுத் தெண்டனிடுவதைத் 

தடுக்கும் சூத்திரம்.

பாத்திரம் அறிந்து நாம் இடும் பிச்சை.

ஆத்திரத்தின் வடிகால்.

அடிமன வீட்டின் திறவுகோல்.

யாரிடமும் நம்மை நிரூபித்தாகவேண்டிய 

கட்டாயத்திலிருந்து விடுதலை.

ஆய தற்காப்புக் கலை.

அவரவர் இமயமலை.

நெருங்கியிருப்பவரையும் கணத்தில் 

நெடுந்தொலைவிலாக்க எறியப்படும் 

சூட்சுமக்கல்.

நித்தமும் நெஞ்சொளிரும் வானவில்.

பித்தாகிநிற்கும் சொல்.

வலியாற்ற மனம் தயாரிக்கும்

அருந்தைலம்.

கொடியவிலங்குகளிடமிருந்து காக்க

நம்மைச் சுற்றிக் கனலும் எரிவளையம்.

கடல்நடுவே கரையாகும் மணல்திட்டு.

அடர்மழை.

நள்ளிரவின் உயிர்ப்பு.

நிலவின் புன்சிரிப்பு.

இன்னும்……