LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 7, 2021

ராகவிகாரங்கள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ராகவிகாரங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒவ்வொரு கணமும் அருள்பாலிக்கப்பட்டதாக
பாவிக்கும் மனதில்
மோதி மோதி அறைகிறது
தன்னை வாழ்வின் பலிகடாவாகவே பார்க்கும்
சக உயிரொன்றின் பிலாக்கணம்.
அதன் கொழுத்த பணப்பையின் முன்
என் சுருக்குப்பையின் கால் அரையணாக்கள்
ஒன்றுமேயில்லை.
ஆனாலும் அவை எனக்குச் செய்துகாட்டும்
செப்பிடுவித்தைகளை
ஆனானப்பட்ட கோடீஸ்வரர்களாலும்
ஈடுசெய்யவியலாது.
காற்றூதும் புல்லாங்குழலில் வாழ்வின்
ஊற்றுக்கண் திறக்க
சொக்கிநிற்கும்போது
தென்றலில் நழுவித் தன் தலைமீதொரு
சின்னஞ்சிறு இலை விழுந்ததற்காய்
என்றைக்குமாய் அங்கலாய்த்துக்கொள்ளுமவளின்
தன்னிரக்கம் அச்சுறுத்துகிறது.
தனக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும்
அந்த இலையை அவள் தூற்றித் தீர்த்தும்
அவள் அழுகை குறையவில்லை.
மரத்திற்குத் தன்னைக் கண்டால் இளக்காரம் என்கிறாள்;
மரத்திற்குத் தன் மீது மிகவும் வெறுப்பு என்கிறாள்.
மரத்தை சிரத்சேதம் செய்வதுதான் சரி என்கிறாள்.
அவளே தொலைக்காட்சி சீரியலில் மரம்
வெட்டப்படக்கண்டு அழும் கதாநாயகியோடு சேர்ந்து தானும் கண்கலங்குகிறாள்.
மறந்தும் தெருவோரம் இரந்திரந்து
இறந்து கொண்டிருக்கும்
மனிதர்களைப் பற்றி ஒரு வார்த்தையும்
பேசுவதில்லை.
பேசவில்லை என்பதால் நினைக்கவில்லை என்று
சொல்லமுடியுமா என்ன? என்று
தன் போக்கில் கேட்கும் மனதைத்
தூக்கிச் சுமப்பது பெரும்பாடுதான்.
சதா எதையாவது சுயபரிதாபத்தோடு பேசிக்கொண்டேயிருக்குமவள்
மௌனித்திருக்க நேரும் சமயம்
மிகத் தனியாய் உணர்வாளோ?
இன்னொருவரோடு பேசும்போதெல்லாம்
என்னிடம் பேசும் வாய்ப்பை நான் இழக்கிறேன் என்கிறேன்.
இது என்ன இழவு என்று அவள்
புருவஞ்சுருங்குவதைப் பார்க்க
எரிச்சலாகவுமிருக்கிறது;
வருத்தமாகவுமிருக்கிறது.
ஒலிப்பது தம்பூராவின் ஆதாரசுருதியா
அல்லது
ரம்பக்கழுத்தறுப்பா என்று
எதைவைத்து நிர்ணயிப்பது?
ஒரு குரலைத் திரும்பத்திரும்பக் கேட்டாகவேண்டிய
அவசியமில்லாதவரை
பரணில் போட்டுவைக்கலாகும் இந்தக் கேள்வி
எதிர்பாராத் தருணங்களில் உருண்டிறங்கி உச்சிமண்டையில் தாக்கி
நிலைகுலையச்செய்துவிடுகிறது.

வெயிலும் வெறும் பாதங்களும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வெயிலும் வெறும் பாதங்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பழுதடைந்த விழி மீறீப் பெரிதாகிக்கொண்டே போகும்
அந்த அடுத்த அடிப் பள்ளத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள
உருகியொழுகும் தார்ச்சாலையாயிருந்த காரின் முதுகுப்புறத்தில் கையை அழுத்திய
அந்த மனிதரின் முகம்
வேதனையில் அனத்தியதொரு கணம்…..
ஒரு பாதம் மீது மறு பாதம் வைத்து
தனக்காகும் செருப்புகளைத் தயாரித்தபடி
தத்தளித்துக்கொண்டிருந்தன அந்தக் கால்கள்.
பிச்சையெடுப்பது பழகிவிட்டிருந்தாலும்
உச்சிவெய்யிலில் செருப்பின்றி கைகளை நீட்டிக்கொண்டிருக்கவேண்டியிருப்பதும்
கச்சிதமாய்ப் பழகியாகவேண்டும் என்பது
கர்ணகடூரமல்லவா……
கைவசமிருந்த நூறு ரூபாய்க்கு நல்ல செருப்பு கிடைக்கவேண்டுமே
என்ற பிரார்த்தனை தொடர
நீளும் தெருவின் திருப்பத்திலிருந்த கடைக்குச் சென்றால்
கடையின் உரிமையாளர்கள் தேவதூதர்களாய்
அந்த ஒரேயொரு நூறு ரூபாய் நோட்டுக்கு
ஒரு ஜோடி காலணிகளைத் தந்தனுப்பினார்கள்
திரும்பிச் சென்றபோது காணவில்லை
அந்த இடத்தில்
அந்த மனிதர்.
அந்தக் காலணிகள் எந்தக் கால்களுக்கானவையோ
என்ற தத்துவம்
செருப்பை மீறி பித்துமனப் பாதங்களைக் காட்டுத்தீயாய்ச் சுட்டெரிக்க
நொந்த மனம் நொந்தபடி
வந்தவழி போகலானேன்

ரீங்காரம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ரீங்காரம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மௌனத்துள் மெலிதாக ரீங்கரித்துக்கொண்டே
யிருக்கலாகும் இசையை
காலகாலமாய் கேட்டவண்ணமிருக்கும் மனதுக்கு
சமயங்களில் மெய்யாகவே அந்த இசை
ஒலித்துக்கொண்டிருக்கிறதா இல்லையாவெனும்
ஐயமெழுவது இயல்புதானா இல்லையாவென
இயல்பாகவும் இயல்பற்றும் இசையிடை யொலிக்குமொரு
கேள்வியின் இயல்பும் இயல்பின்மையும்
சுநாதமா சுருதிபேதமா வென
இயல்பாயெழும் கேள்விக்கு விடையறியா மனம்
கும்மிருட்டு சூழ்ந்த கொதிவெயிலில்
வியர்த்து விறுவிறுத்து
கிறுகிறுக்கும் தலையைச் சுமந்தவாறு
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வெந்து நொந்து வழியேகித் தொட்ட
எட்டாத்தொலைதூரத்திற்கப்பாலும்
விட்டகுறை தொட்டகுறையாய்
கேட்கும் இசை கேட்கக் கேட்க…….

இன்னுயிர் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்னுயிர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



எனக்கிருப்பது ஓருயிரில்லையென்று நன்றாகவே தெரிகிறது.
ஈருயிர்மட்டுமேயென்றிருக்கவும் வழியில்லை……
இருகைகளின் பத்துவிரல்களுக்கும்
மனக்கைகளின் ஏராளம் விரல்களுக்கும்
சிக்காத எண்ணிக்கையை எதைக்கொண்டு கணக்கிட
வெனும் கேள்வி கொன்றுகுவிக்கும்
எனதின்னொருயிரின் வயது
சின்னக்குழந்தையினுடையதா
உன்மத்தக்கிழவியினுடையதா
இன்று புதிதாய்ப் பிறக்கும் என்னுயிர்கள் எவையெவை
எதுவாயினும்
என்றுமே
என் ஓருயிரைக் காப்பாற்ற
என் இன்னொரு உயிரை நான்
கொன்றாகவேண்டியிருக்கிறது.

வெறும் வானமும் வளர்கவிதையும் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வெறும் வானமும் வளர்கவிதையும்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வெறும் வானிருந்தொரு திடீர் மின்னல்
பளீரிடுவதுபோல்
ஒரு சொல்லுமில்லாமல் உருவாகிக்கொண்டிருக்கிறது கவிதை.
சிறிதும் பெரிதுமாய் வரிகளோடியவண்ணம்.
இரு நிறுத்தற்குறிகள் தம்மைத்தாமே
இடம்பொருத்திக்கொண்டுவிடுகின்றன.
ஓர் ஆச்சரியக்குறி அங்குமிங்குமலைந்துகொண்டிருக்க
அந்தரத்தில் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருக்கின்றன சில கேள்விக்குறிகள்.
திருத்தேர் வீதியுலா வரும்நேரம் இறையுருவை மறைத்து
ஏராளம்பேர் இருந்தும்
இருவிழிகளும் தாமாய் மூடிக்கொள்ள
உறுகைகள் அனிச்சையாய் கன்னங்களில் தட்டிக்கொள்ள
உள்ளே தெரிந்தும் தெரியாமலுமாய்
உறையலாகுங் கடவுள்
சிறுகணம் என்னில் இரண்டறக் கலத்தலாய்
சிதம்பர ரகசியமாய்
சித்திரத்துச் செந்தாமரைக்கு
சிறகு முளைத்ததாய்
முழம்போடும் வெறுங்கையெலாம்
வாசமல்லி பூப்பதாய்
வாய்கொள்ளா தாகத்தோடு
வெற்றிடத்திலிருந்து வாரியெடுக்கிறது
கவிதை.
பாயுமொளியில்லையென்றாலும்
பறவைகள் இல்லையென்றாலும்
ஓயாப்பெருங்கடலலைகளின் மேலாய் காணும்
வெறும் வான் வெறும் வான் அல்லவே!

உறக்கம் துரத்தும் கவிதை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உறக்கம் துரத்தும் கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
விழுங்கக் காத்திருக்கும் கடலாய்
நெருங்கிக்கொண்டிருக்கிறது உறக்கம்.
யாரேனும் துரத்தினால் ஓடுவதுதானே இயல்பு _
அது மரத்தைச் சுற்றியோடிப்பாடிக்கொண்டே
காதலியைத் துரத்தும்
சினிமாக் காதலனாக இருந்தாலும்கூட…
ஓடும் வேகத்தில் கால்தடுக்கி விழுந்துவிடலாகாது.
உறக்கத்தில் மரத்துப்போய்விடும் சிறகுகளைக்கொண்டு
எப்படிப் பறப்பது..?
உறங்கும்போதெல்லாம் சொப்பனம் வரும் என்று
உறுதியாகச் சொல்லமுடியாது….
எப்பொழுதும் வராது பீதிக்கனவு என்றும்.
தனக்குள்ளேயே என்னை வைத்திருக்கும் தூக்கத்திலிருந்து
வெளியேறும் வழியறியா ஏக்கம்
தாக்கித்தாக்கிச் சிதைவுறும் மனம்
தன்னைக் கவ்வப் பார்க்கும் தூக்கத்தையும்
துண்டுதுண்டாகச் சிதறடிக்கிறது.
அரைமணிநேரம் நீடிக்கும் போரின் இறுதியில்
உறக்கம் கொன்றதுபோக எஞ்சியிருக்கும்
அரைகுறைக் கவிதை யொன்று.

Monday, May 31, 2021

பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும் _லதா ராமகிருஷ்ணன்

 

பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்


_லதா ராமகிருஷ்ணன்

(31.05.2021 _திண்ணை இணையதளம் இதழில் வெளியாகியுள்ளது)



பெண்ணை மதிப்பழித்தல் பேராண்மையாகச் சில பலரால் கருதப்படுவது எத்தனை மானக்கேடான விஷயம்.

 

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரி யர்(கள்?) விவகாரம்,

 

கவிஞர் வைரமுத்துவின் ‘மீ-டூ’ விவகாரம்(அது ஒரு பெண் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. ஒரு பெண் மட்டும் தானே மதிப்பழிக்கப்பட்டி ருக்கிறார், என்று விட்டுவிடுவதும் சரியல்ல),

 

இப்பொழுது தமிழில் இருக்கும் தரமான தமிழ்க் கவிஞர்களையெல்லாம் விட்டுவிட்டு அவருக்கு கேரள அரசு விருது வழங்கி கௌரவிக்க இருப்பது (இப்பொழுது அந்த முடிவு கைவிடப்பட்டிருப்ப தாகவோ, பரிசீலனையில் இருப்பதாகவோ படிக்கக் கிடைத்தது),

 

பெண் மதிக்கப்பழிக்கப்படுதல் தொடர்பாய் சிலர் சில இடங்களில் கண்டுங் காணாமல் இருப்பது, சில இடங்களில் சீறிப் பாய்வது,

 

சிலர் இதுதான் சாக்கென்று சகலரோகக் காரணி யாய் குறிப்பிட்ட இனத்தை எதற்கெடுத்தாலும் குத்திக் குதறுவது,

 

உலகத்தில் வேறெங்குமே பெண்ணை மதிப்பழித் தல் நடப்பதேயில்லை என்பது போல் இந்தி யாவை மட்டந் தட்டுவது,

 

ஒரு குற்றத்தைப் பற்றிப் பேசும்போது ‘வரலாறு போதிப்பதாய் (பாரபட்சமாக எழுதப்படாத வரலாறு எது?) விலாவரியாய் பேச ஆரம்பித்து என்ன பேச ஆரம்பித் தோம், எதற்குப் பேச ஆரம்பித்தோம் என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது பேச வந்ததை தான் பேச விரும்பு வதற்கு உகந்ததாய் பயன்படுத்திக்கொள்ளும் அதீதப் பிரக்ஞையோடு பலப்பல பேசி மற்றவர்கள் எல்லோருமே அறிவிலிகள் என்ற பாவத்தில் வகுப்பெடுப்பது,

 

ஓர் அநியாயத்தை தான் மட்டுமே சுட்ட முடியும் என்றும், தான் சுட்டினால் மட்டுமே அது அநியாய மாக முடியும் என்றும் பெரிய மனிதத் தோர ணையை பாவித்துக் கொண்டு அந்த அடிப்படை யில் எந்தவொரு சமூக அநீதி யையும் அணுகு வது, ஆராய்வது –

 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 

தவிர, ஒரு பிரச்சினையைப் பேசுகிறேன் பேர்வழி என்று ஒரு PACKAGE ஆக பல பிரச்சினைகளைத் தொகுத்து அதில் ஒன்றை எதிர்ப்பவர் அதனோடு சேர்ந்து தரப் பட்டுள்ள அனைத்தையும் எதிர்த்தாக வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துவது இங்கே பெரும்பாலான சமூகநலக் குழுக்களிடையே கடைப் பிடிக்கப்பட்டுவரும் அடிப்படை நியதியாக இருக்கிறது.

 

அதிகாரம் இல்லாமலேயே நம்மிடையேதான் எத்தனை யெத்தனை அதிகார மையங்கள்….

 

இதில் ஏதேனும் ஒரு செல்வாக்குள்ள குழுவில் இடம் பெறாமல், அரசியல் கட்சியின் சார்பில் லாமல் தனி மனிதர் ஒருவர் மாற்றுக்கருத்துரைத் தால் அவர் எப்படியெல்லாம் கொச்சையாக மதிப்பழிக்கப்படுவார் என்பதை நம்மால் முகநூலிலேயே பார்க்க முடிகிறது.

 

ஆக, அதிகாரம் என்பது எங்கேயும் ஒரேமாதிரியாகவே செயல்படுகிறது. அடுத்தவரைத் தன் காலைப் பிடிக்குமாறு நேரடியாகச் சொல்லாவிட்டாலும் தன் கருத்துக்கு அடுத்தவர் அடிமையாக இருக்கவேண்டு மென்றே எதிர்பார்க்கிறது.

 

சமபந்திபோஜனம் போன்ற பொதுநிகழ்வைத் தாண்டி தனிவாழ்வில், பிறர் கண்களுக்குத் தட்டுப்படாத சமயங்களில் அந்தந்த சாதிக் காரர்கள் அவரவர் சாதிக்காரர்களை சமமாகத் தான் பாவிக்கிறார்களா? சமமாகத்தான் நடத்து கிறார்களா?

 

அரசியல் கட்சிகளிலெல்லாம் ஒரு சாதாரணத் தொண்ட ருக்குக்கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா? குறிப்பாக, மாற்றுக்கருத்தை முன்வைக்கும் சுதந்திரம் இருக்கிறதா? முன்வைக்கப்பட்டால் அது பொருட்படுத்தப்படுகிறதா?

 

அரசியல்கட்சிகள் வேண்டாம். எந்தவொரு நிறுவனத்திலும், பொதுக் கூட்டங்களிலும் படிநிலைகள் பராமரிக்கப்படுவதில்லையா?

 

சாதியற்ற மேலைய சமூகங்களில் சமத்துவம் மனிதர்களிடையே எல்லா நிலைகளிலும் பேணப்படுகிறதா?

 

எதிர்மறை பதில்களையே தரும் கேள்விகள் எத்தனை யெத்தனை மனதில்….

 

இந்த அதிகார மமதையே, அடக்கியாளும் வெறியே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறு குழந்தையை மூர்க்கமாக (அன்பென்று சொல்லியவண்ணமே) அடிக்கச் சொல்கிறது;

 

தன்னிடம் பணிபுரியும் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குகிறது – அவளுக்கு வேறு வழியில்லை – பொறுத்துக்கொண்டு போவதைத் தவிர என்ற நினைப்பில்.

 

அப்படியே தெரிந்தாலும் அவமானம் அவளுக்குத்தான் அதிகம் என்ற தெளிவில்.

 

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஒரு நல்ல கதாபாத்திரம் கணநேர உந்துதலில் இடறி விழுந்துவிடும்; அதை Tragic Flaw என்பார்கள். அந்த இடறலே அவன்/ அவள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிடும்.

 

நான் புகுமுக வகுப்பில் படித்த ஒரு கதை IMPULSE என்பது தலைப்பு என்று நினைக்கிறேன். ஒரு கடைக்குப் போகும் கதாநாயகன் கணநேர உந்து தலில் ஒரு பொருளைக் களவாடி விடுவான். பிடிபட்டுவிடுவான். அது எப்படியெல்லாம் அவன் வாழ்க்கையைத் தலைகீழாக்கிவிடுகிறது என்பது தான் கதை.

 

ஆனால், தன்னிடம் படிக்கும், பணிபுரியும், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களிடம் கேவல மாக தொடர்ச்சி யாக நடந்துகொள்பவர்கள் கயவர்கள்.

 

அப்படியே ஒரு உந்துதலில் தவறிழைத்துவிட்டா லும் அதன் மறுமுனையி லிருக்கும் பெண்ணுக்கு அதன் விளைவாய் ஏற்படும் அக, புற பாதிப்புகள் எத்தனை யெத்தனை.

 

ஒரு கொலைதானே செய்திருக்கிறார் என்று ஒரு கொலையாளியை விட்டுவிடுமா சட்டம்?

 

படைப்பாளிகளாவது சில அநியாயங்களைக் கண்டும் சில அநியாயங்களைக் காணாமலும் இருப்பவர்களாக இருக்கலாகாது, இருக்க மாட்டார்கள் என்ற என் எண்ணமும் நம்பிக்கையும் அதீதமோ? அநாவசியமோ?

 

இப்போதெல்லாம் கோபத்தைவிட வருத்தமே அதிகமாக மனதை ஆக்கிரமிக்கிறது.



தமிழகமே இதை………. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தமிழகமே இதை……….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தமிழகமே இதை எதிர்க்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை மதித்துப் போற்றுகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை பதித்துக்கொள்கிறது மனதில் என்கிறா ரொருவர்
தமிழகமே இதை மிதித்துச் செல்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை வரவேற்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை விரட்டியடிக்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை சிரமேற்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமேஇதை கரித்துக்கொட்டுகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதைப் புரிந்துகொள்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை அரிந்தெறிகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதைக் காறி உமிழ்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதைக் கூறி மகிழ்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இந்தத் தலைவர் பெயரை உச்சரிக்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இந்தத் தலைவர் பெயரால் எச்சரிக்கிறது என்கிறா ரொருவர்
தமிழகமே திரண்டெழுகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே புரண்டழுகிறது என்கிறா ரொருவர்
தமிழகமே இதை …………………………………………………………………………
தமிழகமே இதை ………………………………………………………………………..
தமிழகமே இதை………………………………………………………………………………
தமிழகமே இதை…………………………………………………………………………….
கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளவும் என்று
வகுப்புகளுக்கேற்ப கேள்வித்தாள்களில் தவறாமல் இடம்பெறுகிறது _ ’தமிழகமே இதை’
பதினாறு வருடங்களுக்கு முன்பு இறந்துபோன தாத்தா
பத்துவயதுச் சிறுவனாக மட்ராஸில் காலடியெடுத்துவைத்தபோது
பல வீடுகளின் கதவுகளில் ‘TOLET’ வார்த்தை பூட்டுக்குப் பூட்டாய் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து
ஏதும் விளங்காமல்
இத்தனை வீடுகளுக்கு உரிமையாளரான ’TOLET’
எத்தனை பெரிய பணக்காரராயிருக்கவேண்டும்!’
என்று வாயைப் பிளந்ததாக
வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் கதை
நினைவுக்கு வருகிறது ஏனோ…….
வீணாகும் தேர்தல் செலவை மிச்சப்படுத்த
வார்டு வார்டாக வரிசையில் மக்கள் நின்று
வாக்களிப்பதற்கு பதிலாக
’தமிழகமே’ என்ற ஒரேயொருவரை
ஓட்டுப்போடச் செய்துவிடுவார்களோ…..

உறக்கம் துரத்தும் கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உறக்கம் துரத்தும் கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
விழுங்கக் காத்திருக்கும் கடலாய்
நெருங்கிக்கொண்டிருக்கிறது உறக்கம்.
யாரேனும் துரத்தினால் ஓடுவதுதானே இயல்பு _
அது மரத்தைச் சுற்றியோடிப்பாடிக்கொண்டே
காதலியைத் துரத்தும்
சினிமாக் காதலனாக இருந்தாலும்கூட…
ஓடும் வேகத்தில் கால்தடுக்கி விழுந்துவிடலாகாது.
உறக்கத்தில் மரத்துப்போய்விடும் சிறகுகளைக்கொண்டு
எப்படிப் பறப்பது..?
உறங்கும்போதெல்லாம் சொப்பனம் வரும் என்று
உறுதியாகச் சொல்லமுடியாது….
எப்பொழுதும் வராது பீதிக்கனவு என்றும்.
தனக்குள்ளேயே என்னை வைத்திருக்கும் தூக்கத்திலிருந்து
வெளியேறும் வழியறியா ஏக்கம்
தாக்கித்தாக்கிச் சிதைவுறும் மனம்
தன்னைக் கவ்வப் பார்க்கும் தூக்கத்தையும்
துண்டுதுண்டாகச் சிதறடிக்கிறது.
அரைமணிநேரம் நீடிக்கும் போரின் இறுதியில்
உறக்கம் கொன்றதுபோக எஞ்சியிருக்கும்
அரைகுறைக் கவிதை யொன்று.