LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 7, 2021

வெறும் வானமும் வளர்கவிதையும் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வெறும் வானமும் வளர்கவிதையும்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வெறும் வானிருந்தொரு திடீர் மின்னல்
பளீரிடுவதுபோல்
ஒரு சொல்லுமில்லாமல் உருவாகிக்கொண்டிருக்கிறது கவிதை.
சிறிதும் பெரிதுமாய் வரிகளோடியவண்ணம்.
இரு நிறுத்தற்குறிகள் தம்மைத்தாமே
இடம்பொருத்திக்கொண்டுவிடுகின்றன.
ஓர் ஆச்சரியக்குறி அங்குமிங்குமலைந்துகொண்டிருக்க
அந்தரத்தில் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருக்கின்றன சில கேள்விக்குறிகள்.
திருத்தேர் வீதியுலா வரும்நேரம் இறையுருவை மறைத்து
ஏராளம்பேர் இருந்தும்
இருவிழிகளும் தாமாய் மூடிக்கொள்ள
உறுகைகள் அனிச்சையாய் கன்னங்களில் தட்டிக்கொள்ள
உள்ளே தெரிந்தும் தெரியாமலுமாய்
உறையலாகுங் கடவுள்
சிறுகணம் என்னில் இரண்டறக் கலத்தலாய்
சிதம்பர ரகசியமாய்
சித்திரத்துச் செந்தாமரைக்கு
சிறகு முளைத்ததாய்
முழம்போடும் வெறுங்கையெலாம்
வாசமல்லி பூப்பதாய்
வாய்கொள்ளா தாகத்தோடு
வெற்றிடத்திலிருந்து வாரியெடுக்கிறது
கவிதை.
பாயுமொளியில்லையென்றாலும்
பறவைகள் இல்லையென்றாலும்
ஓயாப்பெருங்கடலலைகளின் மேலாய் காணும்
வெறும் வான் வெறும் வான் அல்லவே!

No comments:

Post a Comment