LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 1, 2022

புரியுங்கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புரியுங்கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எனக்கே புரியாத ஒன்றை
எனக்குப் புரியவைக்கப் பார்க்கவும்
உங்களுக்குப் புரிகிறதா
என்று அன்போடு கேட்கவும்
உன்னை நான் புரிந்துகொள்ள
என்ன செய்யவேண்டும் என்று
நானறியாத என்னை யுன்னை
என்உன்னைக் கேட்கவும்
ஒரு சில வரிகளைக் கவிதையாக்குகிறேன்.
திருத்தமான உரு பெறாததால்
கருவுள்ளிருக்கும் சிசு பிசுபிசுத்துச்
சிதைந்துவிட்டது
என்று உருவேற்றுவோரைக்
கடவுள் மன்னிக்கட்டும்.
உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லையென்றாகும்
அருங்காதலை புகைப்படம் எடுத்து
ஆழியில் ஆணியடித்து மாட்டுவதுபோல்
ஆழ்மனதிலொரு கவிதையென்னைச்
சூழ்ந்தவண்ணம்....
அதன் நீர்மட்டம் உயர்ந்துகொண்டேபோகிறது.
கழுத்தைக் கடந்து மூக்கிலும் வாயிலும்
காதுகளிலும் நுழைவதற்கு முன்
வெளியேறிவிடவேண்டும்;
வெளியேற்றிவிடவேண்டும்.
உயிர் பெரிது;
கவிதை காற்றுபோல்.
தீண்டக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
உள்ளங்கைக்குள் ஒரு கணம்
தேக்கிவைக்க முடிந்தால்
பின் வேறென்ன வேண்டும்?
கள்வெறி கொள்ளும் மனம்
காத்திருக்கும்.
அட, யார் கல்லெறிந்தால் என்ன?
அடங்க மறுத்தெழும்
ஆவியுருக் கவிதை.

No comments:

Post a Comment