என் அம்மா
‘ரிஷி’

ஒருபோதும்
சுனாமியாகப் பொங்காத சாகரம்;
சூறாவளியாகாத காற்று;
சுட்டுப்பொசுக்காத நெருப்பு;
சுக்குநூறாகாத திடம்;
சடசடவென்று முறிந்துவிடாத மரம்;
கையில் தம்பிடிக் காசில்லாத நேரம்
என் அருகில்
கதவை விரியத்திறந்திருக்கும் சிறுசேமிப்பு வங்கி;
எரியுங் குளிரில் போர்த்தக் கிடைத்த
அரிய மேலங்கி;
இரவில் காலந்தாழ்த்தி படுக்கையில் தலைசாய்த்து
’பச்சை புட்டி அமிர்தாஞ்சனை நான்
நெற்றியில் தேய்த்துக் கொள்வதை
எனக்குத் தெரியாமல் கண் திறந்து
கவலையோடு பார்க்கும்
எதிர்பார்ப்பற்ற பரிவு;
என்னவென்று சொல்லவியலா அன்பு;
சுருங்கிவரும் உடலுக்குள் சதாசர்வகாலமும்
சுழன்றுபெருகியோடிக்கொண்டிருக்கும்
ஜீவநதி;
கருகாத பூ;
ஒண்டுக்குடித்தன வீடோ
இன்றுள்ள இரண்டறைகள் கொண்ட
வாடகைக் குடியிருப்போ _
அரண்மனை, அரியணை, அரசவை,
மணிமகுடப் பிரக்ஞையற்று
பிரபஞ்சவெளியில் மிதக்கும் ஒரு
பறவைச் சிறகிழை ;
தனதேயான வானவில் நிறங்களையெல்லாம்
வாரி வழங்கும் பட்டாம்பூச்சி்;
தொட்டுவிடலாகும் தொடுவானம்;
என்றும் என் கவிதையில்
எட்டாச் சொல்……

No comments:
Post a Comment