LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 11, 2015

இட்ட அடி நோக.... எடுத்த அடி கொப்பளிக்க…..கவிதைகள் - ரிஷி


’ரிஷி’யின் கவிதைகள்

             இட்ட அடி நோக....
            எடுத்த அடி கொப்பளிக்க…..
[* 5 ஜுலை 2015, திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது]



1
சில சமயம் பேருந்தில் _
சில சமயம் மின்ரயிலில் _
ஆட்டோஷேர் – ஆட்டோ _
நேயம் நாய்ப்பிழைப்பல்லோ’ என்று உச்சஸ்தாயியில்
நெக்குருகிப் பாடும் ஆண்குரல்
உச்சிமண்டையில் ஓங்கியறைய
விரையும்  ‘மாக்ஸி cab’  _
பல நேரம் பொடிநடையாய்……..
பப்பாதி ஓட்டமாய்

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

2
மொட்டைமாடிக்குச் சென்று
இன்னமும் நிழல் நிற்கும் மூன்று இடங்களில் இறைக்கிறேன்
அரிசியையும் கோதுமையையும்;
இரண்டொரு வாயகன்ற பாத்திரங்களில் நீரூற்றிவைக்கிறேன்.
காகங்களும் புறாக்களும் ஆரவாரக்கூச்சலிட்டவாறு
விர்ரென்று கீழிறங்கிவருகின்றன…..
அபூர்வமாய்ச் செடிகளில் பூத்திருப்பவைகளைக் கொய்வதா வேண்டாவா
என்று ஓரிரு நிமிடங்கள் குழம்பிநிற்கிறேன்….

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்…..

3
அருகே அமர்ந்திருப்பவர் ஏதோ கேட்க
சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறேன்.
அலுவலகத்தில் அதிகாரி தரும் கடிதத்தை
கணிணியில் தட்டச்சு செய்துதருகிறேன்.
கவனமாய் ‘ஷிப்ட் கீயை அழுத்தி
வுக்கு பதில் ‘’ விழுந்துவிடாமல்
பார்த்துக்கொள்கிறேன்…..

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

4
விருந்தினர் வருகை.
உறவினருக்கேயுரிய அறிவுரைகள் தரப்படுகின்றன:
”வருங்காலத்திற்கென்று இனியேனும் சேமிக்க ஆரம்பி”;
சரி என்பதாய் சிறிதே தலையசைக்கிறேன்.
காற்றில் ஈரப்பதம் அறவேயில்லை என்கிறார்.
ஆமோதிக்கிறேன்.
மாற்றம் வரும் தேர்தலில் என்கிறார்.
மறுப்புத் தெரிவிக்கவில்லை.
முத்தாய்ப்பாய் ”நல்லாயிரு” என்று விடைபெற்றுச் செல்பவரை
வாயில்வரை சென்று வழியனுப்பிவைக்கிறேன்….

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

5
மாலை ஸ்டிக்கர் பொட்டுகள் வாங்கச் செல்கிறேன்;
செருப்பு வாங்கிவருகிறேன்.
தக்கர் பாபா வித்யாலயாவில் நடக்கும் இலக்கியக் கூட்டத்தில்
தவறாமல் கலந்துகொள்கிறேன்
கோன் – ஐஸ்கிரீம் சாப்பிடுகிறேன்;
பன்னீர்சோடா குடிக்கிறேன்….

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்…..

6
கோயிலுக்குச் செல்கிறேன்.
குட்டிப்பெண்ணாய் அந்தக் கூடத்தில மர்ந்து
தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட சுலோகங்களை
முணுமுணுத்தபடி வலம் வருகிறேன்
கருங்கற்சுவர்களில் பதித்துள்ள திருவாசகப் பாடல்களை
வாய்விட்டுப் படிக்கிறேன்.
கடவுள் உண்டோஇல்லையோ
கசிந்துருகும் மனம் கண்களில் நீர் நிரம்பச் செய்கிறது.
பிராகாரத்தின் ஆடியில் தெரியும் என் முகம் யாரோவாக,
என் குரலை நான் கேட்கக் கிடைப்பது
ஆன பெறும் பேறாக ,
அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம்
ஆசிர்வதிக்கிறது வானம்….

இன்றின் எல்லாநேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

7
இரவு சாப்பிடுவதற்கு முன் சில மாத்திரைகள்….
சாப்பிட்ட பின் சில வேறு….
கால்ஷியம், விட்டமின், டானிக் மேலும்…..
வாயு ரத்த அழுத்தம் மலச்சிக்கல் சீதபேதி
கபம், இருமல், திடீர்க்காய்ச்சல் முழங்கால் குடைச்சல்……
தலைவலிக்கு அமிர்தாஞ்ஜன்;
இடுப்புவலிக்கு ஃப்ராஞ்ச் ஆயில்….
நீளும் பட்டியலுக்கப்பால் _

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்…..

8
உறங்கத் தவிக்கும் மனதில்
காலைக்காட்சியொன்று நிழலாடுகிறது
வலி(யும்)நிவாரண(மு)மாய்….?

அடிக்கொன்றாய் பல வண்ண வடிவங்களில்
அணிவகுத்து விரைந்துகொண்டிருக்கின்றன வாகனங்கள்.
சிக்னல் சபித்துக்கொண்டே பாதசாரிகள் கடந்துசெல்வதற்கான கோட்டில்
வழிமறித்து நிற்கும் சில.
வாழ்வின் பாதியில் விழித்திரை கிழிந்துபோன முதியவ ரொருவர்
கழியால் வழியைத் துழாவிச் செல்கிறார்
வெற்றுப்பார்வையும் மண்ணாந்தைச் சிரிப்புமாய்.
எனக்குப் பரிச்சயமானவர்தான்.
சாவுகிராக்கி’ என்று அடிக்குரலில் இரைகிறான் கார்வண்டிக்காரன்.
”செத்துப்போயேன்” என்று நேற்றுத்தான் வெளியே தள்ளிவிட்டான் மகன்
இவருடைய சொத்தையெல்லாம் எழுதிவாங்கிக்கொண்ட பின்.
பத்தினியோ பதினைந்துவருடங்களுக்கு முன்னால்
பத்துலட்சத்திற்குமேல் பணத்தோடு போய்விட்டிருந்தாள்
பக்கத்துவீட்டுக்காரனோடு.









Tuesday, July 7, 2015

கடந்துவிடும் இதுவும்……’ரிஷி’யின் கவிதைகள்

’ரிஷி’யின் கவிதைகள்

            கடந்துவிடும் இதுவும்……

ரிஷி


1.   அறிவிப்பு

அடுத்தவேளை சோற்றுக்காக
அவசர அவசரமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அழைக்கும் தொலைபேசியின் மறுமுனைப் பெண்குரல்
தன் தத்துப்பிள்ளையை சிலமணிநேரங்கள்
எனக்குக் காதலனாய் குத்தகைக்கு விடுவதாய்
அறிவிக்கிறது.
என்ன மாதிரியான விளம்பர உலகம் இது….
வசதிபடைத்தவர்களின் வாய்வழி
எப்படியெல்லாம் வக்கரித்துப்போகிறது அன்பு…
உப்புக்கரிக்கும் துக்கத்தை என் செய்வது….


2.   இடைவெளி

ஒரு ஊடகத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது அன்பு.
ஊடகம் உயிருள்ளதென்கையில்
உணர்த்தப்படும் அன்பா, ஊடகமா
எது முன்னிலை பெறுகிறது…?
என்றெழும் கேள்வி
தவிர்க்கமுடியாமல்
திணறும் சுவாசமாக.


3.நரமாமிசம்

அன்பிலூறிய மனம் ஒன்றை
அறுபது துண்டங்களாக வெட்டி யெடுத்து
அவற்றில் ஒரு சிலவற்றை
அண்டங்காக்கைகளுக்குத்  தின்னக் கொடுக்கிறார்கள்.
பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் பெருவிருப்பில்
அலைபேசியில் படம்பிடித்துக்கொள்கிறார்கள் அதை.
நாக்கைச் சப்புக்கொட்டியவாறு சொல்லிக்கொள்ளவும் கூடும்:
 “நரமாமிசம் தனிருசிதான்”.


4.எச்சில்

வேலை, வெய்யில் அன்னபிற வரவாக்கும் மிகு அயர்வில்
வாடிச் சோர்ந்து
சற்றே இளைப்பாற நாடிவந்தேன்
நதியோரமாய் அந்தரத்தில் நீண்டகன்ற திண்ணைப்பக்கம்.
மடியில் கனமில்லை.
மனமே தலையணையாய்
கண்ணயர்ந்துபோனேன் காற்றின் தண்வருடலில்.
போகிறபோக்கில் ஏனோ அத்தனை வன்மமும் அலட்சியமுமாய்
என்மீது துப்பிவிட்டுச் செல்கிறார்கள்.


5.ஊழ்வினை.

மேலோங்கி வளர்ந்திருந்த மரத்தின் கிளைகளை
மும்முரமாய் உலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
மலர்மழை பொழியச்செய்யவோ
என்று ஒருகணம் மனம் நெகிழ்ந்துபோகிறது….
இல்லை, இலைகளிடையே சிக்கிக்கிடக்கும் அம்பு
நேரே என் நெஞ்சில் பாயும்படியாக
விரைவாய் விழச் செய்தபடி
அவர்களது ஒருநாள் நிறைவடைகிறது.


6. செத்தகாட்சிச்சாலை

வளிமண்டல அடுக்கொன்றில் கரியமிலவாயு அடர்ந்துகொண்டே போகிறது.
இரண்டு பிரும்மாண்ட விமானங்கள் மாயமாய் மறைந்துவிட்டன.
நட்சத்திரங்கள்கூடத் தொடர்ச்சியாகக் களவாடப்பட்டுவருகின்றன என்று கேள்வி…..
செத்தகாட்சிசாலையின் கூண்டுகளெங்கும் கம்பிகளுக்குப் பின் மனிதர்கள்
எட்டுக் காலும் ஈரிரண்டு வாலுமாய்….
ஆயினும் இந்த எளிய மனம் மட்டும் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறது
புல்லின் நுனியில் காணும் பனித்துளி நிரந்த மென்று.


 7. நான் கட்டிவளர்த்திருந்த உலகு

உண்மைதான், பெயரில் என்ன இருக்கிறது……
புனைப்பெயரில் மட்டும்….
எட்டும் அறிவிற்கப்பால்
என் புனைப்பெயரில் நான் கட்டிவளர்த்திருந்த உலகின்
வெட்டுக்கிளிகளும் வண்ணத்துப்பூச்சிகளும்
விவரிக்கவியலா அவசங்களும் பரவசங்களும்
புதிதாய் என் புனைப்பெயரில்
சிற்றிதழ்வெளியில் களமிறக்கப்பட்டிருக்கும்
(சட்டச்சிக்கலுக்கு ஏதும் வழியில்லை என்பதாலோ)
கவிதைகளைக் கண்டு
நேயம் பொய்த்த நெஞ்சின் பாங்கில்
கூடிழந்து, நட்ட நடு வெளியில் நிலைகுத்தி நின்றவாறு…..

8. பன்மடங்கு

என் னொரு வார்த்தைப் பட்டு வெட்டுப்படலாகும் இதயத்திலிருந்து
கசியும் ரத்தச்சொட்டு
இன்னுமின்னும் என்னைப் பட்டுப்போகச் செய்யும்.
அன்பைத் துண்டாடும் வன்முறைப் பிரயோகமாய்
அடுத்தடுத்துக் கிளம்பும் வீச்சரிவாள்களோ
என் ஆன்மாவைப் பிளந்தவண்ணம்….


 9. நீள்பயணம்

பத்துவருடத்தை நீட்டிப்போட்டதிலான
பல்லாயிரங் காத தூரமெல்லாம்
பிரளயங்கள் _
உருள்பாறைகள் _
முறிமரங்கள் _
பெருவாகனத் தடம்புரளல்கள் _
பசிவயிறுகள் _
பிரிவின் உதிரப்பெருக்கு _
இறந்தவர்களின் அழுகிய உடலங்கள் _
சிறிதுசிறிதாக அழிந்துபடும் வழித்தடங்கள்…..
கண்டுருகிச் சோர்ந்திறுகிச்
சிதையும் இதயம்
இன்னும் போகவேண்டும் நீள்பயணம்.


10.   இயக்கவியல்

எத்தனைமுறை எண்ணினாலும்
கிடைக்கும் விடை பூஜ்யமாகிறது.
”கணக்குத் தெரியவில்லை யுனக்கு
வடிகட்டின மக்கு” எனக்
கைகொட்டிச் சிரித்தபடி செல்கிறார்கள்
‘காட்டேஜு’க்கு.
மடைதிறக்கும் கையறுநிலை.

மீட்டெடுக்கும் ‘CODE NAME GOD’.


(மலைகள்.காம் ஜூலை முதல் இதழில் வெளியாகியுள்ளது)
 Ø      

கஸ்தூரி - சிறுகதை

சிறுகதை


கஸ்தூரி
’அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)

{’அநாமிகா கதைகள்’ -  சிறுகதைத் தொகுப்பு, கலைஞன் பதிப்பகம், 2002}

[இம்மாத பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது]





”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலு மாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போன போது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.


“ஸார், இது என்னுடைய இடம்.”


“மன்னிக்கவும், இது என்னுடையது.”


அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பது தான் உலகி லேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப் பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்த தற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..


“என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”


“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடைய துன்னு சொல்றார்.”


”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களு டைய தென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பா கக் கூறினார்.


“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதற விட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச் சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப் பக்கம் அமர்ந்திருந்தவ ரிடம் கொண்டு சென்றார்.


“ஐயா, நீங்க அடுத்த வண்டிக்குப் போகணும். இது ஒன்பதரை வண்டி. லேட்டு. அதான் குழப்பம்.”


“அப்ப, என் பத்து மணி வண்டி பத்தரைக்கு வருமா?”


“பத்தரையும் ஆகலாம், பனிரெண்டும் ஆக லாம். எதைத் தான் உறுதியாகச் சொல்ல முடிகிறது?”


என் முறைப்பும், ஓட்டுநரின் எக்ஸ்பர்ட் காமெண்ட்டும் மோதிக்கொண்ட கணத்தில் என்னிடமிருந்து வாங்கப் பெற்ற பயணச்சீட்டு என் கையில் பரிவோடு திணிக்கப் பட, நான் இறங்கிக்கொண்டேன்.


அடுத்த வண்டி இரண்டுபேருடைய கணிப்பிற்கும் பொதுவில் பதினோறு மணியளவில் வந்தது. ஏறி எனது பதினான்காம் எண் இருக்கையை அடைந்து அது காலியாக இருக்கக்கண்ட ஆசுவா சத்தில் அமர்ந்து நடத்துநரிடம் காண்பிக்க சௌகரியமாய் பயணச் சீட்டைப் பிரித்து நீவிவிட்டபோதுதான் பார்த்தேன் – என் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் ‘கஸ்தூரி’ என்ற பெயர் இருந்தது.


நானேதான் போய் பயணச்சீட்டு வாங்கியது. பின், எப்படி….?


வண்டி கிளம்பிவிட்டது.


கஸ்தூரியாகப் பயணம் செய்வது என்ற தீர்மா னத்தில் நின்று நிலைக்கவேண்டிய நிர்பந்தம்.


‘பெண்களுக்கென்று தனி இருக்கைகள் சில இருக்கும்போது இங்கே எதற்கு ஒரு பெண்ணுக்கு இடம் தரப்படவேண்டும்…..?’ இந்தக் கேள்வியும், நடத்துனர் எந்தவித சந்தேகப் பார்வையும் இன்றி பயணச் சீட்டைப் பார்வையிட்டுத் திரும்பத் தந்த விதமும் கஸ்தூரி என்பது ஓர் ஆணின் பெயராகவே இருக்கக்கூடும் என்று கருத வைத்தது.


போன வண்டியில் ‘டபுள் செக்’ செய்தவர் தவறுதலாக மாற்றித் தந்திருக்க வேண்டும். அப்படியானால், என் பெயரிலும் யாரோ பயணம் செய்துகொண்டிருப்பார். அது யாராக இருக்கும்…?


கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது போன்ற குறு குறுப்பு உள்ளே ஏற்பட்டது.


கஸ்தூரியின் பயணம் எதற்காக மேற்கொள் ளப்பட்டிருக்கும்? கஸ்தூரி என்ற மனிதன் எப்படிப்பட்டவன்? வாழ்வில் இந்தத் தருணத் தில் அவனுடைய இழப்புகளும் வரவுகளும் என்னென்ன? அவனுடைய வாழ்க்கையில் எத்தனை பெண்கள் நேரிட்டிருப்பார்கள்? எனக்கெதற்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்….?


ஜன்னல் வழியாகப் பார்வையையோட்டி வந்ததில் நிலாவும் கூடவே ஓடிவந்தது.


* * *


YOUTH WILL BE SERVED’. தோற்கத்தான் போகி றோம் என்று தெரிந்தே, தோற்றாலும் கிடைக்கக் கூடிய பணம் பசியைப் போக்கிக்கொள்ள உதவுமே என்பதற் காய், இளைஞனை எதிர்த்துக் களமிறங்கும் முன்னா ளைய குத்துச்சண்டை வீரனின் வாசகம்.   JACK LONDONஇன் A PIECE OF STEAK….. படித்த கதையின் வரியும் கூடவே ஓடி வந்தது.


பாவனை வெகுளித்தனத்தில் அல்லது பட்ட வர்த்தன அலட்சியத்தில் ‘படா’ரெனத் தழைந்து முழு மார்புகளையும் தளும்ப வைத்துக் காட்டும் பெண்களை எனக்குப் பிடிக்காது. ஆனால் நிறைய பேருக்கு அத்தகைய தளுக்கும் குலுக்கும் தேவையாக இருக்கிறதுதான். நானாகி யிருக்கும் கஸ்தூரி க்கும் தேவையாக இருக்குமோ…..’


கஸ்தூரி கல்யாணம் ஆனவனா, ஆகா தவனா….


நிலா கூடவே ஓடி வருவது இம்சையாக இருந்தது…. ‘எல்லோருடனும் ஓடி ஓடி என்ன நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறாய் நீ… எல்லோரிடமும் ஒரேயளவாய் அன்பு செலுத்த முடியும் என்றா? எல்லோருக்கும் ஒரேயள வாய் முக்கியத்துவம் தரமுடியும் என்றா…?’


* * *


உங்களுக்கு வேண்டாத சந்தேகம். உடைமை யுணர்வு.”


“இருக்கலாம்”


“என்னோடு ஒரே செக்‌ஷனில் பணிபுரிபவரோடு நான் சினேகமாகப் பழகுவதில் என்ன தவறு?’


“தவறு என்று நான் சொல்லவில்லையே.”


“பின், உம்மென்று நீங்கள் இருப்பதற்கு அது தானே காரணம்?”


“இன்னும் சொல்லேன் – ஜாங்கிரி இனிக்கு மென்றால் மைசூர்பாகு கசக்குமென்றா அர்த்தம்? கரும்பு தித்திக்குமென்றால் கல்கண்டு கசக்குமென்றா அர்த்தம்?  இன்ன பிற…. I AM TIRED அமுதா. என்னைப் பொறுத்தவரை பொஸ ஸிவ்நெஸ், பொறாமை எல்லாமும் எந்த உறவிலும் தவிர்க்க முடியாதது. ஆண் – பெண் உறவில் அதற்குக்  கூடுதல் இடமும் உண்டு. TWO IS COMPANY; THREE IS CROWD கேள்விப்பட்டிருக்கிறாயல்லவா?”


“இதென்ன அநாவசியப் பேச்சு? இப்போது நாம் மட்டும் தானே இருக்கிறோம். அவன் வருவது  பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்ன நாளிலிருந்து நான் அவனை இங்கே கூட்டிக்கொண்டே வருவதில்லையே_”


கசப்பாய் ஒரு சிரிப்பு வெளிப்பட்டது என்னி டமிருந்து. கஸ்தூரியிடமிருந்தும் வெளிப்பட் டிருக்குமோ….


“நீ அவனை எங்கேயும் விட்டுவிட்டு வருவதில்லை அமுதா. என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அவனைக் கூட்டிக் கொண்டு வருகிறாய். அவனைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்கிறாய். எங்களிருவரிடையே நட்பு உண்டாக்குவதாய் நீ மேற்கொள்ளும் முயற்சிகளெல்லாம் உண்மையில் எங்களி டையே ஒரு நிழல் யுத்தத்தைத் தான் முனைப்பாக நடத்துகின்றன. நீ என்னை அணைக்கும் போதெல்லாம் நமக்கிடையே அவன் இருப்பதாகவும், நான் உன்னை முத்தமிடும் போதெல்லாம் என் உதடுகளில் நீ அவனுடையதை உணர்வதாகவும்…. எத்தனை நாட்கள் எத்தனை அல்பமாக உணர்கிறேன் தெரியுமா?”


சொல்லும்போதே ஒரு கழிவிரக்கத்தில் என் கண்கள் சுரப்பதை முள்வலியாய் உள்வாங்கிக் கொள்கிறேன்.


“இத்தனை குறுகிய மனதா உங்களுக்கு?”


“பார்த்தாயா, இப்படியே தொடர்ந்தால் இனி நான் உன்னை ‘வேசி’ என்பேன். நீ என்னை MCP என்பாய். இதுநாள் வரை நாம் அனுபவித்த இனிமையெல்லாம் மறைந்துபோகும்வரை ஒரு வரையொருவர் தூற்றிக் கொண்டே தொடர்ந்து காதலித்துவரவேண்டும் என்று என்ன கட்டாயம் சொல்?.”


ஒரு மன்றாடலாய் என் குரல் தெறித்தது.


“நான் இனிமேல் அவனைப் பார்க்கக்கூடாது, பேசக் கூடாது – அவ்வளவு தானே?”


அப்படிச் சொல்ல நான் யார்? அப்படி நான் சொல்லச் சொல்ல அவனுடனான உன் சூக்கும சந்திப்புகள் அதிகரித்துக்கொண்டேதான் போகும்…. இனிமேல் நாமிருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ள வேண்டாம், பேசிக்கொள்ள வேண்டாம், பரஸ்பர நல்லெண்ணங்களோடு பிரிந்துவிடுவோம் என்றுதான் நான் சொல்கிறேன்….” 

– எனக்குள் வழிந்தோடுகின்ற குருதி எத்தனைக் குடங்கள் இருக்கும்….. மிகவும் பலவீனமாய் உணர்கிறேன்….


“இது EMOTIONAL BLACKMAIL”


“உன்னைப் பொறுத்தவரை. எனக்கு, என் அமைதிக்கான விண்ணப்பம்.”


“நான் உன் நிம்மதியைக் கெடுக்கிறேன் என்கிறா யல்லவா?”


“நீ வேண்டுமென்றே செய்கிறாய் என்று நான் சொல்ல வில்லை. ஆனால் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறாய்.”


“இது அநியாயப்பழி/”


“இருக்கலாம்.”


“நம்முடைய பிரிவுக்கு நீதான் காரணம்.”


“நேரிடைக் காரணம், அல்லது, உடனடிக் காரணம் மட்டுமே.”


* * *


“கஸ்தூரி…. உங்களுக்குத் தெரியுமா, இறுதி வரை, ஒரே யொரு தடவை கூட, ஒரு பேச்சுக்காகக் கூட, ‘அவனை விட நீதான் எனக்கு முக்கியம்’, என்று அவள் கூற வில்லை. அப்படி எதிர்பார்ப்பது என் ஆணாதிக்க மனோ பாவம் என்கிறீர்களா? TO HELL WITH YOU. அவள் என்னை மாங்காய்மடையனாக்குவது மட்டும் சரியா? இன்னொரு ஆணோடு பேசுவதில் என்ன தவறு என்கிறீர் களா? படுத்துக்கொள்ளக்கூடச் செய்யட் டும். தவ றில்லை. அதற்கு என்னால் ‘விளக்குப் பிடித்துக்கொண் டிருக்க முடியாது ‘ என்றுதான் சொல்கிறேன். அப்படிச் சொல்ல எனக்குக் கட்டாயம் உரிமையிருக்கிறது.


நாளை தீபாவளி. பண்டிகைக் கொண்டாட்டம் என்ற பெயரில் வீட்டில் ‘ஜமா’ கூடும். கட்டாயம் அவன் வரு வான். என்னைவிட எட்டுவயது இளையவன். அவளை விட இரண்டு வயது பெரியவன்.


‘YOUTH WILL BE SERVED’….’


திடுமென ஞாபகம் வந்தவர்களாய் என்னைக் கண்களால் சுட்டிக்காட்டித் தங்களுக்குள் மௌனமாய் எதையோ குறிப் பாலுணர்த்திக் கொண்டு, வரவழைத்துக்கொண்ட அக்கறை யோடு வேறு வேறு விஷயங்களை என்னிடம் பேசப்புகுவார் கள். அதைவிட அதிகமாய் ஒரு மனிதனை அவமானப்படுத்த முடியுமா கஸ்தூரி? சொல்லுங்கள்? அதனால்தான் இன்று கிளம்பிவிட்டேன். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்து தேனியைத் தாண்டியுள்ள மலையோர கிராமங்களில் ஒன்றான ‘ஏமாந்தான்பேட்டை’க்குக் கிளம்பிவிட்டேன். இயற்கையோடும் தனிமையோடும் அளவளாவுவதும் உறவாடுவதும்தான் உண்மை யிலேயே ஆசுவாசம் தரும் விஷயமாகத் தோன்றுகிறது கஸ்தூரி…..


* * *


வண்டியின் தாலாட்டில் அரைத்தூக்கத்தில் ஆழ்கி றேன்…. பக்கத்தில் அமர்ந்தபடி கஸ்தூரி யிடம் கலகல வென்று அமுதா பேசிக்கொண்டே வர, அதனாலெல்லாம் கவரப்படா தவராய் கஸ்தூரி அரைச்சொல், ஒரு சொல்லில் எதிர்வினை யாற்றிக்கொண்டிருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது எனக்கு. அதைவிட, அடிக்கொரு தரம் குனியும் அவளுடைய தளும்பும் மார்பகங்கள் கஸ்தூரியை அலைக்கழிக்கவில்லை என்ற விஷயம் என் மனதின் அதலபாதாளங்களையெல் லாம் சீர்படுத்தியது.


* * *

‘கஸ்தூரி….நீங்கள் உண்மையாலுமே மனத் திடம் வாய்ந்த நேர்மையான மனிதர்தான். உங்களால் என் தரப்பு நியாயத்தைக் கண்டிப்பாய் உள்வாங்கிக்கொள்ள முடியும்…. ஆனால், அதற்காய், அமுதாவை ‘ஆம்புளைப்பொறுக்கி’  என்ற மாதிரியெல்லாம் எண்ணிவிடாதீர்கள் ப்ளீஸ்…. அவள் மட்டும் என் வாழ்வில் எதிர்படாமலிருந் திருந்தால் எனக்குக் கைகால்களின் பயனெல்லாம் காலை-மாலைக் கடன்களை முடிப்பது மட்டுமே என்றாகி யிருக்கும்… சங்கோஜியான, SOLITARY REEPERஆன என்னைத் தேடித்தேடி வந்து அவள் கொண்டாடிய சொந்தம் எனக்கு வாழ்வில் கிட்டிய வரப்பிரசாதம். அருகேக ஏக, உரிமைப் பிரச்னைகள் விசுவரூபமெடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால்தான் பிரிவு மேல் என்று தோன்றுகிறது. எது என்னுடையதோ, எது எனக்கு விதிக்கப்பட்டிருக் கிறதோ அது என்னிடமே வரும். ஆனால், நான் ஞானி யில்லை கஸ்தூரி… வலி கூடிய சாதாரண மனிதன். ஒரு இதயத்தில் ஒரு நேரத்தில் ஒருவரைத் தவிர அதிகமாய் ஏந்திக்கொள்ளத் தெரியாதவன்; முடியாதவன். ஆனால், அமுதா சென்ற விடமெல்லாம் அன்பர்களைத் திரட்டிக் கொள்பவள். அதில் அவளுக்கு மமதை என்று சொல்ல முடியாது… ஆனாலும் மைய அச்சாக அமைந்து பல வட்டங் களை ஒரே சமயத்தில் சுழலச் செய்வதில் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது? எல்லா வட்டமாகவும் நான் இருக்க ஆசைப் பட்டது என் தவறுதான். அதனால்தான், நானே எனக் கான அச்சும் வட்டமுமாகிவிடுவது என்று முடிவெடுத் தேன்… என் முடிவு சரிதானே கஸ்தூரி….?


’கஸ்தூரீ…. நீங்களும் ஆண் தானா? அல்லது, பெண்ணா? பெண் என்றால் நான் பேசியதை நீங்களும் ஆணாதிக்கப் பன்றித்தனமாகத்தான் பகுப்பீர்கள். இன்னொருவனிடம் பேசினாலே இவனுங்களுக்கெல்லாம் ஜன்னி கண்டுவிடும் என்று குதறுவீர்கள். அமுதாவின் சினேகிதர்களெல்லாம்  அவளோடு படுக்கையிலிருக்கக் கண்டால் மட்டும்தான் என் மனம் பதற வேண்டும் என்பது என்னவிதமான நியதி? அன் பின் விஸ்தீரணத்தையே குறுக்கிவிடுமல்லவா இத்தகைய நியதிகள்…?


என் உடைமையுணர்வைத்தான் நான் உண்மை யான அன் பாக எடுத்துக்காட்ட முயல்கிறேனா? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்கிறீர்களா? அதனால் தானோ என்னவோ, புதிதாய் ஓர் அன்பு உள்ளே நுழைய, உள்ளிருக் கும் பழைய அன்பு வெளியேறிவிடுவது நேர் கிறது.


என் அணுகுமுறை சரிதானே? சொல்லுங்கள் கஸ்தூரி… நீங்கள் ஆணா – பெண்ணா? கடைசி நேரத்தில் பெண்களுக் கான இருக்கைகளில் இடமில்லாமல் பொது இருக் கைகளில் இடம்தரும்படியாகிவிட்டதா? அறுபதுக்கும் இருபதுக்கும் இடையில், மணமாகியோ, ஆகாமலோ, கணவன் இருந்தோ, இல்லாமலோ, அவ்வண்ணமே கனவுகள் இருந்தோ இல்லா மலோ, ஒரு பெண்ணாக நீங்களிருக்கும் பட்சத்தில், ஆணுக் கும் பெண்ணுக்கும் உடல் ரீதியானவற்றைத் தவிர்த்து மற்றபடி என்ன வித்தியாசமிருக்க முடியும் என்று என்றாவது யோசித் திருக்கிறீர்களா?


என்னில் பொருந்தியுள்ள கஸ்தூரி அதை நிச்சயம் யோசித் திருக்கும். அஃறிணையாக அல்ல, அன்பின் மிகுதியாலே ‘இருக்கும்’ என்கிறேன். கஸ்தூரி…. என்னில் பொருந்தி யுள்ள கஸ்தூரியாகிய நீங்கள்தான் எத்தனை அழகு! என்றும் மாறா இளமையோடு, எனக்கேயெனக்கான அன்போடு என்றைக்குமாய் கூடவரும் நீங்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படி ‘ஏமாந்தான்பேட்டை’க்குப் போவது கஸ்தூரீ… வாருங்கள், இந்த இரவில் நம்மோடு வரும் நிலவொளியின் துணையோடு, ஜன்னல் வழியே பறந்து சென்றுவிடலாம்…. அப்படி மட்டும் செய்ய முடிந்து விட்டால்,……



Ø