LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, August 2, 2021

3.என் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

  3.என் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

உன்கதையை எழுதி

 

என்கதை யென்கிறாய்


பாவி யென்கிறாய்

 

பாவம் என்கிறாய்


கோவித்துக்கொண்டு ஒரே 


தாவாய்த் தாவி


ஓங்கியறைய வருகிறாய்


ஆவேசம் எதற்கு?


கூவிக்கூவிக் கடைவிரித்தாலும்


கொள்வாரில்லாத ஊரில்


தாவித்திரிந்தலைந்து


கொண்டிருப்பது


நீயுமல்லாத நானுமல்லாத


ஆவி!



 

4.முன் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 4.முன் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


முற்றும் போட்ட பின்பு


சற்றும் எதிர்பாராமல்


கதையின் நடுப்பகுதியிலிருந்து


எழுந்துவந்த சொல்லொன்று


என்னோடு முடித்திருந்தால்


எத்தனையோ

 நன்றாயிருந்திருக்குமே


எனக் கண்ணீர்மல்கச் சொன்னது


blurb ஆகாமல்


காற்றோடு கலந்துவிட்டது.


5. பின் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

5. பின் கதை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



முன்பின் உண்டோ இதுபோன்றதொரு இன்கதை

என்றவரிடம்


ஏற்கெனவே இந்தக்கதையைப்


படித்திருக்கிறேன்


என்றொரு வாசகர் சொல்ல


உடனடியாக அதற்கு மறுப்புத்


தெரிவிக்குமாறும்


அல்லது விடுபட்ட ’இதைப்போன்ற’


உடனடியாக


சேர்க்கப்படவேண்டுமென்றும்


அன்பின் மிகுதியால் படைப்பாளி


காட்டமாய்க் கேட்டுக்கொண்ட


ஆறாவது நிமிடத்தில்


குருதிவெள்ளம்


உடைப்பெடுக்கும்படியாக


அந்த நல்வாசக நெஞ்சாங்கூட்டில்


அதிரடியாக நுழைந்து துளைத்தது


துருப்பிடித்த தோட்டாவொன்று.

6..நுண் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 6..நுண் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)



அடுத்திருந்த வீட்டை
இடித்துக்கட்டிக்கொண்டிருந்ததால்
திரட்டித் திங்க வாகாய்
விரிந்து பரந்து குமிந்திருந்தது மண்.
தினமும் குழந்தையைத் திங்கவிட்டு
பின் அதன் வாயை வலிக்குமளவு
அகல விரித்துப் பார்த்தாள்
மண் கண்டாள் மண்ணே கண்டாள்
பின்
வயிற்றுவலியில் வீறிட்டழுத குழந்தையை
இரண்டடி ஆத்திரம் தீர அடித்துவிட்டு
இடுப்பில் தூக்கிக்கொண்டு
மருத்துவமனைக்கு ஓடினாள்.

7.வன் கதை - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 7.வன் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

கன்’ வேண்டும் ‘கன்’ வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை.

ஒன்றுக்கிரண்டு இருக்கிறதே கண் உனக்கு

என்று கொஞ்சினாள் தாய்

‘கன்’ வேண்டும் ‘கன்’ வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை

‘ன்’ அல்ல ’ண்’ சொல்லு பார்க்கலாம்

என்று திருத்தினாள் குட்டி அக்கா

கன் வேண்டும் கன் வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை

இன்னும் நன்றாகப் பழகவேண்டும் தமிழ்

என்றார் தாத்தா

சின்னப்பையன் தானே போகப்போகப் பழகும்

என்றார் தந்தை

கண்ணையுருட்டி புண்ணாகிப்போன மனதுடன்

தொலைக்காட்சிப்பெட்டிக்குள் பாய்ந்த குழந்தை

அங்கு சுட்டுக்கொண்டிருந்த நாற்பது

கதாநாயகர்களின்

இரண்டு துப்பாக்கிகளைப் பறித்து

கைக்கொன்றாய்ப் பிடித்துக்கொண்டு

வாயால்

சரமாரியாகச் சுட ஆரம்பித்தது.

 

 

8. கால் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 8. கால் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


 

கால் அரை முக்கால்


கணக்கிற்கப்பால்……..


சர்க்கரை யாக முடியுமா


உப்பால்?


நாக்காக முடியுமோ மூக்கால்?


ஆயின், கதையாகும் கதையாகாக்


கதையும்


கதைகதையெனக் கதைக்குங்கால்!

 

 

9.அரைக் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 9.அரைக் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


ஆறே வார்த்தைகளில் அருமையான

 

கதையை எழுத ஆரம்பித்தவர்


எட்டரை வார்த்தைகளில் எழுதி


முடித்தார்.


இரண்டு அதிகமானதைப் பற்றி


ஒருவர் அதிருப்தி தெரிவிக்க


இரண்டரை அதிகமானதே


இக்கதையின்


பரிபூரணத்துவம் என்றார்


இன்னொருவர்.


கேட்டுக்கொண்டிருந்த அரை


கரையத் தொடங்கியது.

 

10.சுட்டிக் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

10.சுட்டிக் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

சுட்டி என்பது சின்னப்பையனைக்


குறிக்கலாம்


நெத்திச்சுட்டியைக் குறிக்கலாம்


சட்டியிலேற்பட்ட அச்சுப்பிழையாக


இருக்கலாம்


இந்தத் தலைப்பு ஒரு வரியானால்


அடுத்த வரியில் புட்டி துட்டி முட்டி


ஆகிய மூன்று சொற்களில் ஒன்று


இடம்பெறக்கூடும்


தொட்டி வட்டி மெட்டி


யென்பதாகவும் இடம்பெறலாம்….


வட்டநிலா சதுரமாகி


விட்டத்தினூடாய்


இறங்கிவரக் கண்டு


Hamlet_இன் Nutshell வாழ்க்கை


அத்துப்படியானவர்கள்


கட்டங்கட்டி ஒளிரும்


விளம்பரவாசகங்களை


கடந்துபோய்விடுகிறார்கள்.

 

11.பூதக்கண்ணாடிக் கதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 11.பூதக்கண்ணாடிக் கதை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)














சின்னச்சின்ன 
எழுத்தெல்லாம்
என்னமாய் பெரிதாய்த் தெரிகிறது
பார் என்று
கண்ணை விரித்துக் கதைசொல்லும்
தகப்பனிடம்
இன்னும் பூதம் வரவில்லையே என்று
சலிப்போடு கேட்டு
கொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தான் குட்டிப்பையன்.

Saturday, July 24, 2021

புதிரின் புதிர் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புதிரின் புதிர்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்) 


நிசப்தத்தின் சப்தம் அல்லது மௌனத்தின் வார்த்தை

எதுவாயிருந்தாலும் எல்லாவற்றுக்குமே

கேட்கும் எல்லை என்று ஒன்று உண்டு.

நாட்பட நாட்பட நினைவின் வயோதிகக் காதுகளில்

ஒலிபுகும் வழி குறுகிக்கொண்டே போகும்.

வயோதிகம் வருடங்களாலானதா என்ற கேள்வி

கூடவே வரும் எப்போதும்.

ஒரு புகைப்படம் காலத்தின் சிறு துணுக்கு;

அதுவே காலமாகிவிடாது. என்றபோதும்

காலமாகிவிட்ட காலத்துணுக்கைக்

காலமாக்கவும் காலமாகாமல் காக்கவும்

கால்பதியாக் காலத்தை கால் அரை முக்காலாய்

வாழ்ந்துபார்க்கவும்

காலங்காலமாய் அவரவர்க்கு அவரவர் காலம்

அடுத்தடுத்த இடமாக வாழ்வில் குடிபெயரும் நேரம்

விளக்கவொண்ணாதது தடமழியும் நினைவின் பாரம்

அளக்கமுடியாதது பிஎஸ்எஸ்பி பள்ளிக்கும்

வைரமுத்து வீட்டுக்கும் உள்ள இடைத்தூரம்