LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, April 15, 2025

சொப்பனவாழ்வு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொப்பனவாழ்வு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கனவாய்ப்போன கனவு
கனவாகிப்போகாமலிருக்கும் கனவில்
கனவாய்ப்போவதுதான் கனவின்
விதியும் நியதியுமென
கனவில் ஒலித்த அசரீரியின் கனவுப்
பாதையில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கும்
கால்களின் கனவில் தொலைவு தொலைந்துபோக
கருக்கலில் அலைமேல் நடந்துகொண்டிருக்கும்
நானெனும் ஆனபெருங்கனவின் ஒருமுனை
விழிப்பின் வெளிர்பழுப்பில் சிக்குண்டுகிடக்க
மறுமுனையொரு நெடுங்கனவாய் நீளும்
வானவில்லின் வர்ணஜாலங்களில்.
s

கவிதானுபவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதானுபவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உபதேசிக்கும் கவிதைகளை
எழுதிக்கொண்டே போனவருடைய
வரிகளெல்லாம்
ஒவ்வொன்றாய் மலையுச்சியிலிருந்து
உருண்டோடி
அதலபாதாளத்தில் விழுவதையறியாமல்
இன்னுமின்னுமாய்
பிரசங்கம் செய்துகொண்டிருந்தவரை
ஆதுரத்தோடு பார்த்துக்கொண்டிருந்த
அவருடைய எழுதப்படாக் கவிதை
தனக்குள் முணுமுணுத்துக்கொண்டது:
”பீடமல்ல கவிதை
பாழ்மனதின் எதிரொலி;
உயிர்வலி;
உன்மத்தக்களி;
சரீரம் கடந்த நிலை;
சரணாகதி;
”ஒருவேளை நோயுற்றிருக்கும் மருத்துவரா
யிருக்கலாம்...
ஆனால் மருத்துவரில்லை கவிதை.
பார்க்கும் ஆடி எனில்
அதற்குள் தெரியும் முகம்
இன்மைக்கும் பன்மைக்கும் இடையே
உண்மைக்கும் பிரமைக்கும் இடையே.
வலியுணர்ந்து வாழ்வுணர்ந்து
வாக்கின் வலுவுணர்ந்து
உணர்ந்ததை உட்குறிப்பாய்
உணர்த்துவதே
கவிதையென்றுணர்.
அடிக்குறிப்பாய்_
”இதுவும்கூடக் கவிதையில்லை
யென்றுணர முடிந்தால்
இனி நீயெழுதுவது கவிதையாகும்,
அறிவாய்.
1

அமுத குணாளன் கவிதை

           அமுத குணாளன் கவிதையும்

அதன் (என்)

ஆங்கில மொழிபெயர்ப்பும்


போராளிகளும்
இசவாதிகளும்
இலக்கியவாதிகளும்
குழுமியிருந்த கூடாரத்திலிருந்து
நம்முள் ஒருத்தன் அப்புறப்படுத்தப்பட்டான்
ஒரு செயல் நிகழ்த்த காரணம் மட்டும் வேண்டும்
அது
பொய்யா?
உண்மையா? அவசியத்திற்கான தேவையில்லை
அவர்களின் அவசரத்தில் தெளிகிறது
பொய்யின் உண்மை
இல்லாத விதியை எப்படி மீறினொம் என
எண்ணுவதற்குள்
விலங்கேறியிருக்கிறது அவன் கைகளில்
அறிவை பரப்ப ஆரம்பித்து
லாபம் பெருக்கவும்
சுய விளம்பரம் தேடவும் பழகிப்போனோம்
இன்னும்
பலரும் அறிந்திக்கவில்லை
அவன் அப்புறப்படுத்தப்பட்டது
அறிந்தவர்களில் சிலர்
அவன் விரட்டப்பட்டான் என்றார்கள்
சிலர்
விடுவிக்கப்பட்டான் என்றார்கள்
அவன் விரட்டப்பட்டிருந்தால்
நாம் அடிமைகள்
அவன் விடுவிக்கப்பட்டிருந்தால்
நாம் கைதிகள்
எதுவாகினும்
அடக்கி வாசிப்பதே அழகு

A POEM BY AMUDHAGUNALAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(In memory of Poet Amudhagunalan)

From the camp filled with activists and men of Isms and
literary personalities
one from our midst was removed.
For an act to be performed
suffice to have just some reason.
Whether it is true or false
No need to validate.
In their haste is clearly seen
True Lie.
Ere he could start wondering
when and how he violated the rule that is nonexistent
His hands were chained.
Embarking on the mission to spread knowledge
soon we got used to mint profit
and indulge in self-aggrandizement.
That he is removed, not many know as yet.
Of those who know
Some said that he was chased away;
Some others said that he was relieved.
If chased away
We are slaves
If relieved
We are captives.
Whatever be the case _
Better not to cry hoarse





கேள்வியும் பதிலும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கேள்வியும் பதிலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்காய்
தவமியற்றாத குறையாய்
காத்திருக்கத் தொடங்கினார்.
சத்தமாய் தன்னை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள்
சத்தற்றவையாக இருந்தால் என்ன?
பொத்தாம்பொதுவாய் இருந்தால் என்ன?
மொத்த விற்பனைத்தனமாயும் சில்லறைவிற்பனை ரீதியிலும்
வாழ்க்கைத் தத்துவங்களாய் வெத்துமுழக்கங்களைத்
தந்துபெறும் விதமாய் கேட்கப்பட்டால்தான் என்ன?
அந்தரத்தில் வந்தமர்வதாய் ஆன் – லைனில்
அவரிடம் அனுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கும் வினாக்களில்
அவரே சில பெயர்களில் ஒளிந்துகொண்டிருப்பவை
அதிகம் போனால் நாற்பது இருக்கும்.
அதனாலென்ன?
ஒரு மனிதருக்குள் குறைந்தபட்சம் இருவராவது இருப்பார்களல்லவா?
குகைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் கிளியில் இருக்கும்
ராஜகுமாரியின் உயிர்போல்
தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும் அடங்கியிருப்பதாகக்
கருதியவருக்குப் புரிந்தது ஒருநாள் _
தன்னால் தொடுக்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும்
அடங்கியிருப்பதாக
வினா தொடுப்பவரும் நினைத்துக்கொண்டிருப்பது.

1

வாக்களிப்பீர்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாக்களிப்பீர்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வாக்குச்சாவடிக்குப் போய்க்கொண்டிருந்த என்னை வழிமறித்து
யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்டார்.
எனக்குப் பிடித்த கட்சிக்கு என்றேன்.
எந்தக் கட்சி உங்களுக்குப் பிடிக்கும் என்று கேட்டார்.
நான் வாக்களிக்கவுள்ள கட்சி என்றேன்.
சாமர்த்தியமாக பதிலளிப்பதாக எண்ணமோ என்று எரிச்சலுடன் கேட்டவரிடம்
அப்படி எண்ணுவது நீங்களே என்று முன்னேகினேன்.
விடாமல் பின்தொடர்ந்தவர்
சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்
என்று ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் சிந்திக்கத் தெரியாதவள் என்றேன்.
சமூகப்பிரக்ஞை மிக்கவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் கட்டாயம் வாக்களிப்பார்கள் என்று
குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் சமூகப்பிரக்ஞையில்லாதவள் என்றேன்.
சாமர்த்தியமாக பதிலளிப்பதாக எண்ணமோ என்று எரிச்சலுடன் கேட்டவரிடம்
அப்படி எண்ணுவது நீங்களே என்று முன்னேகினேன்.
விடாமல் பின்தொடர்ந்தவர்
மனசாட்சிப்படி வாக்களிப்பவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் மனசாட்சியில்லாதவள் என்றேன்.
தன்மானமுள்ளவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று
குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் தன்மானமற்றவள் என்றேன்.
ஆக, இந்தக் கட்சிக்குப் போடப்போவதில்லை, அந்தக் கட்சிக்குத் தான் போடப்போகிறாய். அப்படித்தானே என்றார்.
இது ரகசிய வாக்கெடுப்பு. எந்தக் கட்சிக்கு என்று நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை என்றேன்.
சிந்திக்கத் தெரியாது, சமூகப்பிரக்ஞை கிடையாது மனசாட்சியில்லை தன்மானமும் இல்லை பின் எதற்கு
பூமிக்கு பாரமாய் வாழவேண்டும் நீ என்றவரிடம்_
எல்லாமிருந்தும் வெறுமே ஒரு கட்சியின் விளம்பரப்பதாகையாய்
வரிந்து வரிந்து எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் வாழும்போது
நான் வாழ்வதால் பெரிதாய் என்ன பாழாகிவிடப் போகிறது என்று
நிறுத்தி நிதானமாய்க் கேட்க _
எரித்துவிடுவதாய் என்னைப் பார்த்தவர்
பெருகும் சினத்தில் எனக்கான மனப்பாட வசைபாடலை மறந்து
தன் விளம்பரப்பதாகையோடு விறுவிறுவெனச் சென்றுவிட்டார்.

'அவா' - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 'அவா'

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவாவை நானாகிய இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
புறந்தள்ளும் அவாவிலேயே
அவாவை அறம்பாடுகிறேன் என்றார்.
அவாவைப் புறந்தள்ளியாகிவிட்டதா
தள்ளிக்கொண்டிருக்கிறீர்களா,
தள்ளப்போகிறீர்களா என்று கேட்டதற்கு
அவா இருந்தால்தானே அவாவைத் தள்ளவோ
கொல்லவோ முடியும் என்றார்.
அவா மட்டும்தான் புறந்தள்ளப்படவேண்டியதா
என்று வினவியதற்கு
அவாவே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படை
என்றார்.
அப்படியுரைப்பதொரு குத்துமதிப்பான கருத்தல்லவா,
ஒட்டுமொத்தமான பொறுப்புத்துறப்பல்லவா என்றதற்கு
அப்படியிப்படி எக்குத்தப்பாய் ஏதேனும்கேட்டாலோ
கரும்புள்ளி செம்புள்ளி அப்பிவிடுவேன் அப்பி என்று
காறித்துப்பாத குறையாய். காதில் அறைந்தார்.
தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடாமல்
அப்படியேே நின்று
அவாவுக்குத் தனித்தனி உருவமுண்டா
அல்லது அதுவொரு மொந்தையா என்று கேட்டதற்கு
வேண்டும்போது அதை மொந்தையாக்கிக்கொள்ளலாம்;
தனித்தனி உருவமாக்கிக்கொள்ளலாம்.
அவாவைப் புறந்தள்ள என்ன தேவையோ
அதை செயல்படுத்துவதே நமக்கான சவாலாகட்டும்
என்றார்.
அவா புறந்தள்ளப்படவேண்டியது என்றால்
பின் ஏன் நீங்கள் அவ்வப்போது
ஓர் அவாவுடனிருக்கும் படத்தைப் பதிவேற்றுகிறீர்கள்
என்று கேட்டதற்கு
அவாவில் சின்ன அவா பெரிய அவா உண்டல்லவா
எளியதை உதறித்தள்ளி வலியதைக்
கைக்கொள்ளுவதே
அவா தொடர்பான ஆகப்பெரும் சூத்திரம்
என்றார்.
உங்கள் வாழ்வில் அவாவின் பாத்திரம்தான் என்ன
என்று கேட்டதற்கு
அவா எனக்குக் கிடைத்திருக்கும் ஜோக்கர் சீட்டு,
என்றார்.
குவா தவா சிவா ரவா போல்
அவாவும் வேண்டும்
அன்றாட வாழ்க்கைக்கு சுவாரசியம் சேர்க்க
என்று பாடிக்கொண்டே வேகமாய்ச் சென்றவரின் முதுகில் பளிச்சிட்ட கண்களில்
கண்ட
அவா மீதான வெறுப்பு
அவரை மெகா துறவியாக்க
அவாவை சபிக்கும் அவாவில் அவர்
அவாஞானியென்ற அடைமொழிக்குரியவராக…..All reactions: