கவிதானுபவம்
ஒவ்வொன்றாய் மலையுச்சியிலிருந்து
உருண்டோடி
அதலபாதாளத்தில் விழுவதையறியாமல்
இன்னுமின்னுமாய்
பிரசங்கம் செய்துகொண்டிருந்தவரை
ஆதுரத்தோடு பார்த்துக்கொண்டிருந்த
அவருடைய எழுதப்படாக் கவிதை
தனக்குள் முணுமுணுத்துக்கொண்டது:
”பீடமல்ல கவிதை
பாழ்மனதின் எதிரொலி;
உயிர்வலி;
உன்மத்தக்களி;
சரீரம் கடந்த நிலை;
சரணாகதி;
”ஒருவேளை நோயுற்றிருக்கும் மருத்துவரா
யிருக்கலாம்...
ஆனால் மருத்துவரில்லை கவிதை.
பார்க்கும் ஆடி எனில்
அதற்குள் தெரியும் முகம்
இன்மைக்கும் பன்மைக்கும் இடையே
உண்மைக்கும் பிரமைக்கும் இடையே.
வலியுணர்ந்து வாழ்வுணர்ந்து
வாக்கின் வலுவுணர்ந்து
உணர்ந்ததை உட்குறிப்பாய்
உணர்த்துவதே
கவிதையென்றுணர்.
அடிக்குறிப்பாய்_
”இதுவும்கூடக் கவிதையில்லை
யென்றுணர முடிந்தால்
இனி நீயெழுதுவது கவிதையாகும்,
அறிவாய்.
No comments:
Post a Comment