LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 26, 2020

திக்குத்தெரியாத காட்டில்……. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

திக்குத்தெரியாத காட்டில்…….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
 - Saturday, 02 May 2020 தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியான கவிதை
 
திசை – 1

ரயில்வண்டிகள் வழக்கம்போல்
 ஓடத்தொடங்கும்.
 விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
 கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
 கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில்
 பட்டிமன்றங்களில் பேசுபொருளாகும்.
 கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர்
 சிரிப்பார்கள்;
 சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
 இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள்
 அல்லது
 மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
 சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
 சிலருக்குப் பொருளற்றதாய்
 அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
 அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என
 நினைக்கையிலேயே
 அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
 மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
 கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டு மகிழ்வார்கள்
 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடற்கரைக் குச் செல்வார்கள்.
 கொரோனாவை மீறியும் நீளும் காலம் நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
 இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும்
 தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.

திசை – 2

அந்த அநாமதேய பிராந்தியத்தில் தான்
 சென்றிருக்கும் வீடு இருக்கிறது;
 செல்லவேண்டிய வீடும் இருக்கிறது.
 நிகழ்காலமும் எதிர்காலமும் இருமுனைகளாக
 இடையே இருப்பவை ஒரு சில வீடுகளாக இருக்கலாம்
 சில பல தெருக்களாக இருக்கலாம்
 வீதிகளாக இருக்கலாம்
 மீதமிருக்கும் கோபதாபங்களாக இருக்கலாம்
 அநாமதேய பிராந்தியமென்றானபின்
 அடுத்திருந்தாலும்
 அந்த இரு வீடுகளுக்கிடையே
 ஆயிரமாயிரம் மைல்களாக
 அந்திசாயும் நேரத்தில்
 எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல்
 நின்றது நின்றபடி
 தேடித்தேடி இளைத்திருக்கும்
 ஏழை மனம்.

 திசை - 3

பாதங்களுக்குப் போதிய பலம்வேண்டும்
 திசையறியாத்த தொலைவின்
 காததூரங்களைக் கடக்க;
 பழகவேண்டும் வழிகளில் தட்டுப்படும்
 இடர்ப்பாடுகள்…
 .காலணிகளை ஊடுருவி சுருக்கென்று குத்தும் கூர்கற்கள்;
 தைக்கும் நச்சுமுட்கள்;
 கண்ணீர் வந்தால் சற்றே இளைப்பாறுவதற்கு
 நிழல் தரும் மரம் எங்காவது இருக்கும்
 என்பதொரு நம்பிக்கை.
 என்றாவதுதான் தட்டுப்படுமா
 நன்னம்பிக்கைமுனைகள்?
 இப்போதெல்லாம் இரவில் வனவிலங்குகள்
 நடமாட்டம்
 வாகனவீதிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
 இத்தனையையும் கடந்து சென்றடையும் வீடு
 பூட்டியிருக்க நேரலாம்
 அல்லது தாளிடப்படலாம் வாசல்….
 ஈசலாய் எழுந்து மடியும் எண்ணங்கள்
 கட்டுச்சோறாய்
 மனதிலொரு நெடும்பயணம் பொடிநடையாய்
 நடந்தவண்ணம்…

 திசை - 4

இங்கிருந்து பார்க்க முட்டுச்சந்துபோல்தான்
 தெரிகிறது.
 ஒருவேளை மறுமுனையில் திறப்பிருக்கலாம்.
 இருபக்கமும் பாதை பிரியலாம்
 இதுபோல் நடந்ததில்லையா என்ன?
ஆனால்
 இரு நான்கு வருடங்களுக்கு முன்பு
  நடக்கமுடிந்ததைப் போல் இன்று முடிவதில்லை.
 நினைத்தபோது கால்கள் தூண்களாகி
 நிலமூன்றி நின்றுவிடுகின்றன
 நகர்த்தவே சக்தியில்லாத நிலையில்
 நெடுமரமாய் வேர்பிடித்திருக்கும் கால்கள்
 தன்னிலைக்குத் திரும்பக் காத்திருக்க
  நேர்கிறது.
 இல்லை, சாம்சன் தலைமுடியாய் மீண்டும்
 சக்தி திரண்டு
 நிலத்தைப் பிளந்து தூண்களை வெளியே இழுத்து
 கால்களாக்கிக்கொள்ளும்படியாகிறது.
 இதற்காகும் நேரம் பொதுவான  காலக்
 கணக்கில் சேருவதில்லை
 அதிபிரம்மாண்டப் பெருங்காலம்  அதன்
 போக்கில்
 வருங்காலத்தை நோக்கிப் பாய்ந்தவண்ணமே.
 அதன் சுழல்வேகத்தில் கழன்று மேலெழும்பும் கால்கள்
 நடக்க முற்படுவதற்குள்
 இழுத்துச்செல்லப்படுகின்றன.
 புயலடித்துத் தரைதட்டும் கப்பலாய்
 அயல்வெளியில் கரைசேர்ந்து
 அரைமயக்கத்தில்
 துவண்டுகிடக்கின்றன, கையறுநிலையில்…
 என்றும் சென்று சேருமிடம் சேர
  கால்களுக்குக் கருணை காட்டவேண்டும்
 காலம்.

 திசை – 5

அனேக கிலோமீட்டர்கள் நடந்து சென்று
 அன்னையைக் கண்டவர்
 அவள் உடனே இறந்துவிடுவதையும் காண்
 கிறார்.
 அனேக கிலோமீட்டர்கள் ஆம்புலன்ஸில்
 அன்பு நண்பனின் இறந்த உடலிருந்த பெட்டியருகே
 அப்படியே அமர்ந்திருக்கிறார் இன்னொருவர்.
 ஒருவகையில் இருவரும் பரஸ்பரம் கால்மாற்றிக் கொள்கிறார்கள்.
 உடலொன்றில் மரணம் நிகழும்போதெல்லாம்
 உயிரோடிருக்கும் சில மனங்களும் மரித்துவிடுகின்றன.
 இறந்தவரின் உடல் ஒருபோதும் எழுந்து நடப்பதில்லை.
 மரித்த மனங்கள் பலகாலம் திசையழிய அலைந்தவாறே……

 திசை – 6

அதன் இயல்பில் மனித உடலொன்றுக்குள்
நுழைந்துவிட்ட தீநுண்மி
திசைமாறி எங்கெங்கோ திரிந்தலைந்து,
இறுதியில்
இருதயம், மூளை இன்னும் சில இனமறியா
பிறவேறுகளுடைய கூட்டிணைவிலானதாய்
பரவலாய் பேசப்படும் மனதையடைந்துவிட _
அது கடைந்தெடுத்த அமுதமாயொரு பெயரை
அத்தனை வலியிலும் அதற்கேயான மாமருந்தாய்
மனனமாய் உச்சரித்துக்கொண்டிருக்கக் கண்டு
அதிர்ந்துபோய்
அன்பின் வெப்பத்தைத் தாங்கவொண்ணாமல்
அங்கிருந்து வெளியேறும் திசைதேடி
அலைக்கழியும்.

திசை – 7

காட்டின் வெளிச்சத்திற்கும் நாட்டின் வெளிச்சத்திற்கும்
கண்டிப்பாக வித்தியாசம் உண்டுதான்…..
எனில் _
காட்டின் நடுவில் தெரியும் நாட்டிலும்
நாட்டின் நடுவில் தெரியும் காட்டிலும்
மனதிலும் மூளையிலும் முளைத்த கால்களோடு
மீளாப்பயணம் மேற்கொண்டிருப்பது
முட்டாள்தனமென்றால் கெட்ட கோபத்துடன்
திட்டுகிறது உள்.
தட்டுப்படாத திசையையும் தடத்தையும்
அங்கங்கே விட்டகுறை தொட்டகுறையாய்
கிட்டும் கனிகளும்,
மெட்டுக்கப்பாலான குயிலின் இன்னிசையும்
சரிக்கட்டிவிட
அன்றுபோல் என்றும் தொடரும் பயணம்
தனிவெளியொன்றின் பிடிபடா திசையில்…..

திசை – 8

பகலைப் பகலாக்கும் சூரியனின் மகிமை பழுதற்றதுதான், என்றாலும்
அதன் கதிர்கள் வரிவரியாய்
உள்வெளியெங்கும் படர்ந்து சுட்டெரிக்கும் போது
அனத்தாமலிருக்கவியலாது.
மனதின் உடலோ உடலின் மனமோ _
இரும்பாலானதல்லவே எதுவும்….
துருப்பிடிக்கும் காலத்தே எல்லாமும்,
என்றபோதும்
கரிந்தெரியும் ரணத்தோடும் புண்களோடும்
வெடிப்புகளோடும்
திரும்பத்திரும்ப தனக்கான ஒன்பதாவது
திசைதேடி
தாகம் மிக பயணப்படும் மனதுக்கு
இருமருங்குமான இயற்கையழகைப் பருகக் கொடுத்து
 அருள்பாலிப்பதும் அந்தக் கதிரோனேயாகும்.

'கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை…. லதா ராமகிருஷ்ணன்

'கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….
லதா ராமகிருஷ்ணன்

(மே 17 தேதியிட்ட *திண்ணை இணைய இதழில் வெளியானது)

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன்.

வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, அம்மாவை விட மனைவியே மேலானவள். ஏனென் றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று தனது கணீர் குரலில் கூறினார்.

அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ் சுளித்ததை அவர் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

எத்தனை தேவையற்ற, அருவருப்பான ஒப்புமை அவருடையது. அத்தனை கொச்சையானதாக ஒலிக்கவில்லையென்றாலும் சமீபத்தில் சர்ச்சைக் குள்ளாகி யிருக்கும் நடிகை ஜோதிகாவின் கோயிலைப் பற்றிய பேச்சு இடம்பெறும் காணொளி யைக் கண்டபோது, இது எதற்கு இந்தத் தேவையற்ற பேச்சு என்ற எண்ணமே ஏற்பட்டது.

தஞ்சையிலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலைத் தான் பார்த்ததாகவும், அது உதய்பூர் அரண் மனை போல் இருந்ததாகவும், மறுநாள் அதே ஊரில் அவல நிலை யில் ஒரு மருத்துவமனையைப் பார்த்ததாகவும் அவையோரிடம் தெரிவித்து, கோயில் உண்டியலில் பணம் போடுபவர்கள் பள்ளி, மருத்துவமனை கட்டப் படுவதற்கும், அவற்றின் பராமரிப்புக்கும் பணம் தரலாம் என்பதாகவும் கூறியிருக்கிறார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்பெழுந்திருக்கிறது. அதேயளவு ஆதரவும் எழுந்திருக்கிறது.

நடிகை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா தன் மனைவி தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும், தவறு என்று சொல்பவர்கள் அதே கருத் தைச் சொல்லி யிருக்கும் சுவாமி விவேகானந்தர், பாரதியார், திருமூலர் போன்றோரைப் படித்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

அவர்கள் வாழ்ந்த காலம் வேறு. வாழ்ந்த வாழ்க்கை வேறு. அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

நடிகை ஜோதிகா பிரகதீஸ்வரர் கோயிலை உதய்பூர் அரண்மனைபோல் இருப்ப தாகவும், அந்த ஊரில் அவலமான நிலையில் உள்ள மருத்துவமனையைப் பார்த்த பின்பு அந்தக் கோயிலுக்குப் போக மனம் ஒப்பவில்லை என்றும் கருத்துரைத்த இடம் ஒர் ஆடம்பரமான திரையுலக விருதுவிழா. அத்தகைய ஆடம்பர விழாக்களை நடத்த ஆகும் செலவு நிறைய நிறைய. அத்தகைய விழாக்களுக்குச் செலவிடுபவர் கள் எல்லா ஊர்களிலும் மருத்துவமனை, பள்ளிக் கூடம் கட்டப்படுவதற்கும், பராமரிக்கவும்கூட செலவழிக்கவேண்டும் என்று கூறலாமே? அப்படிக் கூறவேண்டிய தேவையை அவர் ஏன் உணரவில்லை?

கோயில் உண்டியலில் பணம் போடுகிறவர்கள் வேறு நல்ல காரியங்களுக்குப் பணம் தருவதில்லை என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா? கோயில் உண்டிய லில் ஒரு ரூபாய் போடுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் போடுகிறவர்களும் இருக்கிறார் கள். கோயில் உண்டியலில் போடப்படும் பணம் கோயி லுக்கு ‘பெயிண்ட்’ அடிப்பது போன்ற, ஜோதிகாவின் கருத்துப்படி அநாவசிய வேலைக்குத் தான் பயன் படுத்தப்படுகிறது என்று திட்டவட்ட மாகச் சொல்ல முடியுமா?

எத்தனை பேருக்கு கோயில் அன்னதானம் பசியாற்று கிறது தெரியுமா? தினம் தினமா கோயில்கள் கட்டப் படுகின்றன. இந்தியாவில் உள்ள கோயில்கள் கட்டப் பட்டு, பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு எத்தனை யெத்தனை வருடங்களாகிவிட்டன! அந்நியப் படையெடுப்புகளில் அழிக்கப்பட்ட கோயில்கள் போக இன்னும் எத்தனை கோயில்கள் சின்னச்சின்ன ஊர்க ளில் சிதிலமடைந்திருக்கின்றன!

பள்ளிக்கூடம், மருத்துவமனை சரியான பராமரிப் பின்றி இருந்தால் அது குறித்து உரிய அதிகாரிக ளிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதுதான் சரியான அணுகுமுறை. ஓர் ஊரில் பள்ளிக்கூடம் நல்ல நிலையில் இல்லை, எனவே அங்கேயுள்ள மருத்துவமனையைப் பராமரிப்பது அநாவசியம் என்று யாரே னும் சொல்வார்களா?

இரண்டும் இருவேறு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்பவை.

ஆனால், கோயில் அநாவசியம் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். அதாவது, இருக்கும் கோயிலைப் பராமரிப்பதுகூட அநாவசியம் என்னும் உட்பொருளில்.

ஆனால், கோயில் என்பது ஒரு மண்ணின், மதத்தின் நம்பிக்கை, விழுமியம், கலாச்சாரம் சார்ந்தது.

நேற்று பூ வாங்கச் சென்றபோது பூவிற்கும் பெண்மணி முழம் அளந்து வெட்டித் தருவதற்காக கத்தியைத் தேடினார். எத்தனை தேடியும் கிடைக்க வில்லை. 'பரவாயில்லை, பல்லால் கடித்துத் தாருங்கள்' என்று நான் சொன்னதற்கு ‘அது தப்புமா, கடவுளுக்கு சுத்தபத்தமா தரணும் என்று தன் தேடலைத் தொடர்ந்தார்.

இறை நம்பிக்கை என்பது உளவியல் சார்ந்தது. உடல் நலனைப் பேணுதல் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் உள நலனைப் பேணலும். அவ்வகையில் பள்ளிக்கூடம், மருத்துவமனை இரண்டுடனும் தொடர் புடையது கோயில் என்பதோடு அந்த இரண்டைத் தாண்டி மனிதர்களுக்கு உள்ள சில தேவைகளையும் அது பூர்த்தி செய்கிறது என்று சொல்லலாம்.

என் தந்தை இறந்தபோது என் அம்மாவுக்கு 37 வயது. அப்பாவின் மருத்துவச் செலவுக்கு வாங்கிய கடன் மட்டுமே எங்களுக்கிருந்த சொத்து. என் அம்மா அத்தனை பாடுபட்டு என்னையும் என் தம்பியையும் படிக்கவைத்தார். தந்தை இறந்த பின் 35 வருடங்கள் கடவுளிடம் கோபம் கொண்டு கோவில் பக்கமே செல்லாமலிருந்தேன்.

அம்மா தினமும் கோயிலுக்குச் செல்வது வழக்கம். ஒரு நாள், ‘கடவுள்தான் எங்கு மிருக்கிறாரே –பின் ஏன் தினமும் கோவிலுக்குப் போகிறாய்?’ என்று இளமைக்கே உரிய அலட்சியமும் அறிவுசாலி பாவனையுமாய் (ஆனால், அந்நாளில் கூட வாயே கிழிந்துதொங்கும் அளவுக்கு எகத்தாளமாக கோண வாய்ச் சிரிப்பு சிரித்ததில்லை என்பது ஒரு மனிதப் பிறவியாக நான் ஆறுதல் கொள்ளும் விஷயம்) என் அம்மா விடம் கேட்டபோது, ‘உனக்கு இலக்கியம் எப்படியோ அப்படி கோயில் எனக்கு’ என்று சாந்தமாக எனில் உறுதியாக பதிலளித்து ‘மேலே பேசுவதற்கு எதுவுமில்லை’ என்பதாய் தன் வேலையில் மூழ்கினார்.

அதற்குப் பிறகு பல நாட்கள் கழித்து, என்னைப்போல் இளவயதில் கணவனை யிழந்தவர்கள் கடற்கரைக்குச் சென்று காலார நடக்க முடியாது. கோயிலில் காலார பிராகாரத்தைச் சுற்றிவரலாம். என்னைப்போன்ற பெண்களைப் பார்க்கும் போது, அவர்களிடம் பேசும் போது எனக்கு ஒரு தைரியம் பிறக்கிறது. நான் கடவுளிடம் ’எனக்கு அதைத் தா, இதைத் தா’ என்று கேட்பதில்லை. யாரிடமும் போய் நிற்காமல் என் சொந்தக்காலில் நின்று என்னையும் என் பிள்ளைக ளையும் காப்பாற்ற சக்தி கொடு என்று மட்டுமே கேட்பேன். அப்படி இதுவரை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிக்கவே நான் கோயிலுக்குச் செல்கிறேன்’, என்றார். இப்பொழுதும் போகிறார்!

என் அம்மாவின் பேச்சு என்னை நிறைய யோசிக்க வைத்தது. யோசித்துப்பார்த்தால் எந்தவொரு கலைப் படைப்பும் சில மனங்களில் உதித்த கற்பனையே. ஆனாலும், அவற்றை எப்படி உருகியுருகிப் பார்க்கி றோம், படிக்கிறோம். அவற்றின் மூலம் நம் மனம் எவ்வாறெல்லாம் மேம்படுகிறது, துலக்கமடைகிறது! அப்படித்தான் கோயில் என்பதும். சிலருக்கு அது வொரு சுற்றுலாத்தலம்; சிலருக்கு அது பெரும் ஆசுவாசம். நம்பிக் கைக்கும் மூடநம்பிக்கைக்கும் மயிரிழைதான் வித்தியாசம். இரண்டும் highly relative terms; often overlapping.

மருத்துவர்கள், விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை அற்றவர்களா என்ன? அப்படி யில்லையே? அவர்களில் கோயில் உண்டியலில் போடுபவர்களும் இருப்பார்கள்; ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து தருபவர்களும், வைத்தி யம் பார்ப்பவர்களும் உண்டு.

பள்ளிக்கூடம், மருத்துவமனை இரண்டும் தனித்தனி அளவில் அத்தியா வசியமானதே. அதேபோல்தான் கோவிலும்.

‘தனியொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றாரே பாரதி. அப்படி எல்லோரும் தங்கள் வாழ்விலும் இருந்தால் அவர்கள் வணக்கத்திற் குரியவர்கள். ஆனால், ஏழைகளுக்காக ஆவேசமாகக் குரலெழுப்புபவர்கள் அவர்களுக்காக தங்கள் வசதி யான வாழ்க்கையை வாழாமலிருக்கிறார்களா என்பதும் கேள்வி.

இன்று சமூகப்பணியாற்ற முன்வருபவர்களில் கணிச மான பகுதியினருக்கு அதற்குக் கிடைக்கும் வரி விலக்கும் ஓர் இயக்குவிசையாக இருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது.

ஒரு திரைப்படத்தில் ஊதியமாக லட்சங்களோ கோடி களோ வாங்கிக் கொண்டு தியாகி வேடத்தில் நடிப்பவர் களெல்லாம் உண்மையான தியாகிகளல்ல. அப்படி அவர்கள் நம்பிக்கொள்வதும், அப்படி அவர்களை நம்பிக்கொள்வதும் அபத்தம்.

தனது முக்காலே மூணுவாசி படங்களில் மதுபுட்டி யோடு காட்சியளிக்கும் நடிகர் ரஜினிகாந்த், அந்தக் காட்சிகளின் மூலம் எத்தனையோ இளைஞர்களுக்கு குடி பற்றிய ஒரு பிரமையை உருவாக்கியவர் ’இப்போது டாஸ்மாக்கைத் தொடங்கினால் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கமுடியாது’ என்று ஆட்சியாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார்.

நடிகை ஜோதிகாவின் விஷயத்தில் அவரை எதிர்த்திருப்பவர்கள் பலர் கொச்சையாக தனிமனிதத் தாக்குதலில் இறங்கியிருப்பது தேவையற்றது; கண்டிக்கத்தக்கது. மேலும், ஒரு கருத்தை எதிர்ப்பவர்கள் தங்கள் பக்க நியாயத்தைப் பேசுவதில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்காமல் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தும்போதும், தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடும் போதும் எதிர்க்கப்படும் கருத்தைக் கூறியவர் ‘பாதிக்கப்பட்டவராகி’விடுகிறார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

அதே சமயம், நடிகை ஜோதிகாவின் கருத்தை எதிர்ப்பவர்களை மிகக் கொச்சையாகப் பழிப்பதில் அவருடைய ஆதரவாளர்களும், இந்து எதிர்ப் பாளர்களும், கடவுள் எதிர்ப்பாளர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர் களில்லை. முன்னாள் நீதியரசர் உட்பட எதிர்க்கருத்தாளர்களை ‘சங்கிகள்’ என்று பழிப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். இதுபோல் வேறு எந்தத் தரப்பினரை யாவது அவர்கள் இத்தகைய ‘முத்திரை வாசகங்களால்’ மதிப்பழிக்க முற்படு வார்களா என்பது சந்தேகமே.

பொதுவெளியில் பிரபலங்களாக இருப்பவர்கள் ஒரு கருத்துரைக்கும்போது அதன் பின்விளைவுகளை யோசித்துப் பேசுவது நல்லது.

அல்லது _

‘என் கருத்து யார் மனதையேனும் புண்படுத்தியிருந் தால் மன்னிக்கவும்’ என்று கூறும் பெருந்தன்மையாவது சம்பந்தப்பட்டவர்களுக்கு இருத்தல் நலம்.


வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்…… லதா ராமகிருஷ்ணன்

வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்….

(24 மே 2020 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை)


_ லதா ராமகிருஷ்ணன்
‘கொரோனா காலத்தில் சமூகநலனுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போன்ற சக மனிதர்களுக்கு ஒரு எளிய நன்றியறிவிப்பாக 5.4.2020 இரவு ஒன்பது நிமிடங்கள் வீட்டில் மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்கு மெழுவர்த்தி, அலைபேசி விளக்கு டார்ச் விளக்கு போன்றவற்றை ஏற்றச்சொல்லி இந்தியாவின் பிரதமரிடமிருந்து வந்த வேண்டுகோள் முகநூலில் பல பேரால் எள்ளிநகையாடப்பட்டது; கேவலம் செய்யப் பட்டது.

இப்படிச் செய்தவர்களில் நிறைய தமிழ் எழுத்தாளர்களும் உண்டு. ’பிரதமர் சொன்னது போல் விளக்கேற்றிவிட்டேன். இனி அடுத்து தீமிதிக்கச்சொல்வாரா? என்று ஏளன மாகக் கேட்டிருந்தார் ஒரு பெண் படைப்பாளி. விளக்கேற்றுவது போல் கவனமாகத் தன்னைப் படம்பிடித்துப்போட மறக்காதவர் தீமிதித்து அதையும் ஒரு புகைப்படம் எடுத்துப்போட்டிருக்கலாமே என்று தொன்றியது.

இது ஜனநாயக நாடு, இங்கு எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்க யாருக்கும் உரிமை உண்டு என்பதையெல்லாம் மறந்து பிரதமரின் இந்தத் திட்டத்தை வரவேற்ற எழுத்தாளர்களை அவர்கள் சார்ந்த மதரீதியாகப் பழித்துப் பேசினார்கள் சில எழுத்தாளர்கள்.

முன்பெல்லாம் வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் மதமல்லாத இன்னொரு மதத்தைக் கொச்சையாக வசைபாட ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். இப்போது இந்துமதமென்றால் அதை எந்த மதத்தவரும் எத்தனை வேண்டுமானாலும் கொச்சையாகப் பழிக்கலாம். எந்தக் கவலையுமில்லை. எத்தனைக் கெத்தனை கொச்சையாகப் பழிக்கிறார்களோ அத்தனைக்கத்தனை அவர்கள் அறிவுசாலிகள். இந்து மதத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் பலர் இந்தக் கண்ணோட்டத்துடன் இயங்கிவரு வதைக் காணமுடிகிறது. ’காவி’ போன்ற பல வார்த்தைகள் இவர்களால் திரும்பத் திரும்பக் கொச்சைப்படுத்தப்படுகின்றன.

மதரீதியான மூடநம்பிக்கைகளைச் சாடுவதென்றால் இவர்கள் கையில் எடுத்துக் கொள்வது இந்துமதம் மட்டுமே. இந்தப் போக்கு அவர்களுக்குப் பலவகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது. இன்று உலகமே ஒரு global village ஆகிவிட்ட நிலையில் இந்துமதத்தவர்கள் சிறுபான்மையினத்தவர்களாக இருப்பது இதற்குக் காரணமா யிருக்க வழியுண்டு என்று சொல்லப்படுகிறது.

பிரதமரின் மேற்குறிப்பிட்ட திட்டத்தை வரவேற்ற எழுத்தாளர்களை அவர்கள் சார்ந்த சாதிரீதியாகப் பழித்துப்பேசினார்கள் வேறு சில எழுத்தாளர்கள். அவர்களை ஆதரித்த மூத்த எழுத்தாளர்களும் உண்டு. இப்படிப் பேசியவர்களின் சாதி மதம் என்று பார்க்க ஆரம்பித்தால், பேச ஆரம்பித்தால் இதற்கு முடிவேயில்லை.

ESTABLISH LARGE SCALE COMMUNITY ENGAGEMENT FOR SOCIAL & BEHAVIOURAL CHANGE APPROACHES. என்ற உலக சுகாதார மையத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பத்தான் உலக நாடுகள் இத்தகைய கூட்டிணைவு நிகழ்வுகளைக் கட்டமைக்கின்றன என்பது தெரிந்த விஷயம்தானே. இதை ஏன் இத்தனை ஏளனம் செய்யவேண்டும்? அவதூறு செய்ய வேண்டும்? வெறும் கைத்தட்டச் சொல்வதோடு அரசுகள் வாளாவிருந்துவிட்டன என்ற தோற்றத்தை உருவாக்க இத்தனை திட்டமிட்டரீதியில் ஏன் பாடுபடவேண்டும்?
  
த்தனை மனிதநேயத்தோடு நுட்பமாக கவிதை எழுதுகின்ற, நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் இப்படி விளக்கேற்றுபவர்கள் மூளை பிறழ்ந் தவர்கள் என்றும், கொரோனா இவர்களையெல்லாம் காவு கொள்ளும் புத்திசாலி யாக இருக்கலாகாதா என்றும் ஆதங்கப்பட்டதைப் படித்து அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு அருமையான படைப்பாளி கொரோனா மோடியின் சதி என்று முடிந்த முடிவாக தீர்ப்பெழுதியிருக்கிறார்.

வேற்று மதத்தைச் சேர்ந்த இலக்கியவாதி ஒருவர் கொரோனா நெருக்கடியால் பிரதமர் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக மேற்பார்வைக்கு அனுதாபம் கலந்த ஆய்வலசலாக, எனில், உண்மை நோக்கம் பிரதமரை மட்டந்தட்டுவதாக எழுதியிருந்தார். இவருடைய கவிதை இவர் உளவியல்ரீதியாக பாதிக்கப் பட்டிருப்பதாகக் காட்டுவதாக முன்பொரு சமயம் ஓர் உளவியல் மருத்துவர் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்தபோது சக கவிஞருக்காக நான் வரிந்துகட்டிக் கொண்டு சண்டைபோட்டது நினைவுக்கு வந்தது.  சம்பந்தப்பட்ட கவிஞர் உளவியல் மருத்துவர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)

மேலும், நிலைமையை சமாளிக்க என்ன செய்வதென்றே தெரியாமல் பிரதமர் சிறுவயதிலிருந்தே தனக்குத் தெரிந்த மதநம்பிக்கையின்படி விளக்கேற்றச் சொல்வதாகவும், அதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை எனவும் கருத்துரைத்திருந்தார் கவிஞர். டார்ச்லைட் ஏற்றலாம், மௌபைல் வெளிச்சம் காட்டலாம், மெழுகுவர்த்தி ஏற்றலாம் என்று பிரதமர் சொன்னதெல்லாம் அவருடைய காதுகளை ஏன் எட்டவேயில்லை என்று மிகவும் வருத்தமாயிருந்தது.

ன்னொருவர் பார்ப்பன குலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சிலர் இந்த விளக்கேற்றலை வரவேற்று எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டி, ‘கொரோனா இங்கே வந்து பல வருடங்களாகிவிட்டன என்று எழுதியிருந்தார்.

முன்பு திருமதி நிர்மலா சீதாராமனைப் பார்க்கச்சென்ற நான்கு பத்திரிகையாளர்களை அவர்கள் அமைச்சரிடம் என்ன பேசினார்கள் என்பதொன்றும் அறியாமலே(அப்படியே மரியாதை நிமித்தம் பார்க்கச்சென்றாலும் என்ன தவறு?) ‘சொம்புதூக்கிகள்’ என்று அடைமொழியிட்டுப் பழித்த படைப்பாளிகளுக்கு ஊடகவியலாளர்களாக உள்ள சக படைப்பாளிகள் கண்டனம் தெரிவிக்காததோடு ‘லைக்’ போட்டுப் பாராட்டினார்கள் ஃபேஸ்புக்கில். முதன்முறையாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றிருப்பதை (உடனே இந்திராகாந்தி அம்மையார் தான் முதன்முதலாக அந்தப் பகுதியை வகித்தார் என்று திருத்துபவர்கள் அவர் மிகவும் சொற்ப காலமே பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார் என்பதைக் கண்டுகொள்ள மாட்டார்கள்) பாராட்ட மனமில்லாமல் ‘ஊறுகாய் மாமி’ என்று அவரை சாதிரீதியாகப் பழிப்பவர்களே தமிழக அறிவுசாலிகளாக அறியப்படுகிறார்கள்.

பார்ப்பனர்கள் மட்டும்தான் (அல்லது, பார்ப்பனர்கள் எல்லோருமே) திரு.மோதியை ஆதரிக்கிறார்கள் என்ற பார்வையை முன்வைப்பதைப் போன்ற அபத்தம் வேறில்லை. அதேபோல், நாட்டின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அது பார்ப்பனர்களால்தான் என்று பேசிவருவதும். சிலர் இதைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். தப்லீக் ஜமாத் விஷயத்திற்காக ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தையுமே குற்றஞ்சாட்டுதல் எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இது.

வேறு சிலர் ‘சீனாவைப் பார் – எத்தனை விரைவாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கிறது என்று சிலாகிக்கிறார்கள். அது ஆதாரபூர்வமான உண்மையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, சீனா தானே கொரோனாவின் பிறப் பிடம், அந்த நாடு நோய்த்தொற்று குறித்து வெளியே சொல்லத் தாமதப்படுத்தியது தானே இன்றைய உலக நெருக்கடிக்குக் காரணம் என்பதைப் பேச அவர்கள் தயாராக இல்லை.

இப்படித்தான், மோடி அரசை மோசடி அரசாகக் காண்பிப்பதே குறியாய் வெறுப்பு உமிழ்ந்துகொண்டிருக்கும் அறிவுசாலிகள் அனேகம்பேர். இலங்கையில் ஒரு தேவாலயத்தில் குண்டு வெடித்தபோது படைப்பாளிகள் ஒரே குரலாக அதைக் கண்டித் தார்கள். இங்கே அப்படியில்லை. எது நடந்தாலும் அதை மோடி அரசைப் பழிக்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக இருக்கிறது.

ந்தவொரு இனம், மதம் சார்ந்த மனிதர்களையும் ஒரேயளவாய் மொந்தை யாக்கிப் பேசுதல் எந்தவிதத்திலும் சரியல்ல. எந்தவொரு சாதி, இன,மதம் சார்ந்து ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு முதலாய் பல பாகுபாடுகள் கட்டாயம் உண்டு.

அதேபோல், மாற்றுக்கருத்து கொண்டவர்களை சாதிரீதியாக மதிப்பழிக்கும் முயற்சி அதைச் செய்பவரின் அடாவடிப்போக்கையே அம்பலப்படுத்துவதாகும்.

ரு கட்சியில் இணைந்துகொண்டிருக்கும் எழுத்தாளர்கள் (அந்தக் கட்சிகளி லிருந்து அவர்களுக்கு ஊதியம் முதலாய் பல்வேறு வசதிகளும் பதவிகளும் கிடைப்பதையும் அறிய முடிகிறது) இப்படி தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மதத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவையும் எதற்கெடுத்தாலும் கேவலம் பேசிக்கொண்டேயிருப்பது முகநூலில் முனைப்பாக நடந்துகொண்டிருப் பதைப் பார்க்கிறேன். அவர்களுடைய கட்சித் தலைவர்கள்கூட இப்படி மட்டமாகப் பேசுவதில்லை. அல்லது, எதிர்க்கட்சிக்கார்களை கொச்சையாகப் பழிப்பதற்கென்றே சில பேச்சாளர்களைக் கட்சிகள் நியமிப்பது வழக்கம் என்று சொல்லப்படுகிறதே – அதுவா இது?

அந்த வேலையை எழுத்தாளர்கள் செய்ய வேண்டுமா? எழுத்தின் வலிமையை நன்றாகவே அறிந்தவர்கள் எழுத்தாளர்கள். அவர்களில் சிலர்தான் Pogrom, Islomophobia என்றெல்லாம் சகட்டுமேனிக்கு வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தியாவில் இசுலாமிய சகோதர சகோதரிகளுக்குப் பாதுகாப்பேயில்லை என்பதான ஒரு பொய்யான பீதியூட்டும் செய்தியைத் திரும்பத்திரும்ப சமூக ஊடகங்களில் பரப்பிக்கொண்டேயிருக்கிறார்கள்.

துபோதாதென்று, விளக்கேற்றல், கைத்தட்டல் போன்றவையெல்லாம் வெறும் பாவனைகள் என்றும் உயர்தட்டு மக்களும், மத்தியதர வர்க்கத்தினரும் இந்த பாசாங்குகளை மேற்கொள்கிறார்கள் என்றும் ஏதோ தனக்கு மட்டும்தான் சக மனிதர்களிடம் மெய்யான அன்பும் அக்கறையும் இருக்கிறது என்பதுபோலும் சிலர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்கள். நான் மிகவும் மதிக்கும் சில படைப்பாளிகள் சிலரும் இப்படிப் பதிவிட்டிருந்ததுதான் மிகவும் வருத்தத்தை அளித்தது.

’தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலை தான்.’
உண்டென்றால் அது உண்டு; இல்லையென்றால் அது இல்லை.’

பாவனை என்று மிகப் பொதுப்படையாக சகமனிதர்களைப் பகுப்பதும் அப்படித்தான். அவரவர் பாவனை அவரவருக்குத் தெரியும். அப்படிப் பார்த்தால் கைத்தட்டுவது, விளக்கேற்றுவது ஆகிய செயல்பாடுகள் மூலம் மட்டும்தானா சகமனிதநேயம் இருப்பதாக பாவனை செய்ய முடியும்? சகல வசதிகளையும் அனுபவித்துக் கொண்டே குடிசைவாசிக்காக உருகுவதாய் கவிதை எழுதிக்கூட பாவனை செய்ய முடியுமே!

’நினைத்தபோதெல்லாம் விமானத்தில் பறப்பவர் விமானத்தில் பறக்கும் பணக்காரர்களால் கொரோனா வந்திருப்பதாக’ அறச்சீற்றம் சீறி தன்னை வெகு சாமர்த்தியமாக சமூகப்பொறுப்பிலிருந்து விலக்கிக் கொண்டுவிடும் பாவனை _

நாற்பதாண்டுகளாக அரசு உயர்பணியில் வசதியான வாழ்க்கை வாழ்ந்தபடியே தன்னையும் அடித்தட்டு மக்களில் ஒருவராகத் தொடர்ந்து பேசிவரும் பாவனை_

சகமனிதநேயம் என்ற பெயரில் குறிப்பிட்ட மதத்தை, சமூகத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் பாவனை _

அவ்வழி சமூக அவலங்களுக்கான பொறுப்பிலிருந்து தன்னை வெகு சுலபமாக விலக்கிக் கொண்டுவிடும் strategyத்தனமான பாவனை _

என்று நம்மிடையே எத்தனையெத்தனை பாவனைகள்.

இன்னும் நிறைய சொல்லலாம். மேல்தட்டு வாழ்க்கை வசதிகளோடு வாழ்ந்துவரும் படைப்பாளிகள் ’பேச வேண்டியதைப் பேசி’ வெகு சுலபமாகத் தங்களை ‘இல்லாதவர்க ளோடு’ இணைத்துக்கொண்டு ஏழைப் பங்காளனாகிவிடுவது இங்கே அத்தனை இயல்பான ஒரு நடைமுறையாக நிலவுவதும் நடப்புண்மை தானே.

23 நாய்கள் வளர்க்கும் ஏழை’ என்று முன்பு அத்தகையதொரு புரட்சிகர இதழியலாளர் குறிப்பிடப்பட்டது நினைவுக்கு வருகிறது.

மீபத்தில் மகராஷ்டிர மாநிலத்தின் பால்கார் பகுதியில் எழுபது வயது சந்நியாசி உட்பட மூவர் ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது இடையே மஹராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பால்கார் (Palghar) மாவட்டத்தில்  Gadchinchale கிராமத்தின் ஒரு கூட்டம் அவர்களுடைய காரை வழிமறித்து அவர்களை அடித்தே கொன்றிருக்கிறது. போலீஸ் அங்கே வந்தும் காப்பாற்ற முடியவில்லை(காப்பாற்ற முனையவில்லை, என்பது சிலரின் வாதம்.) இது குறித்து ஏதும் சொல்லாமல் பல ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மௌனம் காத்தனர்.
ஓர் இசுலாமியர் இறந்தால் உடனே இந்தியாவில் இசுலாமியர்கள் கொன்றழிக்கப் படுகிறார்கள் என்று அறிக்கைகள் விடும் திருமதி சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்த lynching குறித்து ஏதும் சொல்லாதது ஏன் என்று கேள்வியெழுப்பி அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களை ஒளிபரப்பிவந்த ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆர்னாப் கோஸ்வாமி யும் அவருடைய மனைவியும்(அவரும் அந்த சேனலின் மூத்த ஊடகவியலாளர்) சென்ற கார் தாக்கப்பட்டது. தாக்க வந்தவர்களை இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாக அடையாளங்காட்டிய மஹராஷ்டிர காவல்துறையைச் சேர்ந்த, தற்போது ஆர்னாப் கோஸ்வாமிக்கான பாதுகாவலராக நியமிக்கப்பட்டிருக்கும் காவலர் சொன்னதை முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மறுத்தது. திரு. ஆர்னாப் கோஸ்வாமி ஐந்துமணிநேரம் போராடிய பிறகுதான் அதை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கமுடிந்தது.

பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்று ஆவேசமாக முழங்கும் எதிர்க்கட்சியினர், குறிப்பாக காங்கிரஸ் ‘பால்கார் படுகொலை குறித்து எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் திருமதி சோனியா காந்தி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்காக அவர் மேல் 200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போடப்பட்டன. அவை யாவும் காங்கிரசும் அதன் ஆதரவுக்கட்சிகளும் ஆளும் மாநிலங்களிலிருந்தே போடப்பட்டுள்ளன. ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவில் தண்டனை கிடைக்கக்கூடிய ‘கிரிமினல்’ வகையான வழக்குகள்.

அவதூறுக்காளானவர்தான் வழக்குதொடுக்கவேண்டும் என்ற வாதத்தின் அடிப்படையில் மூன்றுவாரங்களுக்கு ஆர்னாபைக் கைது செய்யத் தடைவிதித்து, தொடுக்கப்பட்ட 200 வழக்குகள் ஒரே தன்மையானவை, ஒரேவிதமான வாசகங்களைக் கொண்டவை என்பதால் அவற்றில் ஒரே ஒரு வழக்கை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி வழக்குகளைத் தள்ளுபடி செய்திருக்கும் உச்சநீதிமன்றம் சமூகத்தின் நான்காம் தூணாக விளங்கும் இதழியலாளர்களும் ஊடகவியலாளர்களும் தகவல்களை மக்களுக்குத் தருவதற்கான உரிமை பெற்றவர்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

அப்படியே அந்த சேனல் காங்கிரஸ் தலைவரை அவதூறு செய்வதாகப் பட்டால் வழக்குத் தொடுத்திருக்கலாம். உன்னை இல்லாமலாக்கிவிடுவோம் என்று அச்சுறுத்து வதும். அதை முயற்சிப்பதும்தான் பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரத்தை மதிப்பதாக முழங்குவோர் செய்யும் செயலா? இந்தத் தாக்குதல் குறித்தோ, இந்தத் தாக்குதலை வெடிவைத்துக் கொண்டாடிய காங்கிரஸார் குறித்தோ தமிழக மோடி-எதிர்ப்புப் படைப்பாளிகளும் அறிவுசாலிகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

மாறாக, ’தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்ற கூற்றின் உண்மைக்கு ஆதாரம் வடக்கே ஆர்னாபுக்கு தனி சேனல் உருவாக்கித்தந்த பிஜேபி தமிழகத்தில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேக்கு வெறும் இணையதளம் மட்டுமே உருவாக்கித்தந்திருப்பதுதான்’ என்று ஏளனம் செய்திருக்கிறார் ஒரு கட்சிசார்ந்த தமிழகப் படைப்பாளி – கம் – இதழியலாளர். அவருக்கு அவர் கட்சி சேனல் உருவாக்கித் தராததற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்கத் தோன்றுகிறது.

த்தனைக்கிடையிலும் மிகப்பெரிய ஆறுதல் _ இந்திய மக்கள் என்றுமே யோசிக்கும் திறனுடையவர்கள். மந்தைகளல்ல.
§   


அடிப்படை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

அடிப்படை
‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)



















அனுபவிக்கக் கிடைக்கும் அளப்பரிய அன்பும்
ஆனந்தமும்
ஆறாப் பெருந்துயரும் அழுகையும்
அகிலம் உள்ளும்வெளியும்
அறிந்த வாழ்வின் அர்த்தனர்த்தங்களும்
அறியா வாழ்வுக்கான அச்சமும் இச்சையும்
அன்னபிறவான எண்ணிறந்தவையுமாய்
உருவாகும் கவிகளும் அவர்தம் கவிதைகளும் ஒரேயளவாயிருக்கலாகாதெனினும்
விரிந்துகொண்டே போகும் வழிகளிலெல்லாம்
புகுந்து புறப்பட்டுவரும் அவர்களின் அவைகள்
கவைக்குதவாதாயினும்
என்றும் உண்மையான உண்மையுரைக்கவேண்டும் உலகமனிதர்களாகவும் என்பதே
எழுதப்படாத விதியானால்
எத்தனை நன்றாயிருக்கும்…..



(சமர்ப்பணம்: அன்னா அக்மதோவாவுக்கு)

நாயின் சூரியன் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)



நாயின் சூரியன்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சூரியனைப் பார்த்து நாய் குரைத்திருக்கலாம்;
அதற்கான அர்த்தங்கள் மனித அகராதிக்கு அப்பாற்பட்டவை
யென்றே தோன்றுகிறது.
நாயுமல்லாத சூரியனுமல்லாத மனிதர்
நாயின் கண்களால் சூரியனைப் பார்த்திருக்க வழியில்லை.
சூரியக்கதிர்களாகி நாயைத் தொட்டிருக்கவும் முடியாது.
நெருக்கமாய் வாலாட்டி நின்றாலும்
நாய்க்கும் தனக்கும் நடுவேயுள்ள நெடுந்தொலைவையோ
வரிவரியாய்க் கவிதையெழுதினாலும்
கதிரோனுக்கும் தனக்குமிடையிலான
காலவேகத்தையோ
கடக்கவேயியலாத மனிதர்
காலங்காலமாய்
சூரியனுக்கும் நாய்க்கும் இல்லாத சச்சரவில்
நியாயம் வழங்கி தன்னைத்தானே நாளும்
மெச்சிக்கொண்டபடி…
.

ஒளிக்கீற்று - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஒளிக்கீற்று
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


’உனக்கு இருள் எனக்கு ஒளி’ என்றால்
’உன் இருள், என் ஒளி’ என்பதல்ல பொருள்.
முற்றிய பைத்தியமாய் அருள்வாக்கு
சொல்வதாய்
நக்கல் செய்யலாம் நீங்கள்.
விக்கல்போல் அல்லாமல் அது்
மிக்க விழிப்புடனான உங்கள் தேர்வு;
பொக்கிஷம் அனைய அடிப்படை உரிமை.
எதையும் எவரையும் எத்தித்தள்ளுதலே
ஏற்றந்தரும் பெருமை.
எக்காரணங்கொண்டும் அவற்றை
விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்று
நன்றாகவே தெரியும். நல்லது.
அதற்கு முன்
’தக்கார் தகவிலர்’ என்ற குறளையும்
சற்றே நினைவுபடுத்திக்கொண்டால்
இன்னும் நல்லது.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:114)


பொழிப்பு (மு வரதராசன்): நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்

மணக்குடவர் உரை: செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும்.
இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்.
(தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவ்ருடைய புகழ் அல்லது பழியால் அறியப்படும். (எச்சம் -இறந்த பின்னர் எஞ்சி நிற்பது புகழ் அல்லது பழி)

நன்றிக்குரியவர்கள்…… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நன்றிக்குரியவர்கள்……
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆளரவமற்று நீண்டுகொண்டிருந்த தெருக்களும் சாலைகளும்
பாலைவனமாய்க் காய்ந்திருக்க
ஆங்காங்கே நிரம்பிவழிந்துகொண்டிருந்த குப்பைத்தொட்டிகளைத்
துழாவிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்களின் கைகளில்
மரகத மாணிக்க வைர வைடூரியங்கள் கிடைக்கச் செய்ய
வக்கில்லாத என் கவிதைகள்
வெளியே வர வெட்கப்பட்டு
மனதின் குரல்வளைக்குள் மூச்சுத்திணறிக் கிடந்தன.
தெருவோரத் திருப்பத்தில் சோர்ந்து அமர்ந்திருந்த பெரியவரிடம் _
பெரிதாக எதையும் தரமுடியாத என்னை மனதாரச் சபித்தவாறே _
தண்ணீர்புட்டியையும் மாரி பிஸ்கெட் பாக்கெட்டையும்
பத்து ரூபாயையும் நீட்டினேன்.
நன்றி கூறி வாங்கிக்கொண்டதோடு
’பத்தாவது வரை படித்திருக்கேம்மா – படிக்க ஏதாவது புத்தகம் தரமுடியுமா?’
என்று கேட்ட மாத்திரத்தில்
என்னை குபேரனாக்கிவிட்ட வள்ளன்மைக்கு
என்னவென்று நன்றி சொல்வது!

மந்திரமாவது சொல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மந்திரமாவது சொல்
‘ரிஷி’


(லதா ராமகிருஷ்ணன்)



’மந்திரமாவது சொல்’ என்று சொல்லிச் சென்றார்கள் நம் முன்னோர்கள்.
இங்கே சொல்லை வைத்து ஏவல் பில்லி சூனியம் செய்துகொண்டிருக்கிறார்கள் நிறைய பேர்.
[மந்திரத்தைப் பெரிதென்று முன்வைத்து பில்லி சூனியத்தை மதிப்பழிக்கும் மேட்டிமைத்தனம் உங்களுடையது என்று யாரேனும் மேற்படி வரிகளைப் பொருள்திரிக்கலாம். வெறுப்பு மண்டிய அவர்களிடம் உரையாடல் சாத்தியமில்லை என்ற உண்மையின் விபரீதம் அச்சுறுத்துகிறது]
சில வார்த்தைகளையே திரும்பத்திரும்பச் சொல்லி கேட்பவர்கள் மனங்களில் அவற்றை இரண்டறக் கலக்கச்செய்த பின் _
(குழந்தைகள் வளரிளம்பருவத்தினரெனில் இந்த வேலை வெகு சுலபமாகிவிடும்)
அன்போடு அருந்தச்சொல்வதாய் வெறுப்பையும் வன்மத்தையும் அவர்களுடைய குரல்வளைகளுக்குள் திணித்துவிட _
அட, நம்மைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார்களே என்ற நெகிழ்ச்சியோடு சிலரும்
அதன் மூலம் தனக்கொரு ஒளிவட்டம் கிடைத்த மிதப்பில் சிலரும்
அப்படி என்னதான் தனி ருசி யிதில் என்ற ஆர்வக்குறுகுறுப்போடு சிலரும்
அதை ஆற அமர மென்று தின்று அடுத்தவேளைக்கும் அது கிடைக்குமா என்று அலைபாய்கிறார்கள்;
அதற்காக தங்கள் அடிப்படை அன்பை தடியெடுத்து அடித்துத்துவைக்கவும் தயாராகிறார்கள்.
மற்றும் சிலர்
மூச்சுத்திணறலிலிருந்து தப்பிக்கவேண்டி வேகவேகமாக அவற்றை விழுங்கியும்
அவசரமாய் அருகிலிருக்கும் குடுவையிலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகி உள்ளிறக்கியும்
வாகாய் அவற்றால் நிரம்பிவிடுகிறார்கள்.
வன்மமும் வெறுப்பும் அவர்கள் அடியாழ மனங்களை இறுகப் பற்றிக்கொள்ள _
பின், அவர்களும் விரைவிலேயே சொற்களைக்கொண்டு செய்வினை செய்யும் பில்லிசூனியக்காரர்களாகிவிடுகிறார்கள்.
’இந்தப் பொதுவிதிக்கு படைப்பாளிகள் மட்டும் விதிவிலக்கா என்ன’ என்று அழுதுகொண்டே கேட்கும் அசரீரியின் குரலை என்ன செய்ய.....