LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 26, 2020

மந்திரமாவது சொல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மந்திரமாவது சொல்
‘ரிஷி’


(லதா ராமகிருஷ்ணன்)



’மந்திரமாவது சொல்’ என்று சொல்லிச் சென்றார்கள் நம் முன்னோர்கள்.
இங்கே சொல்லை வைத்து ஏவல் பில்லி சூனியம் செய்துகொண்டிருக்கிறார்கள் நிறைய பேர்.
[மந்திரத்தைப் பெரிதென்று முன்வைத்து பில்லி சூனியத்தை மதிப்பழிக்கும் மேட்டிமைத்தனம் உங்களுடையது என்று யாரேனும் மேற்படி வரிகளைப் பொருள்திரிக்கலாம். வெறுப்பு மண்டிய அவர்களிடம் உரையாடல் சாத்தியமில்லை என்ற உண்மையின் விபரீதம் அச்சுறுத்துகிறது]
சில வார்த்தைகளையே திரும்பத்திரும்பச் சொல்லி கேட்பவர்கள் மனங்களில் அவற்றை இரண்டறக் கலக்கச்செய்த பின் _
(குழந்தைகள் வளரிளம்பருவத்தினரெனில் இந்த வேலை வெகு சுலபமாகிவிடும்)
அன்போடு அருந்தச்சொல்வதாய் வெறுப்பையும் வன்மத்தையும் அவர்களுடைய குரல்வளைகளுக்குள் திணித்துவிட _
அட, நம்மைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார்களே என்ற நெகிழ்ச்சியோடு சிலரும்
அதன் மூலம் தனக்கொரு ஒளிவட்டம் கிடைத்த மிதப்பில் சிலரும்
அப்படி என்னதான் தனி ருசி யிதில் என்ற ஆர்வக்குறுகுறுப்போடு சிலரும்
அதை ஆற அமர மென்று தின்று அடுத்தவேளைக்கும் அது கிடைக்குமா என்று அலைபாய்கிறார்கள்;
அதற்காக தங்கள் அடிப்படை அன்பை தடியெடுத்து அடித்துத்துவைக்கவும் தயாராகிறார்கள்.
மற்றும் சிலர்
மூச்சுத்திணறலிலிருந்து தப்பிக்கவேண்டி வேகவேகமாக அவற்றை விழுங்கியும்
அவசரமாய் அருகிலிருக்கும் குடுவையிலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகி உள்ளிறக்கியும்
வாகாய் அவற்றால் நிரம்பிவிடுகிறார்கள்.
வன்மமும் வெறுப்பும் அவர்கள் அடியாழ மனங்களை இறுகப் பற்றிக்கொள்ள _
பின், அவர்களும் விரைவிலேயே சொற்களைக்கொண்டு செய்வினை செய்யும் பில்லிசூனியக்காரர்களாகிவிடுகிறார்கள்.
’இந்தப் பொதுவிதிக்கு படைப்பாளிகள் மட்டும் விதிவிலக்கா என்ன’ என்று அழுதுகொண்டே கேட்கும் அசரீரியின் குரலை என்ன செய்ய.....

No comments:

Post a Comment