LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 30, 2025

கலைடாஸ்கோப் கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கலைடாஸ்கோப் கவிதைகள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

1. வழிச்செலவு
May be an illustration of tree


ஓருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில்
எனக்கேயெனக்கான நிழலை
குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில்
இன்று
நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர்.
சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி;
சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின்
திருப்பெயர்களைச் செதுக்கியபடி;
சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி;
சிலர் தலவிருட்சமாய் பிரதட்சணம் செய்து
நெடுஞ்சான்கிடையாய் விழுந்து கும்பிட்டபடி.
சிலர் சலசலத்திருக்கும் பறவைகளைப்
பலகோணங்களில் படமெடுத்தபடி…..
உணவிடுவார்களோ உரமிடுவார்களோ, தெரியவில்லை.
மரத்தின் பச்சையம் மாற்றுக்குறையாமலிருக்கிறதா?
அறியேன்.
வனாந்திரம் மரத்தின் விருப்பா? அன்றி
விபத்தாயமைந்த இருப்பா?
கனாக்கண்டு முடித்தபின் கண்விழித்த கதையாய்
பயணப்பொதி சுமந்துவழியேகும் தருணம்
விழிநிரம்பும் நீர் வழியும்
மரம் வாழப் பொழிமழையாய்.

***


2. வீதியுலா

தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது.
அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை.
சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது.
பலசமயங்களில் இல்லை.
இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில் ’வாராயென் தோழி வாராயோ’வை அடுத்து வந்துவிடுகிறது
’போனால் போகட்டும் போடா’……
ஊர்வலம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது;
நான் ஊர்வலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்.
வருவதும் போவதும் சந்திக்கும் புள்ளியில்
உருவாகும் கருந்துளை வெற்றிடமோ? அணுத்திறமோ…..?
அதோ, அந்த ஊர்வலத்தில் நானும் போய்க்கொண்டிருக்கிறேன் _
மௌனமாய் _ மகிழ்ந்து சிரித்தபடி _ மாரிலடித்து அழுதபடி……
ஓலமும் ஆலோலமும் ஆனபடியே….
தொலைவில் தெரியும் வெளிச்சப்புள்ளி
மோட்டார் பைக்கா? தண்ணி லாரியா….?
ரய்லில்லை, கப்பலில்லை என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை.
நான் நகர்ந்துகொண்டிருப்பது
நிலத்திலா, நீரிலா, ஆகாயத்திலா என்று
நிச்சயமாகத் தெரியாத நிலை.
உள்ளேயொரு ஆகாயவிமானம் தரையிறங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு கப்பல் தரைதட்டிக்கொண்டிருக்கிறது.
இரண்டிற்குமிடையேயான வித்தியாசத்தில்
தொலைதூரத்து ஊர்வலம் தவறாமல் நடந்தவாறு.


***

3. மால்

கற்றது கையளவெனினும்
கடல்முழுக்கப் பொங்கும் பால்
முற்றிய பித்துநிலையில்
மனதில் முளைத்துவிடுகிறது வால்
புற்றுக்குள் பாம்புண்டோ என்றறிய
நுழைக்கவோ கால்
சற்றேறக்குறைய நடுமார்பில் தைத்தபடி
அற்றைத்திங்களிலிருந்தொரு வேல்.
காற்றாடிக்கு எதுவரை தேவை நூல்?
உற்றுப்பார்க்க ஒரே இருள்தான்போல்.
வெற்றுச் சொற்களுக்கு வாய்த்த மௌனம் மேல்......

***

4.அரைகுறை ரசவாதம்
ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும்
இறுகிய கருங்கல்லாகவும் காலம்….
நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
என்னால் முடிந்த உருவங்களையெல்லாம்
வனைந்துபார்க்கிறேன்.
நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு
இளகிவிடுவேனா என்ன என்று குறும்பாய்ச் சிரிக்கிறது காலம்
நான் குருவியாய் செதுக்க முனைந்து குருவி முட்டையாய் பிடித்துவைத்திருந்த உருண்டையைப் பார்த்து.
கருங்கற்காலமோ சதா பின்மண்டையைக் குறிபார்த்துக்கொண்டேயிருக்கிறது.ll reactions:

Friday, June 20, 2025

புரியும்போல் கவிதைகள் சில….. ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புரியும்போல் கவிதைகள் சில…..

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(*’இப்போது’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

 (*சமர்ப்பணம் : கவிதை புரியவில்லை என்று திரும்பத் திரும்ப நவீன தமிழ்க்கவிஞர்களை கழுவேற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு)

1.
குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம்
இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள்
எல்லாமும் மழையுமாய்
எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான்
தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும்
எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத்
தெரியுமோ
ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும்
அவற்றின் அலை-துகள் நிலையும்
களி நடனமும் பிறவும்….?

2.

ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து….
ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன்
என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன்
இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின்
ஆறான ஐந்தின் பத்தான எட்டின்
நேர்க்கோடுகள், நெளிவு சுளிவுகள்
வாத்தின் எலும்பு மார்பக வளைவு
வாலுடன் காத்தாடி சிரசாசன நிலை
உள்வாங்கிய சறுக்குமரம்
இருவட்டச்சிறைகளுக்குள்ளிருந்து
வெளியேறும் வழி -
என எண்ணிப்பார்த்துக்கொள்ள
எத்தனையோ இருக்கு பார்.

3.
சிட்டுக்குருவி காக்கை புறா கோழி குயில் கழுகு மயில்
வான்கோழி இன்னுமுள ஈராயிரத்திற்கு மேலான
பறவையினங்களில்
விரும்பித் தேன்குடிப்பது எது
தேன்குழலைக் கடிப்பது எதுவெனத்
தெரியுமோ எவருக்கேனும்…?
அட, தெரியாவிட்டால்தான் என்ன?
ருசியறியாதவரை தேன் வெறும்
பிசுபிசுப்பானஅடர்பழுப்புநிற திரவம்தான்.
அருந்திய பறவை ஆனந்தமாய்ச் சிறகடிப்பதைப் பார்த்து
அடித்துப்பிடித்து உண்டிவில்லைத் தேடிக்கொண்டிருப்போர்
கண்டிலரே வெளியெங்கும் பறத்தலின் காற்றுத்தடங்களை.
உண்டல்லோ அவ்வண்ணமாய் புரியாக் கவிதையும்!

4
ஸ்கூட்டி, பைக், கார், லாரி, குப்பை லாரி
மினி பஸ், மாம்பலம் - டு - லஸ் மாக்ஸி பஸ்
ரயில் கப்பல் ஆகாயவிமானம்……
எல்லாம் இருந்தும் கடற்கரையில்
கையைத் தலைக்கு அண்டக்கொடுத்தொருவன்
அண்டவெளிக்குள் பல உன்னதங்களைக் கண்டவண்ணம்
படுத்திருக்கிறானே….
அந்த வேளையில் பயணம் என்ற சொல்லின் அர்த்தம்
அவனுக்குப் பிரத்யேகமானது.
அவன் நகர்வதாகவே தெரியவில்லையே என்று
அங்கலாய்த்து
அத்தனை முனைப்போடு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கற்களைத் திரட்டி
அவன் மீது குறிபார்த்து எறிவதில் காட்டும் அக்கறையில்
ஒரு துளி கவிதை மீது காட்டினாலும் போதும் -
நிறையவே புரிந்துவிடும்.

5.
திருக்குறள் நாலடியார் குறுந்தொகை
நற்றிணை தேவாரம் திருவாசகம்
சித்தர் பாடல்கள் சிலப்பதிகாரம்
எல்லாம் புரிந்துவிட்டதுபோலும்
புரியாக் கவிதை எழுதுகிறான் என
புகார் மேல் புகார் அளித்தவண்ணம்
அண்டவெளியைக் கூண்டிலேற்றி
குறுக்குவிசாரணை செய்ய
முடிந்தால் நிலவறைக்குள் அடைத்துவிடவும்
அன்றும் இன்றுமாய் அவர்கள்
ஆயுதபாணிகளாய் வந்தபடி வந்தபடி…..
காக்கும் கவிதை காக்க
அகாலத்தின் விரிபரப்பில்
காற்றுச்சித்திரங்களைத் தீட்டிக்
களித்திருப்பானே கவிஞன்!

6
இந்த வாசகருக்குப் புரியுமென்று
வெந்த சாதம் பற்றி எழுதினார்’
வந்ததே கோபம் வேறொருவர்க்கு.
பச்சைக் காய்கறிகளே சத்துள்ள உணவு
என்று கடித்துக்குதறிவிட்டார்.
வம்பெதற்கு என்று
நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தொரு
கவிதை எழுதினார்.
பாகற்காயைப் பற்றிப் புனையத் தோன்றவில்லையே என்று
கண்டனத்தைப் பதிவு செய்தார் இன்னொரு வாசகர்.
ஆகா மறந்துவிட்டேனே என்று அளப்பரிய வருத்தத்துடன்
மருந்துக் கசப்புக்கோர் எடுத்துக்காட்டு பாகற்காய்
எனக் கவிதையெழுத
சுண்டைக்காயின் கசப்பைச் சொல்லாமல் விட்ட பாவி
என மண்ணை வாரித் தூற்றிச் சென்றார்
மா வாசகரொருவர்.
என்ன செய்வதென்றே தெரியாமல்
எழுதியவற்றையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு
உறங்கச் சென்றார் கவிஞர்.
கனவிலும் அந்த வாசகர்கள் வந்து
அவர் உருகியுருகி யெழுதியதையெல்லாம்
உள்வாங்க மனமின்றி
கருகக் கருகக் கண்களால் எரித்து
சாம்பலை காலால் கெந்திவிட்டு
கெக்கலித்துக்கொண்டிருந்தார்கள்.

7
இரவு இரண்டுமணியைத் தாண்டிவிட்டது.
உறக்கம் வந்தும் உறங்க முடியாமல்
வரிகள் சில மனதிற்குள் குறுகுறுக்கின்றன.
கொஞ்சுகின்றன.
ஏந்திக்கொள்கின்றன.
வெளியே கூட்டிக்கொண்டுபோயேன் என்று கையைப்
பிடித்திழுக்கின்றன.
எழுதத் தொடங்கும் நேரம்
எழுதும் நேரம்
எழுதி முடிக்கும் நேரம்
நானே கவிதையின் பாடுபொருளாய்
இலக்கு வாசகராய் -
விலகிய பார்வையில்.
அதிவிழிப்பு நிலையில்…..
சாதியின் பெயரால் சக கவிஞர்களைச் சிரச்சேதம் செய்பவர்கள்
தமிழ்க்கவிதைத் தாளாளர்களாய்
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிச் சென்றவண்ணம்.
இன்னும் ராமேசுவரத்தைக்கூடக் கண்டிலேன் நான்.
என்றாலும், ”குறையொன்றுமில்லை” எனச் சொல்வேன் -மறைமூர்த்திக் கண்ணனிடம் இல்லை -
மனம் நிறைக்கும் கவிதையிடம்.
பின் ஏன் 'திண்ணை'க்கு அனுப்புகிறாய் என்பார்க்கு:
”கல்லுக்குள் தேரைக்கு உணவிருக்கையில்
என் கவிதைக்குள் கரைபவரும் எங்கோ இருக்கக்கூடும்தானே!”

வாய்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



பேசுவதற்கென்றே சில வாய்கள்
மூடியிருக்கவென்றே சில வாய்கள்
பேசும் வாய்களைப் பகடி செய்யவும் பழிக்கவும்
பேசவிடாமல் செய்யவும்
சில வாய்கள்
பேசினால் பிடாரி
பேசாவிட்டால் பயந்தாங்கொள்ளி
நாவடக்கம் எல்லோரிடமும் ஒரேயளவாய்ப் பகுக்கப்படுவதில்லை.
நாவினாற் சுட்ட வடு இல்லாதார் யார்?
ஊர் பேர் உள்ள காருக்கேற்ப
ஒருவர் ஏற்படுத்திய காயம் உட்காயமாக
இன்னொருவர் உண்டாக்கியது அங்கிங்கெனாதபடி
எல்லாவிடமும் சுவரொட்டிகளாகும்.
சிலர் வாயால் வடைமட்டுமா சுடுகிறார்கள்?
பஜ்ஜி போண்டா பராத்தா பிரியாணி
பக்கோடா இன்னும் என்னென்னவோ
உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்குமாய்
வியாபாரம் அமோகமாய்.
பேச்சுரிமை சில வாய்களின் தனிச்சொத்தாக
சகமனிதர்களின் குரல்வளைகளை நெரித்துக்
குரலற்றவர்களாக்கி
அவர்களுக்காகப் பேசியவாறிருக்கும் சில வாய்கள்.
விளம்பரங்களால் பெண்ணுரிமையின் வாயில் நஞ்சூற்றிப் பொசுக்கியபடியே
பெண்விடுதலையை முழங்கிக்கொண்டிருக்கும் அச்சு ஒளி-ஒலி ஊடக வாய்கள்.
சின்னக் குழந்தைகளின் வாய்களில் நுழையமுடியாத சொற்களைத் திணித்துத்
தங்களுடைய வெறுப்பையும் வன்மத்தையும்
கக்கவைத்துக்கொண்டிருக்கும் பெரியவர்களின் வாய்கள் இப்போதெல்லாம் வெற்றிலைக்கு பதிலாக
அரசியலையே அதிகம் குதப்பியபடி.
பிறவியிலேயே வாய்பேச முடியாதவளின்
மனமெல்லாம் பேசும் வாய்களாக
நிலைக்கண்ணாடி முன் நின்றவண்ணம் பேச முயற்சித்துக்கொண்டிருக்கும் அவளுடைய
நாபியிலிருந்து பீறிடும் அமானுஷ்ய ஒலிகளின்
மொழியறிந்ததாய் அருகிலிருந்த மரத்திலிருந்து
ஒரு பறவை கீச்சிடுகிறது.
அவளுக்கு அது கேட்குமோ தெரியவில்லை.
வாயிருப்பதால் மட்டும் எல்லாவற்றையும் பேசிவிட முடிகிறதா என்ன?
மூடிய அறைக்குள் யாருமற்ற நேரத்தில் உரக்கத் தானும் தானான பிறனுமாக உரையாடிக்கொண்டிருந்தால்
மனநல விடுதிக்கு அனுப்பிவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
அதனால்தானோ என்னவோ
அடித்தால் பதிலடிகொடுக்கவியலாத பலவீனராய்த் தேர்ந்தெடுத்து
அடித்துக்கொண்டேயிருக்கின்றன சில வாய்கள்.

அவரவர் நிலம் _ ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் நிலம்

_ ‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

2005இல் வெளியான என் _ காலத்தின் சில ‘தோற்ற நிலைகள்’ கவிதைத்தொகுப்பிலிருந்து

.................................................................................................................

உனக்குக் கால் கால் மண் தரை

எனக்கு மனம் தாள் நிலம் அலை
உன் காலே எனதுமாக நிர்பந்தம் ஏதுமிலை
காற்றோ மழையோ கடலோ முகிலோ
நடக்கப் பழகிய பின் நிலம் தானே…
பிடிப்பற்றது திடமில்லை யெனில்
தரையுனதெனக்கமிலமாய்.

மாய யதார்த்தம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மாய யதார்த்தம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
......................................................

அத்தனை அழகான எழுதாக் கவிதை வரியொன்று
என்னை தத்தெடுத்துக்கொள்ளேன் என்கிறது.
திருமணமாகவில்லையே என்றால்
SINGLE PARENT கேள்விப்பட்டதில்லையா என்று
செல்லமாய் சிரிக்கிறது.
செயற்கை முறையில் கருத்தரிப்பதில்லையா என்ன
என்று பெரியமனுஷத்தனமாய் கண்களை விரித்துப்
பார்க்கிறது.
அதன் பிஞ்சுக்கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு
போய்க்கொண்டேயிருக்கவேண்டுமென்று
தோன்றுகிறது.
எங்கேயென்று தெரியவில்லை.
பற்ற நீளும் என் கையில் எங்கிருந்தோ ஒரு
பஞ்சுமிட்டாயைத் திரட்டித்தந்து
போயேபோய்விடுகிறது.
உண்மையான விழைவோடு உள்ளங்கையை
முகர்ந்துபார்த்தால் ஆப்பிள் வாசனையடிக்கும்
என்று யாரோ என்றோ எதற்கோ சொன்னது
நினைவுக்கு வர
அனிச்சையாய் நாசி நோக்கி மேலெழும்பும்
உள்ளங்கையின்
விரலிடுக்குகளின் வழியே கசிந்துருண்டுகொண்டிருந்த
நீர்த்துளிகளில் ஏதோவொன்று என் ஆப்பிளின்
மினியேச்சர் வடிவமாகிறது.

அதோகதி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அதோகதி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

கதியற்ற மக்களைக் கதைத்தேற்றுவதாய்
கதைத்துக் கதைத்துத்
தன் சக மனிதர்களின் தலைகளை கைகால்களை
மிதித்தபடி
தன்னையொரு உயரமான மேடையில் ஏற்றிக்கொண்டுவிட்டவர்
அங்கிருந்து யார்யார் மீதோ காறியுமிழ்ந்துகொண்டேயிருந்ததையும்
அவருடைய அருவருப்புப் பேச்சை
வாய்பிளந்து கேட்டபடியிருந்த
மனிதர்களையும்
கண்ட காகம் ஒன்று
விர்ரென்று பறந்துவந்து
அன்னாருடைய தலையில் எச்சமிட்டுப்
பறந்துசென்றது.