மாய யதார்த்தம்
ரிஷி
......................................................
அத்தனை அழகான எழுதாக் கவிதை வரியொன்று
என்னை தத்தெடுத்துக்கொள்ளேன் என்கிறது.
திருமணமாகவில்லையே என்றால்
SINGLE PARENT கேள்விப்பட்டதில்லையா என்று
செல்லமாய் சிரிக்கிறது.
செயற்கை முறையில் கருத்தரிப்பதில்லையா என்ன
என்று பெரியமனுஷத்தனமாய் கண்களை விரித்துப்
பார்க்கிறது.
அதன் பிஞ்சுக்கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு
போய்க்கொண்டேயிருக்கவேண்டுமென்று
தோன்றுகிறது.
எங்கேயென்று தெரியவில்லை.
பற்ற நீளும் என் கையில் எங்கிருந்தோ ஒரு
பஞ்சுமிட்டாயைத் திரட்டித்தந்து
போயேபோய்விடுகிறது.
உண்மையான விழைவோடு உள்ளங்கையை
முகர்ந்துபார்த்தால் ஆப்பிள் வாசனையடிக்கும்
என்று யாரோ என்றோ எதற்கோ சொன்னது
நினைவுக்கு வர
அனிச்சையாய் நாசி நோக்கி மேலெழும்பும்
உள்ளங்கையின்
விரலிடுக்குகளின் வழியே கசிந்துருண்டுகொண்டிருந்த
நீர்த்துளிகளில் ஏதோவொன்று என் ஆப்பிளின்
மினியேச்சர் வடிவமாகிறது.

No comments:
Post a Comment