LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 3, 2025

நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர் வாழ்ந்த காலத்திலிருந்து வெகுகாலம் கடந்து
அவர் கவிதைகள் பற்றி எழுதப்பட்டிருந்த
குறிப்பு
கட்டுரை
திறனாய்வில்
காணாமல் போயிருந்தது _
கையில் கிடைத்த தத்துவங்களை
சோழியாய் வரிகளில் சுழற்றி வீசி
யவர் தன்னை தீர்க்கதரிசிக் கவியாக நிலைநிறுத்திக்கொண்டது;
அன்பே சிவம் என்று ஒரு மேடையில் போதித்து
சிவம் சவம் என்று இன்னொரு அரங்கில் சாதித்தது;
தன் வீட்டின் பத்துக்குக் குறையாத அறைகளை பூதங்காத்தவாறும்
எந்நாளூம் நிலவறையில் நெல்மூட்டைகள்
பத்துக்குக் குறையாமல் வைத்திருந்தபடியும்
‘தனியொருவனுக்குணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோமை
தவறாமல் உணர்வெழுச்சிமிக்க ஏற்ற
இறக்கங்களோடு தழுதழுக்கும் குரலில்
தீ கலந்து பகர்ந்தது;
தந்த கோபுரத்தின் கண்ணாடி அறையுள்ளிருந்து கணினியைத் தட்டியவாறே
தன்னாலான கலவரத்தைத் தூண்டும்
சமூகப்பணி செய்துகொண்டிருந்த
அவர் தர்மசிந்தனையும்
தாராளமய நன்னெறியும்;
கழிபொழுதில் தனது மொழியாற்றலை
யெல்லாம்
குறிப்பிட்ட ஒரு தலைவரைப் பழிப்பதற்கே
செலவழித்த
அவரது மெச்சத்தகுந்த கூர்கவனமும்;
அழியாப்புகழ் பெற அவர் செய்த
அரசியலும்;
அவரிலிருந்து பெருக்கொடுத்தோடிக்
கொண்டிருந்த
பொல்லாப்பும் பொச்சரிப்பும்;
சிற்றெறும்பு கடித்ததைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலுமான
’சிச்சுவேஷனை’ உருவாக்கி அவர் பாடிய
நவீன ஒப்பாரியில் அவர்
கச்சிதமாய் ஒளித்துவைத்திருந்த
நச்சுத்துப்பாக்கியும்;
அச்சச்சோ அராஜகம் என்று
பன்னிப் பன்னிச் சொன்ன அதே வாயால்
அதே விஷயத்தை ‘அதெல்லாம் வாழ்வில் சகஜம்’
என்று அடித்துச்சொன்னதும்;
ஒரு பத்தியில் தொற்றுநோயும் மறுபத்தியில் நடிகர் வெற்றிவேலுக்கான
’வாகைசூடி வா’ வாழ்த்துமாய்
பதிவுகளைப் பகிரும் வித்தகமும்;
எழுத்தின் நிறைமௌனத்தைக் கிழிக்கும்
வெற்றுமுழக்கங்களும்;
மற்றும்……….

நாமெல்லோரும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நாமெல்லோரும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நாமெல்லோரு மிதைப் பேசலாம்
இதைப் பேசலாகாதென இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நம்மெல்லோரையும்
ஒன்று திரட்டி
மாவுருண்டையாய் உருட்டி
குலோப் ஜாமுன் குடமிளகாய் பஜ்ஜி
கொத்துபரோட்டா பிரியாணி குருமா
சாதா தோசை மசாலா தோசையென
வகைவகையாய் நமக்கே
பரிமாறிக்கொண்டிருக்கப்போகிறார்கள் நாமெல்லோருமானவர்கள்
நம்மைக் கேட்காது நம்மைச் சேர்க்கும்
நாமின்
நெரிசலான ஜன்னலற்ற சிறைக்கொட்டடிகள்
நம்மை நாமாக்குவதுமொரு தண்டனையாய்.
நம்மை நாமாக்கவும் நாமை நம்மாக்கவும்
அழையா விருந்தாளியாய்
அறவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிவழங்கிக்கொண்டிருப்பவர்கள்
அவற்றின் மூலமே தம்மையொரு
’ஆளாய்’ காணவும் காட்டவும்
ஆலாய்ப் பறப்பதை யறியமாட்டோமா நாம்?
நமது நாமெல்லோரில் நாமெல்லோருமில்லாததுபோலவே
அவரவர் நாமெல்லோரிலும்
நம்மெல்லோருடைய நாமெல்லோரிலும்.
நமக்கான நாமை
அவருக்கான நாமாய் வனையும்
அவருடைய நாமின் நாம்
தலையாட்டிபொம்மைகளாம்
எனச் சொன்ன கணத்தில் நாம்
அந்நியமாகிவிடுவோம்
என்றறிவோம்.

ஆடுகளம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஆடுகளம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும்
ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை.
காரணங்கேட்டவரிடம் கூறினார்:
கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும்
குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும்
சிறுமதியாளர்களும்
செத்த உயிர் தாங்கியோரும்
சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும்
சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்
அபத்தப்பேச்சே அறிவுசாலித்தனமாய்க்கொள்வோரும்
அடிவாரத்தில் நின்றுகொண்டு மலைமுகடைப் பகடி செய்வோரும்
பட்டுப்பூச்சிக்கு மனிதனைப்போல் பாடவருமா என்று
முட்டாள்தனமாய் மார்தட்டிக்கொள்வோரும்
கட்டாயம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவேன்
என்று துண்டுபோட்டுத் தாண்டுகிறவர்களும்
உன்னதங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்க மாட்டேன்
என்ற எழுதாச் சட்டத்தின்படியே செயல்படுகிறவர்களும்
எல்லோரையும் மட்டம்தட்டுவதையே காவியத் துணிச்சலாகக்
கட்டங்கட்டிக் காட்டுவோரும்
வெட்கங்கெட்டிருப்பதையே விவேகமாய்க் காட்டிக்கொள்வோரும்
நட்டுகழண்டதாய் நாலும் நவின்றுகொண்டிருப்போரும்
புட்டுபுட்டு வைப்பதாய் துட்டுவாங்கித் திட்டுவோரும்
காகித சிங்கம் புலி கரடி பாம்பாய்
சர்க்கஸ் முதலாளியாய் மிருகங்களாய்
சுற்றிக்கொண்டிருக்கும் சோப்ளாங்கிப் போட்டியாளர்களோடு
பொருதவேண்டியிருப்பது
வெற்றியின் குதூகலத்தைவிட
தோல்வியின் கையறுநிலையையே
அதிகம் உணரச்செய்கிறது.....

Thursday, April 24, 2025

நாவினால் சுட்ட வடு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நாவினால் சுட்ட வடு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை
பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி
திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம்
உயிர் துளைத்து உட்புகுந்து வரவாக்கும் ரணம்
வழக்கமாகிவிட்ட பின்னரும் _
வெடித்துமுடித்து வீதியோரம் வீசியெறியப்பட்டிருக்கும்
குருவி வெடிகளைக் காணும்நேரம்
குலைநடுங்கி யதிர்வதுபோல்
அஞ்சி நடுங்கும் மனம் _
இன்னொரு முறை யந்தச் சொல்லைக்
கேட்க நேரும் தருணத்தின் அவலமெண்ணி
அல்லும் பகலும்
அலைக்கழிந்துகொண்டிருக்கும்.

இருந்தவிடத்திலிருந்தே ஒரு ஓட்டப்பந்தயம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இருந்தவிடத்திலிருந்தே

ஒரு ஓட்டப்பந்தயம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல் காலாவதியாகிவிட்ட காலம் இது.
இன்று குட்டையைக் குழப்பவேண்டும்;
அதில் மனிதர்களைப் பிடிக்கவேண்டும்.
இந்தப் போட்டியில் முந்துவோருக்கு
அரங்கின் இருமருங்கிலிருந்தும்
கைத்தட்டலும் சீழ்க்கையொலியும் கிடைத்தபடியேயிருக்கும்.
கேட்கக்கேட்க கால்களில் தாமாகவே வேகம் கூடும்.
முதல் இடத்தைப் பெறுபவருக்கு மேதகு அறிவுசாலிப் பட்டமும்,
மாண்புமிகு மனிதநேயவாதி யென்ற பாராட்டும் நற்சான்றிதழும் வழங்கப்படும்.
பொற்கிழி நேரடியாகத் தரப்படாவிட்டாலும்
ப்ளேனில் நான்கைந்து நாடுகளுக்குச் சென்று வர ஏற்பாடு செய்யப்படும்.
இன்னுமென்ன?
இதோ இடையறாத இந்தப் போட்டியில்
இன்றே பங்கெடுத்துக்கொள்வீர்;
பரிசுகளை வெல்வீர்.
இப்போதே வாங்கிடுவீர் வெண்-மார்க் பனியன் லுங்கிகள்.
இன்றைய நிகழ்ச்சிகளனைத்தையும் வழங்குவோர்
ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் பீரங்கிகள்.

அவரவர் அந்தரங்கம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அந்தரங்கம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

காதல் எப்படி நிகழும்
காதலில் என்ன நிகழுமென்று
காதலிப்பவர்களுக்கும் தெரியும்
காதலைக் காதலிப்பவர்களுக்கும் தெரியும்
இருந்தும்
குறுகுறுவென்று பார்த்தாரா
குறும்புப்பேச்சுகள் பேசினாரா
கட்டியணைத்தாரா
கன்னத்தில் முத்தமிட்டாரா
கட்டுக்கட்டான கடிதங்களில் கலவிசெய்தாரா
என்று கேட்டுக்கொண்டே போன தோழியை
குறுக்கிட்டுத் தடுத்தவள்
”அந்தரங்கம் புனிதமானது” என்றாள்.
காலங்கடந் தொரு நாள்
தன் காதலன்
குறுகுறுவென்று பார்த்ததை
குறும்புப்பேச்சுகள் பேசியதை
கட்டியணைத்தை
கன்னத்தில் முத்தமிட்டதை
கட்டுக்கட்டான கடிதங்களில்
கலவிசெய்ததை
கட்டுரைகளாக
நினைவுக்குறிப்புகளாக
Autofictionகளாக
கிடைத்தவெளிகளிலெல்லாம்
அம்பலமேற்றத் தொடங்கியவளைப் பார்த்து
அப்படியானால் இப்போது என் புனிதம் கெட்டுப்போய்விட்டதாவென
அப்பிராணியாய்க் கேட்கிறது
அந்தரங்கம்.

புத்தகங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புத்தகங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு புத்தகத்திடம் நம் பிரியத்தை எப்படிச் சொல்வது?
மயிலிறகைப் போல் மிருதுவாய்த் தடவிக்கொடுக்கலாம்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறு முத்தம் தரலாம்.
படுக்கையில் அருகில் வைத்துக்கொண்டு தூங்கலாம்.
போகுமிடமெல்லாம் அதையொரு குழந்தைபோல் கையிலேந்திக்கொண்டிருக்கலாம்.....
புரியவைக்கமுடியுமோ புத்தகத்திடம் நம் அன்பை?
புத்தகம் உயிருள்ளதா அற்றதா?
தனக்குள் காலத்தையும் காலாதீதத்தையும் ஒருங்கே உள்ளடக்கியிருக்கும்
புத்தகத்தின் உயிர் ஒன்றல்ல, பலப்பல
என்றொரு அசரீரி ஒலிப்பது என்னுள்ளிருந்தா புத்தகத்திலிருந்தா?
வினாக்களுக்கு பதில்களையும் பதில்வினாக்களையும்
வரிவரியாய்ப் பொதிந்துதந்தவாறு _
”விலைகொடுத்துவாங்கி யென்னைப் படி
வாங்கமுடியாதவர்களுக்குப் படிக்கக்கொடு
வெறும் தாள்களிலிருந்து என்னை படைப்புநிலைக்கு உயர்த்திய
கர்த்தாவைக் கொண்டாடு.
என்னைப் படித்து சிறிதேனும் உன் மனது
திறந்துகொண்டால் போதும்
வசமாகிவிடும் உன் பிரியமெல்லாம் எனக்கு”,
என்றபடி சிரிக்கும் புத்தகத்தின்
இல்லாத கன்னத்தில் விழும் குழியை
என்றும்போல் இன்றும் அதிசயமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் வாசக மனம்
தீராக்காதலில் வேர்விட்டபடி….

நன்றிக்குரியவர்கள்…… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நன்றிக்குரியவர்கள்……

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஆளரவமற்று நீண்டுகொண்டிருந்த தெருக்களும் சாலைகளும்
பாலைவனமாய்க் காய்ந்திருக்க
ஆங்காங்கே நிரம்பிவழிந்துகொண்டிருந்த குப்பைத்தொட்டிகளைத்
துழாவிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்களின் கைகளில்
மரகத மாணிக்க வைர வைடூரியங்கள் கிடைக்கச் செய்ய
வக்கில்லாத என் கவிதைகள்
வெளியே வர வெட்கப்பட்டு
மனதின் குரல்வளைக்குள் மூச்சுத்திணறிக் கிடந்தன.
தெருவோரத் திருப்பத்தில் சோர்ந்து அமர்ந்திருந்த பெரியவரிடம் _
பெரிதாக எதையும் தரமுடியாத என்னை மனதாரச் சபித்தவாறே _
தண்ணீர்புட்டியையும் மாரி பிஸ்கெட் பாக்கெட்டையும்
பத்து ரூபாயையும் நீட்டினேன்.
நன்றி கூறி வாங்கிக்கொண்டதோடு
’பத்தாவது வரை படித்திருக்கேம்மா – படிக்க ஏதாவது புத்தகம் தரமுடியுமா?’
என்று கேட்ட மாத்திரத்தில்
என்னை குபேரனாக்கிவிட்ட வள்ளன்மைக்கு
என்னவென்று நன்றி சொல்வது!

அப்பால்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2020 APRIL 19 - மீள்பதிவு/

அப்பால்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர்.
’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர்.
கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர்.
’கணக்கற்றோரின் கனவுகளையும் கவலைகளையும்
சுமந்து சுமந்து களைத்துப்போயிருப்பார்
கொஞ்சம் களைப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று
கதவடைத்திருக்கும் கோயிலின் முன் நின்று
கன்னத்தில் போட்டுக்கொண்டே வாஞ்சையோடுசொல்லிக்கொள்வார் சிலர்.
’Collective Spirit இன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள கிடைத்த அரிய பெரிய வாய்ப்பு’
என்பார் சிலர்.
’விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான
விடுமுறை’ யென்பார் சிலர்.
’மனிதனின் தான் என்ற அகங்காரம் குறையவும்
திமிர் அடங்கவும்
தீ நுண்மி உதவினால் போதும்’ என்பார் சிலர்.
’உதவுமா’ என்பார் சிலர்;
’போதுமா’ என்பார் சிலர்.
’வீதிகளெல்லாம் எத்தனை சுத்தமாயிருக்கின்றன’
என்பார் சிலர்.
’மீதி நாட்களிலும் இப்படி வைத்திருந்தால் என்ன’
என்று காட்டமாய் விமர்சிப்பார் சிலர்.
முகத்திற்கான 'மாஸ்க்' தெருவின் அந்த முனைக் கடையில் பதினைந்து ரூபாயும்
இந்த முனையில் முப்பது ரூபாயும் விற்பதைப் பார்த்து
'அது அத்தியாவசியப் பொருளா இல்லையாவென
யாரிடம் கேட்க' என்று அலுத்துக்கொள்வார் சிலர்.
’இப்பொழுது உணவுக்கு வழியேயில்லையே’
என்று அழுதிருப்பார் சிலர்.
'இப்போது கிடைக்கும் உணவு எப்போதும் கிடைத்தால் எத்தனை நன்றாயிருக்கும்'
என்று நினைத்துக்கொள்வார் சிலர்.
இன்னும் ஒரு வாரத்தில் கடையைத் திறந்துவிட லாம் என்று நிம்மதிப் பெருமூச்செறிவார் சிலர்.
திறந்தபின் எதிர்கொள்ளவேண்டியவைகளை எண்ணி வருந்தியிருப்பார் சிலர்.
’இந்த கோர நாட்களில் கவிதையெழுதுதல்
சரியா தவறா’ என்று கேள்வியெழுப்புவார் சிலர்;
குற்றவுணர்வுகொள்வார் சிலர்..
’கட்டாயமாக எழுதவேண்டும்’ என்று
உறுதியெடுத்துக்கொள்வார் சிலர்…..
மனிதவோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் தீநுண்மி.
அவர் மனவோட்டப் புதிர்வட்டப்பாதைகள் என்றேனும் தட்டுப்படுமோ அதற்கு?.