LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, April 24, 2025

புத்தகங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புத்தகங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு புத்தகத்திடம் நம் பிரியத்தை எப்படிச் சொல்வது?
மயிலிறகைப் போல் மிருதுவாய்த் தடவிக்கொடுக்கலாம்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறு முத்தம் தரலாம்.
படுக்கையில் அருகில் வைத்துக்கொண்டு தூங்கலாம்.
போகுமிடமெல்லாம் அதையொரு குழந்தைபோல் கையிலேந்திக்கொண்டிருக்கலாம்.....
புரியவைக்கமுடியுமோ புத்தகத்திடம் நம் அன்பை?
புத்தகம் உயிருள்ளதா அற்றதா?
தனக்குள் காலத்தையும் காலாதீதத்தையும் ஒருங்கே உள்ளடக்கியிருக்கும்
புத்தகத்தின் உயிர் ஒன்றல்ல, பலப்பல
என்றொரு அசரீரி ஒலிப்பது என்னுள்ளிருந்தா புத்தகத்திலிருந்தா?
வினாக்களுக்கு பதில்களையும் பதில்வினாக்களையும்
வரிவரியாய்ப் பொதிந்துதந்தவாறு _
”விலைகொடுத்துவாங்கி யென்னைப் படி
வாங்கமுடியாதவர்களுக்குப் படிக்கக்கொடு
வெறும் தாள்களிலிருந்து என்னை படைப்புநிலைக்கு உயர்த்திய
கர்த்தாவைக் கொண்டாடு.
என்னைப் படித்து சிறிதேனும் உன் மனது
திறந்துகொண்டால் போதும்
வசமாகிவிடும் உன் பிரியமெல்லாம் எனக்கு”,
என்றபடி சிரிக்கும் புத்தகத்தின்
இல்லாத கன்னத்தில் விழும் குழியை
என்றும்போல் இன்றும் அதிசயமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் வாசக மனம்
தீராக்காதலில் வேர்விட்டபடி….

No comments:

Post a Comment