LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, March 10, 2023

நேரக்கூடும் தற்கொலையும் கையறுநிலைக் கவிதையும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நேரக்கூடும் தற்கொலையும் கையறுநிலைக் கவிதையும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

அக்கம்பக்கத்தில்

தற்கொலையின் நெடி அல்லது வாடை அல்லது வீச்சம்
கிளர்ந்தெழுந்து பரவிக்கொண்டிருப்பதாக உணரும் மனதில்
விலகிய பார்வையாய் வலிபோல் ஒன்று…..
அவ்வளவுதான்
ஏதும் செய்யவியலாது.
இடைத்தூரத்திற்கு அப்பாலானது இயலாமை.
தற்கொலை செய்யத் துணிந்தவர்
கோழையா தைரியசாலியா
என்ற பட்டிமன்றம் காலங்காலமாய் நடந்துகொண்டிருக்கிறது.
பிறர் தன்னைக் கொலைசெய்யாமலிருக்கும் பொருட்டோ
தான் பிறரைக் கொலைசெய்யாமலிருக்கும்
பொருட்டோ
நடக்கின்றன தற்கொலைகள் என்று எந்த உளவியலாளரேனும் சொல்லியிருக்கிறார்களோ, தெரியவில்லை.
அரை மயக்க நிலை அல்லது ஜன்னிகண்ட நிலை
அல்லது முழுவிழிப்பு நிலையில் எதற்கென்றே தெரியாத
அரைகுறை நம்பிக்கையில்…..
நடுக்காட்டில் நள்ளிரவில் நின்றுபோன வண்டியில்
இல்லாத பெட்ரோல், அல்லது
இருந்தாற்போலிருந்து மறந்துபோன வண்டியோட்டல்,
அல்லது செயலிழந்துபோய்விட்ட கைகால்கள்,
மங்கலாகிவிட்ட பார்வை,
எங்கும் மூடிக்கொண்டுவிட்ட திசைகள்…..
கற்பனையாய் குழந்தைகள் நடித்துக்காட்டும்
சுருக்கிடல்
சமயங்களில் உண்மையாகிவிடுவதுண்டு.
மாஜிக்கல் ரியலிஸமாகவும் சிலர் தம்மைத்தாம்
சாகடித்துக்கொண்டு
மீண்டும் உயிர்த்தெழுவதுண்டு.
அந்நியமாதலின் கொடுந்தழல்
அடுத்த அடி எடுத்துவைக்க
பல்லாயிரத்தடி பள்ளத்தில் விழல்
அடுத்தநாளில் விழித்தல்
வரவாக்கும் மரணபயத்தில்
வற்றிப்போகும் வாழ்வுக்கான விழைவு….
ஒரு புதிர்ச்சுழல்பாதையில் புகுந்தபின்
வெளியேற வகையறியாது
மருகும் மனதிற்குப் புலப்படும் ஒரே வழி.
பழிவாங்கலாயும் சமயங்களில் நடந்தேறும்.
மரித்த பின் பரவசத்துடன் ஆவிபார்க்குமோ
பழிவாங்கப்பட்டவரின் மிகுதுயரை?
முப்பத்தியிரண்டு வயது முற்றிய புற்றுநோயாளி யொருவர்
மனைவிக்கும் சிறு மகள்களுக்கும் தந்த நஞ்சு திருப்திகரமாய்
வேலை செய்ய
தனக்குத் தந்துகொண்டது தோல்வியடைந்ததில்
உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறார் குடும்பத்தலைவர்
_ இன்றைய செய்தித்தாளில்.
இனியான இவர் வாழ்க்கை இப்போதிருப்பதன் நீட்சியா இல்லை
இறப்பிற்குப் பிறகானதன் நீட்சியா?
தற்கொலையாளர்களின் நிர்க்கதி
கற்பிதமா கணநேரக் குரூர உண்மையா
ஒப்புநோக்க வீதியோரப் பிச்சைக்காரர்களின்
வாழ்வீர்ப்பு மெச்சத்தக்கதா – அல்லது
இஃதொரு ஆக்கங்கெட்ட கொச்சையான
அவதானிப்பா
ஒரு தற்கொலை மற்றவர்களையும் ஏதோவொரு விதத்தில்
தங்களுடைய மேற்பரப்பிலிருக்கும் தர்மவான்களைத் தாண்டி
அடியாழத்திலிருக்கும் மனசாட்சியிடம் அண்டச் செய்கிறது
அடுத்த சில நிமிடங்களுக்காவது…..
அண்டச்செய்தால் நல்லது
அவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும்….
அடி முடி யறியா வாழ்வின்
அகால மரணம் போலாகுமா மிக் கவிதையும்……

நான் யார் நான் யார் நீ யார்….. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

நான் யார் நான் யார் நீ யார்…..

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நான் நான் நான் நான்…

நாமைப் பற்றிப் பேசினாலும் சரி
நீயைப் பற்றிப் பேசினாலும் சரி
அவளை அவனை அவரை அவர்களை
அதை அவற்றை _
யாரைப் பற்றிப் பேசினாலும் சரி
அந்த நானுடைய பேச்செல்லாம்
நான் நான் நான் தான்….
எனில்
இந்த உலகம் நான்களால் ஆனது
ஒரு நானால் அல்ல
நானாவிதமான நான்களால் ஆனது
ஒரேவிதமான நான்களால் அல்ல.
இதைப் புரிந்துகொள்ளாத ஒரு நான்
பல நான்களாகக் கிளைபிரிந்து
பேசிக்கொண்டேபோகிறது.
அந்தப் பாதைகளில், திசைவழிகளில் முளைக்கும்
புல் பூண்டு செடி கொடி பெருமரம் எல்லாமும்
அந்த ஒரு நானின் பல நான்களில் மட்டுமே
வேர்பிடித்து வேர்பிடித்து.
மெய்யான இயற்கையை, வாழ்வை
தரிசிக்கும் ஆர்வங்கொண்டோர்
அந்தப் பாதைகளில் புகுவதை
கவனமாகத் தவிர்த்து
அப்பால் சென்று
தனது நானின் நான்களுக்கேற்ற
பிறரது நான்களை அடையாளங்காணும்
முனைப்பில்
அடுத்தடுத்து விரிந்திருக்கும் பாதைகளில்
நுழைந்து நடந்தவண்ணமே.
எந்த நானும் எந்த நானுக்கும்
பிரதிநிதியாகிவிட முடியாது
எல்லா நான்களுக்கும் பதிலியாகிவிட
ஏலாது
தன் நான்களைத் தேடப்புகாத ஒரு நான்
அடுத்தவன் நான்களை
அடையாளங்காட்டலாகுமா என்ன
யாரும் நுழையாத அந்த நானின் நான்களின்
ஆளரவமற்ற பாதைகள் கிளைப்பாதைகள்
நீண்டுகொண்டே போகின்றன…..
நாராசமாய் வீறிட்டுக்கொண்டிருக்கிறது
அதன் அனர்த்த மூச்சுக்காற்று…

நியாயத்தராசுகளின் நிலைப்பாடுகள் சில - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 நியாயத்தராசுகளின் 

நிலைப்பாடுகள் சில

ரிஷி(லதா ராமகிருஷ்னன்)


ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக

இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய்

தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள்

ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு

கிட்டாரை வாசிக்கிறார்கள்.

அல்லது கிட்டார் வாசித்த கையோடு

காணக்கிடைத்த தலையை அல்லது தலைகளை

கனகச்சிதமாகக் கொய்துவிடுகிறார்கள்.

தன்னிசையாகக் கிளர்ந்தெழும் கோபம் பெரிதா

தருவிக்கப்பட்ட கோபம் பெரிதா என்ற பட்டிமன்றங்கள் நடத்தப்படுவதேயில்லை.

தேவைப்படும்போதெல்லாம் சில அன்னாடங் காய்ச்சிகளின் சிரசுகளில்

கிரீடங்களைப் பொருத்துகிறார்கள்

கையோடு கரும்புள்ளி செம்புள்ளிகளையும் குத்திவைக்கிறார்கள்

கிட்டாரின் இனிமையான இசையின் பின்னணியில்

அவர்களைத் தெருவோரமாக அமரவைத்து சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவதற்கான ஒத்திகையும் முன்னேற்பாடுகளுமே அது

என்று திரும்பத்திரும்பச் சொல்லுகிறார்கள்.

தவறாமல் இடையிடையே கிட்டாரை வாசித்து

மகுடம் அணிந்தவர்களின் மனதில் கிளர்ந்தெழும் கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் அகற்றுகி றார்கள்

அல்லது அவற்றின் அடர்வைக் குறைக்கிறார்கள்.

அத்தனை காலமும் அவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும்

அநீதிகளைக் களைய

சில தலைகளைத் துண்டித்தாகவேண்டியது அவசியம் என்கிறார்கள்.

அது கொலையல்ல – காருண்ய அலை 

என்கிறார்கள்

அவர்களுடைய தர்க்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அவ்வப்போது கிட்டாரை அருமையாக வாசித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

அங்கங்கே யவ்வாறு அனுதினமும் அவர்கள் கொய்தெடுக்கும் தலைகளையெல்லாம் கணக்கெடுத்துப் பூரித்துப்போகும்

அன்னாடங்காய்ச்சிகளுக்குக் காலதாமதமாகவே புரிகிறது.

தங்கள் தலைகளில் ஏற்றப்பட்டிருப்பது அட்டைக்கிரீடங்கள் என்பதும்

அவர்கள் கைகளிலுள்ளவை நிஜமான கொடுவாள் என்பதும்.

அதற்குள்

அவர்கள் பெயரால் மரகத மாணிக்க ரத்தினங்கள் பொறிக்கப்பட்ட மெய்க்கிரீடங்களை அணிந்துகொண்டு

அவரவருக்கான சிம்மாசனத்தில் அமர்ந்துவிடும்

அந்த கிட்டார் – கோடரி கலவையாளர்கள்

ஆற்றலாகும் ஒரே சமூகமாற்ற அரும்பணியாய்

கிட்டாரை வாசிக்கவும் கொடுவாளால் வெட்டிச் சாய்க்கவும்

அரைகுறைப் பயிற்சிவகுப்புகளை ஆரம்பிக்கிறார்கள் –

அதற்குப் பிறகும் அன்னாடங்காய்ச்சிகளாகவே நீடிப்போருக்கு.

1001அரேபிய இரவுகள் - தமிழில் : சஃபி

 

அலிஃப் லைலா வ லைலா எனும் 1001அரேபிய இரவுகள் உயிர்மை வெளியீடு 

தமிழில் : சஃபி

(*பிப்ரவரி 27, 2023 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)


நண்பர் சஃபி clinical psychologist ஆகப் பணியாற்றி வருகிறார். 

அவரும் எழுத்தாளரும் நண்பருமான கோபி கிருஷ்ணனும்தான் எனக்கு Psychiatry, anti-Psychiatry சார்ந்த பல விஷயங்களை, நுணுக்கங்களை அறிமுகப்படுத்தி அந்தத் துறை சார்ந்த குறிப்பிடத் தக்க கட்டுரைகளையும் ஒன்றிரண்டு நூல்களை யும் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தவர்கள்.

சஃபியும் நிறைய எழுதியிருக்கிறார்; மொழி பெயர்த்திருக்கிறார். 

இப்போது சஃபியின் முனைப்பான உழைப்பில் 1001 அராபிய இரவுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

On 'CULTURE LITERATURE PERSONALITIES _ A COLLAGE' By Dr.K.S. SUBRAMANIAN

மதிப்பிற்குரிய மூத்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரர் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இடம்பெறும் இந்த நூலை சமீபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

Dr.K.S. உயிரோடு இருக்கும்போதே பிரசுரத்திற்கு அனுப்பிவைத்திருந்தார். புத்தகத்தைப் பார்த்தி ருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.

இலக்கியம் – சமூக வெளிகளில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களைக் கட்டுரைக ளாக டாக்டர் கே.எஸ். எழுதி பல்வேறு தொகுப்புகளில் அவை வெளியாகியிருக்கின்றன. அவற்றி லிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளும், புதிதாக எழுதிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள் ளன.

டாக்டர் கே.எஸ். மீது மிகுந்த மரியாதையும் அபிமானமும் கொண்ட, தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராகத் திகழும் திரு.இறையன்பு டாக்டர் கே.எஸ்.ஸின் அரும் பணிகள் குறித்து அகல்விரிவான முன்னுரை எழுதியுள்ளார்.


ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 20க்கும் மேற்பட்ட அடர் செறிவான கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலின் முகப்பு அட்டையைப் பார்த்ததும் மிகவும் வருத்தமாயிருந்தது. ‘ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் ஒரு நூலின் முகப்பு அட்டை அந்த நூலின் சாரத்தை, முக்கியத்துவத்தைக் குறிப்பு ணர்த்துவதாய், அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் அமையவேண்டும். இந்த நூலின் முகப்பு அட்டை நூலின் உள்ளடக்கத்திற்கு நியாயம் சேர்ப்பதாக இல்லை. இதற்கு பதில் Dr. கே.எஸ்.ஸின் புகைப் படத்தையே பெரிதாக வெளியிட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடிய வில்லை.

 

கசக்கும் உண்மை

 கசக்கும் உண்மை

                      February 27, 2023  THINNAI ONLINE MAGAZINE

லதா ராமகிருஷ்ணன்

தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியறிவிலும் தேர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சமீபத்தில் INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள் ளது.

பிப்ரவரி 25, 2023 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் கல்வி தொடர்பாக INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றின் முடிவுகள் தரப்பட்டுள்ளன. இந்தியாவில் 10000 பள்ளிக ளில் 20 தாய்மொழிகளில் பயிலும் 86000 மூன்றாம் வகுப்பு மாணாக்கர் களிடம் மேற்கொள் ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்மொழித்திறன் தமிழ் மாணாக்கர்களிடம் மிகவும் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் பட்டம் என்ற சொல்லை படம் என்று படித்தது நினைவுக்கு வருகிறது.

ஈரோடு இடைத்தேர்தலைப் பற்றிப் பரபரப்பாகப் பேசுவ தில் 100இல் ஒரு பங்காவது இந்தப் பிரச்ச னையைப் பற்றிப் பேச அரசியல்கட்சிகளும் ஊடகங்களும் முன் வருமா என்பது மிக மிக சந்தேகமே.

அரசுப் பள்ளிகளில் மொழியறிவு, கணித அறிவு போது மான அளவு மாணாக்கர்களுக்கு சொல்லித் தரப்படுவதில்லை என்று ஓர் ஆய்வு வெளிப்படுத் தினால் உடனே தனியார் பள்ளிகள் மட்டும் என்ன தரமானவையா என்று எதிர்க்கேள்வி எழுப்ப நிறைய ஆட்கள் உண்டு.

ஆனால், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்கா னவை அரசுப்பள்ளிகள். அடித்தட்டு மக்களுக்கா கப் பாடுபடுவதாய் சொல்லிக்கொள்ளும் அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும் எழுத்தாளர்களும் அரசுப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு இணக்க மான கற்கும் சூழல் நிலவுகிறதா, நல்லவிதமாக கல்வி சொல்லித்தரப்படுகிறதா, மாணவர்களின் தன்மதிப்பை மேம்படுத்தும் விதமாக அந்த சூழல் இருக்கிறதா, அல்லது மாணாக்கர்களை மதிப்ப ழிக்கும்போக்கு நிலவுகிறதா என்றெல்லாம் கண்டும் கேட்டும் அறிய , ஏன் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை?

ஆசிரியர்களுக்கு தொழிற்சங்கம் இருக்கிறது. ஆசிரியர் களால் தங்கள் குறைகளை எடுத்து ரைக்க முடியும். ஆனால், சிறு குழந்தைகள் முதல் வளரிளம்பருவத்தினர் வரை உள்ள மாணாக்கர்க ளுக்கு?

ஆசிரியர் – பெற்றோர் சங்கங்கள் பெயரளவுக்குத் தான் பல பள்ளிகளில் இயங்குகின்றன என்கிறார் கள்.

தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளி ஆசிரியப் பெரு மக்களுக்கு ஊதியம் அதிகம். ஆனால், படிப்பறிவற்ற பெற்றோர்கள் அவர்களிடம் எதை யும் இயல்பாகப் பேச முடிவதில்லை. ’இலவசமா கக் கல்வி தருகிறோம் – இதில் கேள்வி கேட்கிறீர் களே’ என்று இடித்துக்காட்டும் இழிவுபடுத்தும் ஆசிரியப் பெருமக்கள் என்று சொல்லிக் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் உண்டு என்று பல பெற் றோர்கள் வருத்தத்தோடு சொல்லக் கேட்டிருக்கி றேன்.

கல்வி தரவேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று; கல்வி பெறவேண்டியது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளில் ஒன்று’ என்பதை அறியாத அப்பாவி பெற்றோர்கள் தங்கள் பள்ளிக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியப் பெருமக்கள் கற்றுத்தருவதே தங்களுக்குத் தரப்படும் ஆகப்பெரும் சலுகையாகக் கொள்கி றார்கள். அவ்விதமாய் அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

அந்தந்த அரசியல் கட்சி அவரவர் தொண்டர்களின் குழந்தைகளின் கல்வி குறித்த அக்கறை காட்டி னாலே போதும். ஆனால், செய்கிறார்களா என்பது சந்தேகமே.

பாடத்தின் ஒரு பத்தியை ஆசிரியர் உரக்க வாசிக் கிறார். குழந்தைகள் அதை திருப்பிச் சொல்லுகின் றன. முடிந்து விட்டது மொழியறிவுக் கல்வி. ஒரு பத்தியை பத்து முறை எழுதச் சொல்கிறார்கள். மனப்பாடமாகக் கூட அந்தப் பத்தியை அந்தக் குழந்தையால் சொல்லமுடிய லாம். ஆனால், அந்தப் பத்தியில் உள்ள தனித்தனி சொற்கள், எழுத்துகள் ஆகியவற்றை அந்தக் குழந்தையால் அடையாளம் காண முடிவதில்லை. இது என்ன விதமான மொழியறிவு? மொழியறிவுக்கல்வி?

’ஒரு வகுப்பில் எட்டு பத்துக் குழந்தைகள் இப்படி யிருப் பார்கள்தான். அதற்காக கல்வித்திட்டத்தை, ஆசிரியப் பெருமக்களை ஒட்டுமொத்தமாகக் குறை கூறுவதா?’ என்று கேட்பவர்கள் உண்டு. ஆனால், ஒரு வகுப்பில் பத்து குழந்தைகள் கற்ற லில் பின் தங்கியிருந்தால் அவர்களை அப்படியே விட்டுவிடலாமா? அவர்களைக் கற்றலில் முன் னேற்றுவது தேவையில்லையா?

வகுப்புகளில் மாறி மாறி பாடப்புத்தகங்களைத் தன் முன் விரித்து வைத்து, அல்லது கையில் ஏந்தியபடி அதிலிருக்கும் எழுத்துகள் என்ன வென்றே தெரியாமல் ஆசிரியரின் வாயையே பார்த்துக்கொண்டிருக்கும், நாள் முழுக்க வகுப் பில் அமர்ந்துகொண்டிருக்கும், அவ்வப்போது ஆசிரியரால் கண்டிக்கப்படும், மட்டந்தட்டப்படும் குழந்தைக்கு ஏற்படக் கூடிய நீடித்த உளவியல் பாதிப்புகள் ஏராளம் என்கிறார்கள் உளவியலாளர் கள்.

தரமான கல்வியை அடித்தட்டு வர்க்கத்தினரின் குழந்தை களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கிடைக்கச் செய்ய முடியும். அதற்கு முனைப்பான அக்கறையும் செயல் திட்டங்களும், அரசுகளிடம் இருக்கவேண்டியது அவசியம்.

அரசியல் கட்சிகளும், சமூகமும் குழந்தைகளை இரண் டாந்தரக் குடிமக்களாய் பாவிக்கும் பார்க் கும் மனப் போக்கு மாற வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் லஞ்சலாவண் யங்கள் மிக அதிகமாகப் பரவி யிருப்பதாகக் கூறப்படுகி றது. இதனால் உச்ச பட்சமாக பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களின் பிள்ளைகளான ஏழை மாணாக்கர்கள்தான். இந்த விதமான சீர்கேடுகளும் தொடர்ந்தரீதியில் அடிக் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய தேவையிருக் கிறது.

எத்தனையோ சேவை நிறுவனங்கள் கல்விப் பணியில் அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு இயங்கிவருகின்றன. அவர்களின் ஆலோசனை களையும் ஒத்துழைப்பையும் அரசு கோரிப் பெறவேண்டும். PPP எனப்படும் PUBLIC-PRIVATE PARTNERSHIP இல் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு முன் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

ஊடகவெளி இதில் பெரும்பங்காற்ற முடியும். (ஆனால், தமிழை சிதைப்பதில்தான் அவை முக்கிய கவனம் செலுத்திவருகின்றன என்பது வருந்தத்தக்க விஷயம்).

மனமிருந்தால் ஆக்கபூர்வமாய் எத்தனையோ செய்ய லாம்.

தரமான கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளில் தலையாயது. அதைத் தர வேண்டி யது, குறிப்பாக அடித் தட்டு வர்க்கத்தினருக்குக் கிடைக்கச்செய்யவேண்டியது அரசுகளின் தலை யாயக் கடமைகளில் மிகவும் முக்கியமானது.

தாய்மொழி மீது பற்றும் மரியாதையும் வருங்கால சந்த தியினரிடம் ஏற்பட வெறுப்புப் பேச்சுகளோ, வெற்று முழக்கங்களோ உதவாது. தாய்மொழி யில் பயிற்சியும் தேர்ச்சியுமே இன்றியமையா தவை.

…………………………………………………………………………………………………………

பி.கு: மேற்குறிப்பிட்ட சுற்றாய்வில் தரப்பட்டுள்ள வேறு சில புள்ளிவிவரங் கள் பின்வருமாறு:

2/25/23, 11:51 PM ‘42% of students meet global minimum proficiency level’ – Times of India

https://timesofindia.indiatimes.com/education/42-of-students-meet-global-minimum-proficiency-level/articleshow/98222066.cms 1/1

NEW DELHI: Around 42% of students surveyed across India met global minimum proficiency while 37% partially met it in mathematics, reveals a study by Stanford University’s Institute for Competitiveness.

The survey, conducted on 86,000 Class III students in 20 different languages across 10,000 schools in India, specifically highlighted language as being vital in acquiring early literacy.

The report, “Second State of Foundational Literacy and Numeracy 2022”, was released on Friday by Bibek Debroy, chairman, to the Prime Minister. It said 250 million Indian students were affected adversely due to the pandemic and that recovering from the children’s learning loss during the pandemic required more effort than simply reopening classrooms.

The Global Proficiency Frameworks (GPF) developed by United States

Agency for International Development ( ) defines the minimum proficiency levels for both reading and mathematics. The global proficiency levels include “does not meet minimum proficiency”, where learners lack the most basic knowledge and skills; “partially meets minimum proficiency”, where learners have limited knowledge and skills; “meets minimum proficiency”, where learners have developed sufficient knowledge and skills, and

“exceeds minimum proficiency” means that learners have developed superior knowledge and skills and can successfully complete complex tasks.

According to UNICEF, nearly two-thirds of 10-yearolds globally are unable to read and understand a simple text. With the Covid pandemic situation, the learning loss worsened, and every child across the world has fallen behind in learning.

Commenting on the current state of foundational learning and literacy, the report stated that in the contemporary world, in many countries, most children cannot interpret basic words and perform simple operations with numbers. According to a World Bank assessment, in India, around 50% of children lack foundational learning.

The report, however, says by adopting suitable innovation and agency demonstrated by teachers, collaborating with parents and using experiments with technology, the learning loss can be mitigated. In the last 50 years, India has lost over 220 languages, which means not enough attention is paid to preserving and taking care of languages.

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் சமீபத்திய இரண்டு கவிதை நூல்கள்.

 ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் சமீபத்திய இரண்டு கவிதை நூல்கள்.

புதுப்புனல் பதிப்பகத்தில் விற்பனைக்கு




புதுப்புனலின் இலக்கியப் பங்களிப்பு

 புதுப்புனலின் இலக்கியப் பங்களிப்பு

_ லதா ராமகிருஷ்ணன்

(*திண்ணை  இணைய வாரப்பத்திரிகை February 27, 2023 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை)



தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிகைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிற்றிதழ்களின் விரிவாக்கமான இடைநிலை இதழ்கள் தோன்றியுள்ளன எனலாம். முதலில் பன்முகம் பிறகு புதுப்புனல் என்று தமிழ் இலக்கிய வெளியில் புதுப்புனல் பதிப்பக உரிமையாளர் ரவிச்சந்திரனின் பங்கு கணிசமானது.

சிறுகதைத்தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கவிதைத்தொகுப்பு கள், திறனாய்வுக்கட்டுரைகள் என நூற்றுக் கணக்கான நூல்களை புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழின் குறிப்பிடத் தக்க புதின எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷின் புனைவு, -புனைவு நூல்கள் நூல்கள், புதுமைப்பித்தனின் நூல்கள், கோவை ஞானியின் நூல்கள், திருமூஸா  ரஸாவின் குறிப்பிடத்தக்க ஆங்கில நூலான IN SEARCH OF ONENESSஇன் தமிழ் மொழிபெயர்ப்பு ( ஒருமையைத் தேடி) போன்ற பல குறிப்பிடத்தக்க தமிழ் நூல்களை புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திரு.ரவிச்சந்திரன் ஒரு நிறுவனத்தில் தொழிலா ளியாகத் தான் பணியாற்றிய அனுபவங்களை கைக்குள் பிரபஞ்சம் என்ற சிறு நாவலாக எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் கவிதைகளும் எழுதியிருக்கிறார்

பண பலமோ, அதிகாரவர்க்கத்தவர் களின் அணுக்கமோ இல்லாதபோதும் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக பதிப்பகத்துறையில் பல்வேறு இன்னல்களுக்கிடை யில் தொடர்ந்து இயங்கிக்கொண் டிருக்கிறார் திரு.ரவிச்சந்திரன்.

அவருடைய மனைவி சாந்தி பதிப்பக முயற்சிகளில் அவருக்கு உறுதுணையாக இருந்துவருகிறார். சாந்தி நூலகம் என்ற பிரிவில் சிறுவர் கதைகளையும் பிரசுரித்துக் கொண்டிருக் கிறார். இடையில் வராமலிருந்த புதுப்புனல் இலக்கிய மாத இதழ் இனி தொடர்ந்து வரும் என்று நம்புவோம்

தற்போதைய தமிழக அரசு சிற்றிதழ்களையும் அரசு நூலகங்களுக்கு வாங்குவதாகத் தகவல் கிடைத்தது. தகவலைத் தெரிவித்த சிறுபத்திரிகை யுலகத் தோழர் ஒருவர்போட்ட காசு திருப்பி வந்தாலே போதுமானது. அடுத்த இதழைக் கொண்டுவர முடியும்என்று ஆர்வத்தோடு  கூறினார்

புதுப்புனல் பதிப்பகத்தாருக்கும் அரசின் இந்த உதவி கிடைக்கவேண்டும்.

 

INSIGHT ( FEBRUARY 2023)

INSIGHT

a bilingual blogspot for contemporary tamil poetry
2019insight.blogspot.com