LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, March 10, 2020

வஞ்சனை சொல்வாரடீ கிளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வஞ்சனை சொல்வாரடீ கிளியே….

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

அவர் செத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

அவருடைய படுக்கையில் ஈக்கள் மொய்க்கத் தொடங்கிவிட் டன என்கிறார்கள்.

அவருக்குப் பாடை தயார்செய்யவேண்டும் என்கிறார்கள்.

அங்கிருந்தொருவர் வேகவேகமாக
சற்று தொலைவிலிருந்த மரத்தடியை நாடிச் செல்கிறார்
இரங்கற்பா எழுத.

அந்நிய தேசங்கள் சிலவற்றில்
அடிக்கொரு நொடி
அந்த உயிரின் நேரப்போகும் மரணம் குறித்த 
BREAKING NEWS
வெளியாகிக்கொண்டேயிருக்கிறது.

கற்பனைத் தெர்மாமீட்டரை அவர் வாயில் திணித்து
வெறுங்காய்ச்சலை விபரீதமான விஷக்காய்ச்சலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
கொரோனாவைரஸை விடக் கொடியவர்கள்.

அவர் சற்றே பலவீனமாயிருக்கிறார்.
ஆதரவாய் அருகிருந்து கவனித்துக்கொண்டால்
எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்பவரை
அசிங்கம்பிடித்தவர் என்று வைதுகொண்டே _

அங்கேயிங்கே யாரும் கவனிக்கிறார்களா
என்று பார்த்தவாறு
பிறந்தது முதல் அவரைப் பேணி வளர்த்த
அன்புக்குரிய அந்தப் பெரியவரின்
குரல்வளையருகே தன் இரு கைகளையும் நகர்த்துகிறார்
நெருங்கிய உறவுக்காரர்.

என்ன தோன்றியதோ, ஓடிவந்து
அந்தக் கரங்களைக் கடிக்கிறது ஒரு குழந்தை.

இன்னொன்று அவருடைய தலையைத் தடவிக்கொடுத்து
அவரைப் பார்த்துச் சிரிக்கிறது.

தூங்கு ஃப்ரெண்ட். நாங்கள் உன்னைப் பார்த்துக் கொள்கிறோம்என்று சேர்ந்திசை பாடும்
செல்லங்களைக் கண்டு
அந்த முகத்தில் களைப்பையும் மீறி
சின்னதாக ஒரு புன்னகை மின்னுகிறது.


புத்துயிர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புத்துயிர்ப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மனதின் கனவுகளையெல்லாம்

விழுங்கித் தீர்த்தபின்
என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் வயிறு
பசியோடு அழுதுகொண்டிருக்கும் மனதை அமைதிப்படுத்த
ஆறுதலாய்
அதற்கு ஊட்டச்சத்தளிக்கிறது _
புதிதாய்க் கனவு காண.

சொப்பனவாழ்வு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சொப்பனவாழ்வு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


தலைக்குள்ளாகத்
தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாய்க்
காணும்
அந்த வானவில்லின்
சிறுதுளியைப் பறித்துச்
சின்ன மயிற்பீலியாய்
வாழ்வுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி
வைப்பதே
தர்க்கங்களுக்கப்பாலான
தூலக்கனவாய்.......

Friday, February 21, 2020

அன்புத் தமிழுக்கு என்றுமான நன்றி - ‘ரிஷி’

அன்புத் தமிழுக்கு என்றுமான நன்றி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மொழியின் மீதுள்ள மாறாக்காதலைச் சுமந்தபடி
வழிபோகிறேன்.

கைபர் கணவாய் எங்கிருக்கிறதென்று
எனக்குத் தெரியாது.
குமரிமுனையை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.

அடுத்தென்னவாகுமென்று அறியாத
அகால வாழ்விதில்
எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழும்
கொஞ்சம் ஆங்கிலமும்.

தெரிந்த தமிழ் என்று நான் சொல்லக்கேட்டு
செல்லமாய்க் குட்டிச் சிரிக்கிறது தமிழ்!

கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.

நான் வந்த வழியெங்கும்
வாழும் வழியெங்கும்
அன்புத் தமிழின் அரவணைப்பே
திசைகாட்டியாக
திக்கற்றவருக்கான பாதுகாப்பு
அரணாக....

தன் தாயை உத்தமியென்றபடி
இன்னொரு தாயை அவிசாரி என்று
நடுத்தெருவில் வசைபாடுபவருக்கொப்பாய்
என் மொழியைப் போற்றிய கையோடு
இன்னொரு மொழியைத் தூற்ற மாட்டேன்.

செத்த மனிதர்கள் உண்டு.
செத்தமொழி என்று எதுவுமில்லை.

அவரவர் அன்பு அவரவருக்கு.

அவரவர் மொழியின் அருமை
அவரவரே அறிவார்.

அத்தனை பேரின் தாய்மொழிகளுக்கும்
உரித்தாகட்டும் நம்
அன்பு வணக்கம்.

படைப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

படைப்பு
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



'புத்தகம் எழுதினால் போதாது
அதை ‘ப்ரமோட்’ செய்யவேண்டும்'
என்றார்கள்.
’அல்டாப்பு’ப் புத்தகத்தை
’அல்டிமேட்’ இலக்கியமாகக் காட்டி
’ப்ரமோட்’ செய்ய
ஆயிரம் உத்திகளோடு அத்தனை பேர்
இயங்கிக்கொண்டிருக்க
அதையும் தாண்டி எதையாவது புதிதாகச்
செய்துவிட முடியுமா என்ன?’
கேள்வியில் கிளர்ந்த புன்னகையோடு
தனக்குத் தெரிந்த
எப்போதுமான ஒரே எளிய வழியில்
தன் படைப்பை ஒரு புட்டிக்குள் திணித்து
காலசமுத்திரத்தில் மிதக்கவிட்டு
தன் வழியே கிளம்பிச்செல்கிறாள்!

குடியுரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

குடியுரிமை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


கோவில் தேவாலயம் மசூதி என்று
எங்கும் காண முடியும் இவர்களை.
தங்கள் மதத்தினரா என்று பார்த்து
தர்மம் செய்பவர்கள் உண்டுதான்.
என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே
இவர்களது பொது அடையாளமும்
தனி அடையாளமும்.
இவர்கள் நம் நாட்டு மக்கள் என்பதைப் பற்றியோ
இவர்களுக்குப் பேச்சுரிமை கருத்துரிமை
வாக்குரிமை இல்லாதது பற்றியோ
மதவாதிகளோ அரசியல்வாதிகளோ
இலக்கியவாதிகளொ ‘இய’வாதிகளோ
பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.
’ஒரு பிச்சைக்காரரிடம் குறைந்தபட்சம்
பத்தாயிரம் ரூபாய் இருக்கும்’ என்று
வீதியோரம் சுருண்டு கிடந்த ஒரு மூதாட்டிக்குப்
பத்து ரூபாய் கொடுக்கப்போன
வெள்ளைக்காரரிடம் சொன்ன
நம்மூர்க்காரர்
வழிகாட்டி என்ற போர்வையில்
வழிபறிப் பகற்கொள்ளைக்காரராய்
நடமாடிக்கொண்டிருப்பவர்.
பிச்சைக்காரர்களின் பாதாள உலகத்தைப்
பற்றிப் படமெடுத்தவருக்கு
விருதுகள் கிடைத்தன.
வருமானம் கிடைத்ததா தெரியவில்லை.
‘பிச்சைக்காரிக்கு கர்ப்பம் ஒரு கேடா’
என்று கேட்கிறார்
மாபெரும் மனிதநேயவாதி ஒருவர்.
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் தெரியுமா
என்று கண்ணையுருட்டிக் கேட்டார்
இன்னொருவரை மொட்டையடித்து
விரைவில் திகில் படம் ஒன்றை
எடுக்கப் போகிறவர்.
திண்டுதிண்டாய் கைகாலிருக்கு,
வேலை செய்தால் என்ன என்று
குண்டுசட்டியில் குதிரையோட்டுபவரும்
கேட்கத் தவறவில்லை.
’இறப்பதற்குள் ஒரு முறையேனும்
தேர்தலில் வாக்களித்துவிடவேண்டும்’
என்று கூறிய பிச்சைக்கார முதியவரின் முகச்சுருக்கங்களுக்காகவாவது
ஏதேனும் ஓவியப்பள்ளி
மாடலாக அமர்த்திக்கொண்டு
அவருக்கு இருவேளை சோறுதந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்.
அன்ன சத்திரமா, எழுத்தறிவித்தலா
எது அதிகம் தேவை ஏழைக்கு
என்று பேச
பொன் மணி பட்டுப்புடவையில்
மின்னும் பலர்.
என்னவொரு மவுசு இங்கே
பட்டிமன்றத்துக்கும்
கண்டனக்கூட்டங்களுக்கும்!
உலகக்குடிகளாய் பலதும் பேசியபடியே
வீதியோரம் நலிந்தழிவோரைக்
கண்டுங்காணாமல்
இன்னும் பல நாட்கள் இப்படியே
கடந்துபோய்க்கொண்டேயிருப்போமாக.

கலைக்கொலைகளும் பிறழ்சாட்சிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கலைக்கொலைகளும் பிறழ்சாட்சிகளும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


'அன்பே உருவான அவளைக் கொன்றுவிடலாம்' என்றான் ஒருவன்
'
அவளை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி தற்கொலை செய்துகொள்ளச் செய்வது மேல்' என்றான் இன்னொருவன்.
ஆம் என்று ஆமோதித்தாள் சக பெண்ணின் வலியறிந்த பாவத்தில் ஒருத்தி, சிரித்தபடி.
'
அறிந்து ஓடோடிவரும் அவளது அம்மா இந்த நாட்டுப்புறப்பாடலைப் பாடி ஒப்பாரி வைக்கட்டும்' என்றார் அங்கிருந்த தமிழறிஞர் ஒருவர்.
அப்போது சமீபத்தில் பிரபலமாகியிருக்கும் திரைப்படப் பாடலைசன்னமாகப் பின்னணியில் ஒலிக்கச்செய்யலாம் என்றார் ஐந்தாமவர்.
அந்தப் பெண்ணின் உதட்டோரத்திலிருந்து ரத்தம் வழிந்தால் பார்க்க நன்றாயிருக்கும் என்றார் மேசையின் இடப்பக்க ஓரம் அமர்ந்திருந்தவர்.
உதட்டோரமா அல்லது முழங்காலின் கீழிருந்து வழிவதுபோலவா என்று கண்களால் குறிப்புணர்த்தி புருவத்தை உயர்த்தியபடி கேட்டார்
அவர்களில் மூத்தவர்.
அவ்வப்போது அங்கிருந்த நான்கைந்து தட்டுகளிலிருந்தசிப்ஸ்ஸை ஆளுக்கொரு கை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்கள்.
அடுத்திருந்த சிற்றுண்டிவிடுதியிலிருந்து சற்றைக்கொருதரம் சூடாக காப்பி வர
அது வேண்டாமென்போருக்கு குளிர்சாதனப்பெட்டியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது லிம்க்கா, ஸ்ப்ரைட், செவன் அப், கொக்கோகோலா பெப்ஸி ஆவின் பாதாம் பால் அவை போல்
பிற வேறு.
புதிதாக அந்தத் தொலைக்காட்சி சேனலின்கதைக்குழுவில் வேலைக்குச் சேர்ந்தவனாய் கால்கடுக்க ஜன்னலோரம் நின்றிருந்தவன்
கண்களில் துளிர்த்த நீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டான்;
அவனறியாத அந்தப் பெண்ணிடம் மனதுக்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.