LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, February 21, 2020

குடியுரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

குடியுரிமை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


கோவில் தேவாலயம் மசூதி என்று
எங்கும் காண முடியும் இவர்களை.
தங்கள் மதத்தினரா என்று பார்த்து
தர்மம் செய்பவர்கள் உண்டுதான்.
என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே
இவர்களது பொது அடையாளமும்
தனி அடையாளமும்.
இவர்கள் நம் நாட்டு மக்கள் என்பதைப் பற்றியோ
இவர்களுக்குப் பேச்சுரிமை கருத்துரிமை
வாக்குரிமை இல்லாதது பற்றியோ
மதவாதிகளோ அரசியல்வாதிகளோ
இலக்கியவாதிகளொ ‘இய’வாதிகளோ
பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.
’ஒரு பிச்சைக்காரரிடம் குறைந்தபட்சம்
பத்தாயிரம் ரூபாய் இருக்கும்’ என்று
வீதியோரம் சுருண்டு கிடந்த ஒரு மூதாட்டிக்குப்
பத்து ரூபாய் கொடுக்கப்போன
வெள்ளைக்காரரிடம் சொன்ன
நம்மூர்க்காரர்
வழிகாட்டி என்ற போர்வையில்
வழிபறிப் பகற்கொள்ளைக்காரராய்
நடமாடிக்கொண்டிருப்பவர்.
பிச்சைக்காரர்களின் பாதாள உலகத்தைப்
பற்றிப் படமெடுத்தவருக்கு
விருதுகள் கிடைத்தன.
வருமானம் கிடைத்ததா தெரியவில்லை.
‘பிச்சைக்காரிக்கு கர்ப்பம் ஒரு கேடா’
என்று கேட்கிறார்
மாபெரும் மனிதநேயவாதி ஒருவர்.
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் தெரியுமா
என்று கண்ணையுருட்டிக் கேட்டார்
இன்னொருவரை மொட்டையடித்து
விரைவில் திகில் படம் ஒன்றை
எடுக்கப் போகிறவர்.
திண்டுதிண்டாய் கைகாலிருக்கு,
வேலை செய்தால் என்ன என்று
குண்டுசட்டியில் குதிரையோட்டுபவரும்
கேட்கத் தவறவில்லை.
’இறப்பதற்குள் ஒரு முறையேனும்
தேர்தலில் வாக்களித்துவிடவேண்டும்’
என்று கூறிய பிச்சைக்கார முதியவரின் முகச்சுருக்கங்களுக்காகவாவது
ஏதேனும் ஓவியப்பள்ளி
மாடலாக அமர்த்திக்கொண்டு
அவருக்கு இருவேளை சோறுதந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்.
அன்ன சத்திரமா, எழுத்தறிவித்தலா
எது அதிகம் தேவை ஏழைக்கு
என்று பேச
பொன் மணி பட்டுப்புடவையில்
மின்னும் பலர்.
என்னவொரு மவுசு இங்கே
பட்டிமன்றத்துக்கும்
கண்டனக்கூட்டங்களுக்கும்!
உலகக்குடிகளாய் பலதும் பேசியபடியே
வீதியோரம் நலிந்தழிவோரைக்
கண்டுங்காணாமல்
இன்னும் பல நாட்கள் இப்படியே
கடந்துபோய்க்கொண்டேயிருப்போமாக.

No comments:

Post a Comment