LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, August 20, 2026

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே - அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே - இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி என்

வாயுற வாழ்த்தேனோ - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?


இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்

ஈந்ததும் இந்நாடே - எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந்நாடே - அவர்

கன்னியராகி நிலவினிலாடிக்

களித்ததும் இந்நாடே - தங்கள்

பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்

போந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?


மங்கையராயவர் இல்லறம் நன்கு

வளர்த்ததும் இந்நாடே - அவர்

தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்

தழுவியதிந்நாடே - மக்கள்

துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்

சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்

அங்கவர் மாய அவருடல் பூந்துகள்

ஆர்ந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

பாரதியார்

No comments:

Post a Comment