நாலுவரிக் கவிதையின் நிழல்
‘ரிஷி”
(லதா ராமகிருஷ்ணன்)
’இதோ சில மணிநேரத்தில் வாடிவிடும் பார்’ என்கிறார்கள்.
சூரியகதிர்கள் ஆசிர்வாதங்கள் என்றால்
கதிரோன் ஒருநாள் வெடித்துச்சிதறத்தான் போகிறான் என்கிறார்கள்.
ஒரு சோற்றுப்பருக்கையை இருபது எறும்புகள் இழுத்துக்கொண்டு செல்வதை
பிரமிப்போடு பார்த்துக்கொண்டு நின்றால்
வரும் கால்களில் அவை மிதிபட்டு சாகும்பார் என்கிறார்கள்.
நாலுவரிக் கவிதை வாசித்து கண்ணில் நீர்தளும்பி நின்றால்
அரைத்த மாவையே அரைப்பதையும் அள்ளித்தின்பதையும்
நிறுத்தவே மாட்டீர்கள் நீங்கள் என்று எள்ளிநகையாடுகிறார்கள்.
ஓர் உணர்வின் வருடலை புரிந்துகொள்ளாத
தம் இயலாமையை
பார் பார் நான் நாலுவீடு கட்டிவிட்ட வெற்றியாளன் என்று
மார்தட்டி மிகுவலிமையாகக் காட்டுபவர்கள் மத்தியில்
தத்தித் தவழ்ந்துகொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள் _
ஒரு துளி நீருக்கும் கத்துங்கடலுக்கும் இடையேயான
வேற்றுமையில் ஒற்றுமையை,
ஒற்றுமையில் வேற்றுமையை
கற்கக் கசடறக் கற்றவாறிருக்கும்
வளர்ந்த குழந்தைகளாய்.

No comments:
Post a Comment