LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 9, 2026

கலைடாஸ்கோப் கவிதைகள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கலைடாஸ்கோப் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


1. ஒரு குரல்வளையின் மனம்

மனதைக் கொலைசெய்துகொண்டேயிருக்கப்
பிடித்தவர்
அதற்கான காரணங்களைக்
கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கிறார்.
கிள்ளலுக்கும் குரல்வளையை நெரித்தலுக்கும்
உள்ள வித்தியாசம்
நம் பார்வையில் தானே தவிர
உண்மையில் இரண்டும் ஒன்றே என்று
அத்தனை ஆணித்தரமாக வாதங்களை
முன்வைக்கிறார்.
அழகைப் போலவே வலியின் அளவும்
அவரவருக்கானது என்று
அவர் சொல்லும்போது
நெரிக்கப்பட்ட குரல்வளையிலிருந்து
எழும் பலவீனமான சிரிப்பு
அழுகையைவிட ஆயிரம் மடங்கு
அவலமாய்.
ஒரு குரல்வளையை அத்தனை சுலபமாக
நெரிக்கவேண்டிய அவசியமென்ன
என்று கேட்டவரிடம்
நான் கேட்டபோதெல்லாம் பாடவில்லை
யென்பதற்காக என்றவர் _
என்னை இப்படி நெரிக்கவைத்து
விட்டாயே என்று
நொடியில் பாதிக்கப்பட்டவராகி
துடித்துக்கொண்டிருந்த குரல்வளையை
அன்போடு கையில் தாங்கி
யழைத்துக்கொண்டு வந்து
குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதைப்
பார்த்து _
தெறித்தங்கே விழுந்திருந்த
குரல்வளையின் மனம்
ஆற்றமாட்டாத துக்கம் பொங்கப்
புன்னகைக்கும்.
//2020, MAY 3 - மீள்பதிவு//

2. வார்த்தைகளின் வரையறைகளும் வரம்பெல்லைகளும்
/ஃபாசிசம் ஒழிக பாசிஸத்தை உயர்த்திப்பிடிக்கும் கட்சி ஒழிக/
/ஃபாசிசத்தை வேரறுப்போம் வாருங்கள்/
/ஃபாசிசம் நம்மை கூறுபிரிக்க விடலாமா கூறுங்கள்/
/ஃபாசிசம் தான் மட்டுமே சரியென்று நினைக்கும்/
/ஃபாசிசம் தன்னை மட்டுமே முன்னிறுத்த முனையும்/
/ஃபாசிசம் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும்/
/ஃபாசிசம் தானே சரி, தான் மட்டுமே சரி என்று நீட்டிமுழக்கும்/
/ஃபாசிசம் எல்லோருமே தனக்குக் கட்டுப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தும்/
/ஃபாசிசம் தன்னை எதிர்ப்போரை வெட்டி வீழ்த்தும்/
என்றெல்லாம் பகலிரவாய்
தான் நேசிக்கும் கட்சிக்காய் குரல்வளை முறிய
கூவித்திரிந்தவன்
மற்ற கட்சிகளையெல்லாம் ஃபாசிஸ்ட் கட்சிகள்
என்று ஏசியவாறிருந்தான்.
ஒருநாள்
கட்சியில் தப்பெனத் தனக்குப் பட்ட ஒன்றை மட்டும்
தட்டிக்கேட்டான்.
கட்சிநீக்கம் செய்யப்பட்டான்.
அப்பிய அப்பில் அதோ குப்புற விழுந்தவனின்
கிழிந்த வாயிலிருந்து ரத்தத்தோடு
வழிந்துகொண்டிருக்கிறது
சத்தமில்லாமல் ஃபாசிசம்..


3. ஆடுகளம்
அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும்
ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை.
காரணங்கேட்டவரிடம் கூறினார்:
கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும்
குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும்
சிறுமதியாளர்களும்
செத்த உயிர் தாங்கியோரும்
சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும்
சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்
அபத்தப்பேச்சே அறிவுசாலித்தனமாய்க்கொள்வோரும்
அடிவாரத்தில் நின்றுகொண்டு மலைமுகடைப் பகடி செய்வோரும்
பட்டுப்பூச்சிக்கு மனிதனைப்போல் பாடவருமா என்று
முட்டாள்தனமாய் மார்தட்டிக்கொள்வோரும்
கட்டாயம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவேன்
என்று துண்டுபோட்டுத் தாண்டுகிறவர்களும்
உன்னதங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்க மாட்டேன்
என்ற எழுதாச் சட்டத்தின்படியே செயல்படுகிறவர்களும்
எல்லோரையும் மட்டம்தட்டுவதையே காவியத் துணிச்சலாகக்
கட்டங்கட்டிக் காட்டுவோரும்
வெட்கங்கெட்டிருப்பதையே விவேகமாய்க் காட்டிக்கொள்வோரும்
நட்டுகழண்டதாய் நாலும் நவின்றுகொண்டிருப்போரும்
புட்டுபுட்டு வைப்பதாய் துட்டுவாங்கித் திட்டுவோரும்
காகித சிங்கம் புலி கரடி பாம்பாய்
சர்க்கஸ் முதலாளியாய் மிருகங்களாய்
சுற்றிக்கொண்டிருக்கும் சோப்ளாங்கிப் போட்டியாளர்களோடு
பொருதவேண்டியிருப்பது
வெற்றியின் குதூகலத்தைவிட
தோல்வியின் கையறுநிலையையே
அதிகம் உணரச்செய்கிறது.....


No comments:

Post a Comment