போர்களும்
மன்னர்களும்
சாமான்ய மக்களும்
கறைபடாக் கையர்கள் அவர்கள்
கொலை செய்துவிட்டுப் பின் சுவடுபோகக்
கழுவிக்கொள்வதற்கென்றே
கொல்லைப்புறத்தி சில நதிகளைக் கட்டுசெட்டாய் நட்டுவைத்து
வாகாய் ஓடவிட்டிருப்பவர்கள்.
ஆகாயத்திலிருந்து அவர்களின் அதிகார, பண பலத்தால் பறித்துவந்திருக்கும் நட்சத்திரங்களை
அவர்களுடைய வரவேற்பறையில் அலங்கார விளக்குகளாகவும்
படுக்கையறையில் இரவுவிளக்காகவும்
அவரவர் சட்டைப்பையில்
அவசர கால டார்ச் லைட்டுகளாகவும்
வைத்துக்கொண்டிருக்கும்
அவர்கள் நினைத்தால்
இரவைப் பகலாக்கவும் பகலை இரவாக்கவும் முடியும்
எத்தனை கார்களும் பங்களாக்கவும் வைத்திருக்கிறார்களோ
அத்தனைக்கத்தனை எளிமையானவர்கள் அவர்கள்
அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
அப்பாவி மக்கள்.
அல்லது, ‘நம்புவதாய் பாவனை செய்துகொண்டிருக்கிறோம்
வம்பெதற்கு என்று வாய்மூடியிருக்கிறோம்’ என்று
சொல்லாமல் சொல்வதாய்
அதோ வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
அவரவருக்குரிய வாக்குச்சாவடிகளில்

No comments:
Post a Comment