வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்
நிசப்தமான அறையில் ' ணங்' என்ற ஒலியுடன் சிதறி விழுகிறது
சற்று முன் நான் தேநீர் குடித்து விட்டு
மேசையில் வைத்த பீங்கான் குவளை.
எங்கிருந்து வந்தது இந்த ஒலி
குவளைக்குள்தான் இருந்ததா?
எனில்
நான் பருகிய தேநீருக்குள்ளும் சில
ஒலிச் சிதறல்கள் போயிருக்குமா.
பலா மரத்திலிருந்து விழுந்த
கூழம் பலா போல் சிதறிக் கிடக்கும்
பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம்
கேட்பேன்.
" இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும்
ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை.
குறைந்தது ஒரு காலை வணக்கமாவது
சொல்லியிருக்கலாமே தினமும்"
******
(* " ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல" தொகுப்பிலிருந்து)
கவிஞர் ஜெயதேவனின் இந்தக் கவிதையில் கீழே விழுந்து உடையும் பீங்கான் கோப்பை உண்மை யாகவே விழுந்திருக்கலாம்.
ஆனால், முழுமையாக அந்தக் கோப்பை இருந்த போது வெளிப்படாத ஒலி அது கீழே விழுந்து உடைந்தபோது எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை முன்வைப்பதன் மூலம் அந்தக் கோப்பையைக் குறியீடாக்கி வாழ்க்கை குறித்த, உறவு குறித்த பல கேள்விகளை முன்வைப்பதாகவே என் வாசகப்பிரதி விரிகிறது.
தேனீர்க்குவளை முழுமையாக இருந்த அத்தனை நேரமும் அந்த ஒலியும் அதில்தான் இருந்ததா என்ற கேள்வி அப்படியானால் ‘நான் பருகிய தேனீருக்குள் ளும் சில ஒலிச்சிதறல்கள் போயிருக்குமா என்ற கேள்விக்குக் கவிஞரை இட்டுச்செல்கிறது.
வாழ்வில் நம்மால் பகுத்துணரமுடியாத பல இருக் கின்றன என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.
‘இருக்கும்போது உணரமுடியாதது இல்லாமல் போன பிறகு உணரப்படுவதாய், உறவின் பிரிவைக் குறிப்பு ணர்த்துவதாய்க் கொள்ளலாம்.
‘நிசப்தமான அறை’ என்று கவிஞர் குறிப்பிடுவது தூல அறையைத் தானா அல்லது மனமெனும், வாழ் வெனும் சூக்கும அறையையா? நிசப்தம் மனதின் சமன்நிலையா? மனம் உணரும் தனிமையா? இரண்டுமா?
//’நான் பருகிய தேனீருக்குள்ளும் சில ஒலிச்சித றல்கள் போயிருக்குமா//’ என்ற வரியை அர்த்த ரீதியாய் பிரித்துப்பார்க்க முற்படுவதற்கு முன்பாக அந்த வரியின் கவித்துவம் மனதை ஈர்த்துவிடுகி றது!
பருகிய தேனீருக்குள் சில ஒலிச்சிதறல்கள் கலந்திருந் தால் அவை கவிதைக்குள் தேனீர் குடித்தவருக்குள் ளும் போயிருக்குமல்லவா! அப்படிப் போனதால் தான் இந்தக் கவிதை உருவாகியிருக்குமோ!
//‘பலா மரத்திலிருந்து விழுந்த கூழம்பலா போல் சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில்’ //
- உடைந்த பீங்கான் துண்டுகளுக்கு இத்தகைய ஒப்புமையை நான் படித்த நினைவில்லை. கூழம் பலா என்பது ஒருவகை பலாவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அல்லது, பலாவின் வளர்ச்சிக் கட்டங்களில் ஒன்றாய்....நகரிலேயே பிறந்து வளர்ந்து உரித்த பலாச்சுளைகளையே பரிச்சியம் கொண்டவள் என்பதால், சரியாகத் தெரியவில்லை. பலாப்பழம், பீங்கான் இரண்டிலும் ஒளிரும் மினுமினுப்பு உண்டு என்பதும் நினைவுக்கு வருகிறது.
//சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம் கேட்பேன்// - எப்படிப்பட்ட பரிதவிப்பு இது!
’சிதறிக்கிடக்கும் பீங்கான் துண்டில் என்பதை கவிஞர் பிரக்ஞாபூர்வமாகக் கையாண்டிருக்கலாம், அல்லது, கவிதையைச் சொல்லும் போக்கில் ஒருமை, பன்மை நினைவை விட்டு நழுவியிருக்க லாம் முன்பு ஒருமுறை ‘சோற்றுப்பருக்கைகள் தொண்டையை அடைத்தது என்று எழுதியிருந்த கவிஞரை அதுகுறித்துக் கேட்டபோது ‘ எல்லாப் பருக்கைகளுமாகச் சேர்ந்து ஒரு மொந்தையாகித் தானே தொண்டையை அடைத்தது. தனித்தனியாக அல்லவே’ அதனால் தான் ஒருமையில் ’அடைத்தது’ என்று எழுதினேன் ‘ என்று பதிலளித்தது ஞாபகம் வருகிறது. கவிதையில் இலக்கணத்தை ஒரேயடி யாகக் கைவிடலாகாது என்றாலும் கவிதை இலக்கணம் மட்டுமல்லவே! ‘இங்கே கவிஞர் ‘சிதறிக் கிடக்கும் பீங்கான் துண்டில்’ என்பதில் ‘குவளை’ என்னும் முழுமையே பல பின்னங்களால், பகுதிகளால் ஆனவையே என்ற குறிப்பு தொக்கிநிற்ப தாகத் தோன்றுகிறது. ’உண்மையில் முழுமை என்று ஏதேனும் உண்டா என்ன? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.
அதுவும், என்ன கேட்க நினைக்கிறார் கவிதை சொல்லி?!
//இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும் ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை
குறைந்தது ஒரு காலைவணக்கமாவது சொல்லியிருக்கலாமே தினமும்?!//
நிசப்தமும் அமைதியும் இருவேறு பொருள்களைக் கொண்டவை. சமயங்களில் அர்த்தங்கள் overlap ஆவதும் உண்டு.
இந்தக் கவிதை குறித்து நிறைய எழுதலாம். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் கவிதையில் வரும் அறையும், நிசப்தமும், உடைந்த தேனீர்க் கோப்பை யும், தொண்டைக்குள் இறங்கி உதிரத்தில் கலந்துவிட்ட தேனீரும், உடைந்த பீங்கானிலிருந்து வெளிப்படும் ஒலியும், தேனீர்க்கோப்பையிடம் காலை வணக்கமாவது சொல்லியிருக்கலாமே என்று விசனத் தோடு கூறும் கவிதைசொல்லியும் இவையாவும் நேரிடையான அர்த்தத்திலும் குறியீடுகளாகவும் வாழ்வு குறித்து விரிக்கும் காட்சிகளும் உணர்வுகளும் நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருபவை. இந்தக் கவிதை இடம்பெற்றிருக்கும் தொகுப்பின் தலைப்பு
" ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல" - ஒற்றைவரிக் கவிதை!
கவிஞர் ஜெயதேவனின் இன்னொரு கவிதை பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளி’ என்று தொடங்கும்
பிறப்புக்கும் இறப்புக்குமான
இடைவெளி
ஒரு காற்றுக்குமிழுக்கும்
இன்னொரு காற்றுக்குமான இடைவெளிதான்
கண்ணாடிக் குடுவைக்குள்
புகுந்த நீர்த்துளி காய்வதற்கான
காலத்துளி அளவுதான்
துளிருக்கும் உதிர் சருகுக்கும்
பனிப்படலத்திற்கும்
அதன் உலர்தலுக்குமான
கால எல்லைதான்
உள்மூச்சு வெளிவரும்
அந்நொடியாகவோ
வெளிச் சுவாசம் நுரைப்பை தொடும் இடைக்கணமோ கூட.
குழந்தையின் கொலுசொலி
முதியவளின் வெற்றிலை உரல்
இடிப்பொலி நம் காது தொடும்
தூரம்தான்
நீண்டவெளியில் நீ என்பதற்கும்
நான் என்பதற்குமான அடையாள
புள்ளிகள் மறைந்து
சுத்த சூன்யமாகும்
காலதீதம்தான்.
விண்ணீர்த் துளி மண் தொடும்
இடைவெளி கூட அல்ல
பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளி.
ஜெயதேவன்


No comments:
Post a Comment