LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, April 15, 2025

நாமாகிய நாம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நாமாகிய நாம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நாமுக்கு நிறையவே நியாயமான சந்தேகங்கள்.
நாம் எல்லா நேரமும் நாமாகத்தான் இருக்கிறோமா
நாம் நாமாகவும் அவர்கள் அவர்களாகவும்
நாம் அவர்களாகவும் அவர்கள் நாமாகவும்
நாம் நானாகவும் அவர்கள் தானாகவும்
ஆன போதுகள் ஆகும்போதுகள்
அன்றுமின்றுமென்றுமாய்
அங்கிங்கெனாதபடி……
நாமாகிய நாம் எப்போதெல்லாம் ஒருமையிலிருந்து
பன்மையாகிறோம்?
பன்மையிலிருந்து ஒருமையாகிறோம்?
நாம் என்பது அன்பு நிறைந்ததா?
அதிகாரம் நிறைந்ததா?
நாமுக்குள் அடங்கியோர்
தாமாக வந்தவர்களா _
திணிக்கப்படுபவர்களா?
நாமாகிய நாமிருப்பதுபோலவே
நாமாகாத நாமும் இருப்பதுதானே இயல்பு?
நாம் நயத்தகு நாகரிகப் பிறவியா?
நரமாமிசபட்சிணியா?
நாம் நானாகும் தருணங்களில் தம்மை அரியணைகளில் அமர்த்திக்கொண்டுவிடுபவர்கள்
அதற்குப்பின் கிடைக்கும் அவகாசத்தில்
மீண்டும் நாமை அருகழைத்து சாமரம் வீசச் செய்கிறார்கள்
என்றால் நாமாகிய அவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்களோ?
எந்த சாமியைக் கும்பிடுகிறவர்களாயிருந்தாலும்
ஆசாமியைக் கும்பிடுகிறவர்களாயிருந்தாலும்
ஆமாம்சாமி போடும்வரை தான்
-அவர்கள் நாமுக்குள் நாமா
நாம் – அவர்கள் எனும் எதிர்நிலைகளில்
நாமை சிறைப்பிடித்து ஆயுள்கைதியாக்கி
அவர்களாகிய நாமின் அடிமையாக்கிக்
கசையடி தந்தவண்ணம்
நாமாகிய அவர்களுக்கு அதிகம் வலிப்பதாய்
நாளும் நெட்டுருப்போடுவதாய் சொல்லிக்கொண்டிருப்பது
நாமுக்குத் தெரிந்தும்
நாமால் ஏதும் செய்ய இயலாத கையறுநிலையில்
நாம்..
நாமின் சாதிமதபேதமற்ற நிலைக்கு
சந்தோஷப்பட வேண்டுமா
சோகப்பட வேண்டுமா
நாம்?

No comments:

Post a Comment