LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 22, 2026

தாய்மண் அன்னா அக்மதோவாவின் கவிதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

தாய்மண்

 அன்னா அக்மதோவாவின் கவிதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்



நாம் அதை அலங்காரப் பேழைகளில் நம்
இதயத்தின் மீது சுமந்துகொண்டிருப்ப
தில்லை.
அது குறித்து கவிதைகளில் கரைவதில்லை,
அது நம்மைக் கசப்பான ஓய்விலிருந்து எழுப்புவ தில்லை
உறுதியளிக்கப்பட்ட ஈடன் தோட்டம்போல்
இல்லை அது.
நம்முடைய மனங்களில் பேரத்திற்கான பொருளாய்
அதை பாவிக்க ஒருபோதும் முயற்சிப்பதில்லை நாம்.
நோயுற்றிருக்கும்போது, மகிழ்ச்சியற்றிருக்கும்போது,
அதன்மீது அலுப்புற்றிருக்கும்போது
அதைப் பார்க்கவோ அறியவோ கூட அறியத் தவறிவிடுகிறோம்.
ஆம், பாதத்திலான இந்தப் புழுதி
நமக்கு ஏற்றதாயிருக்கிறது,
ஆம், பற்களின் இந்த விசைகூடிய அரைவு
மிக வாகாயிருக்கிறது நமக்கு,
எனவே இரவும் பகலும் மிதித்தேகிக்கொண்டிருக்கிறோம் _
அந்தக் கலவையாகா, கட்டுமான நேர்த்தியற்ற, புழுதியை.
ஆனால் நாம் அதனுள் படர்ந்துகிடக்கிறோம்,
அதுவேயாகிறோம்
ஆகவே அழைக்கிறோம் வெகு இயல்பாய் –
எனது மண் என்று.

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்ச்சொல் வீரர்களும்

”வாழ்க வாழ்க” வாயர்களும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை.
உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்
சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்
காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க
அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும்
அதிகரித்துக்கொண்டேபோகின்றன.
அதனாலென்ன ? ஒருதரப்பு அன்னாடங்காய்ச்சிகளை
இன்னொரு தரப்பு அன்னாடங்காய்ச்சிகளுக்கெதிராகத் திருப்பிவிட்டால் பின்
பரபரப்பாய்த் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்களேயல்லாது
பதுக்கியிருக்கும் கருப்புப்பணத்தின் பக்கம் கவனம் திரும்பாது.
அடிப்பதற்கு
ஆக்ரோஷமாக முழங்குவதற்கு
அசிங்கசிங்கமாகத் திட்டுவதற்கு
அப்பிராணிகள் சிலபலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள்
ஆயிரங்காலத்திற்கு முன்னான புராண நாயகநாயகியராயிருந்தால் இன்னும் நல்லது.
அவர்கள் பேசாத வார்த்தைகளையெல்லாம் பொருள்பெயர்த்துச்சொல்ல வசதியாயிருக்கும்.
அவர்களைக் கடித்துக்குதறி காலால் எட்டியுதைத்து
காறித்துப்பித்துப்பி நம்மை நலிந்தவர் நாயகர்களாகக் காட்டிக்கொள்வது சுலபம்.
வாயற்றவர்களின் வாயாக நம்மை நிலைநாட்டிக்கொண்டுவிட்டால் பின்
வக்கிரமாக விஷமத்தனமாக வண்டைவண்டையாக என்னவேண்டுமானாலும் பேசலாம்.
அலையலையாய் அழைப்பு வரும்
நிலையாய் பேர் புகழ் காசு புழங்கும்
உலைபொங்கமுடியாமல் அழுதுகொண்டிருப்போருக்கான உங்கள் முழக்கத்திற்குக் காத்திருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அரங்குகள்.
சிரங்கும் சொறியும் சேத்துப்புண்ணும் சீதபேதியும்
நிரந்தரமாகிவிட்ட மக்கட்பிரிவினருக்காகப் பேசிப்பேசியே
விருந்துகளில் குறைந்தபட்சம்அறுபது உணவுவகைகளை
இருபது உணவுமேடைகளில் ருசித்துச் சாப்பிடலாம்.
கைகழுவப் போகும் வழுவழு வாஷ்பேஸினின் மேற்புறம்
பிரம்மாண்ட ஓவியத்தில் யாருடைய கண்களேனும் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கட்டும்.
அல்லது, குறைந்தபட்சம் கருத்தைக் கவரும் முத்திரை வாசகம் ஒன்று தீப்பொறிகள் பறக்கத் தரப்பட்டிருக்கட்டும்.
காகிதத்தீ கருக்கிவிடாது எதையும் என்ற அரிச்சுவடியை அறிந்துவைத்திருந்தால் போதும்.
ஆம், அதுவே போதும்.

எமோஜிக்களின் உரையாடல் - 50

 எமோஜிக்களின் உரையாடல் - 50

இப்போதுதான் தமிழகத்தில் புதிய முதலமைச்சரும் அவருடைய அமைச்சர்கள் சிலரும் பதவியேற்றுள்ளனர். அதற்குள் இந்த சாதியைச் சேர்ந்தவர் கள் இடம்பெறவில் லையே, அந்த சாதி யைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வில்லையே என்று குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார் கள் அறிவுசாலிகளில் சிலபேர். வருத்த மாயிருக்கிறது.

நானும் அதையெல்லாம் படிச்சேன். உண்மையிலேயே வருத்த மாயிருக்கு. சாதிப்பிரிவினைகளைப் பகடைக் காயாக்கிய அரசியல்கட்சிகள் மக்கள்நலனைப் பணயம் வைத்து சூதாடிக் கொண்டிருக்கின்றன. சுய சாதிக்கார சட்ட சபை உறுப்பினர்கள் அப்படி எல்லா சுயசாதி மக்களுக் கும் நல்லது செய்கிறார்களா என்ன ? நேர்மை, கடமை யுணர்வு, திறமை, பாரபட்சமற்ற அணுகு முறை மக்கள் நலனில் ஆர்வமும் அக்கறையும் - இதெல்லாம் மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பதல்லவா முக்கியம்........

எமோஜிக்களின் உரையாடல் - ATTENTION AND ALL THE BEST!



அட்டென்ஷன்! தொண்டர்களே! தலைவர்களே! ஆதரவாளர்களே! அருமை வாக்காளப் பெருமக்களே! இன்று நீங்கள் செயல்களத் திற்குச் சொல்லப்போகிறீர் கள். நல்வாழ்த்துகள். உங்களிடம் நான் சொல்வதெல்லாம் இதுதான்.


யெஸ் ஸார்?

நீங்கள் தேர்ந்தெடுத்த அரசு நிலைத்திருப்பதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்களு டைய சின்னத் தவறும் உன்னிப்பாக கவனிக்கப்படும். எச்சரிக்கை யாயிருங்கள். உங்களுடைய பணி தன்னல நோக்கங்கள் கொண்ட தாக இருக்கலாகாது. மக்கள் நலனுக்காகவே பணியாற்ற வேண்டும். அவர்கள் வாழ்வை, வாழ்வுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். மேலும் -

யெஸ் ஸார்

மக்களுக்குப் பணியாற்றவே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறீர்கள். அது உங்கள் கடமை. அதற்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாகாது.

யெஸ் ஸார்.

ஆல் தி பெஸ்ட்

 

எமோஜிக்களின் உரையாடல் (*அரசியல் களம்) .............................................

 எமோஜிக்களின் உரையாடல்

(*அரசியல் களம்)

.............................................

ஆட்சிக்கு வரப்போகும் கட்சியின் தொண்டர்கள் கேலியா சுத்தி சுத்தி வந்து விசிலடிச்சாங்க ளாமே - இனி எல்லாமே நாசம் தான்னு ரொம்ப வருத்தப்பட்டிருக் காரே ஆட்சியிலிருக்கும் கட்சியின் முக்கியப் பிரமுகர் ?

யார் இந்தமாதிரி கேலி செய்தாலும் அது கண்டிக் கத் தக்கது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதச் சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சியைச் சேர்ந்த இவர், மதச்சார் பின்மையை முன்வைக்கும் அரசியல் சாஸனத் தின் மேல் உறுதிமொழியெடுத்து பதவிக்கு வந்தவர் விஸிலடிப்பதை விட மோசமாக பாரதப்பிரதமரை, இந்துமதத்தை எப்படியெல் லாம் தன் பதிவுகளில் இழிவுபடுத்தியிருக்கிறார் என்பதையும் எண்ணிப்பார்க்காமலிருக்க முடிய வில்லை......

பொம்மிக்குட்டியின் கதை! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பொம்மிக்குட்டியின் கதை!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

[I]
தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது?
அதுவும், சின்னக்கண்ணனின் பொம்மை அத்தனை கலைவண்ண கைநேர்த்தியோடு
கிடைக்கோடாய் அசைவதைத் தவிர்த்து
மேலுங்கீழுமாய் மட்டும் முகம் ஆட்டிக் காட்டும்!
எதைச் சொன்னாலும் கண்சிமிட்டிப் புன்சிரிக்கும்.
கைகால் இயக்கங்களெல்லாம் குழந்தைக் கண்ணனின் மனம் போன போக்கில்;
அல்லாது தலையாட்டி பொம்மைக்கு
ஏது தனிப்பட்ட இயக்கம்...?
குறும்புச் சிறுவனின் கைகளிலும், மடியிலும்
தயக்கமில்லாமல் பொருந்தியமர்ந்திருக்கும்.
தனக்குப் பிடித்தமான பெயரை தலையாட்டி பொம்மைக்குத் தந்து
அதைத் திரும்பத் திரும்பக் கூவியழைத்துக்
குதூகலிக்கும் குழந்தை...
"பொம்மிக்குட்டீ வா.. வா.. பூ பூவாய் முத்தம் தா..."
பஞ்சுப்பொதியாய் பொம்மையின் உடல்.
பிஞ்சுக் கைகள் மென்மையாய் வருடித் தரும்.
துஞ்சும் நேரமெல்லாம் பொம்மிக்குட்டியைத்
தன்னருகே பத்திரப்படுத்திக் கொள்வான் சின்னக் கண்ணன்.
ஆனா- ஆவன்னா, A B C, 1 2 3...
அவனுக்குத் தெரிந்ததெல்லாமும்
சொல்லித் தரப்படும் பொம்மிக்குட்டிக்கும்.
II
பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த
சின்னக்கண்ணன்
கூடப் படிப்பவர்களைப் பற்றியெல்லாம் தினமும்
வீடு திரும்பிய பிறகு
வண்டிவண்டியாய் பொம்மிக்குட்டிக்குக் தவறாமல் கதை சொல்வான்.
கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொம்மிக்குட்டி.
அடிக்கொரு தரம் தலையை ஆட்டும் - மேலுங்கீழுமாய்.
"அச்சுதன் அடித்தான், அவனைத் திருப்பியடித்தேன் - சரிதானே?"
"ஆம், ஆம்". ஆனால்...
"முகுந்தன் என்னுடைய பென்சிலை உடைத்துவிட்டான் என்பதால்
அவனை நையப் புடைத்து விட்டேன்" என்று சின்னக் கண்ணன்
சொன்னபோது
செய்த குற்றத்திற்கு தண்டனை அதிகம் என்றுதோன்றியது
பொம்மிக்குட்டிக்கு. சற்றே தயக்கமாய்
தலையை ஆம் - இல்லையாய் ஆட்டியது பொம்மை.
உயிருள்ளது பொம்மை என்று நம்பும் சிறுவன் கொஞ்சம்போல்
திகைத்துச் சினந்தான்.
தகப்பன்சாமி தான் என்றாலும்
"எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காய் தருணுடைய கையைக்
கடித்துக் குதறி விட்டேன், கத்தியாலும் வெட்டி விட்டேன்"
என்று பெருமைபீற்றிக்கொண்டபோது
பொம்மிக்குட்டியின் தலை தவிர்க்கமுடியாமல் இடவலமாய்
ஆட ஆரம்பித்ததைக் கண்டு
மட்டுமீறிப் புகைந்த கோபத்தில் சிறுவனின் கரம்
பொம்மிக்குட்டியின் சிகையைக் கொத்தாய்ப் பிடித்து
கதவிற்கு அப்பால் வீசியெறிந்தது.
'பதிலுக்கு புதிய பொம்மைகள்
காசு கொடுத்தால் கிடைத்துவிட்டுப் போகிறது...
அதுவும், ஓசியில் கிடைத்ததுதான் பொம்மிக்குட்டி.
போதாக்குறைக்கு, நிறைய நைந்துபோய் விட்டது.
ஆய் பொம்மை; பீத்த பொம்மி..'
III
காரிருள் கவிய விழுந்தது விழுந்தவாறு
கிடந்தது பொம்மிக்குட்டி.
முதுகெலும்பு முறிந்ததுபோல் ஒரு சுளீர் வலி படர
உயிர்ப்பின் அடையாளம் பொம்மைதானோ வென
தனக்கெட்டிய பட்டறிவில் படித்துக் கொண்ட
விடையே கேள்வியாக அனத்திக் கொண்டிருந்தது நெடுநேரம்.
பின், கனவே போல் காற்றுத் தடத்தில் கிளம்பிச் சென்று
கதவிடுக்கில் மனம்நுழைத்துப் பார்த்தது.
பரிச்சயமான அறை.
பழகிய சின்னக்கண்ணன் வழக்கம்போல்
கைகொட்டிச் சிரித்தவாறு கட்டளையிட்டுக் கொண்டிருக்க,
எதிரே
சாவிகொடுத்தால் ஓடும் பொம்மை_
சல்யூட் அடிக்கும் பொம்மை_
சிரியென்றால் சிரிக்கும் பொம்மை_
சீறிபாயச் சொல்லி தள்ளிவிட்டால்
சரவென்று நெளிந்தோடும் நாகப்பாம்பு பொம்மை_
குத்தினாலும், எத்தினாலும் சத்தமெழுப்பாமல்
சிறுவனின் வீரசாகச் செயல் என்பதாய்
பெருமையில் பூரிக்கும் கைதட்டி பொம்மை_
'வெல்கம்' பொம்மை,ரிம்-ஜிம் நாட்டிய பொம்மை_
பெருந்தனக்காரர் பரிசளித்த பொம்மை_
பல வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாய் ஊரைப்
பார்க்கத் திரும்பி வந்திருக்கும் உறவொன்று
வாங்கிவந்த பொம்மை_
விரல்சொடுக்கிற்கேற்ப விரைந்தோடி
சுவற்றில் முட்டி நிற்கும் பொம்மை_
அலங்கார பொம்மைகள்,அவதார பொம்மைகள்_
வைக்கோல் பொம்மைகள், வெண்கல பொம்மைகள்_
பைக்குள் போட்டுக் கொள்ளுவதற்கேற்ற சிறிய பொம்மைகள்_
பூதாகார கரடி பொம்மைகள்...
அறையில் ஒரே நெரிசலாயிருந்தது.
IV
பிடிக்கவில்லை யென்று கடித்துத் துப்பியிருந்த பொம்மை
பரணிலிருந்து கீழே இறங்கி வந்திருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் இன்னொரு குழந்தையின்
கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட பொம்மையும்
அருகமர்ந்து கொண்டிருந்தது.
கிழிந்த பொம்மைகள் சிலவற்றிற்கு
ஆயத்தஆடைகள் அணிவித்து
அழகுபார்த்துக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணன்.
சிறுவனின் கண்களே உதடுகளாய், வெளிப்பட்ட கூற்றுக்கு
மாற்று குறையாமல்
ஆடிக் கொண்டிருந்த தலைகள்
பொம்மைகளின் மேலும், கீழுமாய்.
காரியார்த்தமாய் வால்களைச் சுருட்டிக் கொண்டு
கூர்வளைநகங்களை செல்லப்பிராணிகளாய்
உள்ளிழுத்துக் கொண்ட வாக்கில்
அமர்ந்துகொண்டிருப்பவைகளைக்
காட்டும் அடையாளம் காலம்
எனப் பின்னேகி
பஞ்சுப் பிரிகளாய்
வெளியில் கலந்து திரியும்
பொம்மிக்குட்டியின் குரல் எட்டுமோ
உன்னை என்னை நம்மை...?
"நீயும் பொம்மை, நானும் பொம்மை,
நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை"
//2019, ஆ 9 - மீள்பதிவு//

விண்டவர் கண்டிலர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விண்டவர் கண்டிலர்

ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தேடித்தேடி இளைக்கச்செய்து
அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக
கரும்புள்ளி செம்புள்ளி குத்த
காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை;
காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்;
கண்ணீர்பெருக அவனை நினைத்துப்
பாடல்கள் எழுதியெழுதி இளைத்தவள்;
இன்(ல்)வாழ்க்கையைத் தொலைத்தவள்…..
நாச்சியார் திருமொழி பாய்ச்சும் அன்பெல்லாம்
விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாய்
இறுதித்தீர்ப்பு எழுதி
கழுமேடைக்கு ஹரியெனும் காற்றை
கரகரவென்று இழுத்துச்செல்லப் பார்ப்பவர்களின்
விசாரணை வளையத்திற்கு அப்பாலானது
காற்றைக் காதலனாக அடைந்தே தீருவது என்ற
அவளின்
அசாதாரண ஊற்றனைய போதமும்
பிறவிப்பெரும் பேறாய்
காற்றோடு அவள் ஆனந்தமாய் அலைந்துதிரிந்த
அரிதரிதாம் காதமும்
உருவறு விசுவரூபக் காற்று
அவளைச் சரண் புகுந்ததும்
அதுகாலை கேட்ட சுநாதமும்
மீதமும்.

க்ருஷ்ணார்ப்பணம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 க்ருஷ்ணார்ப்பணம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிவருடைய கண்ணீரின் அர்த்தங்களை யெல்லாம்
தன் கண்ணீருக்கானதாக முன்வைத்துக் கொண்டிருப்போரிடம்
மென்சிரிப்போடு ஒன்றை மட்டுமே
திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறாள் ஆண்டாள்:
”என் ஒரேயொரு கண்ணீர்த்துளியைத் தருகிறேன் –
திரியாமல் முறியாமல் திறந்து
உள்ளேயிருக்கும் உணர்வின் உணர்வை
உள்ளது உள்ளபடி
கையிலேந்திக் கொண்டுவரமுடியுமா பாருங்கள்.”
அவளறிவாள் _
அதன் வட்டம் நம் உள்ளங்கைகளில் அடங்காது.
அதன் குளிர்ச்சி சுட்டெரிக்கும்.
அதனுள்ளே தெரியும் வானவிற்கள் நம் பார்வைக்குக்
காணாதொழியும் வாய்ப்புகளே அதிகம்.
அந்த ஒற்றைக் கண்ணீர்த்துளிக்குள்
புல்லாங்குழல் உண்டு;
பிரிய குசேலர் உண்டு;
உரலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும்
குறும்புக் குழந்தையின் குட்டி வாய்க்குள்ளான
அகில உருண்டை உண்டு.....
ஒரு கணம் யுகமாகவும்
ஒரு யுகம் கண்ணிமைப்போதாகவும்
அந்தக் கண்ணீர்த்துளிக்குள் இயங்கும்
காலம் வேறு;
காலக்கணக்கு வேறு;
காலப்பிரக்ஞை வேறு.
வேண்டாத வேலை யிது -துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய் அவள் காதலைத் தோற்றதாக்குவது.
மாண்டாலும் மாறாதது ஆண்டாளின் அன்பு.
தீக்குள் விரலை வைத்தால்
நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுவது
எத்தகைய திருக்கனவு!
ஒருவகையில் உலகையே புரட்டிப்போடுவது!
விரலும் தீயும் இன்பமும் தோன்றலும் நந்தலாலாவும்
ஒருங்கிணைந்திருக்குமிந்த
ஒற்றைக் கண்ணீர்த்துளி
நேற்று பாடினாலும் நாளை பாடினாலும்
வரிகளை மீறிப்பரவும்
காற்றின் வருடல்;
குரலற்ற விளி;
பொருள் மீறிய பிரபஞ்சவெளி...
//2020, மே 12 - மீள்பதிவு//

ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி

 ரவீந்திரநாத் தாகூரின் 

கீதாஞ்சலி


103 செய்யுட்களைக் கொண்டது ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி. தமிழில் எனக்குத் தெரிந்து கவிஞர் யூமா வாசுகி இந்த நூலை மொழிபெயர்த்திருக்கிறார்.

எனக்கு இந்தச் செய்யுட்களை மொழிபெயர்க்கவேண்டு மென்று அடிக்கடி தோன்றும். அப்படித் தோன்றும்போது ஓரிரு செய்யுட் களை மொழிபெயர்ப்பேன்.
ஆரம்பத்திலிருந்து மொழிபெயர்த்து ஒவ்வொன்றாக முடிந்தபோது பதிவேற்ற விருப்பம்.
கடவுளைப் பற்றிய செய்யுட்கள் என்றாலும் அவை கடவுளைப் பற்றி மட்டும்தான் பேசுகின்றன என்று கொள்ளத்தேவையில்லை. பாரதியின் கண்ணன் பாடல்கள் போல்.....
முதல் செய்யுள்
எல்லையற்றதாக்கிவிட்டாய் என்னை. இந்த பலவீன பாண்டத்தை மீண்டும் மீண்டும் காலியாக்கி எப்போதுமே புத்துயிரால் நிரப்புகிறாய். நாணலாகிய இந்தச் சிறிய புல்லாங்குழலை குன்றுகள், பள்ளத்தாக்கு களுக்கு மேலாய் சுமந்து சென்று அவற்றினூடாய் என்றென்றும் புதிய இன்னிசைகளை நீ சுவாசித்தவண்ணம். உன் அமரத்துவம் வாய்ந்த தீண்டலில் என்னுடைய சின்ன மனம் எல்லையற்ற ஆனந்தமடைந்து விவரிக்கவியலா கூற்றுகளை வெளியிடுகிறது. உன் அளப்பரிய அன்பளிப்புகள் எனது இந்த சிறிய கைகளில் மட்டுமே என்னை வந்தடைகின்றன. யுகங்கள் கடந்துபோகின்றன. நீ இன்னமும் ஊற்றியவாறே. நிரம்புவதற்கு இன்னமும் இடமிருக்கிறது.

Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life. This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new. At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable. Thy infinite gifts come to me only on these very small hands of mine. Ages pass, and still thou pourest, and still there is room to fill .

தாகூரின் கீதாஞ்சலி – செய்யுள் – 2
................................................................................................
பாடச்சொல்லி எனக்கு நீ கட்டளையிடும்போது என் உள்ளம் பெருமிதத்தால் வெடித்துவிடுமோ என்று தோன்றுகிறது. உன் முகத்தைப் பார்க்கிறேன். என் கண்கள் குளமாகின்றன. என் வாழ்வில் கடுமையாகவும் இணக்கமற்றும் உள்ள எல்லாமே ஓர் இனிய ஒத்திசை வில் உருகிக்கரைகின்றன. என்னுடைய போற்றிப் பரவல் கடலின் குறுக்காய் ஆனந்தமாய் சிறகடித் துப்பறக்கும் பறவையாய் இறக்கைகளை விரிக்கிறது. என் பாட்டை கேட்பதில் நீ ஆனந்த மடைகிறாய் என்று எனக்குத் தெரியும். ஒரு பாடகராய் மட்டுமே உன் திரு வுருவின் எதிரில் என்னால் வர முடியும் என்பதை நானறிவேன். என் பாடலின் தொலைதூரம் விரிந்து பரவும் சிறகின் நுனியால், என்னால் என்றுமே எட்ட முடியாத உன் பாதங்களைத் தொடுகிறேன். பாடும் பரவசத்தில் போதையேறிய நிலையில் என்னையே மறந்து என் பிரபுவாகிய உன்னை சகா என்று அழைக் கிறேன்.
When thou commandest me to sing, it seems that my heart would break with pride; and I look to thy face, and tears come to my eyes. All that is harsh and dissonant in my life melts into one sweet harmony – and my adoration spreads wings like a glad bird on its flight across the sea. I know thou takest pleasure in my singing. I know that only as a singer I come before thy presence. I touch by the edge of the far-spreading wing of my song thy feet which I could never aspire to reach. Drunk with the joy of singing I forget myself and call thee friend who art my lord.

அம்மாவின் சித்திரம் பிரம்மராஜன் (மஹாவாக்கியம்(2000த்தில் வெளியானது) தொகுப்பிலிருந்து)

 அம்மாவின் சித்திரம்

பிரம்மராஜன்
(மஹாவாக்கியம்(2000த்தில் வெளியானது) தொகுப்பிலிருந்து)








புகைப்படமெழுதாது கோட்டுத்தீட்டல்களில்
பதித்துவிடவே ஒத்திப்போட்டிருந்தேன்
தூரிகை எதுவும் தோதாகவில்லை
சாக்குச் சொல்லி
என் அம்மையின் படத்தை சாசனப்படுத்த
துணியும் வாக்குமூல மொழியில்
பாழுற்றுக் கிடந்த பால்யத்தின் தனிமுகம்
தாளடியில் தடுக்கும் நீர்க்கோடாய்க் கவிழ்க்கும்
பிச்சைக்காரிகளின் முகம் அவளதாய்த் தோன்றுவதாகத்
துக்கம் தவிர்ப்பது எவ்விதம்
எதற்குமில்லாதிருக்கிறது உறுதி
சாட்சாத் என் பிறவியைக் கருக்கொள்கிறேன்
அந்த நாழிகையில் என
அவள் ஊன் திளைப்பில் கவிமுகம் கண்டிருக்க
வாய்ப்பில்லை
சுழன்று சென்றுவிட்ட
வேற்றுப் பிரபஞ்சமானது
பால்யம் மாற்ருவதற்கில்லை
என்பதால்
எவரது மன்னிப்பையும்
கோருவதற்கில்லை இந்நிகழ்ப்படம்
ஓவியனின் சுருக்க ஒப்பத்துடன்
முற்றுகிறது
அம்மாவின் பிம்பங்களைத் தேடுவதில்
இவள்களிடம் சென்றிருக்கிறேன்
பிடித்தேனில்லை
சிக்கென
என் ஓவியம் எனக்குப் பிடிபடும் இச்சமய வாழ்விலும்

MOTHER'S DAY POEMS - அம்மாவின் பொய்கள் - கவிஞர் ஞானக்கூத்தன்

அம்மாவின் பொய்கள்

கவிஞர் ஞானக்கூத்தன்


..............................................................................
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

MOTHER'S DAY POEMS - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 1.என் அம்மா

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒருபோதும்
சுனாமியாகப் பொங்காத சாகரம்;
சூறாவளியாகாத காற்று;
சுட்டுப்பொசுக்காத நெருப்பு;
சுக்குநூறாகாத திடம்;
சடசடவென்று முறிந்துவிடாத மரம்;
கையில் தம்பிடிக் காசில்லாத நேரம்
என் அருகில்
கதவை விரியத்திறந்திருக்கும் சிறுசேமிப்பு வங்கி;
எரியுங் குளிரில் போர்த்தக் கிடைத்த
அரிய மேலங்கி;
இரவில் காலந்தாழ்த்தி படுக்கையில் தலைசாய்த்து
’பச்சை புட்டி அமிர்தாஞ்சனை நான்
நெற்றியில் தேய்த்துக் கொள்வதை
எனக்குத் தெரியாமல் கண் திறந்து
கவலையோடு பார்க்கும்
எதிர்பார்ப்பற்ற பரிவு;
என்னவென்று சொல்லவியலா அன்பு;
சுருங்கிவரும் உடலுக்குள் சதாசர்வகாலமும்
சுழன்றுபெருகியோடிக்கொண்டிருக்கும்
ஜீவநதி;
கருகாத பூ;
ஒண்டுக்குடித்தன வீடோ
இன்றுள்ள இரண்டறைகள் கொண்ட
வாடகைக் குடியிருப்போ _
அரண்மனை, அரியணை, அரசவை,
மணிமகுடப் பிரக்ஞையற்று
பிரபஞ்சவெளியில் மிதக்கும் ஒரு
பறவைச் சிறகிழை ;
தனதேயான வானவில் நிறங்களையெல்லாம்
வாரி வழங்கும் பட்டாம்பூச்சி்;
தொட்டுவிடலாகும் தொடுவானம்;
என்றும் என் கவிதையில்
எட்டாச் சொல்……
//2021 MAY 11 – மீள்பதிவு//


2.சிறகசைக்கும் சுமைதாங்கிக் கல்லும் சிறுமியும்
…………………………………………………………………………………………………………
(சமர்ப்பணம்: அம்மாவுக்கு)
.......................................................................................................................................
மூன்றாவது தொகுப்பு ‘மற்றும் சில திறவாக் கதவுகள் (2005) இலிருந்து
…………………………………………………………………………………………………………
உணரும் காற்றின் அரூபமாய்
உள்ளோங்கி
உலகளந்திருக்கும் ஒன்றை
என்னவென்று இனங்காட்டுவது…
இன்று நாளையாகுமந்த
நுந்தருணக் குமிழைக்
கையிலேந்த முடிந்தாலும் ஏலாது
முன்சொன்னது.
பின்னும் அடையாளங்காட்டத்
தவிக்கும் மனதின்
ஆழத்தில்
சுமைதாங்கிக் கல் லொன்று
அமைதியாய் சிறகசைத்தபடி…
உயரப் பறந்துவிடாதபடி
வானத்தை சுருட்டிவைத்துவிட வேண்டும்.
நரையைக் கருமையாக்கி,
வயதின் சுருக்கங்களை நீவிக் கொடுத்து
விழுந்துவிட்ட பல்லைத் திரும்பப் பொருத்தி
பத்திரமாய் தரையிறக்கிவிடும்படி
இப்பொழுதே நிலவிடம் சொல்லிவைத்துவிடவேண்டும்.
மறுபடி யொரு சிறுமியாய்
முழுவிழிப்புடன் நானும் உன்னுடன்
கடந்தகாலக் கதவுதிறந்து
முதலிலிருந்து வாழ்ந்திடவேண்டும்
முள்ளும் கல்லும் அற…


அம்மாவுக்கு எப்படி நன்றி சொல்வது…..?
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
அலங்கார விளக்குகள் தொங்கும்
அதி யகன்ற அரங்குகளில்.
அதனால் என்ன?
அம்மாவும் சரி அன்பும் சரி
முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான
அதலபாதாளத்தை
வென்றுவிட்டது தெரிந்தது தானே!
கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை
எந்தக் கவிதையும் மட்டமல்ல.
_ தனக்குள் சொல்லிக்கொண்டவள்
வெளியே தெரியாத தன் எளிய தாய்க்கு
அவளறியாதவாறு பரிசளிக்க
சிறிய பொட்டலமாய்
ஒரு புத்தம்புதுக் கவிதைக்குள்
பத்திரமாகப் பொதிந்துகொள்கிறாள்
தானாகிய கொத்துமலர்களை!

[’இப்போது’ கவிதைத்தொகுப்பிலிருந்து
//2019, மே 12 - மீள்பதிவு//
கவிதை எண். 17.துளிவெள்ளக்குமிழ்கள்(5)]