LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, July 21, 2025

தரிசனம் - ‘ரிஷி' (லதா ராமகிருஷ்ணன்)

 தரிசனம்

‘ரிஷி'
(லதா ராமகிருஷ்ணன்)
”எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின்
பின் உனக்கு எதற்கு தனிவீடு?”
”நீக்கமற நிறைந்திருக்கும் காற்று
ஒவ்வொரு உடம்புக்குள்ளும் நிரம்பி
தனித்தனி உயிராவதுபோல்
என்று வைத்துக்கொள்ளேன்” _
கண்ணிமைப்போதில்
ஒலியின்றிக் கேட்கும் அசரீரியுடன்
பார்வைப்பரப்பிற்கு அப்பால்
தெரிகிறதொரு சிறு புன்னகை.

இயங்குவிதிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இயங்குவிதிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கருத்துக்கு எதிர்க்கருத்துரைக்க முடியாதவர்கள்
Character Assassinationஇல் இறங்குகிறார்கள்
கொச்சை வார்த்தைப்பிரயோகங்களைக் கையாள்கிறார்கள்
கெட்ட வார்த்தைகளை நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி
அதையே criticism என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
ஒரு கருத்துக்கு வரக்கூடிய காத்திரமான எதிர்க்கருத்தை
எதிர்கொள்ள முடியாதவர்கள்
Character Assassination இல் இறங்குகிறார்கள்
கொச்சை வார்த்தைப்பிரயோகங்களைக் கையாள்கிறார்கள்
கெட்ட வார்த்தைகளை நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி
அதையே criticism என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்
ஒரு எதிர்க்கருத்துக்கு வரக்கூடிய காத்திரமான இன்னொரு எதிர்க்கருத்தை
எதிர்கொள்ள முடியாதவர்கள்
Character Assassination இல் இறங்குகிறார்கள்
கொச்சை வார்த்தைப்பிரயோகங்களைக் கையாள்கிறார்கள்
கெட்ட வார்த்தைகளை நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி
அதையே criticism என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
வெளியேறமுடியாதொரு விபரீத வட்டச்சுழற்சியில்
தலைசுற்றி கண்மயங்கி யவருமிவருமெவருமுவருமாய்
இன்னும் நிறையவே மிச்சமிருக்கின்றன
கொச்சைவார்த்தைப்பிரயோகங்கள்
கெட்ட வார்த்தைகள்
character assassinationகள்
கவிதைகள்.....

பூச்சாண்டிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பூச்சாண்டிகள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட
பார்வையும்
திமிர்ந்த ஞானச்செறுக்கும் தமிழின் திருமாண்பும்
தமதென்றே பாவனைசெய்து அதை ஆவணமாக்கி
நிஜத்தில் முதுகுத்தண்டில் நல்லதொரு ‘ஸ்ப்ரிங்க்’ பொருத்தி
நினைத்தபடியெல்லாம் நாலாபக்கங்களிலும் வளைந்து
மடங்கித் தழைந்து குழைந்து
அழையா விருந்தாளியாய் அங்குமிங்கும் சில
அவரளவிலான அரிய கருத்துகளை
அள்ளி வழங்கி
அறிஞரும் ஆய்வாளருமாகி
அருந்தவப்படைப்பாளியுமானபின்பும்
அழுதுபுலம்பிக்கொண்டிருப்பார்
கொஞ்சம்போல் எஞ்சியிருக்கும் மனசாட்சியும்
அரைகுறை ஆன்மாவும்
பழுதடையாமலிருப்பதாலோ
பழுதடைந்திருப்பதாலோ….

ஆளவந்தார் அரண்மனைக் கழிப்பறை! _அநாமிகா (லதா ராமகிருஷ்ணன்)

 சிறுகதை

ஆளவந்தார் அரண்மனைக் கழிப்பறை!
_அநாமிகா
(லதா ராமகிருஷ்ணன்)

{23 மார்ச் 2011 - 'உங்கள் நூலகம்' இதழில் வெளியானது]
....................................................................................................................


நாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி நடுத்தர வர்க்கத்தின் கீழ், மேல் தட்டுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இடம். இரு சக்கர வாகனங்களுக்கும், நாற் சக்கர வாகனங்களுக்கும் குறைவில்லை. குடியிருப்புப் பகுதியின் வாயிற்புறத்தில் ஆட்டோக்கள் அணி வகுத்து நிற்கும். அவசரத் தேவைகளுக்கான கடை, கண்ணி, கோயில், கணினி மையம் எல்லாம் உண்டு.
இங்கேதான் இன்று காலை முதலே பரபரப்பாக இருந்தது. ஐந்நூறு ஆண்கள் அவர்களின் நடை யுடை பாவனைக ளைப் பார்த்தாலே யார் ஆண்டை - யார் அடிமை என்பது தெளிவாக விளக்கிவிடும். ஆனால், அடிமை யும் அவனொத்த சகமனிதர்களிடம் தன்னை ஆண்டையாய் பாவனை செய்துகொண்டிருப்பான் - வீடுவீடாகச் சென்றார்கள்.
வீடுவீடாகச் சென்றவர்கள். வெகு இயல்பாக ‘குடும்ப அட்டையின் முதல் பக்க ஜெராக்ஸ்’ பிரதியை வைத்தி ருக்கும்படி ஒவ்வொரு வீட்டிலும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டை வைத்திருப் பவர்களுக்கு அரிசி தருவார்கள், பருப்பு தருவார்கள், மண்ணெண்ணெய் தருவார்கள் என்று கேள்விப் பட்ட துண்டு. ஆனால், தொலைக்காட்சிப் பெட்டி கூடவா?
அதுவும், ஏற்கனவே, கூடத்தில் நடுநாயகமாக. எல்லா வீடுகளிலும் தொலைக் காட்சிப் பெட்டி தான் ஆரோகணித்திருக்கிறதே. சில வீடுகளில் கூடத்தில் ஒன்றும், அடுப்படியில் அல்லது படுக்கையறையில் ஒன்றுமாய். பிடித்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில் ஏற்பட்ட தீவிர விரோதம் காரணமாய் அக்கா, தங்கையையும், அண்ணனைத் தம்பியும் அரிவாள் மணையில் வெட்டித் தீர்த்துக் கட்டுவது அதிகரித்துக்கொண்டு வருகிறதே யென்பதால் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை. குளியல் அறையி லும், கழிப்பறையிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைச் சுவரில் பதித்து வைக்க முடிந்தவர்கள் பேறு பெற்றவர்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியுமா!
“நம்முடைய இத்தனை பரந்து விரிந்த பகுதி முழுக்க தூய்மையான கழிப்பறையே கிடையாது. காசு கொடுத் தாலும் கிட்டே போக முடியாத அளவு நாற்றம். இதில் பெண்கள் படும் சிரமம் சொல்லித் தீராது.”
“அதற்காக, தொலைக்காட்சிக்குப் பதிலாக வீட்டுக்கொரு கழிப்பறை கட்டித் தரச் சொல்கிறாயா? இதெல்லாம் நடக்கிற காரியமா?”
“ஏன் நடக்காது? இங்கே தரப்படும் நூறு தொலைக்காட்சி களுக்குப் பதிலாக நம் குடியிருப்புப் பகுதிக்குப் பின்பக்கம் அமைந்திருக்கும் குடிசைப் பகுதியில் நல்லதாக நான்கு கழிப்பறைகள் கட்டித் தரலாமே.”
“அவர்களெல்லாம் கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்திருக்கத் தெரியாதவர்கள்.”
“தெரியவில்லையென்றால் கற்றுக் கொடுக்கலாமே!
அடிமட்டத்திலிருப்பவர் களுக்கு அடிப்படை வசதிகளை யும் செய்துதராமல், அது பற்றிய விழிப்புணர்வை யும் அவர்களுக்குத் தராமல் அவர்களை மந்தைகளாக உழலச் செய்வதன் மூலம் தான் நாம் ஆண்டைகளாக, அறவுரை யாளர்களாக விளங்க முடியும்! அது தானே விஷயம்?”
“ஒரு சின்ன விஷயத்திற்கு எதற்கு இத்தனை அலட்டிக் கொள்கிறாய்? உனக்கு வாங்கிக்கொள்ளப் பிடிக்க வில்லையென்றால் உன்னுடைய அட்டைக்குரியதை வாங்கிக்கொண்டு அதை யாருக்காவது ஏழைக்குக் கொடேன். ஆனால், வாங்கிக் கொண்டு விடு.”
“நீ அப்படித்தான் கொடுக்கப் போகிறாயா?”
“அதைக் கேட்க நீ யார்?”
“அப்படியானால், தரப்படுவதை நான் வாங்கிக்கொள்ளத் தான் வேண்டும் என்று சொல்ல நீ யார்?”
“வாங்கிக் கொள்ளாவிட்டால் போயேன். உன் கையெழுத் தைப் போட்டு வேறு யாராவது வாங்கிக் கொண்டு விடு வார்கள். அவ்வளவுதான்.”
சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு எல்லோரும் சாரை சாரையாய் சிற்றெறும்புக் கூட்டமாய் ‘ நியாய விலைக் கடை நோக்கி நகர்ந்து செல்வதைப் பார்க்க எனக்கு உண்மையாகவே நடுக்கமெடுத்தது.
ஒரு கையறுநிலையில் வீட்டினுள் நுழைந்து கூடத்தில் படுத்துக்கொண்டேன். கோபமும், இயலா மையுமாய்க் கண்ணீர் ததும்பி கண்ணோரங்களில் வழிந்தது போலும். சில சிற்றெறும்புகள் என்னைச் சூழ்ந்து நின்று கொண்டு பரிவோடு பார்த்தன.
ஒன்று என்னிடம் நெருங்கி வந்தது. “நீ ஏன் இத்தனை கவலைப்படுகிறாய்? வண்ண வண்ணமான காட்சிகளைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் உனக்குக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வே ஏற்படாது தெரியுமா?”
“இது என்ன கிறுக்குப் பேச்சு? நீ சொல்வதையெல்லாம் நம்ப நான் என்ன முட்டாளா?”
“நான் சொல்வதை நம்பவில்லையென்றால், அதோ அங்கே பார்,” என்று கூறி என்னைப் பார்த்துக் கண்சிமிட் டிச் சிரித்தது அந்தச் சிற்றெறும்பு.
பார்த்தால், அவரவர் வீட்டில் அவரவர் தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரில் மடியில் ஒரு சிறிய தொலைக்காட்சிப் பெட்டியைக் குழந்தை போல் அணைத்த வாறு உட்கார்ந் திருந்தவர்கள். யாருமே நகரவில்லை.
அரைமணி நேரம் ஒரு மணி நேரமல்ல. அன்று முழுவ தும் அப்படித்தான் அமர்ந்திருந்தார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களிலிருந்த உணவுப் பண்டங்களை உட்கொண்டார்கள், அவற்றிலிருந்த சோப்புக் கட்டிக ளைக் கொண்டு ‘ லக்ஸ்’ ’விளம்பர அருவியில் குளித்து முடித்து, போத்தீஸ் விளம்பர உடைகளை உடுத்திக் கொண் டார்கள். அவ்வப்போது தொடர் நாடகங்களில் தாய் மகளுக்கும், மரு மகள் மாமியாருக்கும் கலந்து வைக்கும் நஞ்சு கலந்த காபியை அருந்தி அப்படி யப்படியே மயங்கிச் சரிந்தார்கள்.
“பார், கழிப்பறைக்கு அவசியமேயில்லை!” என்று சுட்டிக் காட்டியது சிற்றெறும்பு.
“இல்லை, இது சாத்தியமில்லை. ஆபத்தானது. அதெப்படி மணிக்கணக்காக ஒருவ ரால் கழிப்பறைக்குச் செல்லாம லிருக்க முடியும்? மயங்கிச் சாய்ந்துவிட்டால் அது அபாயமல்லவா?”
“மனதைக் கட்டுப்படுத்திப் பயிற்சி தரப்படுவது போல் இதற்கும் தொலைக்காட்சி மூலம் தரப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலைமையைக் கணக்கில் கொண்டு, கழிப்பறை கட்டுவதற்கு ஆகும் செலவைக் குறைக்க இந்தப் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. உனக்குத்தான் எதுவும் தெரியவில்லை. பாவம் நீ!”
“திட்டமா? என்ன திட்டம்?”
“அதோ அங்கே பார்! திரையில் தெரியும் எழுத்துக்களைப் படி,” என்று அவசரப் படுத்தியது சிற்றெறும்பு. சற்றே தாமதித்தாலும் எழுத்துகள் ஓடி மறைந்துவிடுமே. அரைக்கண விளம்பரத்திற்குக் கட்டணம் அரை லட்சமா, ஆறு லட்சமா, அறுபது லட்சமா?
தரையதிர, ஆகாயமதிர பெருத்த ஓசை அந்தச் சின்னப் பெட்டியிலிருந்து வெடித் துக் கிளம்பியது. கூடவே, குறையாடையில் ஒரு பெண் பதாகை யொன்றைச் சிரித்தவாறு விரித்து இரவல் குரலில் பாடினாள்:
“யார் அதிக நேரம் தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரி லேயே அமர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் நடிகர் ஆளவந்தாரின் அரண்மனை வீட்டுத் தங்கக் கழிப்பறை யில் ஒரு வேளை மலங்கழிக்கலாம்! நழுவ விடாதீர் இந்த அரிய வாய்ப்பை!”

பார்வை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பார்வை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


வேறு வேறு நவீன உத்திகளைக் கையாண்டு
நூறு யானையின் பசியோடு
பழிபாவத்திற்கு அஞ்சாமல்
ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்
விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட
வழக்கொழிந்த கதையை
முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி
ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை
அவர்களுக்கேயான வரைபடத்தில்
தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,
ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக
விரியக் கேட்டிருந்தவர்கள்,
கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த
குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து
தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து
சரியாக முதுகிலேறி
தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,
அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி
அவ்வப்போது தடுக்கி விழுந்து
அடிபட்டுக்கொண்டும் முன்னேறி
இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்
பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _
‘உங்களால் மட்டும்
பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?
உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா
இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....
கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிப்பிறழ்வுகளுக்கெல்லாம்
எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?
என்று கேட்டால்
ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ,
இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ……

உட்குறிப்புகள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உட்குறிப்புகள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



அஞ்சலிக்கூட்ட இதழை ஆரவாரமாக நடத்துவது
அந்த மாமாற்றிதழின் மனிதநேயக் கோட்பாடு
இதழின் நான்கு மூலைகளிலும் மங்கல மஞ்சளாய்க் காணும் _
படைப்பாளி உயிரோடிருந்தபோது (அப் பத்திரிகை) அவரை அவமதித்த
காயத்தின் ரணக்கசிவுச் சிவப்பு.
இருக்கும்போதெல்லாம் ஏசிக்கொண்டிருந்தவரை இறந்தவுடன் பூசனைக்குரியவராக்கிப் பேசியது ஏனென்று புரியாமல்
நாளெல்லாம் குழம்பிநின்றேன் ரொம்பத்தான்
வாழ்ந்தகாலத்தில் வாழ்த்திப்போற்றிப் பிரசுரித்தோரை
வாகாய் ஓரங்கட்டி
இறந்துவிட்ட படைப்பாளியின் எழுத்துகளைப் பிரசுரிக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டதைப் பார்த்ததில்
பிடிபட்டுவிட்டது போதிமரம்.
உண்மைக்கவியைக் கொண்டாட ஒருநாளும் தவறமாட்டார் அவர்....
மரத்தில் கட்டிவைத்து, மளுக்கென்று எலும்பு முறித்து
ஒரு கண்ணைப் பிடுங்கியெறிந்து, முதுகில் முட்கம்பி நுழைத்து
விதவிதமாய்ச் சித்திரவதை செய்து, சிறுகச் சிறுகச் சாகடித்து
கொண்டாடிக்கொண்டிருக்கிறார் அவர்
உண்மைக்கவிகளையெல்லாம்.
அதிநவீன தமிழ்க்கவிதைக்கு நாலாயிர சொச்சம் பக்கங்களில்
ஒற்றையர்த்தத்தை நிறுவிகொண்டேபோய்
நல்லதொரு மாமுனைவர் பட்டம் பெற்றுவிட்டபின்
தன் மாணாக்கர்களுக்கு அன்பளிப்பாய்த் தந்தார்
தானெழுதிய கண்றாவிக் கவிதைகளடங்கிய தொகுப்பை.
ஐந்து வார்த்தைகள் தமிழில், இரண்டொன்று ஆங்கிலத்தில்;
தேவைப்பட்டால் இந்தி, ஹீப்ரூ, இஸ்பானிய மொழிகள்
இடையிடையே சிலகணங்கள் மௌனம்,
கூரையை வெறிக்கும் பார்வை கையறுநிலையைக் குறிக்க,
பையப்பையச் சுருங்கிவிரியும் புருவம் பேரறிவுசாலியாக்க,
மேலுயரும் மூடிய உள்ளங்கை
மானுடவாழ்வின் ரகசியங்களைக் குறிப்புணர்த்த,
ஊறிக்கொண்டேயிருக்கும் உதட்டோர இகழ்ச்சிச்சிரிப்பு
உன்னதங்களெல்லாம் தானே என பறையறிவித்தபடியிருக்க
இதுபோதும் _
எல்லா உளறல்களும் உத்தமப்பேச்சாகிவிடும்.

Friday, July 11, 2025

’மரம் சொன்னது’ என்ற தலைப்பிலான பிரம்மராஜனின் கவிதையை முன்வைத்து....

’மரம் சொன்னது’ என்ற தலைப்பிலான பிரம்மராஜனின் கவிதையை முன்வைத்து....

- லதா ராமகிருஷ்ணன்

மரம் சொன்னது

- பிரம்மராஜன்


வலியின் துவக்க முகமும்
ஒரு சாதாரணம்தான்
என ஒரு முட்சொல் கிழிக்கிறது.
இல்லாத ஓவியத்தைச் சட்டகத்தினுள்
பொருத்திப் பார்ப்பதுபோல்தான்
அதன் அளவு என்பார்
வலியறியா வறியோர்.
எனினும் வலியின் வயது
தொன்மையின் முன்மை’
பரசுராமனின் உடல் உறக்கத்திற்கு
முன் தன் விழிப்புடல் துடையை
வண்டுத் துளைப்புக்குத் தந்த
கர்ணத் தன்மை.
மரப்பட்டையை மகிழ்ச்சிப்படுத்தவே
முடியாது
பாம்பின் சட்டையை மாற்றுதல் போல்
மாறுதலுக்கு மாற்றுதல் முடியாது
என்றவனுக்கு
காதல் முட்டாள்கள் செதுக்கிச்சென்ற
தேதிகள் பெயர்களுடன் வளர்மரம்
கனத்துச் சொல்கிறது
வெட்டிக் கிழித்தலின் வலியைவிட
வடுவின் வளர்வேகம்
பொருக்குச் சேதம்
பொறுத்தல்
கொலையின் முடிவற்ற நீள்கோடாகும்.

RENDERED IN ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT)

TREE'S VERSION
...........................................
The onset of pain too
is but a common one
So a thorny word tears
They who claim that its
volume is but
like fixing inside the Frame
the painting that is not
are poor being unaware of pain.
Yet the age of pain
is that which is the
Before of
Time immemorial;
Karnan’s disposition in
offering his own wakeful body’s check
before Parasuraman’s bodily sleep
to bee’s and giant worm’s sharp pierce.
For he who said that
never can one make merry
the bark of a tree
Never can change it to Change
as like changing snake’s skin
The tree that grows with
the dates and names carved on it
by love-gullibles
declares weighing heavy that
more than the pain of felling
and tearing apart
bearing with the rapidity of the scar’s growth
flakial damage
is murder’s unending long line.
......................................................................................
_ // மரம் சொன்னது என்ற தலைப்பிலான பிரம்ம ராஜனின் இக் கவிதை ‘மரம் இறுகியது, உறுதியானது, முரடானது என்பதாக நான் கொண்டிருந்த, என் மனதில் படிந்திருந்த பிம்பங்களை அடியோடு மாற்றியது. மரத்தின் நெகிழ்வும் ரணம் பொருக்குத் தட்டிநிற்கும் அதன் வலியும், நிராதரவு நிலையும் பிடிபட்டது. //

_ இவ்வாறு ‘சொல்லும் சொல் பிரம்மராஜனின்’ என்ற தலைப்பில் ஜூன்2016இல் அநாமிகா ஆல்ஃபெபெட்ஸ் மூலம் வெளியான நூலில் நான் குறிப்பிட்டிருப்பேன். இது எனக்குக் கிடைத்த வாசிப்பனுபவம்.
இந்தக் கவிதை மரத்தை மட்டும் பேசுவதில்லை என்பது வெளிப்படை. இன்னும் சொல்லப்போனால், இதில் மரம் மனித மனதின், வலி ஏமாற்றங்கள் ரணங்களையெல்லாம் சுமந்திருக்கும் அதன் தன்மையையும், வெளியே தெரியாத மனிதமன நெகிழ்வுகள், நிலைகுலைவுகளையும் இன்னும் எத்தனை யெத்தனையோ விஷயங்களுக்கு, மனித இயல்புகளுக்குக் குறியீடாகி நிற்கிறது.
எதற்கெடுத்தாலும் அழுபவர்களைக் கண்டால் அதிராத நம் மனம் ஒருபோதும் அழாதவர்களின் கண்ணில் நீர்த்துளியைக் கண்டால் ஒரேயடி யாக அதிர்ந்துபோய்விடும். அப்படித்தான் மரம் பிளக்கப்படுவது, கொல்லப்படும் யானையின் சிறுகண்களில் தெரியும் நிராதரவு எல்லாம் மனிதமன சமன்நிலையைப் பெரிதும் குலைத்து விடுகிறது.
இத்தகைய கவிதைகளை மொழிபெயர்க்கும்போது மரத்தின் உறுதியான மனம் என்பதாய் கவிதையில் இடம்பெற்றிருக்கக் கூடிய வரியை மொழிபெயர்க்கையில் மனம் என்பதை மரத்தின் ‘மார்புப்பகுதி’ என்பதாக மொழிபெயர்க்க வேண்டுமா அல்லது மனிதமனம் என்ற பொருளைத்தரும் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா?
மார்பு, இருதயம் இரண்டுக்கும்கூட நுட்பமான வேறு பாடு உண்டு. மார்பு உடலின் வெளிப்புறப் பகுதியையும், இருதயம் உடலின் உள்ளே இருக்கும் பகுதியையும் குறிப்பதாகச் சொல்லலாம். ஆனால், இவை ‘overlap’ _’ ஒன்று மற்றொன்றாகப் பொருள்படும் அளவில் பயன் படுத்தப்படுவதும் உண்டு.
மனம் என்று பொருள்படும் இதயம் என்ற சொல்லுக்கும் இருதயம் என்ற சொல்லுக்கும் இடைவெளி இன்னும் அதிகம் என்று தோன்றுகிறது. இருதயம் என்பது மனித உடலினுள்ளே இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பைப் பிரதானப் படுத்தும் சொல். ஆனால், இருதய அறுவை சிகிச்சை என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் Heart Surgery என்றுதான் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Heart என்ற சொல் இருதயம் என்ற உறுப்புக்கும், மனம் இதயம் என்ற ‘உறுப்பாலான அதேசமயம் உறுப்புக்கப் பாலான ஒன்றைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழில் இருதயம் என்ற சொல்லின் பொருளும் பயன் பாடும் வேறாகவும், மனம், இதயம் ஆகிய சொற்களின் பொருளும் பயன்பாடும் வேறாகவுமே இருக்கிறது.
மனம் என்பதை Heart, Mind ஆகிய இரு சொற்களால் குறிப்பதுண்டு. சமயங்களில் Heart, வேறாகவும் Mind வேறாகவும் அர்த்தம் தருவதுமுண்டு. Brain என்ற சொல் மனம் கலக்காத மூளை என்ற உறுப்பைக் குறிப்பதாகவே அமையுமென்றாலும் Brain என்பதுதான் மனித உயிருக்கே மூலாதாரம் என்ற அளவில் இந்த வார்த்தை மனதுக்கும் பயன்படுத்தப்படுவதும் உண்டு.
Bosom, breast chest முதலிய வார்த்தைகள் இருதயம், மார்புப்பகுதி என்ற உறுப்புரீதியான பொருளையே அதிகம் தருகின்றன. என்றாலும் ஆருயிர்த்தோழன் என்பதை bosom friend என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். மற்ற இரண்டு வார்த்தைகளும் மனம் என்ற பொருளைத் தருவதாகப் பயன்படுத்தப்படுவது அரிது என்றே தோன்றுகிறது.
பொதுவாக heart, mind ஆகிய இரு சொற்களும் மனித உடலுக்குள் இருக்கும் உறுப்புகளிலான உறுப்புகளுக் கப்பாலானதுமான சிலவற்றைக் குறிக்கப் பயன்படும் வார்த்தைகள் எனலாம்.
மரம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படும் கவிதை முழுக்க முழுக்க மரத்தின் உறைநிலையை, கிளைகளை, கனிகளை காய்களை, உதிரும் இலைகளை அது அடை யும் சிதிலத்தை அது வெட்டப்படுதலையெல்லாம் பேசிக் கொண்டே போனாலும் அந்தக் கவிதையை மொழி பெயர்க்கும்போது மரத்தின் மார்புப் பகுதியைக் குறிக்கும், இருதயம் என்ற உறுப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தவேண்டுமா, அல்லது உறுப்பும் உறுப் பைத்தாண்டிய ஒன்றும் சேர்ந்ததைக் குறிக்கும் மனம் என்ற பொருளைத் தரும் சொல்லைப் பயன்படுத்த வேண்டுமா என்பதில் மொழிபெயர்ப்பாளர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய அவசியமிருக்கிறது.