LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 7, 2022

நான் யார் தெரியுமா!?!? ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நான் யார் தெரியுமா!?!?

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

_ என்று கேட்பதாய்
சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
_ என்று புரியச்செய்வதாய்
மறவாமல் சில முன்னணி நடிக நடிகையர்
இயக்குனர் இசையமைப்பாளர்களுடன்
புதுப்பட பூஜை நிகழ்வில்
பங்கேற்ற செய்திகள் படங்களோடு
வெளியாகச் செய்திருக்கிறார்.
_ என்று அடிக்கோடிட்டுக்காட்டுவதாய்
சர்வதேச (நாலாந்தர) எழுத்தாளருடன்
தோளோடு தோள் சேர்த்து நின்ற, நடந்த
காணொளிக் காட்சிகளை
வெளியிட்டிருக் கிறார்.
_ என்று வீரமுழக்கம் செய்வதாய் தலைமறைவுப்போராளிகள் சிலருடன்
காட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்து
உணவுண்ட காட்சிகளின்
(அதற்கென்றே பிரத்யேகமாக அழைத்துச்
செல்லப்பட்ட சித்திரக் கலைஞரான
தோழரால் கிறுக்கப்பட்ட)
கோட்டோவியங்களை
சுற்றிலும் இறைத்து
நடுவே சிந்தனையார்ந்த முகபாவத்துடன்
தன்னை இருத்திக்கொண்டு எடுத்த
செல்ஃபிகளை
சரசரசரவென்று தொடர்ச்சியாக சில நாட்கள் வெளியிட்டிருக்கிறார்.
_ என்று அழுத்தமாக எடுத்துரைப்பதாய்
மெய்நிகர் மலையொன்றின் உச்சியில்
அமர்ந்தவாறு
சுற்றிலும் பல வயதுகளிலான ஆண்களும்
பெண்களும்
அவர் வாயிலிருந்து விழும் முத்துக்களை
ஆவேசமாகப் பாய்ந்து பாய்ந்து பொறுக்கி யெடுத்துக்கொள்வதை
ஒரு மந்த காசப் புன்னகையுடன் பார்த்தவா
றிருக்கும் புகைப்படங்களை
அவருடைய நான்கைந்து பக்தகோடிகள்
Bit Noticeகளாய் வினியோகித்துக்கொண்
டிருக்கிறார்கள்.
என்றென்றென்றெனக் கேட்பதான
அத்தனை படங்கள், கோட்டோவியங்கள்,
காணொளிகள், குறுஞ் சுவரொட்டிகளைப்
பார்த்தபின்பும் அசராமல் நின்று கொண்டிருக்கும் வாசகரைப் பார்த்து
‘நான் யார் தெரிகிறதா?’
என்று கேட்டவரிடம் _
_ உங்கள் எழுத்தின் மூலமே தெரிகிறது –
இத்தனை ‘Stage Props’ எதற்கு
என்று எதிர்க்கேள்வி கேட்ட வாசகர்
தன் கையிலிருந்த முகமறியாக் கவியின்
தொகுப்புக்குள்
கூடுவிட்டுக்கூடு பாய்ந்தார்!

மொழிபெயர்ப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிபெயர்ப்புச் சுதந்திரமும் அத்துமீறலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியரின் அடிமையில்லைதான்
அதற்காக, மூல ஆசிரியராகிவிட
முடியுமா என்ன?
அன்றி மூல ஆசிரியரின் இணையாசிரியராகி
விடலாகுமா?
கேள்வி முடியும் முன்பே
முடியும் ஆகும் முடியும் ஆகுமென்று
முடிந்த முடிவாக மொழிபெயர்ப்பாளர்
முன்மொழிய
அன்பு காரணமாகவோ பண்பு காரணமாகவோ
மூல ஆசிரியர் அதை வழிமொழிய
மகிழ்ந்துபோன மொழிபெயர்ப்பாளர்
உருவைக் கருவாக்கி
எருவை வெறுவாக்கி
பருவை மருவாக்கி
சிறுவை பெருவாக்கியதோடு நில்லாமல்
ஒருவை ஓரங்கட்டி
திருவைத் திருட்டுப்போகச் செய்து
இரவைப் பகலாக்கி
பறவையை பிராணியாக்கி
பிரண்டையை யாளியாக்கிக்கொண்டே போக
மொழிபெயர்ப்பொரு மீள்கவிதையாக்கம்
என்று முழங்கி
மூல கவிதையின் நுட்பங்களெல்லாம்
மொழிபெயர்ப்பில் வெட்டி
யகற்றப்பட்டுவிட்டதில்
மூல கவிதையின் ஆணிவேர்
ஆட்டங்காண
முளைவிதை முடங்கிக்கொண்டது
அடியாழத்தில்!



ஃபேஸ்புக் டைம்லைன் என்னும் நிலைக்கண்ணாடியும் நாடகமேடையும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஃபேஸ்புக் டைம்லைன் 

என்னும்

நிலைக்கண்ணாடியும் நாடகமேடையும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



மிகை ஒப்பனை வரிகளின் உதவியுடன்
தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆரம்பித்தவர்
பெண்ணெனில் ஒரு பட்டாம்பூச்சியைத்
தன் காதோரக் கூந்தலில் செருகிக்கொள்கிறார்
ஆணெனில் அதைத் தன் சட்டைப்பையில் சொருகிக்கொள்கிறார்.
பட்டாம்பூச்சி படபடவென சிறகுகளை
பயத்தில் அடித்துக்கொள்வதைப் பார்த்து
ரத்தக்கண்ணீர் வடிப்பவர்
பெண்ணெனில் ஒரு சோகப்பாட்டு பாடுகிறார்.
ஆணெனில் கண்ணீரை அடக்கிக்கொள்ள உதடுகளும் தாடையும் இறுக
தலைகுனிந்து அமர்ந்தபடியிருக்கிறார்.
பெண்ணோ ஆணோ துயரத்திலாழ்ந்திருக்கும்போது
தம் முகம் கோணலாகக்காணப்படவில்லையே என்ற கவலை
இருவருக்குமே இருப்பது இயல்புதானே...
அந்த ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு கவிஞரை
மறவாமல் இரண்டுநாட்களுக்கு ஒருமுறை நினைவுகூர்கிறார்கள்.
பெண் என்றால் ஆணையும் ஆண் என்றால் பெண்ணையும்
அதிகம் நினைவுகூர்வதும் இயல்புதானே
நினைவுகூரப்படுபவர் அகில உலகம் அறிந்தவராக இருப்பதும்
ஆறே ஆறு பேர் அறிந்தவராக இருப்பதும்
அந்தந்த நேரத்துத் தேவையைப் பொறுத்தது
நினைவுகூரப்படுபவர் நினைவுகூரப்படுவதாலேயே அதிகம்
நினைவுகூரப்படுபவராகி அதற்கான நன்றியுணர்வில்
நிர்க்கதியாகி நிற்கும் தோற்றத்தை நிலைக்கண்ணாடி பிரதிபலிக்க
தாம் ஏற்கும் பாத்திரம் அதுவேயாகிய 
நடை யுடை பாவனையுடன்
மேடையேறிச் செல்கிறார். மணியடிக்கிறது. மேலேறிச் செல்கிறது திரை.
காலவரையற்ற நாடகம் நடந்துகொண்டிருக்கிறது.

நிகழ்த்துகலை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிகழ்த்துகலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இன்னொருவர் தலைமீது காகம்
எச்சமிட்டுச் சென்றால்
அருகிருப்பவருக்கு அப்படியொரு சிரிப்பு.
தன் தலையில் விழவில்லையே என்ற இறுமாப்பு.
மனிதத் தலைகள் காகங்களின் இலவசக் கழிப்பறைகள்
என்று கோணவாய்ச் சிரிப்போடு
தத்துப்பித்தென்று சில முத்திரை வாசகங்களை
உரிய ஏற்ற இறக்கங்களைக் குரலில் வரவழைத்து
உரத்துச் சொல்வது அவர்தம் தனிச்சிறப்பு.
விட்டால்
காக்காய்க்கு நல்லவரை அடையாளங்காணத் தெரியும்
என்று கதைக்கவும் தயங்கமாட்டார்கள்.
புறம்பேசி முடித்த பிறகு மறவாமல் சொல்லிக்கொள் வார்கள்
‘நமக்கெதற்கு பொல்லாப்பு’
சரி தப்பு என்பதெல்லாம்
அவரவருக்குக் காப்பாகவும் அடுத்தவருக்கு ஆப்பாகவும்
உருமாறும் திறமெழுத வேறொரு (Half-Boiled) KAFKAவால்தான் முடியும்
குப்புற விழுந்தாலும் ஒட்ட வழியில்லாதபடி மீசையை
மழித்துக்கொண்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்
கழுகு மூக்கில் நாம் சுண்டெலியாகும்வரை
பழகாது வலி;
தத்துவம், ஆன்மிகம், அபத்த நாடகம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம், சந்தர்ப்ப சூழல், குறிப்புரை பொழிப்புரை பரப்புரையெனத் தேவையான பழமொழி புதுமொழிகளோடு ஆங்காங்கே பீடமமைத்துப்
பிப்பிப்பீ டும்டும்டும் கொக்கரக்கோ பெப்பரப்பே யென
கலந்துகட்டிக் கூட்டாஞ்சோறிடுவதாய் ஆகப் பெருமுழக்கமிடுவது
அடடாவோ பழக எளிதான பழியறு வாழ்நெறி
அடி தெறி
என வாழ்ந்துகொண்டிருப்பார் சிலபலர்
இங்கே ஒப்பாரும் மிக்காரும் இலராக….

உடலின் மனம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உடலின் மனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


பாலியல் தொழிலாளிதான் அவள்
அண்ணே அண்ணே என்று பகலில் விளிப்பவர்களோடு
அன்றன்றைய இரவுகளில் நெடுஞ்சாலை மேம்பாலத்தடி
அதிகாலை யிருளில்
இடுக்குமுடுக்கில் படுத்தெழவேண்டிய பிழைப்பு
அவசர அவசரமாய் ‘சோலி’ முடிப்பவர்கள்
அவளளவில் அருளாளர்கள்.
அன்னாரொருவரிடமிருந்து கிடைத்த பணத்தில்
அடுத்த வீட்டில் இரண்டு மூன்று மணிநேரங்கள்
பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுவந்திருக்கும்
நான்கு வயதுமகனுக்கும் ஆறு வயது மகளுக்கும்
தெருவோரக்கடையிலிருந்து டீ பன்
வாங்கிக்கொண்டு விரைந்தாள்
வழியில் குறுக்கிட்ட வாடிக்கையாளரொருவன்
வரச்சொல்லி யழைக்க
’விழித்துக்கொண்டு காத்திருப்பார்கள் குழந்தைகள்’
எனச் சொல்லி கையிலிருந்ததைக் காட்ட
”அட, வாடீ” என்று இடுப்பை வளைத்து இழுத்தவன்
கையை
வெடுக்கென கடித்து அகன்றவளின்
ஒவ்வொரு பல்லும்
பிளேடாய்
பிச்சுவாக்கத்தியாய்
அருவாமணையாய்
அரிவாளாய்….

INSIGHT - JUNE 2022 (a bilingual blogspot for contemporary Tamil Poetry )

 




Thursday, June 9, 2022

PEEPING TOMகளும் பூமிஜா(சீதா)ப் பிராட்டியும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 PEEPING TOMகளும்

பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில்
ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில்
ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில்
அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில்
இலக்கியப் பெருமான்களுக்கிடையே
இணையவழிகளில் _
இன்னும்
ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும்
புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின்
பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும்
‘சீதை இராவணனோடு உறவுகொண்டாளா?
கொண்டாள்!
கொண்டாளே !!
கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது
[அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது
பாவம் நிறைய பேருக்குத் தெரியாது]
தன்மானத்திற்கு இழுக்கு என்றானபோது
காதலித்த ராமனையே உதறிவிட்டுச்சென்றவள்
கடத்தியவனையா வரிப்பாள்?
விஜய் Zee Sun இன்னும் நான் பார்க்காத சேனல்களின்
மெகாத்தொடர்களில்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
மாமியார் நாத்தனார், முதலாளி தொழிலாளி
மூத்த அண்ணன் இளைய அண்ணன்
வில்லியும் நல்லவளும்
ஐந்து வயதுச் சிறுமியும்
அடுத்த நாள் பிறக்கப்போகும் குறைப்பிரசவக் குழந்தையும்
மாறி மாறிச் செய்யும்
வகைவகையான சத்தியங்கள்
சடங்குகள் குறிபார்த்தல், சகுனம் பார்த்தல்
இத்தியாதிகளுக்கிடையிலிருந்து ஒரு பூக்குழியைத்
தேர்ந்தெடுத்து
கோயில் வாசலில் பரத்தி
அதில் நடந்து தன் பத்தினித்தனத்தை
நிரூபிக்கச் சொல்லும்
மெத்தப் படித்தவர்கள் மிட்டா மிராசுதாரர்கள்
மெகாத்தொடர் மாண்பாளர்களை
மெல்ல ஒரு பார்வை பார்த்து
மேலே நடக்கிறாள் பூமிஜா.
மனம்நிறை மணாளனுக்கு நிரூபிக்கவோ
மக்களுக்குப் புரியவைக்கவோ
-ஒரு முறை நெருப்பில் இறங்கி
மீண்டாயிற்று…..
முறைவைத்து மனம்பிளந்து பார்த்தவர்களாய்
மறுபடி மறுபடி
கடத்தியவனை மருவியவளாய்க்
காட்ட முனையும் குணக்கேடர்களுக்காய்
அவள் வனத்தில் தீ மூட்டினால்
அது தன்னை மட்டுமல்லாமல்
அன்னை நெருப்பையே அவமதிப்பதாகும்.
அவள் அறிவாள்தானே?
அடுத்த விளம்பரதாரர் யார் மாட்டுவார் என்று
ஆலோசித்தபடி
அய்யனார் சிலையின் காலடியில்
வில்லனும் நல்லவனும் சேர்ந்து
மெகாத்தொடர் கதாபாத்திரங்களில் ஒருவரை
(குத்துமதிப்பாக அந்தத் தங்கையாக இருக்கலாம்
அல்லது தாத்தாவாக இருக்கலாம்)
கொலைசெய்வது குறித்து காரசாரமாக
கீழ்ஸ்தாயியில் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருக்கும்
அரைத்தமாவுக் காட்சிகளைக்
கச்சிதமாய் வழித்தெடுத்துமுடித்துவிட்டு
வெளியேறும்போது படக்குழுவினர்
கன்னத்தில் போட்டுக்கொண்டபடி
அல்லது கிண்டலாய்ச் சிரித்தபடி
'பொறுப்புத்துறப்பு' என்ற நொறுக்குத்தீனியை
சுவைக்கத்தொடங்கியதைக் கண்டு
துன்பம் வரும் வேளையிலே சிரிக்கப் பழகியவளாய்
புன்னகைக்கிறாள் பூமிஜா.


திரும்பத் திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 திரும்பத் திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி - 1


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.
அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த
பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச்
செய்கிறார்கள்.
துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள்
என்று
அங்கங்கே அசரீரி ஒலிக்கிறது.
போயும் போயும் கிருஷ்ணனையா காப்பாற்றச்
சொல்லிக் கேட்கவேண்டும்
என்று முகத்தைச் சுளுக்கிக்கொள்கிறார்கள் சிலர்.
ஆயர்குலப் பெண்களின் ஆடைகளை
ஆற்றங்கரையிலிருந்து
கவர்ந்துசென்றவனல்லவா அவன்
என்று குறிபார்த்து அம்பெய்துவதாய்
திரௌபதியின் காதுகளில் விழும்படி
உரக்கப்பகர்ந்து
பகபகவென்று பரிகாசமாய் சிரிக்கிறார்கள் சிலர்…
பாவம், ஊடலுக்கும் Eve Torturing க்கும்வேறுபாடு
அறியாதவர்கள்.
இரு மனமொப்பிய கூடலுக்கும்
கேடுகெட்ட வன்புணர்வுக்கும்
இடையேயான வித்தியாசத்தை
எண்ணிப்பார்க்கத் தலைப்படாதவர்கள்.
இன்னும் சிலர் ’அரசகுலப்பெண் என்பதால்
ஆளாளுக்கு அங்கலாய்க்கிறார்கள்
இதுவே அடிமைப்பெண் என்றால்?’ என்று
நியாயம் பேசுகிறார்கள்.
இப்பொழுது நான் அரசியா அடிமையா’ என்று
தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறாள்
திரௌபதி.
அலையெனப் புரளும் கார்கூந்தலும்
எரியும் குரல்வளையுமாய்
தலை சுற்றச் சுற்ற
உற்ற மித்ரன் பெயரை உச்சாடனம் செய்துகொண்டேயிருக்கிறாள்.
கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா
அபயம் கிருஷ்ணா……..
திரௌபதி இடையறாது கிருஷ்ணனை கூப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்
அது அவள் மனதின் நம்பிக்கை
அதற்கு முன்னான அவளுடைய நம்பிக்கைகளில் நிறைய பொய்த்துப்போய்விட்டன.
ஆனாலும் நம்பிக்கை பொய்க்காது
என்ற நம்பிக்கையே
வாழ்தலுக்கான நம்பிக்கை யென
நம்பிக்கொண்டிருப்பவள் அவள்.
பொய்க்கும் நம்பிக்கைகள்போல்
பொய்க்காத நம்பிக்கைகளும் உண்டுதானே
மார்பை மறைக்கும் சீலை இழுக்கும் இழுப்பில் விலகலாகாது என்று
இருகைகளையும் குறுக்கே இறுக்கித்
தடுத்திருப்பவள்
கை சோர மெய் சோர
சோரம் போகலாகாதென்ற தீராப்
பரிதவிப்பில் கிருஷ்ணனை யழைத்துக்கொண்டிருக்கிறாள்.
எங்கிருந்தேனும் ஒரு புல்லாங்குழல் பறந்துவந்து
பாதகர்களைத்
தன் துளைகளுக்குள் உறிஞ்சிவிடலாகாதா
எங்கிருந்தேனும் ஒரு மயிற்பீலி மிதந்துவந்து
கயவர்களின் கண்களில் சொருகிவிடலாகாதா…….
'ஐந்து கணவர்கள் பார்த்ததுதானே _
அவையோர் பார்ப்பதில் அப்படியென்ன வெட்கம்'
என்று கெக்கெலித்துக் கேட்கும் குரல்
நிச்சயம் ஒரு பெண்ணுடையதாக இருக்காது
என்பதொரு நம்பிக்கை.
நம்பிக்கையே வாழ்க்கை.
தாயுமானவன் தந்தையுமானவன்
வாயுரூபத்திலேனும் வந்தென்
மானங்காக்க மாட்டானா
என்றெண்ணியெண்ணி யோய்ந்துபோகும்
இதயத்தின் நம்பிக்கை
யிற்றுவிழும்போதில்
இழுக்க இழுக்க வளர்ந்துகொண்டே போகும்
சேலை
யிங்கே என் உன் எல்லோரது நம்பிக்கையாக.