கண்ணில் தெரிவது வானம் மட்டுமல்ல
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஆரம்பத்தில் சிறுமியின் பிரார்த்தனை
யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது.
பள்ளிக்குச் செல்லும் வழியில் தெருவோரப் பிள்ளையார் கோயிலின் முன்
கைகூப்பி கண்மூடுவாள் கணநேரம்
வழியில் தேவாலயத்தைக் கடக்கும்போது
சின்ன விரல்களால் சிலுவைக்குறியிட்டுக்கொள்வாள்
இறைமை இன்னமும் முறையற்ற வழிகளில்
அறிமுகமாகியிராத பருவத்தில்
அந்தச் சிறுமியின் பிரார்த்தனையெல்லாம்
யொரேயொரு மனன உச்சாடனமாய்த்தான் இருந்தது:
வட்ட சதுர வடிவ நாணயங்களெல்லாம் நட்சத்திர வடிவம் பெறவேண்டும்.
முழுநம்பிக்கையோடு உள்ளங்கையை முகர்ந்து பார்த்தால் ஆப்பிள் மணக்கும் தானே!
அவளுக்கும் அப்படி ஆப்பிள் மணத்ததுண்டு.
ஆனால் சில்லறைநாணயங்கள் ஏனோ நட்சத்திரவடிவமாகவேயில்லை.
சிறுமிக்கு வருத்தமாயிருந்தது
தெருவோரம் எலும்பெல்லாம் தெரிய சுருண்டுகிடக்கும்
முதியவரின் கந்தல் விரிப்பில் ஒன்றிரண்டு நாணயங்கள் மட்டுமே
இருந்ததைக் கண்டபோது
அவள் துக்கம் இன்னும் அதிகமாகியது.
நாணயங்கள் நட்சத்திரங்களாவதைவிட
அந்தத் தாத்தாவால் வாங்கவியலாத ’ரொட்டி’ ’பன்’ இட்லியானால் எத்தனை நன்றாயிருக்கும்
என்று அனிச்சையாக அவள் மனதில் தோன்றிய நினைப்பில்
தன் பிரார்த்தனையில் சிறிது மாற்றம் செய்துகொண்டாள் சிறுமி.
//2019, AUGUST 7 மீள்பதிவு//

No comments:
Post a Comment