LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 31, 2021

கவிதையின் சாவி - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையின் சாவி

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
முக்காலத்தையும் ஒரு முடியாச்சமன்பாட்டுக்கணக்கிலான
விகிதாச்சாரத்தில் குழைத்தெடுத்து
காலரைக்கால் கணங்களையும் குமிழுணர்வுகளையும்
கற்களாகத் தலைக்குள் அடுக்கித்
தடுக்கிவிழுந்தெழுந்து தானே சுமந்து எடுத்துவந்து
பின்னப்பட்ட மனதின் துண்டுதுணுக்குகளையும்
மனதின் மிக நைந்து அறுந்து தொங்கும் நூற்பிரிகளையும்
சுவராக்கிக் தரையாக்கிக் கூரையாக்கிக் கட்டும்
கவிதைவீட்டுக்குக்
கதவிருப்பதே அபூர்வமாக,
கருத்தாய் சாவி கேட்கிறாய்
அருவ மேடுபள்ளங்கள் அறைகளாக
மூடியிருக்கும் உன் என் உள்ளங்கைகளில்
பலநூறு திறவுகோல்கள்
உருக்கொண்டவாறிருக்க
முறிந்த சிறகுவிரித்துப் பறந்து உள்ளே புகத்
தத்தளித்துக்கொண்டிருக்கும் கவியின்
வீட்டுக்குள் குவித்துவைத்திருப்பதெல்லாம்
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கனவுகளும்
கரையான் அரித்த நினைவுகளுமேயன்றி
கள்ளப்பணமல்லவே.
உள்ளபடியே
உள்ளம் விரும்பி உள்நுழையும் எவருமே
அழையா விருந்தாளியாகமாட்டார் என்பதைத்தான்
இதுவரை எழுதப்பட்ட கவிதைகளுக்கெல்லாம்
சுயமாய் நியமித்துக்கொண்ட சம்பளமில்லா முகவராய்
உறுதிகூறமுடியுமேயல்லாமல்
திறவுகோலை _
சரியாகச் சொல்வதென்றால் சிறுகாற்றிலும்
பெரும்புயலிலும்
இரண்டறக் கலந்திருக்கும் திறவுகோல்களைக்
கேட்பவருக்கு
என்ன தரமுடியும் என்னால்…..

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பிரபஞ்சமே ஒரு கடற்கரையாக
பஞ்சுமணலில் தாவித்தாவி ஓடித்
தன் குட்டிக்கரங்களால்
கைகொள்ளாமல் பொறுக்கிக்கொண்டிருக்கிறாள் சிறுமி
கிளிஞ்சல்களாய் மினுங்கிக்கிடக்கும்
நிலவுகளை
சூரியன்களை
நட்சத்திரங்களை
புதுப்புதுக் கோள்களை....
48 மணிநேரங்களை ஒரு நாளாகக் காட்டும் கடிகாரத்தை
அவள் படுத்திருந்த பாயின் அருகில்
வைத்துவிட்டுச் சென்ற தேவதை
பகலை இரவாக்கவும் இரவைப் பகலாக்கவும்
அவளுக்கு ஒரு மந்திரம் எழுதப்பட்ட தாளையும்
மாயக்கோலையும்
உயரத்திலிருந்து போடவும் செய்தது.
அவள்மீது எக்குத்தப்பாகப் பட்டுவிடாமல்.
அவ்வப்போது அந்தச் சிறுமி ஆகாயத்தில்
தலைகீழாக நடந்துகொண்டிருப்பது
இங்கிருந்து பார்க்க தலைக்கு நேர்மேலாகவும்
தொலைதூர அடிவானத்திலும் தென்படுவதாக
பூமிக்கோளத்திலிருப்பவர்கள் பப்பாதி பயமும் பரிகாசமுமாய்
பேசிக்கொள்கிறார்கள்.
அங்கிருந்து கீழே பார்க்க
அந்தச் சிறுமிக்கு இவர்கள் எப்படித் தெரிகிறார்கள்
என்று கேட்டபோது
சிறுமி தந்த பதில்
அவள் கலகலவென களிபொங்கச் சிரித்ததில்
காதுகளைக் கடந்து குதித்தோடிவிட்டது!

புதுப்புனல் பதிப்பக புது வெளியீடுகள்

 புதுப்புனல் பதிப்பகத்திலிருந்து:

சில மகத்தான ஆளுமைகளை சிறுவர் – சிறுமியருக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாய் பாரதியார், காந்தி, அப்துல் கலாம், அரவிந்தர் அன்னை தெரசா, கிரகாம் பெல், ஆகியோரைப் பற்றி ஆறு குறுநூல்கள் முதல்கட்ட மாய் வெளியிடப்பட்டுள்ளன.

எழுதியவர் _ எஸ்.ஆர்.தேவிகா.

விலை - ரூ 60 – ரூ80.

நூல்களை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:: 9884427997 / 9962376282






அண்மையும் சேய்மையும் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அண்மையும் சேய்மையும்


’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இரண்டு கவிதைகளிலும் இறக்கும் தறுவாயிலிருப்பவர்கள்
திக்கித்திணறிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்….
அவர்தம் விழிகளிலிருந்து பெருகியோடும் கண்ணீர்
என்னை மூழ்கடித்துவிடுமோ என்ற பேரச்சத்தில்
அங்கில்லாத மரத்தில் நானறியாமலே ஏறி ஒண்டிக்கொள்கிறேன்.
கருத்தியலாய் மரணத்தை விவரிப்பதற்கும்
மனதளவில் இறப்பதற்கும் இடையே
தொலைதூரம் உண்டுதான்…..
சிறிது கவனமாய்ப் படிக்க
பிரித்தறிய முடியும்
என்றாலும்
தெளிவற்றுக் கலங்கியிருக்கும் தருணமொன்றில்
வரிகளில் இல்லாத வார்த்தைகளும்
வரிவரியாய்த் தெரிந்திருக்க
விலகிய கருத்து எது விலகாத கருத்து எது
என்று எதைக்கொண்டு அளப்பது?
ஊரும் பேருமறியா குற்றவாளிகளாகவும் நிரபராதிகளாகவும்
நாமெல்லோரும்……
யாரின் தீர்ப்புக்கும் காத்திராத காலம்
புனைந்துகொண்டேபோகிறது குமிழ்களை
கற்களை
கனவுகளை
கண்ணீர்த்துளிகளை
கவிதைகளை……….

குடிபெயர்தல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குடிபெயர்தல்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

வீடு ஆகுபெயரெனில் யாருக்கு?

எனக்கா உனக்கா அவருக்கா இவருக்கா

கற்களாலானவை வீடுகள் என்றே கணக்கில் கொண்டால்

உயிரற்றவைகளிடம் அன்புவைக்கும் அவஸ்தை மிச்சம்

உயிரின் உயிர் எங்கு நிலைகொண்டிருக்கிறது

மனதிலா?

ஒரு வீட்டிலும் என் மனதை விட்டுவைத்து வந்ததில்லை.

என் வீடு நான் தான்

என்றால் நானும் தானும் ஒன்றேயா ஒன்று போலா வெவ்வேறா

பாராளப்பிறந்தவர்க்கெல்லாம் இருப்பது

ஒரேயொரு பார் தானா

இன்றெனக்குக் கேட்பது

நேற்றுவரை இல்லாத இருமலா

இருந்தும் எனக்குக் கேட்காததா?

வரளும் நெஞ்சங்களெல்லாம் இருமிக்கொண்டிருக்கின்றனவா?

சரியாகியிருக்கும் சில

சவப்பெட்டிகளுக்குள்ளும்

எரிந்த சாம்பலிலும்

திருவாயற்றமொழியாகியிருக்கும் சில

எல்லோருக்கும் சமயங்களில் நன்றி சொல்லத் தோன்றுவது போலவே

இந்த வீட்டுக்கும் சொல்லத் தோன்றுகிறது

கண்ணீரேதும் திரளாதபோதும்.

கொரோனா காலகட்டத்தை இதுவரை நான்

பாதுகாப்பாகக் கடந்ததற்கு

இந்த வீடும் ஏதோ ஒருவகையில் உதவியிருக்கிறது.

ஏதொரு வீதியை தெருவை சந்துபொந்தைக் கடக்கும்போதும்

பாதிப்பேதும் அடைந்ததில்லை

எதிலிருந்தும் விலகியே நிற்கும் மனம்

ஒரு காலத்தில் பிரம்மப்ப்ரயத்தனமாகக்

கற்றது கசடற

இன்று இரண்டாம்தோலாகிவிட்டதொரு

வரம்போலும் சாபம்போலும்.

புதிதாய் குடிபுகும் வீட்டில்

காத்துக்கொண்டிருக்கின்றன கேள்விகள்.

வழக்கம்போல் குரல்வளையிலிருந்து தெறித்துவிழும் சில;

கண்களில் மின்னித் தெரியும் சில.

பெரும்பாலானவர்களிடமோ ஒருசிலரிடமோ

பாஸ் மார்க் வாங்கக்கூட நிறைய பாவனைகளைக் கைக்கொள்ளவேண்டியிருக்கும்.

ICU வார்டில் கணவனின் இருதயப்பகுதியெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் நுண்குழாய்கள் படர்ந்திருக்க

கீழே காத்திருப்பு அறையில் தூக்கம் தொலைத்து அமர்ந்திருப்பவளின்

சொந்த வீடு இந்நேரம் அவள் சொந்தவீடுதானா?

நாளை நல்லதாக விடியட்டும் எல்லோருக்கும் என்றொரு பிரார்த்தனையில் மனம் தன்னிச்சையாகக் கைகூப்பிக் கண்மூடி ஒன்றுகிறது.

நகுலனிடம் சொல்லவேண்டும்போலிருக்கிறது _

திரும்பிப்பார்க்கையில் இடம் காட்சியளிக்கிறது

காலமாக.

Sunday, May 30, 2021

பிரார்த்தனை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிரார்த்தனை

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

நடுநிசியில் நட்டநடுவீதியில்

தன்னந்தனியாய் நின்றுகொண்டிருக்கும் சின்னஞ்சிறுமி உணரும்

அநாதரவில் அதிபயத்தில்

இருளைத் துளைத்துக்கொண்டு வரும்

மின்மினியின் துளி ஒளி

கருமையைப் பன்மடங்கு அதிகரிப்பதாய்……

முதுகுப்பக்கம் ஏதோ மூச்சுக்காற்று படர

திரும்பிப்பார்த்தால்

அத்தனை உயரமாய் குத்திக்கிழிக்கவரும்

வாட்களனைய நீண்ட தந்தங்களோடு

காட்டுயானையொன்று நிற்கக் கண்டு

வீறிடாமல் என்ன செய்வாள்.

சித்திரக்கதைப் புத்தகத்தில் வரும் யானையே

சிரித்துவிளையாடத்தக்கது.

வழிதவறி வந்துவிட்டாளா இந்த வனாந்திரப் பிரதேசத்துக்கு?

தொலைந்துவிட்டாளா, தொலைத்துவிட்டார்களா?

தொலைதலும் தொலைத்தலுமே வாழ்வெனும்

பேருண்மையை எட்ட

இன்னும் எத்தனை தொலைவு அழுதுகொண்டே கல்தடுக்கி முள்குத்தித் தட்டுத்தடுமாறிசெல்லவேண்டுமோ

இந்தக் குட்டிப்பெண்....

கரிய பெரிய இருளில் சிறுமியின் விசும்பல்

பசும்புல் மீது பதிந்த காலடியோசையாய்

அவளைச் சுற்றிலும் படர்ந்துள்ள

சன்ன வெளிச்சமொரு ஒளிவட்டமாக,

ஆகட்டும் சிறுமி

இறக்கைகள் தரித்த தேவதையாக…….