நதிமூலம்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மிக மிக ஆழமானது
அதன் மிகவாரம்ப மலையுச்சி
மேகங்களுக்கு அப்பாலானது
வயதென்ப பல்லாயிர வருடமெனல் தப்பாகாது.
நதிக்கரைக் கூழாங்கற்களின்
நட்சத்திர விகசிப்பில்
அவற்றின் மேற்படியுங் கைகளிலெல்லாம்
முத்துக்கள் சேகரமாகும்
ஈரமணலூறும் சின்னச்சின்ன நண்டுகள்
தோராயமாய் ஆயிரங் காலுடைத்து
நதிநீரில் நிதமும் நீந்திக் குளித்தவர்கள்
முங்கிக் குளித்தவர்கள்
கரைமீதமர்ந்து நீரின் சலசலப்பை பளபளப்பை
கண்ணாரக் கண்டவர்கள்
இன்பண்ணிசைத்தவர்கள்
இத்தனையத்தனையில்லை
எத்தனையெத்தனையோ என்ப.
அசைந்து செல்லும் தோணிகள் படகுகள்
கப்பலுக்கு அப்பன் என்று எப்பொழுதும்
சொல்லாமலிருந்ததில்லை தாத்தா
வேத்தாள் என்றெல்லாம் நதிக்கு உண்டா என்ன?
யார் கால்வைத்தாலும் தண்ணென்றிருக்கும்
கைகுவித்து அள்ளிப் பருகினாலும் தாகம் தணியும்.
அது நதியல்ல சாக்கடை என்று
நாக்கூசாமல் பொய்யுரைப்பாருக்கு
நீருள்ளிருந்து மேலெழும்பும் சிறுமீன்கள் பதிலளிக்க
தன்போக்கில் தொடர்ந்தேகுமாறு
ஊருக்கு உயிரூட்டியவாறு

No comments:
Post a Comment