LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, November 8, 2022

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கர்ணனும், ’கமர்கட்’ தானமும்

கவிதையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கர்ணனைத் தங்கள் தோழனாகத்
தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர்
வலது கை கொடுப்பதை
இடது கை யறியாமல்
தர விரும்புவதேயில்லை.
’கமர்கட்’ தானம் கொடுத்தாலும்
அதைக் கணக்கற்ற காமராக்களின்
ஒளிவெள்ளத்தில் வழங்குகிறார்கள்.
இல்லை, இருபத்திநாலாயிரம் ரூபாய்
கொடுத்து
வாங்கியிருக்கும் ஸ்மார்ட் ஃபோனில்
துல்லியமாய் செல்ஃபியெடுத்துப்
பதிவேற்றிவிடுகிறார்கள்.
குட்டு வெளிப்பட்டதும்
துண்டைக் காணோம்
துணியைக் காணோம் என்று
கொஞ்சமே கொஞ்ச காலம்
அஞ்ஞாதவாசத்திலிருந்தவர்கள்
வாய்த்த சந்தர்ப்பத்தில் வெளிப்போந்து
கவி பாடி
விட்ட இடத்திலிருந்து
தங்கள் தர்பாரைத் தொடங்குகிறார்கள்.
காணிநிலமென்று சில ஏக்கர்
நிலங்களைக்
கைவசம் வைத்திருக்கும்
நவீன ஏழைகள் சிலர்
ஒண்டுக்குடித்தனத்திலிருப்பவர்களைக்
கொடுங்கோலரசர்களாகக் காட்டி
செருப்பாலடிக்கிறார்கள்
திரும்பத்திரும்ப.
பேசும் பாம்புகளாக மெகாத்தொட
ரோட்டிக்கொண்டிருக்கும்
விஜய் தொலைக் காட்சி
‘நாங்கள் மூடநம்பிக்கைகளை ஆதரிக்க
வில்லை, மூடப்பழக்கவழக்கங்களை
ஊக்குவிக்கவில்லை' என்றெல்லாம்
பலவாறாய்
நீண்டு வளைந்துசெல்லும்
வாக்கியப் பாம்புகளை
திரையில் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு வேகவேகமாய்
ஊர்ந்துசெல்ல வைக்கிறது.
எல்லோரும் உண்மைதான் பேசுவார்கள்,
உண்மையாகத்தான் பேசுவார்கள்
என்று இன்னமும் எண்ணியவாறிருக்கும்
இத்தனை பெரிய மூடநம்பிக்கையிலிருந்து
மீளும் வழியறியாமல்
விக்கித்து நிற்கிறது என் பகுத்தறிவு.

நல்லுள்ளமும் நானும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நல்லுள்ளமும் நானும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மந்திரமாகும் சொல் மனதுள் செல்லச்செல்ல
கனத்துப் படிந்திருக்கும் அழுக்குப் படலமழிந்து
சுந்தரமாகும் உள்.
சுதந்திரம் கள்ளமில்லாப்
பேருவகை கொள்வதாம்.
தாறுமாறாய் இறுகியுள பாசிபடர் பாறைகள்
ஊறிய நீரில் நெகிழ்வதொரு
வந்தனையாய்
அந்தரத்தொலித்த அருள்வாக்காயவ்
வொரு சொல்
’எந்தரோ மகானுபாவுலு’வுக்கு எனைச்
சொந்தக்காரியாக்க,
உள்ளுறை யாங்கார
நிந்தனைகள் நீங்க,
இத்தருணம் மின்னும் இன்னுமின்னும்
பத்தரைமாற்றுத் துலக்கம் நாடும்
நல்லுள்ளம் நானாக
காடாறு மாதம் நாடாறு மாதம்
காடு நாடாகும் நாடு காடாகும்
ஆறாக் காட்சிமயக்கம் கவினுறு வாழ்வாக
*கவி பிரம்மராஜனின்
’வெல்லும் வெல்லுமென நிற்கிறேன்
என் சொல்லும் சொல்’
புவிமிசை இன்று மென்றும்
தீராக் கவிதையாக….

.....................................................................................................
*கவிஞர் பிரம்மராஜனின் ஞாபகச் சிற்பம் (1988) தொகுப் பில் இடம்பெறும் சொல்லும் சொல் என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும் இறுதிவரி கள் இவை. 'என்னுடைய சொல்லும் சொல், 'என்ன சொல்லலாகும் சொல் என ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தசாத்தியத்தைக் கொண்டி ருப்பது. கவிஞர் பிரம்மராஜனை ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டும் அங்கீ கரித்து அவருடைய கவிதை களைப் புறந்தள்ளுபவர்களும், காலாவதியான கவிஞர் என்று அவரைப் பழித்துரைப்பவர்களும் பரிதாபத்திற்குரியவர்களே.

Saturday, October 15, 2022

புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு வார்த்தையை நான் சொன்னதுமே
அதன் பொருளை அகராதியில் தேடுகிறாய்
பின் அதை நான் பார்த்த விதம்
சரியில்லை என்கிறாய்
புரிந்துகொண்ட விதம்
சரியில்லை என்கிறாய்
பயன்படுத்திய விதம்
சரியில்லை என்கிறாய்.
வா, வந்து உட்கார் என்னெதிரே –
கற்பிக்கிறேன்’ என்கிறாய்
’வித்தகனாக்குகிறேன் பார் உன்னை
வார்த்தை விளையாட்டில்’ என்கிறாய்
கல்லைச் சிலையாக்குவதாய்
சொல்லைக் கற்றுத்தருகிறேன்’’
என்கிறாய்
நில்லாமல் மேற்செல்கிறேன்.
*** ***
வார்த்தைகளைக்கொண்டு நான் செய்யும்
கழித்தலிலும் கூட்டலிலும்
நீட்டலிலும் பெருக்கலிலும்
குற்றங் காண்பதிலேயே கவனமாயிருக்கும்
உன் சொற்குவியல்களெங்கும்
கரையான் புற்று வளர்ந்தவாறு.
*** ***
குழந்தையா நான்
ஒரு சொல்லை கைபோன போக்கில்
இறைத்துவிட?
அல்லது முழுப் பிச்சியா
உச்சியை அடிவாரம் என்று அறைகூவ?
அழிச்சாட்டியம் செய்ய?
அப்படித்தான் என்று
உன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ளும்
முனைப்பில்
நீ கூறத் துணிந்தால்
உனை வேரறுக்க என்னிடம்
வேறு நிறைய நிறைய வார்த்தைகள்
உண்டு.
*** ***
உன்னிடமுள்ள வார்த்தைகளையெல்லாம்
துலாக்கோலின் ஒரு பக்கத் தட்டில்
கொட்டி
கைதட்டி யெனை அழைத்து
அதட்டலாய்க் கூறுகிறாய்:
"வை உன்வசமிருப்பதை –
யாருடையது அதிக கனமென்று
பார்த்துவிடலாம்"
_ பாவம் நீ
வார்த்தைகள் சிறகு முளைத்தவை என்பதை
உன் அகங்காரத்தில்
அறவே மறந்துவிட்டாய்
*** ***
மனதில் ததும்பும் வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
மென்மலர் போல்
வானவில் போல்
தண்காற்று போல்
தருநிழல் போல்
எரி தழல் போல்
பெருவரம் போல்
அற்புதப் பொற்பதம்போல்
கற்சிலையுருகுகலைபோல்......
கொஞ்சமும் இரக்கமின்றி
மளமளவென்று பிய்த்தெடுத்து
வெளியே கடைபரப்பி
என் கைத்தட்டலையும் கண்ணீரையும்
விலையாகக் கேட்டதும்
விதிர்த்துப்போனேன்
*** ***
உன்னைச் சுற்றி உதிரிப்பூக்கள்
மலையாய்க் குவிந்திருப்பதாய்
பீற்றிக்கொள்கிறாய்.
சரமாய்த் தொடுக்க
நாரும் விரல்களும் அவசியம்தானே.
காற்றில் பறந்துவரும் வாசமுள்ள
மலர்கள்
எல்லோருடைய பார்வைக்கும்
தெரிந்துவிடுவதில்லை.
ஒரு சிறு பூவே பெருங்குவியலாக மாறும்
சூட்சுமம்
உனக்குப் புரியாதவரை
என் விரல்களும் நாரும் வீண் என்கிறாய்.
அதனாலென்ன பரவாயில்லை.
"உன் கண்கள் இரண்டு புண்களாகாமல்
பார்த்துக்கொள்"
என்று சொல்லிச் செல்கிறேன்.
அப்பாலுக்கப்பால்......
*** ***
எனக்கான மொழிநிழலை
நானே தேடிக்கொள்வேன்.
நான் வாசிக்கும் ஒவ்வொரு நூலும்
எனக்குக் கற்றுத்தரும்
நாலும் நாலாயிரமும்.
வல்லவனாகவே இரு –
முடிந்தால் நல்லவனாகவும்.
எனில்
சொல்லுக்கும் எனக்கும்
அணுக்கமான பந்தம்
எல்லாம் தெரிந்தும்
நடுவே இடைத்தரகர் நீயெதற்கு?
விலகிச்செல் மரியாதையாய்.
மூக்கை நுழைக்கப் பார்க்காதே.
இது முதுபெரும் முதலைகள் உள்ள அகழி.

ரௌத்ரம் பழகுதல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ரௌத்ரம் பழகுதல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஓரமாக ஒதுங்கியிருக்கவே விரும்புவேன்
அதையே காரணங்காட்டி
நீ ஒதுக்கித் தள்ள நினைத்தால்
ஓர் உதை விட்டு மையத்திற்கு வந்துவிடுவேன்.

சாமரங்கள் தேவையில்லை யென்றால்
சாமரம் வீசத் தயார் என்றா பொருள்?

தெரியாததை தெரியாதென்றுரைக்க
மனத்தெம்பு வேண்டும்
உலகிலுள்ள எல்லாமும் நல்லாத் தெரிந்ததாக
நாளெல்லாம் பாவனை செய்யும் உனக்கு
அது நிச்சயமாக இல்லைதான்.
பாவம் நீ.

ஆனால், பாவம்பார்ப்பதால்
என்னை பிடித்துத் தள்ளி விட அனுமதிப்பேன்
என்று நீ நினைத்தால்
உன்னை மோதி மிதிப்பதென் அறமெனத்
தெரிந்துகொள்.

இருளிலிருக்கப் பிடிக்கும் என்று சொன்னால்
அதற்காக என்னை குகைக்குள் தள்ளிவிட்டு
நன்மை செய்ததாக
ஊருக்குள் தம்பட்டமடித்துத் திரிந்தால்
விசுவரூபமெடுத்துவந்துன்னை
நார்நாராய்க் கிழித்தெறிய
தாராளமாய் முடியும் என்னால்.

பேர் பேராய்ப் போய் புலம்பியழக்கூடும்
உன்னை யொரு புழுவினும் கீழாய்ப்
பார்த்து
என் வழி நடப்பேன்.
என்ன செய்ய இயலும் உன்னால்?

ஒரு கூட்டத்தில் தனித்துத் தெரிய நான்
பிரயத்தனம் எதையும் செய்வதில்லை.
அதற்காய்
அடையாளம் அழித்து என்னையொரு
மொந்தைக்குள் திணிக்க முயற்சித்தால்
முற்றிலுமாய் இல்லாமலாக்க முனைந்தால்
மறுகணம் உன் கையை
முறித்துப்போடவும் தயங்க மாட்டேன்.

நான் (பாரதியாரின் வரிகள்)

 பாரதியாரின் வரிகள் 

நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்
மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்!
பாரதியார்

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;

  பாரதியாரின் வரிகள்

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப்

பிறவொன் றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்;
பாரதியார்

நீக்கமற…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீக்கமற….

 ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

வீடுவந்து சேர்ந்த பிறகும்

நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை

தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள

அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்

நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க

கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள் நைந்து தொங்க

உட்கார்ந்த நிலையில் என் பாதங்கள் இருமாடிப்படிகளிலேறிச் செல்லும்நேரம் வலியெடுக்கும் முழங்கால்கள்

முதுகுமாக மாறிக்கொள்ள

வழங்க வழியில்லாத உணவின் அளிப்புக்காக

அந்தத் தெருமூலையில் சுருண்டுகிடக்குமொரு உருவம்

அழகென்பதன் அர்த்தமாக இருந்திருக்கும் அக்காலம்

திரும்பிக்கொண்டிருக்கலாகும் இச்சமயம் அதனுள்

புள்ளுக்கும் புல்லுக்கும் இடையான வேறுபாடு

உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லை

யெனச் சொல்லுமாறு ஊரு பேரு காரு தேரு

நீறு சேறு பேறு வேறு கூறு பாரு

போகுமாறு

பாரு பாரு நல்லாப் பாரு

பயாஸ்கோப்பு படத்தைப் பாரு

என்னான்னு வந்து பாரு என்றழைக்கும் மனம்

கூவியவாறிருக்க

கேட்டுக் காலெட்டிப் போட்டபடி போய்க்கொண்டிருக்கும் என் மெய் உயரத்தைச்

சிறிதே கூட்டிக்காண்பிக்க விரும்பி அணிந்துகொண்டிருக்கும் காலணிகளில் ஒன்று என்னை வீதியோரம் உருட்டப் பார்ப்பதை

ஜன்னல்வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த அணிலின் குட்டிவால் சற்றே விலகிக் காட்டியதில் பதறும் மனம்

நிதானமாய் நிறுத்தி அழுத்திக் கேட்கும்

வழக்கம்போல்

நான் எங்கே இருக்கிறேன்……