LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 1, 2026

கலைடாஸ்கோப் கவிதைகள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 1. மனித நாகரீகமும் மூன்றாம் உலகப்போரும்


ஒரு
மோதலின்
துவக்கப்புள்ளி
மூன்றுபுள்ளிகள்
முற்றுப்புள்ளிக்கிடையே
மடிந்துவிடுபவர்கள்
பின்னெப்போதும் எழுந்துவருவதில்லை.
அறிந்தும்_
மரணப்படுக்கையில்
மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும்
மனிதம்
வெறுப்பும் வன்மமும் தோய்ந்த
வாசகங்களால் மட்டுமே
மீட்டுயிர்ப்பிக்கப்படும்
என்று
மறுபடியும் மறுபடியும்
மூளைச்சலவை செய்வோர்,
செய்யப்படுவோர்
மூன்றாம் உலகப்போரின்
கட்டியக்காரர்களாக…..


2. கைவசமாகும் கருவிகளும் கூராயுதங்களும்
’அகிம்சை என்பதும் வன்முறையின் வடிவமே
என்று
வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் விமர்சித்தவர்கள் _
டாட்டா பிர்லாவின் கைக்கூலி
என்று
அடிக்கொருதரம் வசைபாடியவர்கள் _
பெண்களை மதிக்கத்தெரியாத அயோக்கியன்
என்று
மிதிமிதித்துக் கசையடி தந்தவர்கள்_
மக்கள் போராட்டங்கள் முழுவெற்றியடைய வொட்டாமல்
உண்ணாவிரதமிருந்து குட்டிச்சுவராக்கியவர்
என்று குற்றஞ்சாட்டியவர்கள் _
ராமராஜ்யத்தைப் பேசி சனாதன தர்மத்தைப்
பரிந்துரைத்தவர்
என்று
சகட்டுமேனிக்குப் பழித்தவர்கள்_
பெற்றபிள்ளையைப் பேணாதவர் மகாத்மாவா
என்று
மட்டந்தட்டியவர்கள்_
எல்லோருமே இன்று கொண்டாடுகிறார்கள்
காந்தியை.
அவர்கள் எல்லோருக்கும் காந்தி தேவைப்படுகிறார்_
அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காயாய்......
அடுத்தவரை வெட்டிச்சாய்க்கக் கூர்தீட்டும்
அருங் கருவியாய்.


3. நவீன உலகின் நான்காவது தூண்


குறிப்பிட்ட சில காட்சிகளைத்
திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிச் செய்திகள்.
ஒரு மனிதனை இருமுறை உதைத்த
காவல்துறை அதிகாரியின் கால்
திரும்பத்திரும்ப இருநூறுமுறைக்குமேல்
அதையே செய்துகொண்டிருக்கிறது இன்னமும்.
கோப்புக் காட்சி என்று தெரிவிக்காமல்
வசதியாக மறந்துவிடுவதில்
நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த கலவரம்
இன்று நடந்துகொண்டிருப்பதாய்
கிலிபிடித்தாட்டுகிறது பார்வையாளர்களை.
அதேசமயம்
பாமர மக்கள் வண்ணமயமாய்
விபத்துகளைக் கண்டுகளிக்க முடிகிறது.
வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களைக் காட்டி
அடியிலேயே
சரசரக்கும் பட்டுப்புடவை விளம்பரம்
இடம்பெறுகிறது.
குழந்தைகளின் உளச்சிக்கல்களை
ஒருபுறம்
மனோதத்துவ நிபுணர் எடுத்துரைக்க
மறுபக்கம்
சம்பந்தப்பட்ட ‘நியூஸ் சானலுடைய
எண்டர்டெயின்மெண்ட் சானலின்
மெகாத்தொடருக்கான ‘ டீஸரில்’
இரண்டு சிறுவர்கள்
ஒருவரையொருவர் குண்டாந்தடியால்
பின்மண்டையில்
ஓங்கியடித்துக்கொள்கிறார்கள்.
அது சும்மணாங்காட்டி காகிதக் கழி என்று
அரைச்சிரிப்போடு சொல்லும் அந்தத்
தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளுக்கு
பார்க்கும் பிள்ளைகளுக்கெல்லாம்
அது தெரியாதே என்ற உண்மை
ஒரு பொருட்டேயில்லை என்றும்.
’துல்லியமான புகைப்படம்
நல்ல கவிதைகள் நாற்பதுக்கு சமம்’
என்று சொன்னால்
’அது சரி அல்லது தவறு’ என்று
அடுத்த பட்டிமன்றம்
அல்லது மக்கள் மன்றம்
நடத்த
அலைவரிசைகளுக்கா பஞ்சம்?



4. மக்களாட்சியும் மன்னர் பரம்பரையும்


மக்களாட்சியில் நம்பிக்கைகொண்டவர்களாகத் தம்மைப் பறையறிவித்துக்கொண்டே
மன்னராட்சியிலேயே முழுவதுமாய் விசுவாசம்
வைத்திருப்பவர்களாய்
அவர்கள் அரச பரம்பரையையே ஆதரிக்கிறார்கள்.
ஊர் முழுக்க ஆயிரம் அரண்மனைகளைக் கட்டிக்கொண்டு
மக்களை இத்தனை வருடங்கள் வீதியோரம் கந்தலோடு
கிடக்கச்செய்தவர்களை
மன்னித்துவிடத் தயாராயிருக்கிறார்கள்.
ஊழல் செய்வது அரசரின் பாரம்பரியம்
என்று வாய்வார்த்தையாகச் சொல்லவில்லை
யானால் என்ன?
’அதைவிட இதுவே பரவாயில்லை’ என்று
அடித்துச்சொல்லி வக்காலத்து வாங்கி
ஊழலை மன்னர்குலத்தின் அடிப்படை உரிமையாக்குகிறார்கள்..
மக்களாட்சித் தத்துவத்தில் தமக்கு உவப்பானவைகளை மட்டும் வைத்துக்கொண்டு
மற்றவற்றை குப்பைத்தொட்டியில்
வீசியெறிந்துவிடுகிறார்கள்.
தங்கநாணயங்களைத் தவிர வேறு எவற்றால்
குப்பைத்தொட்டி நிரம்பிவழிந்தாலும்
யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்
என்று அத்தனை நிச்சயமாகத் தெரியும் அவர்களுக்கு.
மேலுக்கு சமத்துவம் பேசினாலும்
மன்னன் மகனு(ளு)க்கு மதியூகமும்
மக்கள் மேல் அக்கறையும்
மரபணுவிலேயே வாய்த்திருக்கும்
என்று அவர்கள் மனதார நம்புகிறார்கள்.
அரச வாரிசு ஆறேழு அடி தங்களோடு நடந்தால்
அதை இன்னொரு உலக அதிசயமாகப் பேசிக்கொள்கிறார்கள்.
மன்னர்குலப் பெண்டிர்கள் என்ன தவறு செய்தாலும்
அவர்களை மகா உத்தமிகள் என்றே அடித்துச்சொல்கிறார்கள்.
அரசகுலத்தைச் சேர்ந்தவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்வதில்
அத்தனை பரவசம், பெருமிதம் அவர்களுக்கு.
அதைக் காட்டி சகமனிதனை ஆட்டிவைக்க முடியும்
என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?
மன்னர் அடிக்கொரு அரண்மனை கட்டிக்கொண்டிருந்தாலும்
அவரை மனிதநேயவாதி என்று
மனனமாய் அழைத்தபடியே_
தமக்குத்தாமே அடிக்கோடிட்டுக்கொள்கிறார்கள்
மக்களாட்சியின் அறங்காவலர்களாய்.

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL)



Saturday, February 21, 2026

யாதுமாகி நிற்கும் தமிழ்! - கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

யாதுமாகி நிற்கும் தமிழ்!
‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



1. அன்புத் தமிழுக்கு
என்றுமான நன்றி!
மொழியின் மீதுள்ள மாறாக்காதலைச் சுமந்தபடி
வழிபோகிறேன்.
கைபர் கணவாய் எங்கிருக்கிறதென்று
எனக்குத் தெரியாது.
குமரிமுனையை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்....
அடுத்தென்னவாகுமென்று அறியாத
அகால வாழ்விதில்
எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழும்
கொஞ்சம் ஆங்கிலமும்.
தெரிந்த தமிழ் என்று நான் சொல்லக்கேட்டு
செல்லமாய்க் குட்டிச் சிரிக்கிறது தமிழ்!
கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.
நான் வந்த வழியெங்கும்
வாழும் வழியெங்கும்
அன்புத் தமிழின் அரவணைப்பே
திசைகாட்டியாக
திக்கற்றவருக்கான பாதுகாப்பு
அரணாக....
தன் தாயை உத்தமியென்றபடி
இன்னொரு தாயை அவிசாரி என்று
நடுத்தெருவில் வசைபாடுபவருக்கொப்பாய்
என் மொழியைப் போற்றிய கையோடு
இன்னொரு மொழியைத் தூற்ற மாட்டேன்.
செத்த மனிதர்கள் உண்டு.
செத்தமொழி என்று எதுவுமில்லை.
அவரவர் அன்பு அவரவருக்கு.
அவரவர் மொழியின் அருமை
அவரவரே அறிவார்.
அத்தனை பேரின் தாய்மொழிகளுக்கும்
உரித்தாகட்டும் நம்
அன்பு வணக்கம்.

2. யாதுமாகி நின்றாய்…..

கனவுகள் குமுறல்கள் கண்ணீர் கோபம் தாபம்
கனிவு துணிவு உணர்வு அறிவு எண்ணம் செயல்
எல்லாவற்றிற்கும் வடிவம் தந்து
எத்தனையோ வடிகால்கள் அமைத்துத் தந்து
நம்மை நாம் வெளிப்படுத்த
நம்மொத்தவர்களோடு நல்லுறவாட
நேற்றும் இன்றும் நாளையும்
நற்பாலம் கட்டித்தந்து
நம்முள் கலந்திருக்கும்
தாய்மொழியாம் தமிழை
காற்றென்பதோ
காலத்தின் ஊற்றென்பதோ
உலகென்பதோ
உயிர்த்துடிப்பென்பதோ….
எத்தனை கோடி நன்றி சொன்னாலும்
ஈடாகுமோ தமிழின் வழித்துணைக்கு!

3. தாய்மொழிப் பற்று










எம் தாயும் உம் தாயும் வேறு வேறு என்றாலும்
தாய்மை வேறுவேறல்ல.
எம் தாய் மேல் எனக்குண்டாம்
அளப்பரிய அன்பும் மரியாதையும்.
போலவே உம் தாய் மேல் உமக்குண்டெனும்
தெளிவு எமக்குண்டு.
எம் தாயை யார் பழிக்கவும் அனுமதியேன்
நான்
யார் தாயையும் அவமதிக்க மாட்டேன்.
பெற்றால்தான் பிள்ளையா வென
பேரன்பிலூறிக் கேட்கும்
தாயுள்ளம்
பத்தரைமாற்றுத் தங்கமாக
தாய் என்பவர் தனது எல்லாப் பிள்ளைகளுக்கும்
தாயுமாக
தாயைச் சங்கிலியால் கட்டிச் சிறையில்
பூட்டிவைத்து
தமக்கு மட்டுமான சொந்தமெனக்
காட்டுவோர்
தற்பெருமையொரு நோயுமாக
யார் தாய் உயர்ந்தவர் என்ற
அக்கப்போர் பட்டிமன்றத்தில்
பிறர் தாயை இழித்துப்பேசி
தம் தாய்க்கு மகுடம் சூட்டுவதை
எந்தத் தாய்தான் விரும்புவார்?
எந்தவொரு மொழியும் யாருடையவோ
வந்தனைக்குரிய தாயாகிநிற்கும்
மந்தமாருத எழிற் புவிப்பரப்பு இது.
நிந்தனை செய்யோம் எந்தவொரு
மொழியையும்.
சுந்தரமென்போம்
சூழ்ந்துள மொழிகளையெல்லாம்.








All reactions:
யுகயுகன் யுகயுகன்

Friday, February 20, 2026

யாமறிந்த மொழிகளிலே... பாரதியார்

 யாமறிந்த மொழிகளிலே...

பாரதியார்


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்
வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில்
தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்

 தமிழுக்கும் அமுதென்று பேர்

- பாரதிதாசன்


அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தாய்மொழி - நெல்சன் மண்டேலா

 ஒரு மனிதர் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் அவரிடம் பேசினால்

அது அவருடைய தலையை எட்டுகிறது.

அவருடைய தாய்மொழியில் அவரிடம் பேசினால் அது அவருடைய மனதிற்குள் நுழைந்துகொள்கிறது.

_ நெல்சன் மண்டேலா



சர்வதேச தாய்மொழி தினம் (IMLD) - பிப்ரவரி 21

 சர்வதேச தாய்மொழி தினம் (IMLD)  - பிப்ரவரி 21 


சர்வதேச தாய் மொழி தினம் (IMLD) என்பது பிப்ரவரி 21 ஆம் தேதி உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது நம் தாய்மொழியாம் தமிழுக்கு நம் அனைவரின் அன்பும் மரியாதையும் வணக்கங்களும் உரித்தாகட்டும்

International Mother Language Day (IMLD) is a worldwide annual observance held on 21 February to promote awareness of linguistic and cultural diversity and promote multilingualism. First announced by UNESCO on 17 November 1999, it was formally recognized by the United Nations General Assembly in a resolution establishing 2008 as the International Year of Languages.