LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 31, 2021

அடியாழம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடியாழம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

உண்மை சுடும் என்றார்கள்

உண்மை மட்டுமா என்று உள் கேட்டது

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றார்கள்

எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.

ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்

யாரோடுமாஅது எப்படி என்று உள் கேட்டது.

காரும் தேரும் வேறு வேறு என்றார்கள்

நான் சொன்னேனா ஒன்றேயென்று

என்று உள் கேட்டது.

மௌனம் சம்மதம் என்றார்கள்

உனக்கா எனக்கா என்று உள் கேட்டது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றார்கள்.

முற்பகல் செய்தா பிற்பகல் விளைகிறது என்று உள் கேட்டது.

தர்க்கம் குதர்க்கம் என சொற்கள் சரமாரியாக சீறிப்பாய

அர்த்தம் அனர்த்தத்தை அசைபோட்டபடி

உறக்கத்தில் ஆழத் தொடங்கியது உள்.

கண்காட்சிப்புத்தகங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்காட்சிப்புத்தகங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
புத்தகங்களை வாங்குகிறவர்கள் எல்லோருமே படிக்கிறார்களா….
முதலிலிருந்து கடைசிவரை படிப்பார்களா…….
முதல் இடை கடைப் பக்கங்களில் அங்குமிங்குமாய்
சில பக்கங்கள் படிப்பவர்கள் _
மூடிய புத்தகம் மூடியேயிருக்கும்படி
அலமாரியில் பத்திரப்படுத்திவிடுபவர்கள் _
எல்லோரும் வாசகர்கள் தானே
என்றெண்ணி அமைதிகொள்ளுமோ புத்தகங்கள்….
சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் தேரனைய காரில் சாய்ந்து
தன்னை கோடீஸ்வரனாகக் காண்போர், காண்பிப்போர்
எங்கும் உண்டுதானே?
இருள்நிழல் படர்ந்த ஒதுக்குப்புறத்திற்காகவே கோயிலுக்குச் செல்லும் காதலர்களைப்போல
எந்தக் கண்காட்சியிலும் நுழைபவர் உண்டுதானே.
காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் நூல்களை பார்த்தபடியே
காலார நடக்கவும்
காண்டீனில் காப்பி குடிக்கவும்
நாலாறு பேர்களைப் பார்த்து நன்றி பகரவும்
நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும்
வெளியாகும் நூலுக்காய் ஆசிரியர் பெருமைப்படவும்
ஆசிரியல்லாத சிலர் பொறாமைப்படவும்
அதற்கும் இதற்கும் எதற்குமாக……
பத்தரைமாற்றுத்தங்கமெனக் கூசாமல் பித்தளையைப் பேசி
நுழைவாயிலில் திரைநாயகர்களுக்கு ஈடாக ’கட் அவுட்’கள் காணக்கிடைக்கும்...
புத்தகக்கண்காட்சிக்கு
அழையாத விருந்தாளியாக வருகைதரும்
அரும்படைப்பாளிகளும் உண்டு!
இயற்கையழகே மேல் எனப் பேசி
உதட்டுக்கும் கன்னங்களுக்கும் கவனமாக சாயம் பூசி
பவனி வரும் சிற்றிதழ்ப் பெரும்படைப்பாளிகளும் உண்டு.
புத்தகங்களால் வளரும் அறிவு விவரமானதும்
வைரஸ் போன்றதும்……
புத்தகங்களை அடையாள அட்டைகளாக்க எத்தனையெத்தனை அட்டைக்கத்திகளால்
போர்வியூகங்கள் அமைக்கப்படுகின்றன .இந்தத்
தாற்காலிக சாம்ராஜ்யத்தில்…..
பல நூல்களின் ஆழம் அதை வெளியிடும் அரசியல்வாதிகளால்
திரைக்கலைஞர்களால் அளந்துதரப்படுகின்றன
அவர்கள் அந்தப் புத்தகங்களைப் படித்திருப்பார்களா
என்ற கேள்வி கேட்கப்படலாகாததாய், பதிலுக்கப்பாற்பட்டதாய்
அந்தரத்தில் அலைந்துகொண்டிருக்கிறது….
ஆத்மார்த்தமாய் புத்தகங்களை நேசிக்குமொரு ஏழை வாசகர்
வாசிக்க விரும்பும் புத்தக விலை
விவாகரத்து கோரும் அன்பு மனைவியின் நினைவுத்துயரமாக
நண்பனின் ‘காணாமல் போன பக்கங்கள்’ பெயரிலான 21ம் என்ணிட்ட அரங்கில்
தன் புத்தகம் அடுக்கில் வைக்கப்படாமல்
பெஞ்சின் கீழ் ஒடுங்கிக் கிடப்பதைப் பார்த்து
ஒரு இளம் படைப்பாளியின் கண்ணில் துளிர்க்கும் நீர்
காற்றில் கரைந்து போகும்;
கூடவே அவன் கைவசமிருந்த துளி நம்பிக்கையும்.
அரங்கில் வந்திருக்கும் பார்வையாளரிடம்
‘இவர் தான் ஆசிரியர், இவருடைய புத்தகங்கள் இதோ இருக்கின்றன”
என்று அரங்குவைத்திருப்பவர் சொல்வதைக் கேட்கும்போதே
அங்கிருக்கும் நூலாசிரியர் பிச்சைக்காரராக உணரத்தொடங்கிவிட
அதைக் கேட்டும் கேளாதவாறு
அந்தப் பார்வையாளர்கள் நகரும்போது
நிச்சயமாகத் திருவோட்டின் பாரம் அவர் அடிமனதில் இறங்கிவிடுகிறது.
ஆனாலும் அரங்கின் நுழைவாயிலில் ஆறேழு பேர் நின்று உன்னிப்பாய்க் கேட்க
தன் கவிதையை மனமொன்றி வாசிக்கும் நேரம்
ஒரு கவி மனதில் அந்த ஒவ்வொருவரும் ஒரு நூறாயிரம் பேராய்
பல்கிப் பெருகுவதையும் அண்டசராசரமெங்கும் அவருடைய கவிதை வரிகள்
அதிர்வுகளை உண்டாக்கி ரீங்கரிப்பதையும்
இல்லையென்றாக்க இங்கே யாரால் முடியும்!
எப்படியிருந்தாலும் _
புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறவர்கள் எல்லோரும் புத்தகங்களுக்காகப் போகிறார்கள் என்பதை
புத்தகங்களே நம்புவதில்லை.
’பருவம் வந்த அனைவருமே காதலிப்பதில்லை’ என்னும் சந்திரபாபுவின் குரல்
இந்த இடத்தில் பொருத்தமாக இருக்குமா, அல்லது அபசுரமாக ஒலிக்குமா?
சரியாகத் தெரியவில்லை.

வடிகால் வெளியே இல்லை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வடிகால் வெளியே இல்லை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மனதின் மோனலயத்தை வெட்டிப் பிளக்கும் கூர்முனை வாளாய்
அருகில் மிக அருகில்
ஒரு குரல் அலறிக்கொண்டிருக்கிறது.
அலைபேசிக்கு வலிக்குமோவென
அத்தனை சன்னமாய் பேசும் தோழி
நினைவுக்கு வந்து கண்களில் நீர்குத்தச் செய்கிறாள்.
ஒரு குரலின் வெறும் பேச்சு அதன் செவிக்கு
அத்தனை இனிமையாய்;
அடுத்திரு காதுகளுக்கு துருப்பிடித்த கத்திக்கீறல்களாய்……
வேற்றுமையில் ஒற்றுமை காணும் எல்லைக்கப்பாலிருக்கும்
இக்குரலின் பிளிறல்
நடுமண்டையில் கீறி உட்புகுந்து அங்குள்ள நரம்புகளின்
வலைப்பின்னலமைப்பை சீர்குலைத்து
இதயத்தில் விவரிக்கவியலா வலியேற்படுத்தி
வெகு நிராதரவாக உணரவைக்கிறது என்னை.
நல்லவராகவே இருக்கக்கூடும் என்றாலும்
நாராசக்குரலால் கவிதையை பின்னங்கால் பிடரிபட
ஓட ஓட விரட்டுபவரை
வெறுத்தொதுக்காமல் புறக்கணிக்காமல்
இருந்தவாறு
என்னையும் பறிகொடுக்காமல் புரந்துகாக்கும்
உரமளிப்பாய்
வரமளிப்பாய்
மாகாளி….
பராசக்தி…..

உள்ளொளியின் இருளில்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உள்ளொளியின் இருளில்….

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
சுடர் விளக்கொளியைப் பார்த்தல்
ஒரு தரிசனமாக
இருகைகூப்பித் தொழுகிறாள்.
சுடர் அணையப் பார்க்கிறது.
கை குவித்துத் தடுக்கிறாள் காற்றை.
உள்ளிறங்கிய திரியை உடனடியாக விளக்கின் குகைவழியாக மேலுயர்த்துகிறாள்.
கொஞ்சம் எண்ணெய் எடுத்துவந்து ஊற்றுகிறாள்.
அலையும் சுடருக்குள்ளிருந்து காலம் எட்டிப்பார்ப்பதுபோல்
தோன்றுகிறது.
நக்கலாக சிரிப்பதுபோலவும்.
மருள் மனம் மறுபடி மறுபடி சொல்லிக்கொள்கிறது
தனக்குத்தானே _
'அணையவே ஒளி
ஒளியின் மறுபக்கம் இருள்
பொருளின் பொருள் அனர்த்தமாக
அதற்கொரு அர்த்தம் கற்பிக்கும் பிரயத்தனமே
பிரகாசமாக
திரும்ப
இருளும் ஒளியும்
திரும்பத்திரும்ப
திரும்பத்திரும்பத்திரும்ப……..'
மனதின் ஓரத்தில் சுடர்விட்டவாறிருக்கிறது
ஓர் ஒளித்துணுக்கு.

காத்திருப்பு ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 காத்திருப்பு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)





அத்தனை ஆர்வமாய் சுழித்தோடும் அந்த ஜீவநதியில்
அதன் பெருவெள்ளத்தில்
அதற்குள் இரண்டறக் கலந்திருக்கும்
ஆயிரமாயிரம் மகா சமுத்திரங்களில்
அதிசயமாய் யாரேனும் நீந்தத்தெரிந்து
நீந்த முடிந்து
முங்கி முக்குளித்து முத்தெடுத்துவந்தால்
உடனே அதை சொத்தையென்று சாதிக்கும்
அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் _
அஞ்சலிக் கட்டுரைகள் எழுதவும்
அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தவும்
அங்கேயும் அந்த நீரோட்டத்தை
அதன் சுழலை விசையை
அதன் நன்னீர்ச்சுவையை
மதிப்பழித்து
அதைக் குட்டையெனவும்
கழிவுநீர்த்தொட்டியெனவும்
இட்டத்துக்குச் சுட்டிக் காட்டவும்
பட்டம் கட்டவும்.
வற்றாதநதி வறண்டுபோனால்
அது நதியாக வாழ்ந்த காலம்
இல்லையென்றாகிவிடுமா என்ன?
நதிவாழ்வின் நிரூபணம் நம் கையிலா?
வற்றியநதிப்படுகை வெறும் பாலைவனமா
புவியியலும் இலக்கியமும் ஒன்றுதானா
உடற்கூராய்வு நிபுணர்களுக்கு
இலக்கியவெளியில் பஞ்சமில்லை.
வேறு சில வியாபாரிகளுக்கு
பொருள்களின் antique value
அத்துப்படி....
எத்தனையோ தடுப்புகளை மீறி
சிந்தாநதிதீரத்திற்கு வந்துசேர்ந்து
விழிகொள்ளாமல் வாசித்துக்கொண்டிருப்பவர்க்கு
நதிக்கடல்பெருகிக் கால்நனைய ஆன்மா குளிர_
கரைந்துருகும் மனதின் கரைகளெங்கும் சேர்ந்துகொண்டேயிருக்கின்றன
அழியாச்சொத்துக்களாய்
சொல்பொருள் நீர்மச்சலனங்கள்.










விட்டுவிடுதலையாகி…. ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 விட்டுவிடுதலையாகி….

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அருவப்பெருங்கனவுகளைப் பலவர்ணக் காற்றாடியாக்கிப் பறக்கவிட்டு
அதன் நூலிழையைப் பிடித்தேறி ஆகாயத்தைத்
தொட்டுக் களித்து
பிரபஞ்சகானத்தைப் படித்துக் கற்றுப் பாடிப் பரவி
ஆனந்தத்தில் வாலைக்குழைத்தொரு பப்பிநிலவாய்
அடிவானத்தில் பட்டொளிவீசி
குட்டிமூக்கால் எட்டுத்திக்கு வாசனைகளையும் முகர்ந்து
உள்வாங்கி கள்வெறி கொண்டுயிர்த்த
மனதின்
வனப்பையெல்லாம் வரிகளாக்கிச் சிறகடித்துப்பறந்துபோனதொரு
சிட்டுக்குருவி
விட்டுவிடுதலையாகி நிற்கும் வெளியெங்கும்
கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களின்
அட்சரலட்சங்களை
என்றென்றும் எண்ணியவாறிருக்க
என்ன தவம் செய்தனையோ என் நெஞ்சே
என் நெஞ்சே……